Skip to main content

பொன்நிலவில் என் கனாவே....!



ஆதர்ஷன காதலியொருத்தியின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா நீங்கள்...? ஆம் என்றால் சபாஷ்....உங்கள் வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. ப்ரியங்களை நெஞ்சோடு தேக்கிக் கொண்டு சிலிர்க்கும் அலைகள் மோதிச் சிதறும் அழகினை ரசிக்கும் ஒரு பாறையாய், குளுமையின் அரவணைப்பில் லயித்துக் கிடக்கும் சுகமும், அந்த ஆதர்ஷண காதலி பற்றிய நினைவுகளும் ஒன்றே...!

பகிராத எல்லாமே பரம சுகமானது மட்டுமல்ல அவை தேவ ரகசியத்தை ஒத்தது. வார்த்தைகளுக்குள் வெளிப்பட்டு செவி சென்று சேரும் போது அது சாதரணமென்ற எல்லைக் கோட்டைத் தொட்டுவிடுகிறது. காதலிக்கும் ஒருத்தியே அறியாவண்ணம் அவளை மனதில் வரிந்து கொண்டு வாழும் சுகம் இந்த வாழ்க்கையோடு தொடர்பில்லாத  காந்தர்வ உறவாகிப் போகிறது.

காதலிப்பவளிடம் சென்று காதலிக்கிறேன் என்று சொல்லி, அவளின் காதலை மறுமொழியாய்ப் பெற்றுக் கொள்ளும் வியாபாரத்தில் காதல் வென்று விட்டதாகத்தானே நீங்கள் நினைக்கிறீர்கள்...? நிஜத்தில் காதலில் வெல்லவும், தோற்கவும் ஒன்றுமில்லை என்பதை அறியாத பொதுபுத்திகள் போட்டுக் கொள்ளும் நாடகங்களே வெற்றி, தோல்வி என்ற மாயைகள். 

வென்றால் திருமணமென்னும் சடங்குக்குள் சென்று காமப்போர்வை போர்த்திக் கொண்டு கழிக்கும் ஒரு வாழ்க்கையும், தோற்றால் சோகமென்னும் உணர்வினை ஏந்திக் கொண்டு நான் தோற்றுவிட்டேன் என்ற சோகத்தோடு வேறொருத்தியை அல்லது வேறொருவனைக் கைப்பிடித்து மறுபடியும் காமப்போர்வையைப் போர்த்திக் கொண்டு வாழும் வாழ்க்கையும் என்றாகிப் போகிறது. இரண்டிலுமே காதல் வெல்ல வேண்டுமனால் உடன் வாழவேண்டும் என்ற ஒரு நிர்பந்தம் இருக்கிறது என்பதோடு மட்டுமில்லமால் பெரும்பாலும் எதிர்பார்ப்புகளுக்குள் சிக்கி காதல் சின்னாபின்னமாகியும் போய்விடுகிறது.

இந்த இரண்டையும் கடந்த ஒன்றை நான் மொழியாக்குகையில், புரிதலில் சிக்கல் ஏற்பட்டுப் போய் நான் சிக்கலானவனாகவும் உங்களுத் தெரியலாம். உண்மையில் காதல் என்ற ஒன்று பிறப்பதே பிரிதலில்தான் என்று நான் சொன்னால் என்னை அடிக்க வருவீர்கள்தானே..?

காதல் என்பது பரஸ்பரம் சொல்லிக் கொள்வதில்லை. காதல் என்பது யாரைக் காதலிக்கிறோம் என்று உலகத்திடம் அறிவிப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் காதலிக்கப்படுவதை காதலியோ, காதலனோ அறியவேண்டிய அவசியமுமில்லை. காதல் என்பது காமத்தில் முயங்கிக் கிடக்கும் வழிமுறைக்கான துருப்புச் சீட்டும் இல்லை...! காதல் என்பது காதலிப்பவரை முழுமையாய் நேசித்தல். தனக்குள்ளேயே அந்த காதலை ஒரு செல்லப் பிராணியை வளர்ப்பது போல தலை தடவி, வாஞ்சையாய் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு  அந்த உணர்வுகளில் மூழ்கிப் போதல்....!

நமக்குப் பிடித்த ஒருவரை நாம் நேசிக்கவேண்டுமெனில் அவரும் நம்மை நேசிக்க வேண்டும் என்று திரும்ப, திரும்ப சொல்லிக் கொடுத்து நம் நேசத்துகுரியவர்களை நேசிக்காமல் போவது எப்படி என்றுதான் மறைமுகமாய் கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் யாரையேனும் உங்களுக்குப் பிடிக்கிறது அல்லது காதலிக்கிறீர்கள் என்றால்...அந்தக் காதல் எப்போதுமே காதலாய் இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால்....

அந்தக் காதலைச் சொல்லாமல் கொள்ளாமல் உங்களுக்குள் பொக்கிஷமாய் பூட்டி வைத்துக் கொள்ளுங்கள்...! தூரத்தில் தெரியும் மலைகளின் ரம்யமான அழகு எல்லாம் மலையின் அருகில் இருந்து பார்க்கும் போது நமக்குக் கிடைப்பதில்லை. இப்படியாய் எதிர்பார்ப்புகள் இல்லாமல் கனகச்சிதமாய் உள்ளுக்குள் உட்கார்ந்து கொண்ட காதலொன்று....தீரவே தீராமல் என்னுள் அலைந்து கொண்டே இருக்கும் சுகத்தை எப்படி நான் சொல்லி தீர்ப்பதென்றே தெரியவில்லை...

இடைவெளி விட்டு 
அமர்ந்து கொள்ளும் கனவுகளில் கூட
என் கவிதைகளை வாசிக்க மட்டுமே
அவள் வந்து செல்கிறாள்...!

நான் காதலிக்கிறேன் என்பதை
எப்படி சொல்லாமலிருக்கிறேனோ...
அப்படியே கூட அவளும் 
சொல்ல விரும்பாலிருக்கலாம்..

வார்த்தைகள் மோதிக் கொண்டு
பிறக்கும் சப்த அரக்கன் 
காதலென்ற பெயரில்
ஒரு மாற்று வித்தையை ...
நடத்தி விடக்கூடாது என்று
என்னைப் போலவே
அவளும் பயந்திருக்கலாம்..!

என்றெல்லாம் எழுதிப் பார்த்து நான் பலமுறை குப்பையில் கிழித்தெறிந்து விட்டு அதிலும் திருப்தியுறாமல் அந்த காகிதங்களை எரித்து காற்றில் கரைத்துக் கூட விட்டிருக்கிறேன். தினசரிகளில் அடிக்கடி சந்திக்கும் அவளை காதலிக்கிறேன் என்னும் லோகாதாய நினைவினை விட்டு நகர்ந்து நின்று இயல்பாக நடித்துக் கொண்டே உள்ளுக்குள் அவளுக்காக ஏதேதோ எழுத முயலுகிறேன் நான்....

வார்த்தைகளில்லாத
என் கவிதைகளில்
அவளின் நினைவுகளே 
நிரம்பிக் கிடக்கின்றன...!
வர்ணிக்க இயலாத 
வர்ணனைகள் நிரம்பிய
உணர்வுகளிலிருந்து
எழும் சங்கீதத்திற்கு
யாதொரு வடிவமுமில்லாமல்
பிரபஞ்சம் எங்கும் 
பரவிக் கிடக்கிறது ....
அவளுக்கான எனது இசை....!

***

மை நிரப்பப்படாத
என் எழுது கோலின் பரவச நிலையின்
உச்சத்தில்........
அவளுக்காய் அரங்கேறிக் கொண்டிருக்கிறது
யாரும் வாசிக்கமுடியாத 
காவியமொன்று....!

உறவுகளை அதுவும் பிடித்த உறவுகளை ஏதேனும் ஒரு அடைப்புக்குறிக்குள் கொண்டு வந்து நிறுத்தி விட்டு, நேசிக்கிறேன் பேர்வழி என்று தொல்லைப்படுத்தி, விட்டுக் கொடுக்கிறேன் பேர்வழி என்று நடித்துக் கொள்ளும் வாழ்வியல் முரண்களுக்கும் காதலுக்கும் யாதொரு தொடர்புமில்லை என்று உணரவைத்த என் காதலிக்கும் எனக்குமான ஒரே ஒரு உறவு காதல் மட்டுமே...! நான் அவளைக் காதலிக்கிறேன் என்ற உணர்வினைச் சரியாய் எனக்குள் பதியம் போட்டு விட்டு, அவள்  எனக்குத் தூரமாய்ப் போய்விட அந்த நினைவுகளில் இருந்து  நித்தம் பூக்கும் ரோஜாக்களை  ரசிக்கும் பாக்கியவானகிப் போனேன் நான்.

காலச் சுழல் மனிதர்களைப் பிரித்துவிடும்..... ஆனால்...காதலென்னும் உணர்வினைப் பறித்துப் போட மரணத்தால் கூட முடியாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.  மனிதர்கள் மரித்துப் போகும் போது உடல் சார்ந்த நினைவுகள் அழிந்து போகலாம் ஆனால்....பிரபஞ்ச இயல்புகள் எப்போதும் நித்திய ஜீவனாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்......!

' உற்று நோக்கினாலும் எதைப் பார்க்கமுடியவில்லையோ
அது வெறுமை எனப்படுகிறது....!
செவிமடுத்தாலும் எதைக் கேட்க முடியவில்லையோ 
அது அரிது எனப்படுகிறது '

- லாவோட்சு.

காதலை வாழ்க்கையை விட்டு என்னால் தனித்துப் பிரித்தெடுத்துப் பார்க்க முடிவதில்லை. காதலை ஊக்குவிக்கும் கிரியா ஊக்கியாய் அவள் இருப்பதாலோ என்னவோ அவளிடம் காதலைச் சொல்லும் போது மட்டுப்பட்ட விசயமாய் காதல் போய் விடுமென்ற பயத்திலே கூட நான் அவளிடம் காதலைச் சொல்லாமல் கூட இருந்திருக்கலாம். 

எது எப்படியோ...அற்புதமான உணர்வுகளுக்குள் என்னை உந்தித் தள்ளியிருக்கும் அவளது நினைவுகளை சிறகுகளாக்கி....பறக்கிறேன் வாழ்க்கையின் ரகசியங்கள் அடர்ந்து கிடக்கும் ஒரு பரந்த வெளிக்குள்......

நினவுகளுமில்லை நேசங்களுமில்லை
என்ற புரிதலின் உச்சத்தில்....
அழிந்தே போகின்றன.....
வாழ்வியல் உண்மைகள்...!

***

பெயரில்லாத ஒன்றிலிருந்துதான்
எல்லாமே தோன்றியது,
பெயரிடப்படாதது எல்லாம் இல்லாததாகி விடுமா என்ன...?
இருக்கும் எல்லாவற்றையும் இல்லாத ஒன்றுதான்
இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது,
பிரபஞ்சம் தோன்றிய பின்னும்...
அதற்கு முன்னும்...
இல்லாமல் இருந்தது...
பெயரிடப்படாமலேயேதான் இன்னமும் இருக்கிறது...!


தேவா. S



Comments

காதல் இழை கொண்டு நெய்த பட்டாடை மனம் மட்டுமே அறிந்து அழகு பார்க்கும் விதமாய்....தோரணங்களோடு விழாக்காணும் விதமாக அற்புதமான வரிகளால் மனம் நிரப்பிப்போன பகிர்வு.
காதலில் கசிந்து எழுதிய எழுத்துக்கள் வரிக்கு வரி உருகி நிற்கின்றன....

அருமை அண்ணா.
பெயரில்லாத ஒன்றிலிருந்துதான்
எல்லாமே தோன்றியது,
பெயரிடப்படாதது எல்லாம் இல்லாததாகி விடுமா என்ன...?
இருக்கும் எல்லாவற்றையும் இல்லாத ஒன்றுதான்
இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது,
பிரபஞ்சம் தோன்றிய பின்னும்...
அதற்கு முன்னும்...
இல்லாமல் இருந்தது...
பெயரிடப்படாமலேயேதான் இன்னமும் இருக்கிறது...!
// உங்கள் வார்த்தைகளை உள்வாங்கும் பொது முற்றும் உணர்ந்த ஒரு ஞாநி போல உங்களை உணர முடிகிறது காதலை உணர்ந்தால் ஞானம் பெறலாம் போல அறிய படைப்பு மனம் லேசாகி போனது

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...