Skip to main content

இசையோடு இசையாக...தொகுப்பு 9!




















காரணம் இல்லாமலேயே கண்ணீரை வரவழைத்து விடும் இந்தப்பாடல் இப்போது எனக்கு கண்ணீர் வரவைக்கும் காலச்சூழலில் எதையோ நான் தேடுகையில் எதேச்சையாய் என் முன் வந்து விழ....மனதை அழுத்தும் நினைவுகளை எப்படி நான்உள்ளுக்குள் வைத்துக் கொள்வது....? வலியை தாங்கிக் கொண்டு வாழ்வதெப்படி...? பிரிவைச் சுமந்து கொண்டு நகர்வெதப்படி என்று கை பிடித்து விளையாடிய காலங்களில் எனக்கு தெரியாமலேயே போயிற்று என் உயிர் அக்காவிற்கும் எனக்கும் இப்படி ஒரு தூரம் ஒன்று வந்து விழுமென்று....

கல்லூரி வரை கைப்பிடித்து அழைத்து சென்று... திருமணமென்னும் கப்பலில் ஏற்றி விட்டு தனியாய் கரை நின்று கை அசைத்த பிடிபடாத வாழ்க்கை கண்ணீராய் வந்து விழுந்தது. எத்தனை அழுதாலும் பெண் என்பவள் பிறந்த வீட்டுக்கா சொந்தம் அவள் எப்போதும் வாழப் போகும் வீட்டுக்கு நாம் வாரிக் கொடுக்கும் செல்வம் தானே..., 

ஒரு வருடம் எனக்கு முன்னதாக பிறந்த அந்த உயிர் வாசம் செய்த பின் தானே கடவுள் எனக்கு கருவறையை பரிசளித்தான். வளர்ந்து இருவேறு வாழ்க்கைச் சூழலுக்குள் வந்து விட்ட பின்பே...அவ்வப்போது பேசிக் கொள்ளும் தொலைபேசி பேச்சுக்களையும் காலம் என்ற கத்தி அடிக்கடி அறுத்துப் போட சிங்கப்பூரும், துபாயும் தொப்புள் கொடி உறவுகளின் தூரமாகிப் போனது....

எனக்கு ஒரு வாழ்க்கையை விதி வகுத்துப் போட அவளுக்கொன்றை பிரித்துப் போட்டது. விடுமுறைகள் வேறு வேறாகிப் போனது, கட்டிய துணைகளால் விருப்பங்களும் வெவ்வேறாகிப் போனது....வாழ்க்கையின் துரத்தலில் எங்கோ நாங்கள் ஓடிக் கொண்டிருக்க....

அவள் கைப்பிடித்து நடந்து சென்ற பால்யத்தின் வீதிகளுக்குள் என் நினைவுகளால் நடந்து பார்க்கிறேன். செல்ல சண்டையிட்டு அவளைச் சீண்டிப்பார்த்த நாட்கள் எல்லாம் மீண்டும் வரவே மாட்டோமென்று மனதுக்குள் நிதர்சனத்தை எழுதிப்பார்க்க..., எல்லா சண்டைகளிலும் எப்போதும் விட்டுக் கொடுத்து என் விருப்பத்திற்காய் தோற்றுப் போகும் அவளை இப்போது உள்ளுக்குள் தேடிக் கொண்டிருக்கிறேன். சூழல்களை வார்த்தைப்படுத்தி நான் இங்கே அடுக்க நினைத்தால் நான்  எழுதிக் கொண்டே இருப்பேனே தவிர முடிக்க முடியாது....! 

யாரை வேண்டுமானலும் அக்கா என்று அழைத்து விடலாம்... ஆனால் நினைத்து விட முடியாது... அப்படியாய் நினைத்து அழைக்கும் போது உடன் பிறந்தவள் என்றில்லாமல் அந்த உறவுக்குள் சிக்கிக் கொண்ட எல்லோருமே அன்பின் வெளிப்பாடாய்த்தான் இருப்பார்கள்...! 

தாயென்ற உறவின் இன்னொரு பிரதியான அக்காவை எப்படித்தான் நான் பிரிந்தேன் என்ற துயரம் என் நெஞ்சில் ஊஞ்சலிட்டு ஆடிக் கொண்டிருக்கிறது. ஏ.....ஏ...பால்யமே.... மீண்டும் ஒரே ஒரு முறை என் வாழ்வில் வந்து சென்று போ... அப்படியாய் வருகையில் என் அக்காவையும்  உன் கையோடு கூட்டிவா.... அவள் இல்லாத என் பால்யம் பாலைவனம் என்பது உனக்கும் எனக்கும் மட்டும் தானே தெரியும்...


ஒவ்வொரு ஆணிற்கும் ஒரு சகோதரி கண்டிப்பாய் இருக்க வேண்டும். அது அவனை ஆசுவாசப்படுத்தும். அவன் வாழ்க்கையை நிதானப்படுத்தும். அவன் பொறுப்பினை அதிகப்படுத்தும். வாழ்க்கையில் எதிர்ப்படும் பெண்களைப் பற்றிய புரிதலைக் கொடுக்கும். சீற்றத்தைக் குறைக்கும். தெளிவினை அதிகப்படுத்தும். சகோதரி என்னும் பெண் கொடுக்கும் ஆதரவில் தாயின் அன்பும் நண்பனின் நேசமும் தந்தையின் கண்டிப்பும் சேர்ந்தே இருக்கும்....

டி.எம் செளந்தராஜனும், சுசீலாவும் பாடியிருக்கும் இந்தப்பாடலை வெறும் பாடல் என்ற அளவோடு நாம் கடந்து சென்று விட முடியாது. இரண்டு குரல்களும், பாடல் வரிகளும் ஒரு பெரும் வாழ்க்கை ஓட்டத்தின் தவிர்க்க முடியாத சூழலை வலுவாய் பதிவு செய்து சென்றிருக்கும் காலத்தால் வெல்ல முடியாத காவியம். சிவாஜி சாரின் நடிப்பைப் பற்றி நாம் தனியே சொல்ல வேண்டியதில்லை...

வாழ்க்கையில் பிரிவு தவிர்க்க முடியாதது.....ஆனால் உடன் பிறந்து வளர்ந்து பட்டென்று ஒரு நாள் வேறு ஒருவனின் சொந்தமாய் ஆகிப் போய் அந்த வாழ்க்கைச் சூழலுக்குள் நம் கண் முன்னே இடம் பெயரும்... ஒரு சகோதரியின் பிரிவு...வாழ்க்கை முழுதும் சுமக்க வேண்டிய ஒருவிதமான சுகமான சுமை...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்  என்னிடம் இருந்து வார்த்தைகள் தற்காலிகமாய் விடை பெற எத்தனிக்கின்றன..... உயிரின் வலி என்னவென்று உணரவைக்கும் இந்தப்பாடலை....நீங்கள் கேளுங்கள்...

நான் கொஞ்ச நேரம் அழ வேண்டும்....!



தேவா. S



Comments

எப்போதும் இந்தப் பாடலை வானொலியில் கேட்கும் போதும் கூட... கண்கள் கலங்குவதும், மனம் பாரம் ஆவதும் உண்மை...

நெகிழ வைத்தது பகிர்வு...
tm3

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த