Skip to main content

சந்திரமுகி.....!



விவரிக்க முடியாத ஒரு உணர்வுதான் இந்த பூர்வ ஜென்மம் என்பது. ஆதாரத்துடன் நிரூபிக்க எந்த உணர்வுப் பூர்வ நிகழ்வுகளும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதில்லை. ஆதாரப்படுத்தி விட்டால் அது உணர்வு நிலை என்னும் உயரிய நிலையிலிருந்து இழிந்ததாகி விடுகிறது. அமானுஷ்ய விசயங்கள் எனப்படும் மனித உணர்வுகளுக்குப் புலப்படாத பல நிகழ்வுகளை இயல்பிலேயே தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு இருந்திருக்கிறது. வாழ்க்கைக்கு முன்னும் பின்னும் அடர்த்தியாய் ஏதோ ஒன்று இருக்கிறது என்று நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். எனது உணர்வு எனது மனதின் கற்பனை என்று பகுத்தறிவு சொன்னாலும், கற்பனையும் உணர்வுதானே என்று பகுத்தறிவையும் ஆளும் ஒரு சக்தி எனக்குச் சொல்லி இருக்கிறது.

பூர்வ ஜென்மம் என்னும் அடிப்படையை எனக்கு உறுதியாய் நம்ப வைத்தது கீதை என்னும் ஞானக் கடல்தான். கீதை சொல்லப்பட்ட சூழலை மறுத்துப் பேசும் யாரும் கீதையிலிருக்கும் கருத்துக்களை மறுத்துப் பேச முடியாது. யார், யாருக்கு எங்கே சொன்னது என்ற விரிவாக்கத்தை விமர்சிக்கலாம் ஆனால் கீதையின் சாராம்சத்தை, அதன் அடிப்படையை அது சொல்லி இருக்கும் சூட்சும உணர்வுகளை மறுக்கவே முடியாது. பகுத்தறிவின் உச்சம் அது. 

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்ததானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்
பரித்ராணாய ஸாதூநாம் வினாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே... 

மேலே கூறப்பட்டிருக்கும் நான்கு வரிகளும் வெறுமனே ஏதோ நான்கு வரிகள் என்ற அளவில் கடந்து செல்ல முடியாததாய் இருக்கிறது. தர்மத்தை நிலை நாட்ட எப்போதும் ஒரு ஆன்மா உருவாக்கப்படுகிறது. தர்மத்தை உறுதியாய் ஸ்தாபிக்க யுகம், யுகமாய் நான் தோன்றுகிறேன். இங்கே பகவான் கிருஷ்ணர் அர்ஜுனருக்கு இதை உபதேசித்தார் என்ற காட்சி விரிவாக்கத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. யுகம் என்பது பிரபஞ்சத்தின் சுழற்சியை புலன்களுக்கு புரிய வைக்க கையாளப்பட்ட சூட்சும வார்த்தை. யுகம் என்பது காலம் அல்ல.. யுகம் என்பது சூழல். இங்கே நானே என்று சொல்வது யாரோ ஒரு கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் அவதரிப்பது அல்ல. சத்தியம் என்னும் தத்துவம் மீண்டும் மிண்டும் தோன்றுவது. 

கீதை மறுபிறப்பைப் பற்றி பேசுகிறது. ஒரு ஆன்மா உடலுக்குள் சக்தியாய் தங்கி இருந்து பலவிதமான அனுபவங்களை பெற்று அந்த அனுபவச் சாரத்திற்கு ஏற்றார்  போல வேறு உடலை சக்தி வடிவில் சென்றடைகிறது. யார் இதை தீர்மானிப்பது என்ற கேள்விக்கு யார் பூமியின் சுழற்சியை தீர்மானித்தார்களோ, யார் சூரியனிலிருந்து பூமியையும் இன்ன பிற கோள்களையும் பிய்த்தெறிந்தார்களோ அவர்களே இதையும் செய்திருக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது. அதாவது யாரும் செய்யத் தேவையில்லாத தன்னிச்சை நிகழ்வு என்று பகுத்தறிவில் இதை மொழிப்படுத்திக் கொள்ளலாம். இரண்டு பங்கு ஹைட்ரஜனும் ஒரு பங்கு ஆக்ஸிஜனும் சேர்ந்தால் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பது அல்ல நியதி. இரண்டும் சேர்ந்ததால் கிடைத்தது தண்ணீர். ஏதேதோ சேரச்சேர ஏதேதோ கிடைத்தது. பிரபஞ்சத்தின் மொத்த நிகழ்வுகளும் முடிவை நோக்கிய ஒரு பயணம் அல்ல.

நிகழ நிகழ உங்களின் எனதின் முடிவுகள் கிடைத்தன. கிடைக்காமலிருக்கவும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. பள்ளத்தை நோக்கி நீர் எப்படி செல்கிறது? அதற்கென்று என்ன நியதி இருக்கிறது. பூமிக்கு என்று ஒரு ஈர்ப்பு விசை எப்படி வந்தது..? அப்படியாய் இந்த உடலுக்குள் அனுபவம் பெற்ற ஆன்மாவும் இருட்டில் பயணிக்கும் வெளிச்சமாய், இடமிருந்து வலம் சுற்றும் பூமியாய் வேறு உடலை எடுக்கவும் செய்கிறது. சக்தி ஏதேதோ அனுபவ அதிர்வுகளைக் கொண்டிருக்க அந்த அனுபவ அதிர்வுகள் மொத்தமாய் கரையும் வரை...உடல் தேடும் ஒரு பயணமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உள்ளது அழியாது, இல்லாதது தோன்றாது. இது சைவ சித்தாந்த தத்துவம் என்றால், பின்னாளில் ராபர்ட் ஹூக் என்னும் அறிவியலார் இதை  ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு ஆற்றல் இன்னொரு வகை ஆற்றலாக மாறிக் கொண்டுதான் இருக்கும் என்று ஆற்றல் அழியாமை விதி என்று அறிவிக்கிறார். இராபர்ட் ஹூக்கை நீங்கள் நம்புவீர்கள் ஏனென்றால் அது அறிவியல். சைவ சித்தாந்தத்தை நம்ப மாட்டீர்கள் ஏனென்றால் அதை அறிவாய் பார்க்க முடியாத அளவிற்கு மதம் என்னும் மாயை உங்கள் கண்களை மறைத்து வைத்திருக்கிறது.

உடல் விட்டு பயணிக்கும் இந்த ஆன்மா என்னும் சக்தி அலைகள் பெரும்பாலும் பழைய உடலைப் பற்றிய நினைவுகளை மறந்து வெறும் அனுபவ அதிர்வுகளாய் வேறு ஒரு உடல் தொட்டு பூர்வ ஜென்ம அனுபவத்திற்கும், உறைந்திருக்கும் கருவில் இருக்கும் பாரம்பரிய அணுக்களுக்கும் ஏற்றார் போலும், புலன்கள் மூலம் பெறும் அனுபவத்திற்கு ஏற்றார் போலும், தன்னை புதிய உயிராய் பரிணமித்துக் கொள்கிறது. ஆதி குணங்களை ஆன்மா எப்போதும் மறக்காமல் அதை வெளிப்படுத்தவும் செய்வதால்தான்..ஒரே வீட்டில் பிறந்த நான்கு பிள்ளைகளின் விருப்பங்களும் வெவ்வேறாய் இருக்கிறது. நிறைவேறாத சுழற்சியை அனுபவத்தின் மூலமாய் அடுத்தடுத்து பெற முயலும் ஆன்மாவைத்தான்...

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்....

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.....

என்று மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் கூறுகிறார். பூர்வ ஜென்ம உடல் வாசனையோடு மறு பிறப்பு நிகழவும் சாத்தியமிருக்கிறது. சந்திரமுகியை மணிச்சித்ரத்தாழ் ஆக பார்த்த போதே எனக்கு விளங்கி விட்டது.  மணிச்சித்திரத் தாழின் கதாசிரியர் யாரென்று எனக்குத் தெரியவில்லை ஆனால் அது அற்புதமான கலைப்படைப்பு. தமிழில் சூப்பர் ஸ்டாருக்காக திணிக்கப்பட்ட காட்சியமைப்புகள் நிறையவே மசாலா வாசத்தை வீச வைத்து விட்டது. மலையாளத்தில் கதையின் ஆழத்தை ரசனையாய் அதன் ஓட்டத்திலேயே கூறியிருப்பார்கள். மலையாள சினிமா இப்போது மாறிப்போய் விட்டது. முன்பெல்லாம் தனது கலாச்சார செழுமைக்குள் நின்று கொண்டுதான் அவர்கள் இசையமைக்கவும், கதை செய்யவும் செய்வார்கள். 

ஷோபனா நாகவள்ளியாய் மாறி நிற்கும் இடத்தில் எனக்கு மயிர்க் கூச்செறிந்தது என்னவோ உண்மைதான். நாகவள்ளி என்னும் தமிழச்சியின் ஆவி ஷோபனாவிற்குள் புகுந்து விட்டது என்று நாம் நினைக்க மருத்துவ ரீதியாய் அது ஆவி அல்ல அகு ஒரு பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் என்று மணிச்சித்திரதாழ் சொன்னதும் கூட சரிதான். அது டிஸ்ஆர்டர்தான். உள்ளுக்குள் ஏற்பட்ட அதிர்வுகளின் பிறழ்ச்சிகளே.... நாகவள்ளியாகவும், சந்திரமுகியாகவும் மாறி நிற்கின்றன.  சந்திரமுகியாய் தன்னை நம்புவதாக அந்த பாத்திரம் விவரிக்கப்பட்டது. அந்த கற்பனையை உடைக்க.... வேட்டையன் ராஜாவை கொல்லவேண்டும் என்று அறிவியல் மூலமாக விவரித்து அதைச் செய்து அந்த டிஸ்ஆர்டரை சரி செய்வதாய் படம் சொன்னாலும்....

சந்திரமுகியும் நாகவள்ளியும் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டரை ஏற்படுத்தக் கூடிய அளவிலான ஆன்மாக்களாய்த்தான் எனக்கு தெரிந்தார்கள். பூர்வ ஜென்மத்தில் தனது காதலனைக் கொன்று போட்டு தன்னை அடைய நினைத்த ஒருவனை பழி தீர்க்க நினைப்பதற்கு நிறையவே சாத்தியக்கூறுகள்... பாதியில் உடலை விட்டுப் பயணப்பட்ட ஆன்மாவிற்கு இருக்கிறது. சந்திரமுகி என்னும் உடலுக்குள் ஏற்பட்ட வெறி, கோபம், உக்கிரம்....உன்னை நான் பழி தீர்ப்பேன் என்னும் ஆக்ரோசத்தோடு பயணப்பட்ட அந்த அதிர்வு மறு பிறப்பு எடுக்க சாத்தியக்கூறுகள் அற்றது. மறு கருவினை ஒரு ஆன்மா தொட வேண்டுமானால்  அது முன் ஜென்மத்து உடலின் நினைவுகள் தீர இல்லாமல் இருக்க வேண்டும். முன் ஜென்மத்து உடலின் நினைவுகள் இருக்கும் வரை அது பிரேத ஆத்மாதான். பிரேதத்தை தானாய் நினைக்கும் ஆன்மா அது.

ஏற்கெனவே கற்பனைகளும், செய்திகளை விவரித்துப் பார்க்கும் மனோநிலையும் கொண்ட ஒரு பெண்ணை அந்த ஆன்மா தேர்ந்தெடுத்துக் கொண்டதில் யாதொரு ஆச்சர்யமும் கிடையாது. ஷோபனாவும், ஜோதிகாவும் அப்படியான ஒரு இளகிய மனோநிலை கொண்ட பாத்திரப்படைப்புகள்தான். அது தான் முதலிலேயே சொன்னேன்.. சந்திரமுகியின் மூலமான மணிச்சித்திரத்தாழின் கதாசிரியர்... ஆகச் சிறந்த படைப்பாளி அதுவும் இந்த படைப்பை தனது புலனுணர்வுக்கு அப்பாற்ப்பட்டே அவர் எழுதி இருக்க வேண்டும்....

மீண்டும் தனது பூர்வ ஜென்மத்தை  நினைத்து மானசீகமாய் சலங்கை கட்டி தன் காதலனுடன் ஆடி சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த பிரேத ஆத்மாவின் நகர்வுகளை சரி செய்ய வந்த டாக்டரை தனது எதிரியாக பாவித்து அவனையே பூர்வ ஜென்மத்து வேட்டையனாகவும் வரிந்து கொள்வது பிரேத ஆத்மாவின் கோபத்தை தீர்த்து கொள்ள ஒரு வழியாகவும் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே மனோதத்துவ ரீதியாய் டாக்டர் சொல்லும் விசயத்தைதான் எந்த ஒரு ஆன்மப் புரிதல் கொண்ட பூர்வ ஜென்மத்தை நம்புவர்களும் சொல்லி இருப்பார்கள்...

வேட்டையன் செத்தால் பிரேத ஆத்மா திருப்தியுறும்...அப்படி கோபம் தீர்ந்து விட்டால் தன்னை பிரேதமாக கற்பனை செய்து கொள்ள வேண்டிய அவசியமற்றுப் போய் அந்த அனுபவத்தையும் அதிர்வுகளாய் எடுத்துக் கொண்டு தகுந்த கருவினை நோக்கி சந்திரமுகியின் ஆன்மா சீறிப்பாயும். தன்னை உடலாய் நினைத்து வாழ்ந்து மரணிக்கும் மனிதர்கள் உடலை விட்ட பின்பும் தன்னை உடலாய் நினைத்துக் கொண்டே இருக்க...அந்த கனவு முடிவதே இல்லை. உடல் இல்லாமலேயே வலியும் வேதனையும் உணர்வாய் இருக்க...அது நரகமாகிப் போகிறது. கனவிலே பாம்பு நம்மை கொத்த துரத்திக் கொண்டு வருகிறது என்று வைத்துக் கொள்வோம்...பயந்து அலறி உடல் இருப்பதால் எழுந்து விடுகிறோம்... ! உடல் இல்லாவிட்டால் என்ன ஆகும்..பாம்பு துரத்திக் கொண்டே இருக்கும் நாம் பயந்து ஓடிக் கொண்டே இருப்போம்....

எண்ணைச்  சட்டியில் போட்டு வறுத்துக் கொண்டே இருப்பார்கள் நாம் வறுபட்டுக் கொண்டே இருப்போம். பாம்பும் தேளும் பூராணும் கடிக்க கடிக்க வலியால் துடித்துக் கொண்டு இருப்போம்....! என்ன கருடபுராணம் நினைவுக்கு வருகிறதா...? எக்ஸாட்லி சேம் பாஸ்....!!!!!

தான் யார், ஏன் வந்தோம், மரணம் என்றால் என்ன..? ஏன் பிறந்தோம்...? எங்கே செல்கிறோம்? எது வாழ்க்கை?  இங்கே எல்லாமே மாயை, நிம்மதிதான் வாழ்க்கை. தியானம் செய்ய தனித்தமர்வது போலத்தான் இறந்த பின்னும் இருக்கும் என்பதால் தினமும் தனித்து அமர நேரம் ஒதுக்கி நான் அமர்ந்தால் என்ன? எனக்கு கொடுக்கப்பட்டது எல்லாம் ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் கூடிக் கிடைத்த தண்ணீர் போன்ற எதேச்சையான நிகழ்வுகள். இதற்கு ஏன் நான் கர்வம் கொள்ள வேண்டும்..? நான் என்பது உடல் அல்ல, மனமல்ல, பெயரல்ல, பதவி அல்ல.. எனக்கு நிகழ்வது எல்லாம் கூட்டு நிகழ்வின் பகுதி என்று நாம் உணர, உணர...

ஒரு சருகு உதிர்வது போல ... நிகழ்ந்து விடுகிறது நமது மரணம். அடர்த்தியான எண்ணங்கள் இல்லாமல் எதுவுமற்றுப் போக வேண்டுமா? இல்லை கம்பம் இல்லா காகம் போல அமர எந்த ஒரு இடமும் இல்லாமல் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டுமா...?இதை தீர்மானிக்க வேண்டிய இடத்தில் நாம் இருப்பதால் நாம்தான் கடவுள், கடவுள் என்று ஒன்று தனித்து இல்லை என்றும் நான் சொல்வேன்...!

எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதைக் கொடுத்தாயோ
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருaடையதாகும்.  


தேவா. S




Comments


எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதைக் கொடுத்தாயோ
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருaடையதாகும்.

நிறையச் சொல்லும் அழகானதொரு எழுத்து..
Anonymous said…
Arumai brother....i like ur posts,,,,

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல