Skip to main content

சீனிச்சாமித் தேவர்...!

























எங்கூரு நாடி ஊரூருக்கு மொளக்கூட்டுத் திண்ணையின்னு ஒண்ணு இருக்கும். மாரியாத்தா மேடயின்னும் சொல்லுவாய்ங்க.. கோயிலு திருவிழாக்கு மொளப்பரி கட்டி அந்த மேடையில வச்சிதான் தூக்குவாய்ங்க...இதுல பாருங்க கழுத வருசத்துக்கு ஒருவாட்டி வர திருவிழாவுக்கு அம்புட்டு பெரிய திண்ணைய கட்டி வச்சுருப்பாய்ங்க...

திருவிழா முடிஞ்சு போனதுக்கப்புறம் பாத்தீயன்னா....காலேலயும் சாங்காலமும் அங்கனதேன்...ஒலக நீசு ஊரு நீசு அம்புட்டும் ஓடும். சீனிச்சாமி ஐயா வாட்ட சாட்டமான ஆளு, மறவூட்டு ஆளுகன்னா அப்டிதேன் இருப்பாகன்னு பொதுவாவே ஊருக்குள்ள பேசிக்கிருவாய்ங்க..... அதுவும் சீனிச்சாமி ஐயா குடும்பம் தலக்கட்டு நிறைஞ்ச குடும்பம், வயலு வெள்ளாமை, அடிதடி சண்டை பஞ்சாயத்துன்னு ஒரு காலத்துல மல்லுக்குன்னே நிக்கிற ஆளுகளாம்..

எம்புட்டு வருசம் ஆனா என்ன.. நாவரீகம் பெருத்துப் போயி அம்புட்டுப் பேரும் பேண்டும், சட்டையும் போட்டுக்கிட்டு வந்தாத்தேன் என்ன......தேவனும், பிள்ளைமாரும், நாடாரும், பள்ளனும், பறையனும்னு சாதிய வெளியச் சொல்லிப் பொசுக்குன்னு பேச ரோசிக்கிர இந்தக்காலத்துலயும்.. மொளக்கூட்டுத்திண்னையில வந்து ஒக்காரரு ஆளுக சாதியச் சொல்லித்தான் பேசிக்குறுவாக...

எலேய்....சாதியச் சொல்லி பேசிக்குறுவோம் அம்புட்டுதேன் அதுக்காக அடிச்சிக்கிறமாட்டோம்னு சீனிச்சாமி ஐயா கடாமீசைய வெரப்பா முறுக்கிக்கிட்டு சிரிக்கையில அம்புட்டு வெள்ளை மசுரும் சேந்தே சிரிக்குமப்புன்னு வண்ணாவீட்டு முருகேசன் சாயக்கடை வாசல்ல நின்னு சத்தமா சொல்லி சிரிச்சுக்கிட்டே.. மொளக்கூட்டுத் திண்ணையில இருக்குற ஆளுகளுக்கு சாயா வாங்குவாக...

சாதின்னா என்ன பொறப்பா... ? கிறுக்குப்பலே.. செஞ்ச தொழிலுடான்னு....சுருட்ட குடிச்சுக்கிட்டே சீனிச்சாமி ஐயா பேசுறத....வெத்தலைய போட்டுக்கிட்டு, புளீச் புளீச்சுன்னு துப்பிக்கிட்டு... ஏப்பு கொஞ்ச பொயிலை கொடுங்கப்புன்னு வாங்கிப்போட்ட மேனிக்கு ஊருச்சனமே அவர் வாயப்பாத்துக்கிட்டு கேக்கும்.....

சீனிச்சாமி ஐயா ஆமில இருந்தாகளாம்...அப்போ வெள்ளைகாரனை எதித்து சண்டை போட்டப்ப...கால்ல அடிப்பட்டு பொறவு ஊருக்கு வந்துட்டாகளாம்...கரண்டக்காலுக்கு மேல வேட்டிய தூக்கி பெரிய தழும்ப ஆளுகளுக்கு காட்டி பேசுறத பாக்காத ஊருச்சனமே இல்லையின்னு சொல்லலாம்...

மொளக்கூட்டுத் திண்ணையின்னா சீனிச்சாமி ஐயாதேன்.. சீனிச்சாமி  ஐயான்னா மொளக்கூட்டுத் திண்ணைதேன்னு ஊருச்சனத்துக்கே தெரியும்...! 1980 வாக்குல டிவி பொட்டியெல்லாம் அல்லாரு வீட்லயுமா இருந்துச்சு...மொளக்கூட்டுத் திண்ணைதேன்.... ஊரு நாட்ல நடக்குற அம்புட்டு சேதியவும் பேசுற இடமா இருந்துச்சு...

கோடாங்கி மயன் குமாரு சாயா கடைக்கு வர்ற ஒத்த தினத்தந்திப் பேப்பர வரி விடாம சீனிச்சாமி ஐயா காலையிலயே படிச்சிருவாக...! சாயவுல கொஞ்சம் டிக்காசன் கொறஞ்சாலும் போதும்...பேப்பர படிச்சுக்கிட்டே....ஏண்டா பேதில போவ.. என்னடா சாயா போட்டு இருக்க .. நீயி.... கொங்கப்பன போல நீயும் கோடாங்கி அடிச்சு பொழச்சு இருக்கலாம்லனு வெட காலு  வெட்றாப்ல கத்தி, சாயாத்தண்ணிய ஊத்திப்புட்டு மறுக்கா மருவாதையா போடுறா கிறுக்குப்பலேன்னு சொல்லி மீசைய முறுக்கிக்கிட்டே மேக்கொண்டு பேப்பர படிப்பாக...

இப்போ ரொம்ப ரோசனையா இருக்கும்லே....வெள்ளக்காரனே ஆண்டு இருந்தா கொஞ்சமாச்சும் நல்லா இருந்து இருப்பமோண்டு இருக்கு...போக போக ரொம்ப மோசமாத்தேன் நாடு போவும் போல .. வெலவாசி எல்லாம் ஆத்தே... கடகடன்னு கடகப் பொட்டியில பாம்பு ஊறிப்போற மாதிரியில ஏறிப்போச்சு....அரசியலாம்லே நடத்துறாக இப்போ எல்லாம்....சுத்த அதிகப்பிரசிங்கித் தனமவுள்ள இருக்கு.....காமராச தோக்கடிச்சு சாகடிச்ச ஊருதானய்யா இது...இந்த நாட்டுக்கு இனிமேல ஒரு காமரசான் பொறந்து வர முடியாதுப்பேன்னு பேசிக்கிட்டே....

...மொளக்கூட்டுத் திண்ணையில சாங்காலம் அஞ்சு மணிக்கு வந்து சீனிச்சாமி ஐயா ஒக்காந்த ஒடனேயே...ஆளுக கூட்டம் ஒவ்வொண்ணா வந்து சேர ஆரம்பிச்சுரும்...இது எப்புடீன்னா.....கம்மாயிக்கு பக்கத்துல கிடந்த பொட்டல்ல எம். எம். டாக்கீஸ் டெண்ட் கொட்டாயி ஒண்னு தொறந்த ராக்கப்பன் செட்டியாரு சீனிச்சாமி ஐயாகிட்ட வந்து கெஞ்சுற அளவுக்குப் போயிருச்சு.....எப்பேய்.... அம்புட்டு சனமும் ஒங்க வாயப்பாக்க வந்து ஒக்காந்துட்டா கொட்டாயிக்கு யாருப்பே வருவாக, எம் பொழப்புல மண்ணு போடதியப்பேன்னு அவரு கெஞ்ச...

கெக்க்க்கெக்கேன்னு... கெக்காளி போட்டு சீனிச்சாமி ஐயா சிரிச்சுப்புட்டு, " கிறுக்குப்பலே நல்ல படம் ஆடுனா தன்னால வரப்போறாய்ங்க...போடா போன்னு...வெறட்டி அடிச்சுப்புட்டு....நமக்கு பேசலேன்னா....மக்க மனுசங்கள பாக்கலேன்னா.... தூக்கம் வராதெப்பேன்னு" ஆளுக கிட்ட எல்லாம் சொல்லிச் சிரிக்கிற சத்தத்தை கேட்டு....

கம்மாக்கரையில பொழுது சாஞ்சு போச்சேன்னு கொஞ்சம் கண்ணசந்த காக்கா குருவி எல்லாம் கேட்டுப்புட்டு....ஆத்தே  இது என்ன சத்தம்னு...பதறிக்கிட்டு எந்திரிச்சு கத்த ஆரம்பிசுரும்னா பாத்துக்கிடுங்களேன்....!

பொண்டாட்டிய சாக கொடுத்துட்டு, ஒத்த மகனையிம் மருமக கையில தூக்கிக் கொடுத்துப்புட்டு...வெருண்டு போயி கிடந்த சீனிச்சாமி ஐயாவுக்கு.. தம்பி மக சரசுதேன் ஒத்தாசை...! சோத்த கீத்த ஆக்கி வச்சு தண்ணிய தூக்கி வச்சுட்டு அது பாட்டுக்குப் போயிறும்....! சீனிச்சாமி ஐயாவுக்கு மொளக்கூட்டுத் திண்ணையின்னா அம்புட்டு உசுரு....

ஆண்ட பரம்பரை, ஆண்ட பரம்பரைன்னு சொல்லிக்கிட்டு  மீசைய திருகிட்டு திரிஞ்ச காலம் எல்லாம் போச்சப்பே....எம்புட்டுதான் வீர, சோரமா, திமுறா, காசோட பணத்தோட திரிஞ்சாலும் .... தனியா ஒத்தையில கொண்டாந்து போட்றுமப்பா காலம். ரவைக்கு படுத்து.. காலையில எந்திரிக்கையில ஊட்டி எலும்பு வலிக்கும், நடு முதுகு வலிக்கும், முட்டி ரெண்டும் விண், விண்ணுண்டு தெரிக்கும்.....அப்ப யாருகிட்ட போயி சொல்றது நம்ம வீரக்கதைகளன்னு....

பேசிக்கிட்டே  இருந்த சீனிச்சாமி ஐயா படக்குன்னு நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லிக்கிட்டே மாரப்புடிச்சுக்கிட்டு ஒரு நா.....பொசுக்குன்னு செத்துப் போனாரு....

ஊருரூக்கு இருக்குற மொளகூட்டுத் திண்ணைகள பாக்குறப்பல்லாம் சீனிச்சாமி ஐயாவோட நாவகம் அந்தூரு ஆளுகளுக்கு வராம இருந்துச்சுன்னா அவுக புத்தியிலதேன் கோளாறுன்னு சொல்லணும்....!

எல்லா மொளக்கூட்டுத்திண்ணையிலயும் பெருசுக இருக்கத்தேன் செய்யும்...ஆனா..." ஏய்..!!ஏய்....!!! வடுவாப் பயலே.. அது என்ன சினீச்சாமி தேவரய்யான்னு  கூப்ற..கொங்காப்பயலே.....சீனிச்சாமின்னு சொல்லு... இல்ல ஐயான்னு சொல்லு..." ன்னு சொல்லி அதட்டிப் பேசுற தெளிவு இருக்குமான்றது சந்தேகந்தேன்...

சீனிச்சாமி ஐயா செத்துப் போனதுக்கப்புறம் மொளக்கூட்டுத் திண்ணை அனாதையாகிப் போக...

ராக்கப்பஞ்செட்டியாரோட டாக்கீஸ்..சூப்பர் டீலக்ஸ் தேட்டரா மாறி பொறவு டீலக்ஸ் தேட்டர்லயும் கூட்டம் இல்லாம...அதையிம் இழுத்து மூடிட்டுப் போனது எல்லாம் தனிக்கதை....!


தேவா. S





Comments

priyamudanprabu said…
நல்லாயிருந்துச்சு..
நம்ம பக்கத்து பேச்சு வழக்குல சீனிச்சாமி ஐயா அருமையா வந்திருந்தாரு...

நல்லா இருந்துச்சி...
மறக்க முடியாத சீனிச்சாமி ஐயா அவர்களை நாங்களும் அறிந்து கொண்டோம்...

நன்றி...
tm4

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல