Skip to main content

நானுமில்லை....யாருமில்லை...!





நடப்பதற்காக கீழே இறங்கினேன். வார இறுதியில் என்னோடு நான் இருக்க எடுத்துக்கொள்ளுமொரு தந்திர உபாயம் இது. நடப்பது உடற்பயிற்சிக்காக அல்ல என்பது எனக்குத் தெரியும். வேக வேகமாய் காலையிலும் மாலையிலும் கையை வீசி வீசி வேகமாய் பூங்காக்களில் நடப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஒருவித பரபரப்பும் ஏதோ ஒரு தேவையும் இருப்பதை அவர்களின் முகம் காட்டிக் கொடுக்கும். பெரும்பாலும் நடப்பவர்களிலும் ஓடுபவர்களிலும் இரண்டு சாரார் மிகுந்து இருப்பதை நான் அடிக்கடி கவனித்திருக்கிறேன்.

திருமணம் ஆகப்போகும் பையன்களின் ஓட்ட சாட்டமும், நாற்பதைக் கடந்து சர்க்கரை, இரத்த அழுத்தம் இன்ன பிற வியாதிகளுக்குப் பயந்தும் அல்லது ஏற்கெனவே வந்து மருத்துவரின் அறிவுரைப்படி நடப்பவர்களின் கூட்டமும் எப்போதும் இருக்கும். வெகு சிலரே உடல் நலம், ஆரோக்கியம் இந்த உந்துதலின் பேரில் தொடர்ச்சியாய் நடப்பவர்களாகவோ ஓடுபவர்களாகவோ இருக்கிறார்கள்.

நானும் இப்படி ஓடி இருக்கிறேன்...மூச்சு இரைக்க இரைக்க...ஆனால் கல்யாணத்திற்கு பிறகு சக தர்மினியை விட்டு விட்டு துபாய் வந்தவுடன் அடர்த்தியான ஊர் நினைவுகளை மாற்றிக் கொள்ள ஓடி இருக்கிறேன். இரண்டு மூன்று கிலோ மீட்டர்கள் மூச்சிறைக்க இறைக்க ஓடி.... சட்டை எல்லாம் நனைந்து போக கடற்கரைக் காற்றில் வெகு நேரம் இரவில் அமர்ந்து விட்டு தளர்ந்து போய் அறைக்கு வந்து உணவுக்குப் பின் உறங்கும் உறக்கம் கிட்டதட்ட சொர்க்கத்தின் சாயல் என்றே சொல்லலாம். உடலின் கொழுப்புகள் குறைந்து உடம்பு தக்கை போல ஆகி உடல் மெலிய...மெலிய மெலிந்து இருப்பதின் சுகம் என்னவென்று பிடிபட...

பின்னாளில் உணவு கட்டுப்பாட்டின் மூலமே உடலின் எடையை தக்கவைத்துக் கொள்ளும் உபாயத்தைக் கண்டு பிடித்து விட்டேன். அவ்வப்போது யோகா செய்வதைத் தவிர உடலுக்காய் பெரிதாய் அலட்டிக் கொள்வது கிடையாது. உடலோடு இருப்பதை விட ஆழ் மனத்தோடு இருக்கும் நேரம் அதிகம். ஆழ்மனம் தன்னிச்சையாய் உடலை கவனித்துக் கொள்கிறது. 

இப்போது நடக்க ஆரம்பித்திருந்தேன். ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து முழு உணர்வு நிலையில் நகர்தல் எவ்வளவு சந்தோசமானது. எப்போதும் எதுக்கெடுத்தாலும் வாகனத்தில் சென்று விடும் ஒரு காலச் சூழலில் இருக்கும் போது நடப்பதற்கான வாய்ப்பு என்பது புதிதாய் ஒரு சந்தோசத்தைக் கொடுக்கிறது.வாகன நெருக்கமான சாலையைக் கடந்து யாருமற்ற சாலைக்குள் மெளனம் நிசப்தமாய் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு காற்றால் தலை கலைக்க... ஒரு குழந்தையாய் சிலாகித்து சிலாகித்து ஒவ்வொரு நொடியையும் அடிமேல் அடி வைத்து நடந்து கொண்டிருந்தேன். இப்போது சுவாசத்தை கவனிக்க ஆரம்பித்து விட்டென்.

ஆமாம்.. எப்போது எண்ணங்கள் மனதிலிருந்து அறுபட்டுப் போகிறதோ அப்போது மனம் உடனடியாய் ஓடிப்போய் நிற்கும் இடம் மூச்சு. என்னை பொறுத்த வரைக்கும் பழக்கப்பட்ட ஒரு நாயைப் போலத்தான் மனம். வாலாட்டிக் கொண்டு சொன்ன பேச்சை உடனடியாய் கேட்கும். அதை எப்போது குரைக்கச் சொல்ல வேண்டுமோ அப்போது குரைக்கவும் எப்போது கடிக்க வேண்டுமோ அப்போது கடிக்கவும், எப்போது வால் குழைத்து படுக்க வேண்டுமோ அப்போது படுக்கவும் பயிற்சி கொடுத்து இருக்கிறேன்.

மனதை புரிந்து கொள்ள அது நாம் எதைச் சொன்னாலும் செய்கிறது. புரிந்து கொள்ள முயலும் ஆரம்பத் தருணங்களில் நம்மை கடித்தும் விடுகிறது. நாளாக...நாளாக.. மனம் ஒரு வெற்று மாயை என்ற புரிதல் ஏற்பட....மாயையான மனதைப் பாரதியின் வரிகள் கொண்டு..

" எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே - நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ ? - மாயையே!
                                          
என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே ! - நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
 றேயுணர் - மாயையே ! "

என்று பழித்து விட மனம்... ஒடுங்கிக் கொள்கிறது. இப்போது சுவாசத்தை கவனித்துக் கொண்டிருந்தேன்...! ஆழமாய் மூச்சினை உள் இழுத்து வெளிவிடும் போது ஏற்படும் பரம சுகத்திற்கு பெயர் திருப்தி. பெரும்பாலும் எண்ணங்களுக்கு ஏற்றவாறு சுவாசத்தின் ஏற்ற இறக்கங்கள் மாறுகிறது. 

சரியாய் தூங்காத நாளொன்றின் விடியலில் உடலின் இரத்த அழுத்தம் மாறிப்போய் அது மூளைக்கு வேகமாய் பாய்ந்து ஒரு மாதிரி இயல்பற்ற தன்மையை உடலுக்கு பரவ விட எரிச்சல் ஏற்படுகிறது. எதைப்பார்த்தாலும் எரிச்சல் யாரைப்பார்த்தாலும் எரிச்சல். இந்த எரிச்சல் கோபமாய் அடுத்தவர் மீது பாய, அடுத்தவர் நம் மீது பாய சூழல் கெட்டுப் போகிறது. 

இதை சரியாய் கவனித்து சரி செய்ய மூச்சினை கவனித்தல் அவசியமாகிறது. உடலின் எரிச்சல் அடுத்தவரிடம் கோபமாய் பாயும் முன்னரே அதை தடுக்க முடியும். மூச்சினை கவனித்து அதை சாந்தப்படுத்தி ஆழமாய் பிராணனை சுவாசித்து வெளிவிட புத்தியின் சூடு தணிகிறது. புத்தி குளுமை அடைகிறது. புத்தி குளிர அங்கே பரவும் இரத்தத்தின் வேகம் மட்டுப்பட்டு பிறகு உடலின் மற்ற பாகங்களுக்கு கொடுக்கும் கட்டளையில் நிதானம் பரவ செயல்கள் அமைதியாகின்றன. அந்த அமைதியில் நாம் சாந்தமாகி விடுகிறோம்.

உறக்கம் என்பது... மூளை செலவு செய்த சக்தியை திரும்பப் பெறுதல். ஆக்ஸிஜனால் மூளையை நிரப்ப முழுமையான புத்துணர்ச்சியோடு மூளை விழிப்போடு வேலை செய்ய ஆயத்தமாகிறது. இப்படித்தான் உறக்கமே இல்லாவிட்டாலும் ஆக்ஸிஜனை சரியான அளவில் நிரப்பிக் கொள்வதன் மூலம் எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். இதை சித்தர்கள் எல்லாம் சரியாய் செய்து உறக்கத்தை வென்று விடுகிறார்கள்.

இப்போது என் சுவாசம் நிபந்தனைகள் இல்லாமலேயே ஆழமாய் நிறைந்து கொண்டிருந்து. பெரு விருப்பங்களோ, துயரங்களோ எல்லாமே கடந்து நின்று கொண்டிருந்தது மனம். வானத்தை பார்த்தேன்...மேகங்களை காற்று நகர்த்திக் கொண்டிருந்தது. அவ்வப்போது யாரேனும் என்னைக் கடந்தோ அல்லது எதிர்ப்பட்டோ போய்க் கொண்டிருந்தார்கள். காரணங்களின்றி வாழ்வதற்கான சூழல்களை எவனொருவன் பெற்றிருக்கிறானோ அவன் பாக்கியவான். இலக்குகள் அற்று பயணிக்கும் ஒரு வாய்ப்பு எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை.

நாளைக் காலை விடிகையில் இன்னதை செய்யப்போகிறோம் என்று திட்டமிட்டு வாழும் வாழ்க்கை மேலோட்டமாக பார்க்கும் போது பாராட்டத்தக்கதாய் இருந்தாலும் அது மிகவும் ஒரு துரதிருஷ்டமான நிலை என்றுதான் நான் சொல்வேன். நாளைய நகர்வு என்றில்லை அடுத்த நொடியின் நகர்வு கூட யாராலும் அனுமானிக்க முடியாது என்னும் போது திட்டமிட்டேன் என்று கூறுவது முழு அபத்தம். 

காலம் ஒரு கணக்கு வைத்திருக்கிறது........அதன் படி செயல்கள் புறச்சூழலுக்கு ஏற்ப நிகழ்கிறது, அப்படி நிகழும் செயல்களில் ஏதோ ஒன்று அவ்வப்போது நமது திட்டத்தோடு ஒத்துப் போகிறது. அடிக்கடி இப்படி ஒத்துப் போகும் போது நமது திட்டம் வென்று விட்டதாக நம்புகிறோம்.

சரி அதை விடுங்கள்..... எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்று விட்டேன். 

நான் இப்போது நடந்து கொண்டிருக்கிறேன்.....! அசுர கதியில் இயங்கும் வாழ்க்கையில் தனியாய் அமர்வதற்கும் தன்னை தானே உற்று நோக்குவதற்கும் நேரமில்லாதவர்கள் தனியே நடப்பதற்கு முயற்சி செய்யுங்கள். உடற்பயிற்சியாய் செல்வதை தனியே வைத்துக் கொள்ளுங்கள்.. ஆனால் தனிமையை அனுபவிக்க உங்களை உற்று நோக்க...தனியே நடந்து பாருங்கள்....

நான் நடந்து கொண்டிருந்தேன்....யாருமற்று ... நானுமற்று....!

தேவா. S



Comments

கோவி said…
//மனதை புரிந்து கொள்ள அது நாம் எதைச் சொன்னாலும் செய்கிறது. புரிந்து கொள்ள முயலும் ஆரம்பத் தருணங்களில் நம்மை கடித்தும் விடுகிறது//

சரியாகச் சொன்னீர்கள்..
//காரணங்களின்றி வாழ்வதற்கான சூழல்களை எவனொருவன் பெற்றிருக்கிறானோ அவன் பாக்கியவான்.///

அருமை நண்பரே... என்னைப் படித்ததைப் போல ஒரு உணர்வு.. நன்றி..
காரணங்களின்றி வாழ்வதற்கான சூழல்களை எவனொருவன் பெற்றிருக்கிறானோ அவன் பாக்கியவான். இலக்குகள் அற்று பயணிக்கும் ஒரு வாய்ப்பு எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை.// கவித்துவமான வரிகள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டவும் செய்கின்றன .
\\ஆமாம்.. எப்போது எண்ணங்கள் மனதிலிருந்து அறுபட்டுப் போகிறதோ அப்போது மனம் உடனடியாய் ஓடிப்போய் நிற்கும் இடம் மூச்சு.\\

இது தானாக நடக்கிற அனுபவம். இதைத்தான் முயற்சி செய்து மூச்சை கவனித்து கவனித்து பழக்கப்படுத்திக் கொண்டு வந்தால் எண்ணங்கள் கட்டுப்படும். அறுபடும். இது தான் தியானத்தில் நடக்க வேண்டியது.

இப்படி ஒரு எளிமையான விசயத்தை அதே மனதிற்கு தீனி போடும் விதமா ஏகப்பட்ட விளக்கங்கள் கொடுத்து மனதை சமாதானப்படுத்திக்கொண்டு இருக்கின்ற்ன பல ஆன்மீக அமைப்புகளும்..

உங்கள் இந்த இடுகைக்கான எழுத்து நடை எளிமை, அருமை :)))
ஹேமா said…
தேவா...உங்களைச் சிலசமயம் ‘தேவா...நீங்கள் ஞானியா?’ என்று கேட்கத் தோன்றுகிறது.இல்லையென்றால் வாழ்வின் ஓவ்வொரு அசைவையும் அலசுபவன் பெயரைச்
சொல்லுங்களேன் !
Ungalranga said…
பாரதிக்கு நன்றி...!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த