ஆதியிலே இருந்து அசைவற்ற சிவம், சூன்யம், சத்தியம் எப்போது இயங்கத் தொடங்கியதோ அங்கே தொடங்கியது கலை. இல்லாததை சொல்பவன் கலைஞன் ஆனால் அதுவும் முழுமையிலிருந்துதான் வரும். எல்லாமாய் தன்னுள் எல்லாவற்றையும் மறைத்து வைத்திருக்கும் இந்த பிரபஞ்சம் தேக்கி வைத்திருக்கும் ரகசியங்களும் அற்புதங்களும் கோடானு கோடி என்று சொல்வதும் ஒரு மட்டுப்பட்ட நிலைதான்..
நான் ஒரு இசைக்கலைஞன் மனிதர்களை விட ஸ்வரங்களோடு எனக்கு ஸ்னேகிதம் அதிகம். இசையும் பாடலும் எனது இரு கண்கள்....எனது குரல்வளையிலிருந்து வெளிப்படும் சப்தங்கள் எல்லாம் பிராணனிலிருந்து வெளிப்படும் காற்றின் ஏற்ற இறக்கமே...!
ஒரு ராகத்தை ஆரோகணத்திலிருந்து படிப்படியாக அவரோகணத்திற்கு கொண்டு வந்து ஸ்வர சுத்தமாக ஆரோகணத்திற்குக் கொண்டு சென்று விளையாட முழுக்க முழுக்க மூச்சுப் பயிற்சி அவசியம்...பிரணாயமத்தில் சுவாசத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சப்தத்தினை பயில, பயில குரல்வளையிலிருந்து வெளிப்படும் காற்றின் அளவுகள் தேவைக்கு ஏற்ப ஸ்வரங்களுக்குள் நின்று இராகங்களை மெருகூட்ட...எனது குரல் உங்களுக்குப் பிடித்துப் போகிறது.
முழுக்க முழுக்க பூமியோடு பந்தப்படாத ஒரு சிந்தனைக்குள் வந்து விட்ட பின்னரும் பூமியில் வாழும் ஒரு நிலை கொண்டு இருக்கும் ஆத்மார்த்த கலைஞர்களை பெரும்பாலும் எல்லோரும் சரியாக அடையாளம் கண்டு கொள்வதில்லை. அப்படியே மிகைப்பட்ட பேர்கள் கண்டு கொண்டு விட்டாலும் அது கலைஞனின் உருவத்தையோ, பின் புலத்தையோ, அவனை ரசிப்பதால் மிகைப்பட்டபேர் தன்னை மதிப்பரென்றோ, அல்லது அவனால் தமக்கேதேனும் ஆதாயம் கிட்டாதா என்றும் ஏதோ ஒரு சுய நலப் போக்கில் அமைந்து விடுகிறது.
ஒரு சரியான கலைஞன் மேற் சொன்ன எல்லாம் அறிந்து, பெரும்பாலும் இவர்களை ஏதோ ஒரு காரணத்தை காட்டி புறம் தள்ளுகிறான், ஆனால் ஒரு படைப்பாளியின் படைப்பு ஜனித்த மூலத்தை கண்டு ரசிக்கும் ஒரு ரசிகனையோ அல்லது ரசிகையையோ....
அவன் அவ்வளவு சாதாரணமாக விட்டு விட முடியாது. ஏனென்றால் அவனிடமிருந்து வெளிப்படும் இசையை அவன் எங்கிருந்து எடுத்தானோ அந்த இடத்தை கண்டு ...இங்கே தானே??? இப்படித்தானே என்று ஆச்சர்யமாய் கண் விரிக்கும் போது இவன் தன்னின் படைப்பிற்கான முழு அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் மேலும், மேலும் தன்னை தனது கலையின் மூலம் அற்புத படைப்புகளாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறான்.
இப்படிப் பட்ட இசைக்கலைஞன் நான். எனது வாழ்க்கையில் நுழைந்த சிந்து....இப்படி, அப்படி என்னை ரசித்தவள், என் புறச்சூழலை காரணம் காட்டி லோகாதாய மாயங்களுக்கு பயந்து என்னை விட்டுப் போய் விட்டாளென்றால்....... என் கலை எப்படி வாழும்...? என்னை உற்று நோக்கி சீராட்டும் ஒரு விமர்ச்சிக்குமொரு பொக்கிஷம் இல்லையெனில்....என்னவாகும்....?
இந்த மாதிரி பாடல்தான் ஜனிக்கும்....!!!!
காலத்தால் அழியாத ஓவியம் செய்த பிரம்மா கே. பாலச்சந்தர் சார்......ஜேசுதாஸ் சார், இசை தெய்வம் இளையராஜா சார் மற்றும் இதில் நடித்திருக்கும் சிவகுமார் சார்....கண்களில் ஒத்திக் கொள்ள வேண்டிய ஒரு இசை படைப்பு..!!!! நான் என்ன சொல்லி விடமுடியும்...
எறும்பு வியந்தாலும்...
இமயம் இமயம்தானே...!
இனிமையான இசையால் உங்களுக்கு கிடைக்கப் போகும் அற்புத அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்.
தேவா. S
Comments
இளையராஜா அவர்களின் பாடல்கள்தான் நான் விரும்பிக் கேட்பவை.
அருமையான பாடல் பகிர்வு.