Skip to main content

வானமகள், நாணுகிறாள்....!



அமீரகத்தின் கோடைக்காலம் கொஞ்சம் பலவீனப்பட ஆரம்பித்திருக்கிறது. கனத்து அடர்ந்து வீசிய கந்தகக் காற்று கொஞ்சம் தடிமன் குறைந்து மெலிதாய் சிலிர்த்து சிரிக்க ஆரம்பித்திருக்கிறது. கோடையை கொடையாய்க் கொடுத்த காலம் கடும் குளிருக்கு முந்தைய வசந்தகாலத்தில் இன்னும் ஒரிரு வாரங்களில் அடி எடுத்து வைத்து விடும். துபாய் முழுவதும் சாலையோரங்களில் கோடையிலும் பசுமையாய்ச் சிரித்த பசும் புற்களைத் தாலாட்ட தென்றல் தாய் வந்துவிடுவாள். இனி என்ன... குதூகலம்தான் கொண்டாட்டம்தான்...

விதவிதமான பூக்களை சொரிந்த படியே சாலையோரத்துச் செடிகள் தலையசைத்துச் சிரிக்கப் போகின்றன. சோகமாய் கடற்பரப்பில் பறந்து கொண்டிருந்த சீகல் பறவைகள் கூட்டத்தோடு கூட்டணி சேர, கடற்கடந்து இன்னமும் பறவைகள் கூட்டம் வந்து சேரும்... புறாக்கள் எல்லாம் பேசிச் சிரித்தபடி சாலைகளைக் கடந்து சென்று புல்வெளியில் படுத்துறங்கும்....

கோடையினைக் கடந்து அமீரகம் குளிர் காலத்துக்குள் நுழையும் அழகே தனிதான்...!  நாட்கள் செல்ல செல்ல சாலைகளை அடைத்து நிற்கும் பனிக்கூட்டமும், அதை விரட்ட வாகனங்கள் காலை எட்டு மணிக்கும் விளக்கிட்டு செல்லும் வேகமும், மழையை இப்போதோ எப்போதோ பெய்து விடுவேன் என்று  மிரட்டும் மேகக்கூட்டமும், மாலையில் நடக்க இறங்கும் மனிதர் கூட்டமும், வார இறுதியில் நிரம்பி வழியும் பூங்காக்களும், குளிர்கால விழாக்களும், வியாபாரத் திருவிழாக்களும், வெளிநாட்டவர்கள் வருகையுமெனத் திணறிப்போகும்... இந்த துபாயிலா.. அப்படி வெயில் அடித்தது, அப்படி வியர்த்தது என்ற யோசனையோடு ஜெர்கினுக்குள் நுழைந்து கொண்டு குளிர்காலம் முதலாய் இயக்கப்படாத வீட்டின் ஏசியை வேடிக்கை பார்த்து அதிசயித்துப் போவதும் உண்டு...!

காதுவரை கம்பளிப் போர்த்திக் கொண்டு குளிரினை சுகமாய் அனுபவித்தபடி உறங்குகையில் அதிகாலை அலாரம் அடித்து அடித்து தோற்றுப் போய் கடைசியில் வைக்கும் ஒப்பாரியில் மெல்ல சோம்பல் முறித்து எழுந்து செல்லமாய் தலையில் ஒரு தட்டு தட்டி நிறுத்தி விட்டு.. கண்ணாடி ஜன்னல் வழியே பனி வழியும் அமீரகத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பது சுகம் என்றால்.... மெல்ல எழுந்து ஹீட்டரைத் தட்டி விட்டு தண்ணீர் சூடாகும் வரை மீண்டுமொரு குட்டித்தூக்கம் போட்டு பின் எழுந்து போய் நடுக்கும் குளிரில் வெது வெதுப்பான நீரில் குளிப்பது இன்னும் சுகம்...!

திட்டமிடாத ஒரு வார இறுதியில் இரவு உணவுக்காய் ஒரு பாலைவன ஒரத்தில் நண்பனின் குடும்பத்தோடு சென்று விட்டு குளிர் தாங்க முடியாமல் மண்ணில் கிடந்த கட்டைகளையும் அட்டைகளையும் எடுத்து பக்கத்தில் கேம்ப் பயர் போட்டுக் கொண்டிருந்த ஒரு அரபி நண்பரிடம் இரவல் வாங்கிய சில மரத்துண்டுகளையும், போட்டு திடீர் கேம்ப்ஃபயர் உருவாக்கி, நெருப்பு அணையாமலிருக்க பாலை மண்ணை உதைத்து உதைத்து தேடி தேடி கட்டைகளையும், காய்ந்த  செடிகளையும் போட்டு எரித்து எரித்து நடுநிசி வரை பெரும் நெருப்பின் கதகதப்போடு நிறைய கபாப் துண்டுகளோடு கழிந்த அந்த ராத்திரி மிகவும் வசீகரமானது.

திருமணத்துக்கு முன்பெல்லாம் வியாழக்கிழமை இரவுகளை  அலையடிக்கும் தேரா க்ரீக் பாறைகளின் மீது தனியே அமர்ந்து சுகித்திருக்கிறேன். விடிய விடிய ஆட்கள் நடமாடிக் கொண்டிருப்பார்கள். கடற்கரை காற்று உடல் தொட்டு விளையாடிக் கொண்டிருக்கையில் கற்பாறைகளில் மோதும் அலைகளை ரசித்தபடி பருத்து விரிந்து கிடக்கும் கருவானில் கண்களைப் பதித்தபடி கண் சிமிட்டும் நட்சத்திரங்களோடு விடிய விடிய பேசிக் கொண்டிருந்திருக்கிறேன்.

வெயிலும், குளிரும் இயற்கையின் இரு முனைகள் என்றாலும்....குளிர் எப்போதும் சாந்த சொரூபி... அது புத்தியையும் உடலையும் மென்மையாக்கி ஏகாந்த உணர்வுகளை எப்போதும் கிளறிவிட்டு ஒரு காதலியாய் எப்போதும் வேடிக்கைப் பார்க்கும். புத்திக்குள் ஏதேதோ உணர்வுகள் சில்மிஷம் செய்ய...சட்டென்று நமது ஊரின் மார்கழி மாதம் புத்திக்குள் ஏறி உட்கார்ந்து சம்மணமிட்டுக் கொள்ளும்.

தலைக்கு சால்வை கட்டிக் கொண்டு கோலமிடும் பெண்களுக்கு நடுவே அதிகாலை பத்தாம் வகுப்பு ட்யூசனுக்காய் முண்டாசுக் கட்டிக் கொண்டு சைக்கிள் மிதித்து நகர்கையில் என் அவளின் வீட்டு வாசலில் இல்லாத அவளை நினைத்துக் கொண்டே...

அவள் வீட்டு வாசலில் இருக்கும் பூசணிப்பூவைப் பார்த்தபடி சைக்கிள் பெடலை அழுத்தி மிதித்து குளிருக்குள் நகர்ந்த சொர்க்க நாட்களை சொக்கட்டான் போட்டு இழுத்து வந்து நினைவுபடுத்தும் அந்த சமகாலக் குளிர். வாழ்க்கை எப்போதும் அழகுதான் என்றாலும் அதைக் காதலோடு பிணைத்துக் கொள்கையில் இன்னும் அழகாகிப் போகிறது.அப்படித்தான் அழகான மார்கழி அவளின் நினைவுகளால் இன்னும் அழகாகிப் போகும். 

ஆழமாய் சுவாசித்து அலாதியான நினைவுகளுக்குள் விழுந்து விட்டு மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கையில் இந்தக் கட்டுரையை முடிக்கும் பிரயாசை ஆயாசமாக எட்டிப் பார்க்க்கிறது. உணர்வுகளை  அனுபவிக்க தொடங்கும் முன்பே அதை வார்த்தைப்படுத்தி விடவேண்டும் என்ற அவசரப்புத்தி வெட்கத்தோடு நாணிச் சிரிக்கவும் செய்கிறது. அனுபவித்ததைப் பகிர்தல் என்பது எதன் பொருட்டோ தேவையாகிப் போய்விடுகிறது...!

அலாதியான விசயங்களைப் பகிர்தலை விட வேறென்ன வேண்டிக் கிடக்கிறது...? என்றும் தோன்றுகிறது.....

அமீரகம் மட்டுமல்ல.... என் தாய்த்தமிழகமும் அழகான மழை நாட்களுக்குள் நுழையப்போகிறது, அதன் பின் மார்கழிக் குளிர், பின் விழாக்கள் என்று குதூகலிக்கப்போகிறது. வரவிருக்கும் மழைக்காலத்தில் நிறைய மழை பெய்யட்டும்.....!!!!சேதங்கள் விளைவிக்காத சிறப்பான பருவமாய் லயிப்போடு  கடந்து போகட்டும்....

பிறகென்ன....

பனிக்காலம் ஆரம்பிக்கப் போகிறது
இரவுகளில் யாரும் வெளியே வரமாட்டார்கள்...
இனிதான்..
நான் நடுங்கிக் கொண்டாவது
வெளியே நடக்கவேண்டும்..!


தேவா. S

Comments

Unknown said…
நல்ல ரசனையுடன் உங்களின் அமீரக வாழ்க்கையில் நிகழ்ந்த வசந்த குளிர் கால பொழுதுகளை அருமையாக கூறியுள்ளீர்கள் தோழரே! மனம் குளிரும் படைப்பு!
tamil said…
லண்டன் குளிர் இப்போ என்னை ஸ்பரிசம் செய்ய ஆரம்பித்து விட்டது
மிக அருமையான பகிர்வு...... உங்கள் பகிர்வுக்கு நன்றி......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Shankar M said…
வானமகளின் நாணத்தினால் மனிதத்தில் ஏற்படும் மாற்றத்தை அழகாய் சொல்லியிருக்கிறாய் தோழா... வருடா வருடம் தோன்றும் அனுபவம் என்றாலும், ஒவ்வொரு முறையும் நினைவுகளின் அடர்த்தி அதிகமாகிக் கொண்டே தான் போகிறது....
ரசித்து எழுதி உள்ளதை ரசித்தேன்... நன்றி...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த