Skip to main content

இருப்பது ஒன்றுதான்.... !


























ஆடிய காலும், பாடிய வாயும் எப்போதும் ஓய்ந்திருக்காது, ஏனென்றால் அது ஒரு வேட்கை. எழுதுவதும் அப்படித்தான் நிகழ்வுகளை உள்வாங்கிச் செரித்து அதை அனுபவமாக்கிப் பார்க்கும் ஒரு வித்தை.  ஒவ்வொரு வரிகளையும் நகர்த்தும் போது உள்ளுக்குள் நடக்கும் மாற்றங்களை நாம் உற்று நோக்கி அனுபவமும் புரிதலும் வார்த்தையாய் வந்து காகிதத்தின் வெள்ளைப் பக்கங்களில் எழுத்துக்களாய் மோதும் தருணம் சுகமானது. இறை தேடல் என்பதை இரை தேடல் என்று விளங்கிக் கொண்டிருப்பேனோ என்னவோ பசித்து உண்டு, பின் உண்ட சுகத்தில் லயித்துக் கிடந்து பின் மீண்டும் பசிக்க, மீண்டும் புசித்து.....

இப்படியான தொடர் நிகழ்வான பெரும் பயணத்தில் கண்டடையப்போவது எதுவுமில்லை என்ற ஒரு நிதர்சனம் அழுத்தமான கீறலாய் உள்ளுக்குள் பதிந்து போய்க் கிடக்கிறது. வலி என்பது எப்படி ஒரு உணர்வோ அதே போல விளக்க முடியாததாய் இது போன்ற அனுமானங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் பார்வையை தெளிவாக்கிக் கொண்டிருக்கிறன. கடவுளென்ற பெருஞ்சக்தி எப்போதும் தனித்து வந்து பக்தா தந்தேன் அபயம் என்று சொல்லி வரங்கள் கொடுத்ததாய் புராணங்களில் இருக்கிறது. கண்டேன் என்றவரால் எல்லாம் ஊருக்கும் உலகத்துக்கும் நான் காட்டினேன் என்று சொல்ல முடியவில்லை.

நம்மை சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை புரிந்து கொள்ள எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் அதை கவனித்துக் கொண்டிருக்கையில் ஒரு விதமான தாளகதியில் நமக்குள் ஒரு நாட்டியம் தொடங்கி விடுகிறது. பலவிதமான உணர்வுகளை பாவங்களாக வெளிப்படுத்தும் ஒரு கலையே பரதம் என்னும் நாட்டியம். பரதமுனி படைத்த ஒரு ஒப்பற்ற கலை. மனித உணர்வுகளை நுணுக்கமாக உடனுக்குடன் முகத்தில் கொண்டு வந்து அபிநயம் பிடித்து தாளகதிக்கு ஏற்றவாறு....

தகதிமி..தகதோம்.. தகதிமி தகதோம்...தகிட..தகிட தகிட... என்று கை வீசி கால் தூக்கி ஆடும் சுகம் என்னவென்று பரதம் ஆடுபவர்களைக் கேட்டுப்பாருங்கள். பரதம் என்று மட்டுமில்லை.. நடனங்கள் எல்லாமே அப்படித்தான். ஆடி ஆடி கூச்சலிட்டு அதிர்ந்து அடங்கும் தருணத்திற்காகத்தான் ஆட்டமே என்று உணரும் போது ஆடுதல் என்பது தேடலாயும் அதன் பின்னான நிறைவு அந்த தேடலை நிறைவு செய்யும் மன உணர்வாயும் அமைந்து போய்விடுகிறது.

நாமும் ஆடிக் கொண்டு சுற்றி நடக்கும் ஆட்டத்தை வாழ்க்கையிலும் ரசிக்க முடியும். சமூக முரண்கள், சிறப்புகள், பிரபலங்களின் தலைக்கனங்கள், தலைக்கனம் இல்லா பணிவுகள், தொடை தட்டி கொக்கரித்து  வீரவசனம் பேசும் நிலையில்லாத உடல் வலிவுகள், குறுக்குப் புத்திகள், காதல்கள், காமங்கள், கவிதைகள், கட்டுரைகள், கதைகள், ஓவியங்கள், கடவுள் மறுப்பு, முரட்டுத்தனமான கடவுள் பக்தி, விஞ்ஞானம், அஞ்ஞானம், ஆன்மீகம், பிறப்பு, இறப்பு, சிரிப்பு, சோகம் என்றெல்லாம் ஒவ்வொரு பாவம் காட்டும் வாழ்க்கையின் ஆட்டமே நடராஜரின் தத்துவமாகிறது. 

ஒற்றைக்கால் தூக்கி கை ஆட்டி.... ஏதேதோ மாயைகளை காலுக்கடியில் போட்டு மிதித்து, ஆடுவதும் அஞ்ஞானமே என்று சொல்லும் ஒரு தத்துவ வடிவம் அது. சனாதான தருமத்தின் வேர்கள் எங்கிருந்து புறப்பட்டன என்று யாருக்கும் தெரியாது. அவை சூட்சுமமானவை. யாராலும் ஆக்கப்படாமலும், அழிக்கப்படாலும் அது ஒரு தத்துவமாய் காலங்கள் தாண்டி நின்று கொண்டு மனித குலத்தின் ஆன்ம வளர்ச்சிக்கு பல வழிகளில் உதவிக் கொண்டுதானிருக்கும்.

காலத்தின் போக்கில் மதமென்ற பெயரில் ஆதிக்க சக்திகள் நடத்திக் காட்டிய வேடிக்கை கூத்துக்களை எதிர்க்கவும் சனாதான தர்மமே உதவியிருக்கிறது. ஆமாம்...தற்போதுள்ள எந்த ஒரு சமகாலத்து நவீன மதங்களும் கடவுள் மறுப்பை தனது அங்கமாக்கிக் கொள்ளும் துணிச்சல்கள் இல்லாதவை. நாத்திகம் எனும் கடவுள் மறுப்பும் சனாதான தருமம் எனப்படும் தத்துவத்தின் பகுதியே என்பதை உணரும் இடத்தில் இது எவ்வளவு ஒரு சுதந்திரமான தருமம் என்பதை தெளிவாய் உணரமுடியும்.

உலகமெங்கும் விரவிக் கிடக்கும் வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்தவர்களுக்கு வழிகாட்டியாய் கீழை நாட்டு தத்துவங்கள் எப்போதும் உதவி இருக்கின்றன. பூகோள ரீதியாய் மனிதர்கள் தத்தமது தட்ப வெட்பத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப பிரிந்து உணவு உடை இன்னபிற பழக்கவழக்கங்களையும், சகமனிதரை தொடர்பு கொள்ளும் சப்த முறைகளையும் தத்தமது சூழலுக்கு ஏற்ப உருவாக்கிக் கொண்டனர்.

மரங்களில்லா பாலை நிலங்களில் சூட்டில் வாழும் மனிதர்கள் சக மனிதரை அழைத்துப் பேசவும், தூரத்தில் நிற்பவரை அழைக்கவும் மென்மையான சப்தங்கள் உதவாது. மென்மையாய் வெளிப்படும் அவர்களின் சப்தங்களை காற்று களவாடிச் சென்று விடுமாதலால்..... அவர்கள்  அடித் தொண்டையிலிருந்து சப்தம் செய்ய வேண்டியதாயிற்று, கண்ணிலும், உடலிலும் முகத்திலும் மணல் காற்று எப்போதும் மணலை அள்ளி வீசிக் கொண்டே இருக்குமாதலால் இயற்கையிலேயே உடல் முழுதும் மறைத்து காது மறைத்து உடையணியும் பழக்கமுறைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.....

குளிரான பூமியில் ஜனித்த மனிதன், குளிரைத்தாங்கவே கழுத்து இறுக்கி  உடையணிந்து, தலையை மறைத்து கையுறை அணிந்து, காலுறை அணிந்து வாழவேண்டிய அவசியம் ஏற்பட்டுப் போனது. அவன் செய்யும் சப்தங்களால் உடலுக்கு வெப்பத்தை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமும் அவனுக்கு இருந்தது. அதனாலேயே அதிக அழுத்தம் கொடுக்காத ஸ்ஸ்ஸ்ஸென்று அடிக்கடி சப்தம் செய்யும்படியான ஒரு வித சப்தமுறையை தனது தொடர்புக்கு  வைத்துக் கொண்டான்.

தொடர்ச்சியான அவனது பழக்க வழக்க முறைகள் பூகோள அமைப்பினால் இயல்பிலேயே அவனுக்குள் தோன்றி பின்பற்றப்பட்டு தொடர்ச்சியான அவனது அடையாளமாக கொள்ளப்பட்டது. இதைத்தான் நாம் கலாச்சாரம் என்று கூறுகிறோம். உணவு மனித உடல் கூறையும், புத்தி கூர்மையையும் தீர்மானிக்கும் ஒரு மிகப்பெரிய காரணி. புத்தியை சூடுபடுத்தாத, தானியங்களையும், இன்ன பிற உணவுகளையும் உண்ட மனிதர்கள் அதிகமாய் சிந்தித்தார்கள். இயல்பிலேயே அடுத்த, அடுத்த கட்டத்திற்கு பயணிக்கும் மனித மனதின் உதவியோடு அவர்கள் தங்கள் உள்ளமையின் தேடலை அவர்கள் சென்றடைந்தார்கள்.

எனது மொழி, எனது நாடு, நான் சிறப்பானவன் என்று கூறி கொடி பிடிக்கும் போக்குகள் எல்லாம் ஏதோ நமது மிகப்பெரிய சிறப்பாய் பார்க்கும் ஒரு தன்மை ஒடுங்கி மொழியும், கலாச்சாரமும், இன்ன பிற விசயங்களும் இயற்கை நமக்குப் போட்ட பிச்சை என்று எண்ண வேண்டும். இப்படி எண்ணும் போது மொழிக்காகவும், மதத்திற்காகவும், இனத்திற்காகவும் நாம் பெருமைப் பட்டுக் கொள்வதும், சக மனிதரை அதை வைத்து சிறுமைப்படுத்துவதும் எவ்வளவு பெரிய புரிதலற்ற விசயங்கள் என்பது புலப்படும்.

வாழ்க்கையின் இயங்குதன்மையோடு சேர்ந்து சனாதான தர்மம் மனிதன் சுமூகமாய் வாழ பல வழிகளைச் சொன்னது. இயற்கையோடு சேர்ந்த ஒரு வாழ்வு. இருப்பதை ஏற்றுக் கொள்ளும் தெளிவினைச் சொல்லும் ஒரு தத்துவமுறை. சிவம் என்னும் பேருண்மை சக்தியாய் எங்கும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறி....வாழ்க்கையை விட்டு விலகி வாழ ஒரு சூத்திரமும் வாழ்க்கையோடு சேர்ந்து வாழ ஒரு சூத்திரமும் சொல்லிக் கொடுத்திருக்கும் ஒரு ஒப்பற்ற தந்திரம். மனத்தால் வாழ்பவர்களை நெறிப்படுத்த ஓராயிரம் வழிமுறைகள். கட்டுக்கள் உடைத்தவர்களை கை கொடுத்து அரவணைத்துக் கொள்ளும் ஒரு சுதந்திரம்...... என்று சுதந்திரத்தின் சுகத்தை போதித்ததோடு.. உலகில் பல நாடுகளில் பலவேடமிட்டு, பல பெயர்களோடு தனது தத்துவத்தின் பகுதிகளை அந்தந்த மனிதர்களுக்கு போதித்துக் கொண்டும் இருக்கிறது.....

இருப்பது ஒன்றுதான்.... அதுவே உலக இயக்கமாகிறது.... அதுவே பிரபஞ்சத்தின் மூலமாகிறது. நானாகிறது, நீங்களாகிறது, இந்த கணத்தைக் கடந்து அடுத்த கணத்திற்குள் நுழைகிறது, இந்தக்கட்டுரையை வாசித்து சரி என்கிறது, தவறென்கிறது.....

நீ யாரென்று அதனிடம் நாம் கேள்வி எழுப்பினால்

திறந்த வெளியில் மிதந்து 
போகும் இறகு நான்...
கனத்த இரவில் ஒளிந்து கிடக்கும்
நிசப்தம் நான்...
பெரு மழையில் ஓரத்தில்
சிலிர்த்து இரையும் சாரல் நான்...
நான் யாரென்று கேட்டால்
வார்த்தைகளுக்குள் ஊடுருவி
அர்த்தங்களில் விளங்கிக் கொள்ளும்
உணர்வுகளையும் கடந்த
அரூபமானவன் நான்...!

என்று கூறிவிட்டு இந்தக் கட்டுரயை இத்தோடு முடித்துக் கொள்ளவும் கூடும்...!

தேவா.  S


Comments

ஹேமா said…
மிக மிக அமைதியா வாசித்தேன் தேவா.எத்தனை அனுபவமான வார்த்தைகள்.உடை,மொழி அதன் சத்தம்கூட நாட்டுக்கேற்றவாறு அமைகிறது.இதைக் கலாசாரம் என்று சொல்கிறோம்.

போனவாரம் நடந்த நிகழ்வொன்று.இங்கு இந்தவாரம் நல்ல வெக்கை.ஒரு பார்ட்டிக்குப் போக என் தோழி சொன்னார் ’நல்ல வெக்கை.இந்த வெயிலில் சேலை கட்டிப்போக முடியுமோ’ என்று.நான் சிரித்துவிட்டேன்.எங்கள் நாட்டுக் காலநிலை வெக்கைக்கேற்ற உடைதானே சேலையென்று....!
SASIKUMAR said…
இதுக்குமேல சுருக்கமா சொல்ல முடியாது.ரொம்ப அருமை.....Rebirth க்கு ஒரு Reverse sweep
கொடுத்தா நல்லா இருக்கும் - sasi

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த