Skip to main content

ராஜாவின் கனடா இசைக்கச்சேரியும்...மட்டுப்பட்ட மனித பார்வைகளும்..!
















கட்டுக்கடங்கா காட்டாறு அவன். திக்குகளின்றி சுற்றித் திரியும் காற்று அவன். பற்றி, பற்றி பற்றிக் கொள்பவரை எல்லாம் தீயாய் மாற்றும் பெரு அக்னி அவன். கணிதக் கூட்டுக்களைக் கொண்ட கட்டுப்பட்ட நிலையைக் கொண்ட மட்டுப்பட்ட மனிதனில்லை அவன். எல்லோரும் சாதாரணமாய் சுவாசிக்க. அவன் சுவாசம் எங்களுக்கு ஸ்வரமாகிப் போனது. வார்த்தைகளைக் கடந்த பெரும் மெளனத்தை சுமந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்திலிருந்து அதை பிழிந்தெடுத்து இசையாக்கிக் கோர்த்துக் கொடுக்கும் பிரம்மா அவன்....

அவன், அவன் என்று விளிப்பதாலேயே அவன்  ஒன்றும் அவன் இல்லை. அவன், அவள், அது, இது, என்று சுட்டியுணரமுடியாத பேரியக்கத்தின் இசை வெளிப்பாடு அவன். 1970களுக்குப் பிறகு பிறந்த பிள்ளைகளை எல்லாம் யார் யாரோ பெண்கள் பெற்றெடுத்து தாயென்று அறிவித்துக் கொண்டாலும் அத்தனை பிள்ளைகளையும் அவன் இசைதான்  தாலாட்டியது. கர்நாடக சங்கீத பாரம்பரியத்துக்குள் பாடல்கள் சாமானியனுக்கு எட்டாக்கனியாய் இருந்த போதும் சரி, அதே இசை தபேலாக்களுக்குள் நின்று கதைகள் பேசிய போதும் சரி, சங்கீதம் என்பது நமக்கு அன்னியமாய்த்தான் இருந்தது.

அவன்..... ஆர்மோனியப் பெட்டியைத் திறந்த போது அதிலிருந்து வெளிப்படட் அற்புத இசை வடிவங்கள் நமக்கெல்லாம் வாழ்க்கையாகிப் போனது. அவன் வாழ்க்கையை இசையாய்க் கொடுத்தான்.. அது சந்தோசத்தையும் கண்ணீரையும் சரிபாதியாய் நமக்கு வழங்கியது.

முதல்படத்தின் டைட்டிலிலேயே துள்ளிக் குதித்து குத்தாட்டம் போட்டபடியே பிறந்த அவனின் திரை இசை அன்னக்கிளி உன்னைத் தேடுதே... என்று அந்தப் பெண்குரல் திரையில் தேடிய கணத்திலிருந்து ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களும் அந்த இசை அரசனை தேட ஆரம்பித்தார்கள். தமிழ் சினிமாவில் பிரளயத்தை உண்டு பண்ணிய பெரும் புயல் அவன்.


ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்று .... கிராமியத் தெம்மாங்குப் பாடல்களை எல்லாம் திரைக்குள் கொண்டு வந்து கொடுத்த மிகப்பெரிய ஜனரஞ்சக சக்கரவர்த்தி அவன். அவன் இசையால் அழ வைப்பான், சிரிக்க வைப்பான், ஆட வைப்பான், பாட வைப்பான், மெளனித்து பெரும் தியானத்திற்குள் சென்று சேரும் பாக்கியத்தை சாமானியருக்கும் பெற்றுக் கொடுப்பான்....! ஏழு ஸ்வரங்களும் அவன் ஏறி இறங்கி விளையாடும் படித்தளங்கள்.

திட்டமிட்டு செயல்படவேண்டிய அவசியங்கள் அற்றவன் மட்டுமல்ல அவன், எந்த ஒரு இன, சாதி, மொழிகளுக்கு மட்டும் அவன் சொந்தகாரன் அல்ல...பிராணன் எப்படி மனிதர்களுக்கு பொதுவோ, அதே போல அவனின் இசையும் யாவருக்கும் பொது. நில் என்று சொன்னால் நிற்பதற்கும், போ என்று சொன்னால் போவதற்கும் அவன் என்ன ஆதாயங்களைத் தேடும் அரசியல் கட்சியையா நடத்திக் கொண்டிருக்கிறான்...? கூட்டிக் கழித்துப் பார்த்து தேவைகளை அமைத்துக் கொள்ள.......

அவன் மானுட சந்தோசங்களை வார்த்தைகளைக் கடந்த தன் பெரும் இசையால் கட்டியமைத்த பிரம்மா....அவன் யாருக்கும் கட்டுப்படவேண்டிய அவசியம் இல்லை. தேவையும் அவசியமும் இல்லாமல் இசையின் மீது களங்கம் சுமத்தி அவனின் இசைக்கச்சேரியைக் கொச்சைப்படுத்தும் மனிதர்கள் எல்லாம் விசாலபார்வை பார்க்கிறேன் பேர்வழி என்று மனிதநேயத்தை புதைத்து விட்டு இறுகிப் போன மனதோடு துக்கத்தை தோளில்  எப்போதும் சுமக்கச் சொல்லும் குரூர புத்திகளுக்குச் சொந்தக்காரர்கள்.

இசை காயம் பட்ட மனிதர்களுக்கு மருந்து என்பது உண்மையானால் கனடாவில்  இருக்கும் தமிழர்களின் இரணத்தை அவனின் இசை போக்கிவிடுமென்ற பயத்திலேதான் தேதி மாற்றச் சொல்கிறார்களா....? சந்தோசமாய்  வலிகளை மறக்கும் மனிதர்கள் சுயமாய் எழுந்து நின்று வலிவு பெற்று விடுவார்கள், அப்படி வலிவு பெற்று விட்டால் அவர்களின் சோகத்தை மூலதனமாக்கி பிழைப்பவர்களின் சோற்றில் மண் விழுந்து விடுமென்ற பயம் அவர்களின் நெஞ்சைக் கவ்விப் பிடித்திருக்க வேண்டும்.

இசை எப்போதும் மனிதர்களின் இயல்புக்கு எதிரானது அல்ல... அதுவும் தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த அவனின் இசை காயம் பட்ட மனிதர்களை வருடிக் கொடுத்து எழுச்சி மிகுந்த மாதத்தில் வீறு கொண்டு எழச்செய்யுமே தவிர அவர்களை முடக்கிப் போட்டுவிடாது என்பதை தமிழர் உணர்வு பற்றி பேசும் அரை குறைகள் விளங்கிக் கொள்ளவேண்டும்.

களங்கமற்ற இசைத்தாயின் ஞானப்பிள்ளையின் மீது களங்கம் சுமத்த நினைக்கும் அத்தனை பேரும் அறுவெறுப்பான உணர்வுகளுக்குச் சொந்தக்காரர்களாய் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். குரூரமாய் சிந்தித்து சிந்தித்து தன் தாயையே சந்தேகப்படும் கரடு முரடான முரட்டுப் பிள்ளைகளையும் தாய் தன் பிள்ளையாய்த்தான் பார்ப்பாள்.

இளையராஜா என்னும் இசைப் பிரம்மா....

தன்னை சாடுபவர்களையும் இசையால் தாலாட்டத்தான் செய்வார். கத்துக்குட்டிகளும் கரப்பான் பூச்சிகளும் தன் முன் தோன்றும் சிறு மக்கள் கூட்டத்தைக் கண்டு தங்களைக் கடவுளாய் எண்ணிக் கொண்டு கர்ஜிக்கிறேன் பேர்வழி என்று ஊளைகளிடும் போது நிஜ ஜாம்பவன்.. கர்வத்தோடு இருப்பதில் தவறு ஏதும் இல்லை தானே...? அவன் படைப்பவன். இல்லாததிலிருந்து இசையைப் படைத்து மனிதக் குழந்தைகளுக்கு தூளி கட்டி தாலாட்டிய தாய்......

இளையராஜாவின் கனடா இசைக் கச்சேரியின் மீது அவதூறு பரப்பும் செயல்களைச் செய்பவர்களிடம் அன்போடு எடுத்துக்கூறி....அவன் காயம்பட்ட உணர்வுள்ள தமிழ்ச் சொந்தங்களை தன் இசையால் வாரி அணைத்துக் கொள்ள வருகிறான் என்று சொல்லுங்கள்...! தமிழர்களின் நெஞ்சில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும் ஈரத்திலும், நேசத்திலும், காதலிலும், வீரத்திலும், திமிரிலும், கோபத்திலும் சோகத்திலும் அவனின் இசை  ஆளுமையே அதிகம் என்று உரக்கச் சொல்லுங்கள்...!

தமிழர்களுக்கு எல்லாம் தன் ஒப்பற்ற இசையால்  முகவரி கொடுத்த இளையராஜா என்னும் சுடரை எப்போதும் போற்றுவோம்....இசை என்னும் அற்புத உணர்வால் ஒன்று கூடி அன்பான சமூகத்தின் ஒப்பற்ற அடையாளம் ஆவோம்...!

" நெஞ்சம் விளையாடுது நித்தம் இசைபாடுது
எங்கும் சுகமானது எங்கள் வசமானது
விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம் தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா.."


தேவா. S

Comments

சோகம் நம்மை தாக்கிய போதும் அதை ஊரறிய கொண்டாடிய வகையிலும் இசையின் பங்கு இல்லாமலா மாவீரர் தினம் கொண்டாடினார்கள்? சோகத்தில் யாரும் மௌனம் சாதிக்கவில்லையே? இழப்பின் சோகம் உலகமெல்லாம் பரவ இன்றும் பழைய நினைவை மீட்க காரணம் இசை தன் பெரும் பங்கை செய்யவில்லையா? இசை தரும் சோகம் மட்டும் வேண்டும் ஆனால் இசையைப் படைக்கும் இசைதேவன் மட்டும் என்ன பாவம் செய்தார்
Anonymous said…
super ah sonninga.. avarai vaithu arasiyal seiyya ninaikirargal.. avarin isai dhaan makkalukku marundhu endru avargal unara vendum
Vignesh S R said…
களங்கமற்ற இசைத்தாயின் ஞானப்பிள்ளையின் மீது களங்கம் சுமத்த நினைக்கும் அத்தனை பேரும் அறுவெறுப்பான உணர்வுகளுக்குச் சொந்தக்காரர்களாய் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்

Super sir.... Sariya sonneergal
Anonymous said…
சான்டி புயல் காரணமாக இளையாராஜா நிகழ்ச்சி ரத்து

http://tamil.oneindia.in/movies/news/2012/10/ilayaraaja-s-canada-concert-cancelled-163910.html
முதலிரண்டு பத்திகளை குறைந்தது 10 முறையேனும் வாசித்துவிட்டேன். இவ்வளவு அற்புதமான மொழிநடையுடன் ஒரு பதிவினை வாசித்து நீண்ட நாட்களாகின்றன. அமர்க்களப்படுத்திவிட்டீர்கள். இன்னும் நிறைய எழுதுங்கள் சகோ. :-)
ரசித்துப் படித்தேன்...

ராஜா ராஜா தான்...

நன்றி...
tm8
ராஜா கைய வெச்சா அது ராங்கா போவதில்லை...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த