அலுத்துதான் போகிறது
அன்றாட சராசரிகளோடு
நித்தம் மல்லுக்கட்டும்
டைம் டேபிள் வாழ்க்கை!
என்றேனும் ஒரு நாள்
கூடு விட்டு கூடு பாய்ந்து
அந்தக் குயிலுக்குள் ஊடுருவ வேண்டும்
யாருமற்ற வனமொன்றில்
அலுக்கும் வரை கூவி, கூவி
காற்றின் ஸ்பரிசங்களோடு
காதல் செய்ய வேண்டும்!
ஒரு மரத்தின் இலையாய்
மாறி...
ஆடி, அசைந்து நடனமாடி
பழுத்து, சருகாகி
காற்றில் பறந்து
மண்ணில் விழுந்து
மெளனமாய் மட்கியே...
போக வேண்டும்...!
ஒரு மழைக்குப் பின்னான
வானவில்லாய்
கண நேரம் ஜொலித்து விட்டு
வானத்தின் பெருவெளியில்
கரைந்தே போகவேண்டும்
காற்றில் பறக்கும்
ஒரு பஞ்சாய் மாறி
இடம் சென்று; வலம் திரும்பி;
மேலெழும்பி; கீழ் தவழ்ந்து
அங்கும் இங்கும்...
அலைந்து, அலைந்து
உதிர்ந்து போகவேண்டு!
அடர் கானகத்தின்
வெறுமையினை சுமக்கும்
பேரமைதியாய் படுத்துக் கொண்டு
காட்டு மலர்களோடு
சல்லாபிக்க வேண்டும்..!
இப்படியாய்...
எல்லாமாகும் ஏக்கத்தில்
லயித்து, லயித்து
வார்த்தைகளை கோர்த்தெடுத்து
வடிக்கும் கவிதை முடித்த
நிறைவோடு..
மரித்துப் போகவும் வேண்டும்..!
ஆமாம்...
அழுத்துதான் போகிறது
அன்றாட சராசரிகளோடு
நித்தம் மல்லுக்கட்டும்
டைம் டேபிள் வாழ்க்கை!
தேவா. சு
Comments
ஒரு மழைக்குப் பின்னான
வானவில்லாய்
கண நேரம் ஜொலித்து விட்டு
வானத்தின் பெருவெளியில்
கரைந்தே போகவேண்டும்....
இந்த பாத்திரத்தில் நீங்க முன்னமே வந்துவிட்டீங்க அண்ணே....