Skip to main content

இது உயிருள்ள மண்...இங்கே ஜீவன் இருக்கிறது.....!




























ஒரு மாதிரி நெகிழ்வாகத்தான் இருந்தது மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் ஊருக்கு வந்த அனுபவம். கூர்மையாய் கவனித்துப் பார்த்த போது ஏர்கிராஃப்ட் விட்டு வெளியே வந்து சென்னையில் பரவிக் கிடந்த பிராணனை நாசிக்குள் ஆழமாய் சுவாசித்த அந்த கணம் கருப்பையிலிருந்து வெளி வந்து முதல் சுவாசத்தை ஏற்றுக் கொண்ட ஒரு குழந்தையாய் மனம் குதுகலிக்கத்தான் செய்தது.

பிராணான் என்பது வெறும் பிராணன் அல்ல. இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகமெங்கும் பிராணன் என்னும் ஆக்சிஜன் ததும்பி நிரம்பி வழிகிறதுதான் நான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் ஒவ்வொரு மண்ணிலும் அது பல அதிர்வுகளை தன்னுள் ஏந்திக் கொண்டு வித்தியாசமாய்த் தானிருக்கிறது. பெரும்பாலும் நாம் இதை கவனிப்பதில்லை. நாம்  ஏதேதோ சிந்தனைகளில் பொதுவாய் சூட்சும விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நின்று கூர்ந்து கவனிக்காமல் அடுத்த அடுத்த நிகழ்வுகளை நோக்கி நகர்ந்து விடுகிறோம்.

சென்னை விமான நிலையத்தில் பணி செய்பவர்கள் அத்தனை பேரும் பரபரப்பாய் இருந்தாலும் எனக்கு அவர்கள் உள்ளுக்குள் நிதானமாய் இருப்பதாய் தெரிந்தார்கள். என்னோடு உடன் வந்த அத்தனை பயணிகளும் ஏதோ ஒரு அவசரத்தில் இயந்திரதனமாய் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு நிதான உலகத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும் எனக்குப் பட்டது.

இந்தியா சொர்க்க பூமி என்று நான் சொல்லி  முடித்த உடனேயே அறிவியல் வளர்ச்சியையும், நவீன வசதிகளையும், சுத்தத்தையும், வைத்து ஏதேதோ அளவீடுகள் செய்து கொண்டு இது சொர்க்கமல்ல என்று கூறி அரசியல்வாதிகளின் தகிடு தத்தங்களையும் சேர்த்து எடுத்துக் கொண்டு, குண்டும் குழியுமான சாலைகளையும், வாகன நெரிசல்களையும், குடிசைகள், ஏழைகள், சாக்கடைகள், நட்ட நடு சாலையில் அலையும் மாடுகள், வால் குலைத்து எச்சில் இலைகளுக்காய் சுற்றி திரியும் நாய்கள், பேரம் பேசும் ஆட்டோ ஓட்டுனர்கள், தூசியான மாநகரப் பேருந்துகள், நெரிசல்கள் நிறைந்த சாலைகளில் கண்ட இடத்தில் காறி உமிழும் அழுக்கு  மனிதர்கள், தெய்வ தரிசனத்துக்காய் காத்திருப்பது போல டாஸ்மாக்களின் வாசலில் நூறும் இருநூறுமாய் கசங்கிப் போய் கையில் வைத்துக் கொண்டு என்னபா இது ஒரிஜினல் சரக்குதானே....? என்று பேரம் பேசி மலர்ச்சியாய் வாங்கிச் செல்லும் பெரிசுகள்,இளசுகள், குடு குடு தாத்தாக்கள்...,

டீசல் புகைக்கு நடுவே டீசல் இல்லாத வண்டியை ஓரம் கட்டி விட்டு அழுக்கு காலி பாட்டில்களோடு சாலை தடுப்புக்களை தாண்டிக் குதிக்கும் மனிதர்கள், ஒரு வழிச் சாலையில் எதிர் திசையில் வந்து விட்டு அதட்டி நிறுத்தும் காவலர்களிடம் இயல்பாய் விளக்கம் கொடுக்கும் மனிதர்கள், ஸ்கூட்டிகளில் பறக்கும் முகம் மறைத்த சுடிதார்கள், கார்களினுள் ஏசியை நுகர்ந்தபடி நகரத்தின் யாதொரு சந்தடியையும் நேரடியாக உணராமல் ஏ.ஆர் ரகுமானையோ, இளையராஜவையோ உள்ளுக்குள் வழிய விட்டபடி பறக்கும் பணக்காரர்கள்....என்று....

பிளாட்பாரத்து கையேந்தி பவன் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் நவநாகரீக ரெஸ்ட்டராண்டுகள் வரை......நமது ஊரில் சுற்றி சுற்றி வாழ்க்கை வழிந்து கொண்டிருக்கிறது. மரணம் என்பது அறியப்படாத ஒன்று. அறியப்படுவது வாழ்க்கை. இந்த வாழ்க்கைதான் நம்மை ஆத்ம திருப்தியுடன் நகர்த்திச் செல்கிறது. சலித்துக் கொண்டேனும் தினசரியை நகர்த்தும் ஒரு அழுக்குப் பிச்சைக்காரனுக்கு கூட நமது ஊரில் வாழ்க்கை படியளக்கப்பட்டிறுக்கிறது.

வாழ்க்கை என்பது முழுதாய் அந்தக் கணத்தை வாழ்வது....ஒரு தெருவோர கோவிலில் வேண்டிக் கொண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு பிள்ளையாரைப் பார்த்து தோப்புக் கரணம் போடுவது, பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்த உடனேயே....அஸ்ஸலாமு அலைக்கும்....எப்டி இருக்கீக....என்று குசலம் விசாரித்துக் கொண்டே மாரிமுத்துவின் விட்டு கல்யாணத்தில் போய் சாப்பிட்டு விட்டு மொய் போட்டு விட்டு வருவது....., சர்ச்சிலிருந்து வெளியே வந்து ப்ரதீபோடு ஊர் சுற்றச் செல்வது...., கோபமோ, எரிச்சலோ, சண்டையோ, சந்தோசமோ, அகங்காரமோ அதை இயன்ற வரையில் இயல்பாய் வெளிப்படுத்துவது, போலியாய் ஹாய், பாய் சொல்லி விட்டு மன இறுக்கத்தோடு ஏதோ ஒரு மாய இலக்கை நோக்கி ஓடுவது அல்ல....

ஆமாம் இங்கே வாழ்க்கை இருக்கிறது அதுவும் ததும்ப ததும்ப....வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. இது உயிருள்ள பூமி. துடிப்புள்ள மண். இங்கே புறத்தில் கண்ணுக்குத் தெரியாத நிறைய சூட்சும விசயங்கள் அதிர்வுகளாய் பரவிக் கிடக்கிறது. அவை ஆன்மாவோடு நேரடி தொடர்பில் இருப்பவை. மனதை ஒரு கருவியாய் பயன்படுத்துபவனுக்கு இந்த அதிர்வுகள் ஆத்மார்த்தமாய் பிடிபடுகின்றன. மனதை தானாய் நினைத்து நகர்பவனுக்கு அவனை அறியாமலேயே  வாழ்க்கையின் போக்கில் இந்த அதிர்வுகள் ஒரு நிதானத்தை உண்டு பண்ணி விடுகின்றன. இயந்திரமாய் வேலை செய்கிறேன் என்று நீங்கள் சொன்னாலும் நிங்கள் ஒரு முழு இயந்திரமாய் ஆகி விடாமல் இந்த அதிர்வுகள்தான் உங்களைப் பார்த்துக் கொள்கின்றன.

நான் விழிகள் விரிய சென்னையின் நெரிசலை சுகமாய் அனுபவித்துக்  கொண்டிருந்தேன். உடலுக்கான சுகம் குறைவாய் இருந்தாலும் ஆன்மாவை ஒரு பரம சுகம் தாயாய் தலை கோதி வருடி விட்டுக் கொண்டிருந்தது. நான் ஆழமாய் நிதானமாய் சுவாசித்தேன். பிராணன் உள்ளே செல்ல செல்ல புத்தி குளுமையாகி எண்ணங்கள் சலனமின்றி நகர்ந்தன. என்னை சுற்றிலும் நானே பரவி நின்றிருந்தேன். சுற்றிச் சுற்றி மனிதர்கள், ஒவ்வொரு மனிதரையும் போர்வையாய் சூழ்ந்து கொண்டு ஒரு வாழ்க்கை அதன் மேல் மாயையாய் ஒரு சந்தோசமோ அல்லது வலியோ உடன் பயணித்துக் கொண்டிருந்தது.

வாழ்க்கைக்காக வேறு தேசம் நான் சென்றதின் பின்புலத்தில் பொருள் ஈட்ட வேண்டும் என்ற பொதுப்புத்தி கோரமாய் கொம்பு முளைத்து நின்றது தெரியாமல் அந்த சுழலுக்குள் அகப்பட்டு பொருள் தேட சென்றது தவறுதானே என்று இங்கேயே பெரும் பொருள் ஈட்டிக் கொண்டிருப்பவர்கள் சட்டையப் பிடித்து என்னை கேள்வி கேட்பதை பல பேரை சந்தித்த போது என்னால் உணர முடிந்தது.

அரசியல் பற்றிய தெளிவுகளும் விவாதங்களும், இணையவெளிகளில் உலாவும் வசதி படைத்த மனிதர்களின் பொழுது போக்குகள்தான் என்பதும், சமூகம் என்பது இதை விட்டு வெகு தூரத்திலே இருக்கிறது என்பதும்,  சாதரண மக்கள் தங்களின் வாழ்க்கை அவலங்களுக்கு யாரையும் குற்றம் சொல்லி விவாதிக்கும் விசய ஞானமும், கருத்து செறிவும் இல்லாதவர்களாக, தங்களின் முன்று வேலை சோற்றினையும், பிரச்சினை இல்லாத வாழ்க்கையையும் குறி வைத்தே நகர்பவர்களாக இருக்கிறார்கள் என்பதும் தெள்ளத் தெளிவாக புலப்பட்டது.

சமூகத்தின் பிரச்சினைகளை பேச முற்படும் போது எங்கே தனது கையிலிருக்கும் உணவு தட்டிப் பறிக்கப்பட்டு விடுமோ, தனது வாழ்க்கை சீரழிந்து விடுமோ என்று பயந்து கொண்டு அனுசரித்து வாழும் ஒரு மனோ நிலைக்கு மக்கள் வந்து வெகு காலம் ஆகி விட்டதும், அவர்களின் அரசியல் என்பது தேர்தலின் போது வாக்கு செலுத்துவதோடு முடிந்து போய் விடுகிறது என்பதும் தெளிவாய் தெரிந்தது. மேலும் இந்த ஆட்சி சரி இல்லை என்று உள்ளுக்குள்ளேயே நொந்து கொண்டு அடுத்த ஆட்சியில் மாற்றி வாக்களிக்கலாம் என்ற ஒரு வழமையான மனோநிலையில் இருக்கிறார்கள் மெஸ்மரிசம் செய்தது போல...

நாம் தேர்ந்தெடுத்த ஆட்சி இது, நமது வாக்குகளை பெற்று ஆட்சி நடத்தும் கட்சி இது....குறைகளை அதிரடியாக எடுத்துச் சொல்லி போராடுவோம்... என்று யாருமே எண்ணுவதில்லை. இப்படியாய் என்ன அவர்களின் சமூக சூழ்நிலை சுத்தமாய் அவரகளை விடுவதும் இல்லை.

ஒரு புண்ணிய பூமியின் ஆத்மார்த்த மனிதர்கள் நாம் என்ற பெருமிதம் கூட யாரிடமும் இல்லை. ஏனென்றால் அது அவர்களுக்கு தத்தமது பூர்வீக பெருமைகளைப் பற்றி தெரியவே தெரியாது. மிகையான சுதந்திரத்தில் ஏதேதோ செய்து கொண்டு நிம்மதியாய் இருக்க அவர்களுக்கு இங்கே இருக்கும் அதிர்வுகள் துணை செய்கின்றன. இப்படியான அதிர்வுகள் சரியாய் இருக்க இன்னமும் வலுவான ஆன்மீகம் சார்ந்த மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள். பல வழிப்பாட்டுத் தலங்களில் இருந்து புராதான அலை வீச்சுக்கள் ஒரு தாயாய் இந்த மண்ணை தாங்கிப் பிடித்துக் கொண்டு  இருக்கின்றன.

மனிதர்கள் மதத்தையும், சாதியையும், ஏதோ ஒரு கண் மூடித்தனமான அரசியல் சார்பினையும் தூக்கி எறிந்து விட்டு ஆத்மார்த்தமான ஆன்ம விழிப்பு என்னும் தன்னை உணரல், தான் யாரென்று ஆத்ம விசாரம் செய்தல், வாழ்க்கையோடு இணைந்திருந்தே வாழ்க்கையை ஒரு மூன்றாவது மனிதனாய் வேடிக்கைப்பார்த்தால், சுவாசம் என்றால் என்ன என்று அறிந்து சரியாய் உடலுக்குள் பிராணனை ஆழ்ந்து சுவாசித்தல், பேச்சினை குறைத்து செயல்களால் உணர்வினை வெளிப்படுத்தி சக மனிதனிடம் அன்பு காட்டுதல் என்று இந்த சமூகம் மாறும் போது உலகத்தில் இருக்கும் மானுடர்களுக்கு எல்லாம் நாம் ஒரு முன் மாதிரியாய் மாறும் வாய்ப்பிருக்கிறது...., இப்படியெல்லாம் இருந்ததால் பழந்தமிழரின் வாழ்வு செழித்து இருந்தது என்பதை நாம் இன்று வரலாறாய் அறிந்து கொள்கிறோம்.

ஆன்ம விழிப்பு என்பது ஏதோ  ஒரு சித்தாந்தம் அல்ல. அது உலகில் இருக்கும் எல்லா சித்தாந்தங்களையும் உடைத்துப் போட்டு விட்டு மனிதரை மனிதராய் பார்க்கும் ஒரு நிகழ்வு....

நான் பேசிக் கொண்டேயிருப்பேன்.. என்பதால் சடன் ப்ரேக் போட்டு இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன், மற்றபடி.....ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறேன், கோவில் கோவிலாய் போய் ஏதோ ஒரு இருட்டு மூலையில் அமர்ந்து கொள்கிறேன்...காலார நடந்து வழிந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை பருகிக் கொண்டிருக்கிறேன்....

ஆமாம்...இது உயிருள்ள மண்...இங்கே ஜீவன் இருக்கிறது.....!

தேவா.  S




Comments

உயிர் வந்துவிட்டது :-)
ஜீவனுள்ள பதிவு..!!
சிறப்பான பகிர்வு! வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!
http: thalirssb.blogspot.in
அருமையான பதிவு.
உங்க எல்லாருக்கும் இது ஒரு பொழப்பு. காப்பி ஆப்ஷன் டிஸேபில் பண்ணி வச்சிட்டா எவனும் திருடமாட்டான்னு.. :) பிடிச்ச லைனை இப்போ எப்படி கோட் பண்றது? (திரும்ப எல்லாம் டைப் பண்ண முடியாது). அதனால... அருமையான பகிர்வு. வாழ்த்துகள்!
vasan said…
வேறு த‌ள‌த்திற்கு சென்றிருக்கிற‌து உங்க‌ளின் எண்ண‌ங்க‌ள்.
பிரிந்த‌வ‌ர் கூடிய‌ எழுச்சியினை ப‌திவு பிர‌திப‌லிக்கிற‌து.
ம‌ண்ணின் ம‌கிமையால்தான், இத்த‌னை இழ‌ப்புக‌ளையும் தாண்டி
இன்னும் இந்தியா இருக்கிற‌து. தியாக‌ பூமியாய் தியான‌ பூமியாய் இருந்த‌தால் தான் இன்னும் இந்தியா இந்த‌னை சுர‌ண்டுல்க‌ளையும் தாண்டி ம‌யான பூமியாகாமல், சய‌ன‌ பூமியாக‌வேணும் இருக்கிற‌து. யேகிக‌ளும், சித்த‌ர்க‌ளும், புத்த‌ர்க‌ளும், வித்த‌க‌ர்க‌ளும், தியாகிக‌ளும் தீண்டிவிட்டு போன‌ ம‌ண்ணும், காற்றும் ந‌ம்மை காபாந்து செய்ய‌ட்டும்.
unknown said…
வணக்கம்

தங்கள் வலைப்பதிவு மிக அருமை
புதிய சிந்தனை வடிவம் உங்கள் சொல்லில் தெரிகின்றது

என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்

என்றும் அன்புடன்
செழியன்.....

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த