எங்கோ அழுது கொண்டிருக்கும்
ஒரு தூரத்து புல்லாங்குழலிலிருந்து
வழிந்தோடும் இசையின் அதிர்வுகளில்
படிந்திருக்கும் கரிக்கும் உப்பு
என் கண்ணீரிலிருந்து களவாடப்பட்டிருக்கலாம்!
முள்ளுக்குள் சிக்கிக் கொண்ட பட்டாம் பூச்சியாய்
சிறகசைக்க அசைக்க ரணப்பட்டுப் போகும்
வாழ்க்கையின் கணங்கள் அவ்வப்போது
அன்றொருநாள் புத்தியில் ஸ்தாபிக்கப்பட்ட
நரகத்தின் நெருக்கடியோடு
மூச்சு முட்ட வைக்கிறது;
விதிமுறைகளை உடைத்து போட்ட
உலகத்தின் உச்ச காதலோடு
வலிகளை வாளேந்தும் போராளியாய்
நொறுக்கும் உத்வேகத்தில்
ஒரு பயங்கர கனவொன்றில்
நான் முடவனாயிருந்தேன்..!
புள்ளியாய் இருந்த ஒரு
நெருப்புத் துளைக்குள் உள் நுழைந்து
தலை குப்புற நான் விழுந்து கிடக்கும்
வெளிச்சக்காட்டில் முழு வெளிச்சமும்
நானாய் பரவி இருக்கையில்
எங்கிருந்தோ பறந்து வந்த
அவளின் முகமொத்த ஒரு முகமூடி
எனை மீட்டெடுத்த நினைவுகளால்
முளைத்த சிறகுகள் கொண்டு
மீண்டும் சிறகடிக்கிறேன்...தொலைந்து போன
என் காதலை(லியை)த் தேடி...!
தேவா. S
Comments
raaga
எனை மீட்டெடுத்த நினைவுகளால்
முளைத்த சிறகுகள் கொண்டு
மீண்டும் சிறகடிக்கிறேன்...தொலைந்து போன
என் காதலை(லியை)த் தேடி...!//
தொலைக்க முடியாதா முகங்கள் எத்தனையோ இருந்தும் காதலில் மட்டும்தான் இத்தனை அவஸ்தை !
வாழ்த்துக்கள்.