காரணம் இல்லாமலேயே கண்ணீரை வரவழைத்து விடும் இந்தப்பாடல் இப்போது எனக்கு கண்ணீர் வரவைக்கும் காலச்சூழலில் எதையோ நான் தேடுகையில் எதேச்சையாய் என் முன் வந்து விழ....மனதை அழுத்தும் நினைவுகளை எப்படி நான்உள்ளுக்குள் வைத்துக் கொள்வது....? வலியை தாங்கிக் கொண்டு வாழ்வதெப்படி...? பிரிவைச் சுமந்து கொண்டு நகர்வெதப்படி என்று கை பிடித்து விளையாடிய காலங்களில் எனக்கு தெரியாமலேயே போயிற்று என் உயிர் அக்காவிற்கும் எனக்கும் இப்படி ஒரு தூரம் ஒன்று வந்து விழுமென்று....
கல்லூரி வரை கைப்பிடித்து அழைத்து சென்று... திருமணமென்னும் கப்பலில் ஏற்றி விட்டு தனியாய் கரை நின்று கை அசைத்த பிடிபடாத வாழ்க்கை கண்ணீராய் வந்து விழுந்தது. எத்தனை அழுதாலும் பெண் என்பவள் பிறந்த வீட்டுக்கா சொந்தம் அவள் எப்போதும் வாழப் போகும் வீட்டுக்கு நாம் வாரிக் கொடுக்கும் செல்வம் தானே...,
ஒரு வருடம் எனக்கு முன்னதாக பிறந்த அந்த உயிர் வாசம் செய்த பின் தானே கடவுள் எனக்கு கருவறையை பரிசளித்தான். வளர்ந்து இருவேறு வாழ்க்கைச் சூழலுக்குள் வந்து விட்ட பின்பே...அவ்வப்போது பேசிக் கொள்ளும் தொலைபேசி பேச்சுக்களையும் காலம் என்ற கத்தி அடிக்கடி அறுத்துப் போட சிங்கப்பூரும், துபாயும் தொப்புள் கொடி உறவுகளின் தூரமாகிப் போனது....
எனக்கு ஒரு வாழ்க்கையை விதி வகுத்துப் போட அவளுக்கொன்றை பிரித்துப் போட்டது. விடுமுறைகள் வேறு வேறாகிப் போனது, கட்டிய துணைகளால் விருப்பங்களும் வெவ்வேறாகிப் போனது....வாழ்க்கையின் துரத்தலில் எங்கோ நாங்கள் ஓடிக் கொண்டிருக்க....
அவள் கைப்பிடித்து நடந்து சென்ற பால்யத்தின் வீதிகளுக்குள் என் நினைவுகளால் நடந்து பார்க்கிறேன். செல்ல சண்டையிட்டு அவளைச் சீண்டிப்பார்த்த நாட்கள் எல்லாம் மீண்டும் வரவே மாட்டோமென்று மனதுக்குள் நிதர்சனத்தை எழுதிப்பார்க்க..., எல்லா சண்டைகளிலும் எப்போதும் விட்டுக் கொடுத்து என் விருப்பத்திற்காய் தோற்றுப் போகும் அவளை இப்போது உள்ளுக்குள் தேடிக் கொண்டிருக்கிறேன். சூழல்களை வார்த்தைப்படுத்தி நான் இங்கே அடுக்க நினைத்தால் நான் எழுதிக் கொண்டே இருப்பேனே தவிர முடிக்க முடியாது....!
யாரை வேண்டுமானலும் அக்கா என்று அழைத்து விடலாம்... ஆனால் நினைத்து விட முடியாது... அப்படியாய் நினைத்து அழைக்கும் போது உடன் பிறந்தவள் என்றில்லாமல் அந்த உறவுக்குள் சிக்கிக் கொண்ட எல்லோருமே அன்பின் வெளிப்பாடாய்த்தான் இருப்பார்கள்...!
தாயென்ற உறவின் இன்னொரு பிரதியான அக்காவை எப்படித்தான் நான் பிரிந்தேன் என்ற துயரம் என் நெஞ்சில் ஊஞ்சலிட்டு ஆடிக் கொண்டிருக்கிறது. ஏ.....ஏ...பால்யமே.... மீண்டும் ஒரே ஒரு முறை என் வாழ்வில் வந்து சென்று போ... அப்படியாய் வருகையில் என் அக்காவையும் உன் கையோடு கூட்டிவா.... அவள் இல்லாத என் பால்யம் பாலைவனம் என்பது உனக்கும் எனக்கும் மட்டும் தானே தெரியும்...
ஒவ்வொரு ஆணிற்கும் ஒரு சகோதரி கண்டிப்பாய் இருக்க வேண்டும். அது அவனை ஆசுவாசப்படுத்தும். அவன் வாழ்க்கையை நிதானப்படுத்தும். அவன் பொறுப்பினை அதிகப்படுத்தும். வாழ்க்கையில் எதிர்ப்படும் பெண்களைப் பற்றிய புரிதலைக் கொடுக்கும். சீற்றத்தைக் குறைக்கும். தெளிவினை அதிகப்படுத்தும். சகோதரி என்னும் பெண் கொடுக்கும் ஆதரவில் தாயின் அன்பும் நண்பனின் நேசமும் தந்தையின் கண்டிப்பும் சேர்ந்தே இருக்கும்....
டி.எம் செளந்தராஜனும், சுசீலாவும் பாடியிருக்கும் இந்தப்பாடலை வெறும் பாடல் என்ற அளவோடு நாம் கடந்து சென்று விட முடியாது. இரண்டு குரல்களும், பாடல் வரிகளும் ஒரு பெரும் வாழ்க்கை ஓட்டத்தின் தவிர்க்க முடியாத சூழலை வலுவாய் பதிவு செய்து சென்றிருக்கும் காலத்தால் வெல்ல முடியாத காவியம். சிவாஜி சாரின் நடிப்பைப் பற்றி நாம் தனியே சொல்ல வேண்டியதில்லை...
வாழ்க்கையில் பிரிவு தவிர்க்க முடியாதது.....ஆனால் உடன் பிறந்து வளர்ந்து பட்டென்று ஒரு நாள் வேறு ஒருவனின் சொந்தமாய் ஆகிப் போய் அந்த வாழ்க்கைச் சூழலுக்குள் நம் கண் முன்னே இடம் பெயரும்... ஒரு சகோதரியின் பிரிவு...வாழ்க்கை முழுதும் சுமக்க வேண்டிய ஒருவிதமான சுகமான சுமை...
ஹ்ம்ம்ம்ம்ம்ம் என்னிடம் இருந்து வார்த்தைகள் தற்காலிகமாய் விடை பெற எத்தனிக்கின்றன..... உயிரின் வலி என்னவென்று உணரவைக்கும் இந்தப்பாடலை....நீங்கள் கேளுங்கள்...
நான் கொஞ்ச நேரம் அழ வேண்டும்....!
தேவா. S
Comments
நெகிழ வைத்தது பகிர்வு...
tm3