Skip to main content

அட்ச்சேன்..மூஞ்சி பேந்துடும்....!

















மருவாத இல்லாம பேசுன மூஞ்சப் பேத்துடுவேன்...இன்னாடா...இன்னா நெனச்சுகினு கீற...! காத்தால எனிச்சு கடலுக்கு போனா நைட்டு வெளக்கு வக்கிற டைமுக்கு வந்து ஒரு வா சோறு துன்ன முடியல... ங்கோத்தா பொழுதேனிக்கும் பஞ்சாயத்து...

குந்திகினுகிறது கூர வூடு இத்துல ஓன் எடத்துல கொம்ப வெக்க கூடாது வலையபோடக் கூடாது.... இன்னாத்துக்கு பேஜாரு பண்ணிகினு கீற.. எலே பன்னீரு.. வாணாம் போயிரு..அப்பால காது மேல நாலு போட்டேன்...காது பிஞ்சுடும்....ச்ச்சீ போ...

இன்னாட பெரிய மயிரா நீ.. இவுரு பெரிய கலிட்டரு...இவுரு சோறு துன்ன சொல்ல நாங்க ஒண்ணியும் சொல்லக் கூடாது. சொம்மா சீனு போட்டுகினு கீற... இன்னாதுக்குடா ஏன் வூட்டு வாசல்ல வந்து பொருள போடுறீங்கோ.....இருக்கறது தம்மாத்துண்டு இடம்.. என்னமோ சேப்பாக்கம் ஸ்டேடியத்துல குந்திக்கினு குடியிருக்கற மாறி....தெரு வாசல் புல்லா அம்புட்டு பொருளையும் போட்டு வைக்கிறா... நாங்க எல்லாம் துன்ன வேணாம், கழுவ வேணாம்.. ஏன் வூட்டு வாசல்ல ங்கோத்தா இனிமே ஏதாச்சும் பொருளு கெடந்துச்சு.. தூக்கி கடல்ல கடாசிடுவேன்....ஹ..க் ஆம்...மைக்கேலு மயிருன்னெல்லாம் பாக்கமாடேன்...ஆமா

ஏய்... பேமானி....இப்ப இன்னா செஞ்சுட்டாங்க...? இன்னா உள்ள உட்டுகினு மப்புல கூவுறியா..? உட்டேன்.. மவனே மூஞ்சு பேந்துடும்...ச்ச்சீ போ... அப்பால....கயித...எப்ப பாரு பேஜார் பண்ணிகினு...! ஒனக்கு என் மேல படா காண்டு கீது பன்னீரு.. இன்னாடா மைக்கேல் வலை போட்டா மட்டும் வஞ்ஜிரம் மீனும் வவ்வால் மீனுமா வந்து பூந்துகுது... நம்ம போட்டா ஒண்ணியும் வரக்காணமேன்னு ஒனக்கு காண்டு...

இதப் பாரு பன்னீரு.. மனசு சுத்தம் வோணும்.. நீ மாரியாத்தாவ கும்புடுவியோ மேரி மாதாவ கும்புடுவியோ மனசு மயிரு மாதிரி இருந்தா ஒண்ணியும் வேலைக்காவாது.. நாளைக்காச்சும் நல்ல மனசோட கடலுக்குப் போ....எத்துனாச்சும் கெடைக்கும்.. சம்மா... கொரலு கொடுத்துகின்னு...

ஏதோ மெட்ராசுல இருக்கங்காட்டியும் கொஞ்சம் நல்ல சோறு துன்ன முடியுது.....ங்கோத்தா நீ எல்லாம் இராமேசுவரத்துலருக்கணும்...எலங்ககாரன் கொன்னு கடல்ல கடாசிருப்பான்.. வன்ட்டான்...பெரிய கவுர்னரு மாறி.. ச்ச்சே போ....எச்சக்கல...
....

....

....

....

மைக்கேலு ஒனக்கு மருவாத அவ்ளொதான்...ங்கோத்தா ஒன் இஸ்ட்டோரி அல்லாம் எனக்குத் தெரியாதா... ஒழுங்கா பொண்டாட்டி வச்சு குடும்பம் நடத்த தெரியாத நாயி நீ....! நீ எனக்கு ரூல்ஸ் போடுறியா....நான் அட்ச்சேன்.....வாய் வெத்தல பாக்கு போட்டுக்கும் டாபரு...

பார்ரா...இவுருக்கு மட்டும்தான் மஞ்சா சோறு கீது நெஞ்சுல.... எங்களுக்கு எல்லாம் களிமண்ணுதான் கீது.....ப்ப்ப்ப்ப்ப்ப்ளார்..........மயிறு சொல்லிகினே இருந்தா நீ கேக்க மாட்ட..மைக்கேல் பன்னீரை அறைய...

ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்...என்ன அட்சிட்டீல்ல ஒன்ன சாவடிக்காம வுடமட்டண்டெஆ... தே***யா பையா டேய்... ...பக்கத்தில் கிடந்த கட்டையை எடுத்து பன்னீர் மைக்கேல் மீது அடிக்க....

கூட்டம் கூடி...அந்தப்பகக்ம் 10 பேர் பன்னீருக்கு சப்போர்ட்டாக வர, இந்த பக்கம் 10 பேர் மைக்கேலுக்கு சப்போட்டாக வர......

' யப்பா பக்கத்து பக்கத்து வூட்ல இருந்துகினு இன்னா பேஜாராகீது ரெண்டு பேரலாயும்...ஏய் மைக்கேலு இனிமே அவனுக்கும் ஒனக்கும் ஒண்ணியும் கெடயாது....ங்கோத்தா இன்னாத்துக்குடா அடிச்சுகிட்டி நாரம்சம் பண்றீங்கோ....

அவன் முஞ்ச நீ பாக்காத.. ஓன் மூஞ்ச அவன் இனி பாக்க வோணாம்....ஒங்க பொருள எல்லாம் ஒங்க எடத்துலயே இஸ்து வைச்சிகினு கம்ம்னு மூடிக்கீனு போங்க.... தெனிக்கும் சத்து சத்து பொழக்கிற பொழப்ப பொழச்சுக்கினு ....இன்னாதுக்குடா அடிச்சுக்கினு சாவுறீங்கோ...

டவுசர் போட்டு இஸ்கூலுக்கு போன டைம்ல இருந்து ரெண்டு பேரும் தோஸ்த்தா இருந்தானுங்கோ புள்ள குட்டின்னு கண்ணாலம்னு கட்டிகினதுகோசரம் ...ஒங்க ராவடி தாங்க முடியல...மயிறு இன்னிமே ஒண்ணியும் வாணாம்...

ஒருத்தன் மூஞ்சில் ஒருத்தன் முழிக்காம போயிகினே இருங்க.. சும்மா சண்ட அத்து இத்துன்னு கூவிகினு அப்பாலிக்கா வந்தா கஸ்மாலம் வெட்டி கடல்ல தூக்கிப் போட்டுட்டு போயிகினே இருப்பேன் ஆமா....

....

....

....

ஏய்....இன்னாடி கயித மாறி நிக்குற.. போய் சொம்புல தண்ணி கொண்டாடி...தொண்ட வலி ங்கோத்தா உசுரு போகுது....' பேசி முடித்து பக்கத்திலிருந்த பொண்டாட்டியிடம் தண்ணீர் கொண்டு வர விரட்டினார்...குப்பத்து பெருசு முத்து மாணிக்கம்...

வலி பரவிய கன்னம் மெலிதாய் வீங்கிப் போயிருக்க, வாய் உதடு கிழிந்து மெல்ல மெல்ல தள்ளாடியபடியே வீட்டுக்குள் சென்றான் பன்னீர்.

கட்டையால் அடிவாங்கி பின் முதுகு கிழிந்து பனியனுக்கு மேல் இரத்தம் கசிய....இடது தோள் பட்டையை பிடித்த படி....வேதனையோடு வீட்டுக்குள் சென்றான்...மைக்கேல்...!

கூட்டம் கலைந்து செல்ல.... முத்து மாணிக்கம் வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்கிப் போனார். அந்தப் பகுதியே நன்றாக உறங்கிப் போனதும் சடாரென்று விழித்துக் கொண்டது கடல்...

கடலடி நிலத்தில் மாற்றங்கள் நிகழ....நடுக்கடலில் தவம் கிடந்த கடல் கரையை நோக்கி சீறீப்பாய...

அலைகள் எல்லாம் மலைகள் உயரம் எழும்ப.. தண்ணீரின் தாண்டவம் கரையோரத்து மீனவர்களின் வீடுகளை தட்டியெழுப்ப்பி உயிர் பறித்துக் கொண்டிருந்தது. ஒலமிடக் கூட நேரமில்லாமல் உறக்கத்தினூடான கனவுகளோடு நிரந்தரமாய் பயணிக்க ஆரம்பித்திருந்தன உயிர்கள்...

கடலின் கோர தாண்டவமடங்கிய அந்த விடியலில்....காகங்களும், கழுகுகளும் வட்டமிடும் சுடுகாட்டுப் பொட்டலாய் மாறிப் போயிருந்தது எபிநேசர் குப்பம்....

பன்னீரின் வீடும்... மைக்கேலின் வீடும்....இடம் மாறி இரண்டும் ஒன்றாய் போயிருக்க....

சுற்றிலும் மனித சடலங்கள் எல்லாம் சிதறிக் கிடக்க.......

அருகருகே நேருக்கு நேராய் முகம் பார்த்த படி செத்துக்கிடந்த இரு சடலங்களில் ஒன்று பன்னீர் மற்றொன்று மைக்கேல்...

பெரியவர் முத்து மாணிக்கம் படுத்திருந்த கயிற்றுக் கட்டில் நொறுங்கிப் போய் கிடந்தது....பெரியவர் முத்து மாணிக்கத்தை காணவில்லை....

கடல் முந்தைய நாள் இரவைப் போலவே மறு நாள் காலையிலும் சமாதானமாய் மெளனித்துக் கிடந்தது.


தேவா. சு





Comments

Kousalya Raj said…
இந்த பூமியில் நிரந்தரமாக இன்னும் பல காலங்கள் வாழ போவதை போல மனிதர்களின் ஆணவ கூச்சல்கள், ஆர்பாட்டங்கள் தான் எத்தனை எத்தனை...??!!

அத்தனையையும் ஒரு நொடியில் தவிடு பொடியாக்கி ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது இயற்கை...!!!

நிலையற்ற மனித வாழ்வை மனிதர்களுக்கு நினைவுபடுத்தவே அவ்வபோது வந்து செல்கின்றன நிலநடுக்கங்களும், சுனாமிகளும்...?!!

...

படைப்பை உள்வாங்கி கொண்டேன் என்றாலும் அதன் தாக்கம் மெல்ல மனதை கீறி சிதைத்து கொண்டே இருக்கிறது...

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...