Skip to main content

கும்கி....!













விமர்சனம் என்று ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்லும் பொதுப்புத்தியிலிருந்து நான் ஒதுங்கி நடக்கவே விரும்புகிறேன். விமர்சனம் என்பது தனிப்பட்ட பார்வையை பொதுப்பார்வையாக்க முயலும் ஒரு யுத்தி என்பதோடு மட்டுமில்லாமல் சினிமாவை தங்களின்  உச்ச கட்ட தொழில்நுட்ப அறிவினை எல்லாம் பயன்படுத்தி பார்க்கும் களமாகவும் ஒரு சிலர் இங்கே நினைக்கிறார்கள்.

மேதாவிகள் உலகம் எப்போதும் உலக தரத்தில் இருக்கும் எல்லா விசயங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க நினைக்கிறது. துரத்தும் வாழ்க்கையின் ஏதோ ஒரு ஓய்வு தருணத்தில் சினிமாவை பார்க்கச் செல்லும் என்னைப் போன்ற சாமானியர்கள் சினிமாவை சினிமாவாக வாய் பிளந்து பார்த்து விட்டு அதை எடுக்க பிரயாசைப் பட்டிருக்கும் அந்த படக்குழுவினரின் உழைப்பை கண்டு வியக்கவும் செய்கிறோம். மிக மோசமாய் அரைத்த மாவையே அரைத்து பார்வையாளனை ஏமாற்றும் ஒரு சில படங்களைக் கண்டு நாம் அதிருப்தியுற்றாலும், தமிழ் சினிமாவில் வாழ்வியலையும் எதார்த்தத்தையும் பேசும் படங்களை சினிமாவோடு ஒன்றிப்போய் ரசிக்கும் நாங்கள்..., எங்களின் சூப்பர் ஹீரோக்கள் நிகழ்த்தும் அதிரடி சாகசஙகளையும் கை தட்டி விசிலடித்து ரசிப்பதிலும் யாதொரு குறையும் வைப்பதில்லை.

கொம்பன் என்னும் காட்டு யானை ஆதிக்காடு என்னும் ஊரில் இருக்கும் விளை நிலங்களில் அறுவடை செய்வதற்கு முன்பாக வந்து அட்டூழியம் செய்கிறது. மனிதர்களைக் கொன்று விடுகிறது. இந்தக் கொம்பனை விரட்ட காட்டு இலாகா துறை எந்த ஒரு உதவியும் செய்யாமல், தலைமுறை தலைமுறையாய் தங்களின் பழக்க வழக்கங்களை மாற்றாமல் வாழும் பழங்குடியினரை அந்த இடத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் சென்று தங்கிக் கொள்ளுங்கள் என்று நிர்ப்பந்தம் செய்ய, அதை நிராகரித்து விட்டு.. காட்டு யானை கொம்பனை விரட்ட ஒரு கும்கி யானை கொண்டு வர தீர்மானிக்கிறது அந்த ஆதிக்காடு என்னும் கிராமம்.

கும்கி யானைக்கு பதிலாக பொம்மனின் கோயில் யானை ஊருக்குள் சூழ்நிலையால் வந்து விட, பொம்மனுக்கும் ஊர் தலைவரின் மகளான அல்லிக்கும் மலரும் அழகான காதலைத்தான்... இயக்குனர் பிரபு சாலமன் கதையின் கருவாக்கி இருக்கிறார். கதைக்கான களம் அட்டகாசமானது, சமீபத்திய தமிழ் சினிமாவுக்கு மிக, மிக புதியது.

மீன் குஞ்சுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை என்றாலும் முட்டையிலிருந்து வெளியே வரும் மீன் குஞ்சு முதன் முதலாய் நீரில் அடித்து நீந்தி அங்கும் அங்கும் அனுபவமின்றி அலை பாய்கையில் என்ன ஒரு பதட்டம் இருக்குமோ, அதே பதட்டத்தை விக்ரம் பிரபு கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது, மற்றபடி... சரியான பாதையில் அவர் பயணிக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் அவருக்கான வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும் என்பதில் யாதொரு மாற்றமும் இல்லை.

காதலை மையப்படுத்தி வெளிவரும் திரைப்படங்களில் வரும் கதாநாயகிகளை அந்த திரைப்படத்தை பார்க்கும் அத்தனை பேரும் மானசீகமாக காதலிக்க வேண்டும் என்ற ஒரு நியதியை ஏற்படுத்துவது வெற்றிக்கரமான ஒரு இயக்குனரின் வேலை. இந்த வேலையை கனகச்சிதமாக நிறைவேற்றி இருக்கும் பிரபு சாலமன் சாருக்கு ஒரு " ஓ.. "போட்டே ஆகவேண்டும். கதாநாயகி லட்சுமி மேனனை வைத்துக் கொண்டு படத்தில் அவர் நடத்தி இருப்பது சர்வ நிச்சமயாய் ஒர் அல்லி தர்பார்தான்...!

ஆதிவாசிப் பெண்ணாய் வந்து அதுவும் முதல் படத்திலேயே (சுந்தர பாண்டியன் முன்னாடியே ரிலீஸ் ஆனது வேற விசயம்....) க்ளோசப் ஷாட்களில் எல்லாம் எல்லா விதமான முகபாவங்களையும் நேர்த்தியாய் கொண்டு வரும் லட்சுமி மேனன் அட்டகாசமான தேர்வு..! காதலுக்காய் கோயில் யானையை கும்பி யானையாக்க பொம்மன் பிராயசைப்படும் இடங்களில்....நமக்கே சீட்டில் இருந்து எழுந்து...." பார்கே.....பார்கே...மாணிக்கம் முன்னால போ..." என்று கத்தவேண்டும் என்று தோன்றுகிறது..! காட்டு யானை கொம்பனை கோயில் யானை மாணிக்கம் எப்படி விரட்டப் போகிறது....என்ற ஒரு டென்சனை நமக்குள் ஏற்படுத்தி விட்டு.. கூலாக காடு, மலை, அருவி, சுனை, விளை நிலங்கள் என்று பச்சை பசேலென்று திரைப்படம் நகர்ந்து கொண்டே இருக்கிறது... !

தம்பி ராமையா இந்தப்படத்தில் நகைச்சுவையில் பிரித்து மேய்ந்திருக்கிறார் (நல்ல கவனிங்க...பிரிச்சு மேஞ்சுருக்காரு...). ஆங்காங்கே விமர்சனம் எழுதிய சிலர் தம்பி ராமையாவை ஓவர் டோஸ் என்றெல்லாம் எழுதி இருந்தார்கள்...! அது எந்தமாதிரியான பார்வை என்று தெரியவில்லை...ஆனால்... கதையோடு பொருந்தி வரும் அவரின் பாத்திரமும் அவரின் நகைச்சுவைகளும் மிகப்பிரமாதம்...! இரட்டை அர்த்த வசனங்களை அதிகம் அவர் பேசாமல் சூழலை மையப்படுத்தியே பேசி நம்மை சிரிக்க வைப்பது அழகு..... வசனகர்த்தாவுக்கு வந்தனங்கள்...!

மாணிக்கத்திற்கு மதம் பிடித்து விடும் இடத்தில், யாருமே எதிர்பாராமல் கொம்பன் என்ட்ரி...ஆவது கிளாஸ்....!!! கொம்பன், தனது பாகனான பொம்மனை (விக்ரம் பிரபு) அடிப்பதை பொறுக்க முடியாத மாணிக்கம் சீறிப்பாய்ந்து கொம்பனை தாக்க....

இரண்டு யானைகளுக்கும் இடையே  நடக்கும் சண்டையே படத்தின் க்ளைமாக்ஸாகிப் போகிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று நிறைய தொழில் நுட்ப புலிகள் கடுமையாய் இயக்குனரை விமர்சித்திருக்கிறார்கள்...

இயன்ற வரையில் கிராபிக்ஸ்  காட்சியில் யானைகளின் சண்டையை இயக்குனர் காட்ட முயன்றிருக்கிறார் என்றுதான் நான் சொல்வேன். ஒரு திரைப்படம் பார்க்கும் போது முழுக்க முழுக்க படக்குழுவினரடமே எல்லாவற்றையும் எதிர்பார்க்காமல் கொஞ்சம் நமது கற்பனைக்கும் இடம் கொடுத்து காட்சிகளை விவரித்துப் பார்க்க வேண்டும்....! நான் சொல்வது கொஞ்சம் முரணாகக் கூட உங்களுக்குத் தோன்றலாம்...! கும்கி போன்ற திரைப்படங்கள் எல்லோரும் எப்போதும் சொல்லும் காதலைத்தான் சொல்லி இருக்கின்றன என்றாலும் அந்த காதலை சொல்ல எடுத்துக் கொண்டிருக்கும் சூழலும் கதாபாத்திரங்களும் எப்படி சராசரியிலிருந்து மாறிப் பயணிக்கின்றன என்பதை ரசிக்க கூடத் தெரியாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாய் கண்டுபிடித்து தவறுகளை சுட்டிக்காட்டி எழுதுபவர்களை பார்த்து நான் ஆச்சர்யப்பட்டுதான் போகிறேன்...!

லாஜிக் மீறி திரையில் கட்டி எழுப்பப்படும் காட்சிகள் கூட ரசனைக்குரியதாய் இருந்தால் கை தட்டி ரசிப்பதில் தவறில்லை தானே...? மூவி இஸ் எ மூவீ. தட்ஸ் ஆல்...!

திரையில் ஒரு கதை, களம், காட்சிகள், கதாநாயகி, கதாநாயகன் என்று காட்சிப்படுத்துவது இயக்குனரின் வேலையாகிறது என்றாலும் கும்கி மாதிரி திரைப்படங்களைப் பற்றி தனியே அமர்ந்து யோசித்து, கற்பனையில் ஊறி, ரசிக்க நிறைய விசயங்கள் இருக்கிறது. தகப்பனின் நம்பிக்கையை உடைக்க விரும்பாத அல்லியும், மதம் பிடித்தது உனக்கு இல்லை மாணிக்கம், எனக்குதான் என்று தனது மாமாவையும், நண்பனையும், மாணிக்கம் என்ற யானையையும் கடைசியில் இழந்து புலம்பும் இடத்தில் விக்ரம் பிரபு....நடிப்பில் பவுண்டரி அடித்திருக்கிறார். முதல் படம் என்றாலும் அவருக்கு பின்புலத்தில் அவரது குடும்பமே இருந்திருக்கிறது என்பது கதை தேர்வில் மட்டுமில்லாமல், இசையிலும், பாடல்களிலும் தெளிவாகவே தெரிகிறது.

பாடல்களில் இமான்...பட்டையை கிளப்பி இருக்கிறார் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.. அல்போன்ஸ் குரலில் நீ எப்போ புள்ள சொல்லப் போற...என்று காதலியின் பின்னாலேயே காதலைச் சொல்ல ஏங்கித் திரியும் யுகபாரதியின் (யுகபாரதிதானே...?!) வரிகளுக்கு இமான் போட்டிருக்கும் ட்யூன் படம் பார்த்து முடிந்த பின்பும் மனதுக்குள் அழுது கொண்டேதான் இருக்கிறது.

இயக்குனருக்குள் பெரும் சோகம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும் அல்லது வாழ்க்கைப் பற்றிய நிலையாமையை அவர் தெளிவாய் விளங்கி இருக்க வேண்டும். முந்தைய படமான மைனாவிலும் ஒரு மாதிரியான சூழலில் தான் படத்தை முடித்திருப்பார். கும்கியிலும் கூட.. இந்தப் பக்கம் மாணிக்கம் யானை, கும்கி யானையை கொன்று விட்டு தனது எஜமானரைக் காப்பற்றிய திருப்தியில் இறந்து கிடக்க, தம்பி ராமையாவும், விக்ரம் பிரபுவின் நண்பராய் நடித்து இருப்பவரும் இறந்து கிடக்க...

தனது மகளின் காதலை புரிந்து கொண்டாலும் தனது பாரம்பரியம் கெட்டுப் போய்விடுமே என்பதால் இறுக்கமாய் உள்ளுக்குள் அழும் ஊர்த்தலைவரும், அப்பாவின் பேச்சையும் நம்பிக்கையையும் மீற முடியாமல் காதலை உள்ளுக்குள் தேக்கிக் கொண்டு கதறும் லட்சுமி மேனன் ஒரு புறமும்...

தன் மீது ஊர் வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்து விடக்கூடது என்ற உணர்வில் தான் இழந்து போன உறவுகளுக்காக அழுது கொண்டு...விக்ரம் பிரபு அந்த கிராமத்தை விட்டும் நடக்க...

எ...பிலிம் பை பிரபு சாலமன் என்று படம் முடிந்து விடுகிறது. கதாநாயகியும் கதாநாயகனும் சேர்ந்திருக்க கூடாதா என்ற ஒரு ஏக்கத்தை நமக்கு கொடுக்க வேண்டும் என்ற டைரக்டரின் எண்ணம் இங்கே மெளனமாய் வெற்றி பெறுகிறது. முடிவை மாற்றப்போவதாக எங்கேயோ நான் படித்தேன்...! கதாநாயகனும், நாயகியும் சேர்வதைப் போல முடித்தால் அங்கே பொதுப் புத்தி வேண்டுமானால் வெற்றி பெறாலாம்... ஆனால் எதார்த்தம் தோற்றுத் தான் போகும்....!

தமிழ் சினிமா இயக்குனர்களை வழக்கமான கதைகளை விட்டு நகர்ந்து வெவ்வேறு களம் நோக்கி சிறகடிக்க வைக்க கும்கி போன்ற திரைப்படங்கள் உதவக்கூடும்....!

ஹேட்ஸ் அப்...பிரபு சாலமன் சார்...!!!!!


தேவா. S




Comments

semmalai akash said…
அருமையான கருத்துகளை முன் வைத்து எழுதி இருக்கிறீர்கள். நல்ல கட்டுரை,

உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வந்துபோகவும்.
காளிதாஸ் said…
நல்ல விமர்சனம் எழுதி இருக்க !
அண்ணா... அருமையான விமர்சனம்...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த