Skip to main content

நானே நானாய்.....!



நிலவின் அழகில் தடுமாறி தளும்பி
கிறங்கிக் கிடந்த ஒரு குளக்கரை
இராத்திரியின் நிசப்த நிமிடங்களுக்குள்
நான் ஊறிக் கிடந்தேன்...!

மொழிகளின்றி இரைச்சலாய்
பேசிக் கொண்டிருந்த
தூரத்து மலைகளை
ஒற்றிக் எடுத்துக் கொண்டிருந்த
வாடைக் காற்றின் ஓரத்தில்
ஒட்டிக் கொண்டு பறந்த
ஒற்றைக் குயிலின் சப்தம்
என் காதுகளை தடவிச் செல்கையில்
கிறங்கிக் கிடந்த என் விழிகளை
அடைத்து மூடி எங்கோ
ஒரு கனவு வெளிக்கு
இழுத்துச் செல்ல காத்திருந்த
இமைகளை மெல்ல பிரித்தெடுது
மீண்டும் மூழ்குகிறேன்...
அந்த மோன நிலைக்குள்...!

கேட்கவும் சொல்லவும்
யாருமற்று...
தேவைகள் எல்லாம்
தொலைந்து போன
பிரபஞ்சத்தின் சொர்க்க
இராத்திரியின் நிமிடங்களில்
மானுடனாய் ஜனித்ததின்
அர்த்தங்களை எல்லாம்
கை குவித்து நீர்பருகும்
தாகக்காரனாய் விழி குவித்து
காட்சிகளாய் பருகிக் கொண்டிருந்தேன்..

மெளனத்தின் உச்சத்திற்கு
துணை தேவையில்லை...
சரித்திரத்தின் பக்கங்களுக்குத்தான்
நிகழ்வுகளின் அழுத்தங்களும்
மனிதர்களின் நகர்வுகளும்
அவசியமாகின்றன...

கருக் கூடி ஜனிக்கையில்
உரு மறைந்து மரிக்கையில்
அற்றுப் போகும் வாழ்க்கையில்
இடையில் துளிர்க்கும்
சங்கடங்களை எல்லாம்
வாழ்க்கையென்று கூறும்
மானுடர் விட்டு
நான் தூர நகர்கிறேன்...

எட்டிய வரை வானமுண்டு
கிட்டிய வரை வாழ்க்கை உண்டு
தொட்டுத் தழுவிச் செல்ல
தென்றல் உண்டு...
ரகசியம் பேசிச் செல்ல
படர்ந்து கிடக்கும் பூமியின்
அடர்ந்த ரகசியங்களுண்டு...

விடியலில் சூரியன் வரும்
மனமில்லா மேகங்கள் வரும்...
பறப்பன ஊர்வன எல்லாம்
என்னைக் கடந்து செல்லும்...
பசிக்கையில் கிடைப்பதை
புசிக்கையில் மறந்தே போகும்
அந்த உடலின் தேவை...

மானுடரில்லா வாழ்க்கையில்
நான் யாருமில்லா நினைவுகளில்
என் இருத்தலின் லயித்தலில்
பிரபஞ்ச நகர்தலின்
தாளத்தில் தப்பாமால்
ஆடும் சிவ தாண்டவத்திற்கு
உடலெதற்கு? மனமெதற்கு....
மக்கள்தான் எனக்கெதற்கு...
நானே நானாய்.....நகர்கிறேன்..
நானே யாவுமாகிறேன்...!

தேவா. சு



Comments

Unknown said…
நல்ல அழகான கவிதை
Anonymous said…
Very Nice..

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...