Skip to main content

வானம் எனக்கொரு போதிமரம்...!






















அடையாளங்கள் அழிந்து போன ஒரு வழிப்போக்கனாய் பெரும்பாலும் ஒன்றுமில்லாததற்குள் கிடந்தேன். மழை நின்று போயிருந்த அந்த மாலை மீண்டுமொரு கனத்த மழையைக் கொண்டு வரவும் கூடும். எதுவமற்று அந்த மரத்தடியில் நான் லயித்துக் கிடந்தது போலத்தான் சித்தார்த்தனுமொரு நாள் போதியின் வேர்களுக்கு நடுவே கிளர்ந்தெழுந்த மனோநிலையில் கிறங்கிக் கிடந்திருக்க வேண்டும். மழையை தேக்கி வைத்துக் கொண்டு காற்றின் அசைவுகளுக்கு எல்லாம் நம்மை ஆசிர்வதிக்கும் மரங்களை நான் தேவதைகள் என்றுதான் கூறுவேன்.

ஒவ்வொரு முறை காற்று சில்லிட்டு வீசும் போதும் நீரை என் மீது தெளித்து விளையாடிய மரங்களை எனக்கு அழகான பெண்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது. அழகு என்ற சொல்லுக்கு வரையறைகள் கொடுக்க நான் விரும்பவில்லை. இது இதுதான் அழகு என்ற கோட்பாடுகளை உலகம் செதுக்கிக் கொண்டே இருக்கிறது இன்னமும். கிளியோபாட்ராவை அழகு என்று வர்ணிக்கும் இலக்கியங்களும் வரலாற்று நாவுகளும் இன்று உலகம் முழுதும் பரவிக் கிடந்தாலும் அவள் அழகாய் இருந்தாளா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியவன் எனக்கு நான் மட்டுமே. அழகான என்ற சொல் எப்போதும் தனிமனித விருப்பத்தையும் ஆழ்மன தேடலையும் பொறுத்தது.

எனது அழகு உங்களுக்கு அவலட்சணமாகவும் எனது அவலட்சணம் உங்களுக்கு அழகாயும் இருக்கலாம். 

மரம் எனக்கு அழகான பெண்ணாய்த்தான் தோன்றியது. ஒரு ஆணுக்குப் பெண்தான் வேண்டும். எத்தனை சுகங்களை அவன் அனுபவித்தாலும் அதை பெண்ணிடமிருந்து பெற்ற சுகத்தைக் கொண்டுதான் அளவிடுவான். அப்படி அளவிடாமல் ஏதோ ஒன்றில் லயித்துக் கிடக்கிறான் என்றால் அந்த ஏதோ ஒன்று ஒரு பெண்ணை நோக்கி நகர்த்தும் விசமாய்த்தான் இருக்க முடியும். ஆண்களைப் பற்றி பெண்கள் என்ன நினைப்பார்கள் என்று நான் எவ்வளவு யோசித்து புத்தியை மாற்றி ஒரு பெண்ணின் நிலையில் இருந்து எழுதினாலும் அது ஒரு போதும் ஒரு பெண்ணை ஒத்து இருக்கப் போவதில்லை என்பதால் அந்த கணக்கீட்டுச் சமன்பாடுகளை என் மூளையிலிருந்து ஒதுக்கியே வைத்து விடுகிறேன் பெரும்பாலும்.

ஈரமான மரம் மழைக்குப் பின்னான பூமியின் வாசத்தோடு என்னைக் கிறங்கடித்துக் கொண்டிருந்த போது எனக்கு என் அவள் என்னவளாய் இருந்த காலங்கள் புத்திக்குள் இருந்து எட்டிப்பார்த்துச் சிரித்தன. பெண்ணை புணர்வதை விட வாசம் செய்வது எத்தனை  சுகமென்று அதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தெரியும். புணர்ச்சி...புணர்ச்சி என்று ஓடாமல் நுகர்ச்சி நுகர்ச்சி என்று ஓடிப்பாருங்கள் விழுந்து விடாத உச்சத்துக்குள் செழித்துக் கிடப்பீர்கள். பெண்ணைப் பற்றியே எழுதுகிறாயே என்கிறார்கள் பலர் என்னிடம்..ஒரு ஆணுக்கு பெண்ணைப் பற்றி எழுதுவதை விட வேறு என்ன வேலை இங்கு இருக்கிறது...? என்ற என் எதிர் கேள்வி சமூகத்தின் ஒழுக்க நியதிகளுக்கு எதிரானதாய் கூட இருக்கலாம்.

அடித்தால் வலிப்பது போல...அழகினை ரசிப்பது என்பது இயல்பாய் நிகழ்கையில் அதை எந்தக் கடிவாளம் போட்டு நான் நிறுத்த..? கண்டும் காணாதது போல இந்த உலகம் என்னை நடிக்கச் சொல்கிறது. நான் நடிக்க விரும்பாத ராஜாங்கத்தின் சக்கரவர்த்தி என்று யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாய்ப்பிருந்தால் எமது ராஜ்யத்திற்குள் ஒரு முறை வந்து பாருங்கள். அங்கே நிலாக்களை வீதி தோறும் கைக்கெட்டும் தூரம் பறக்க விட்டிருப்போம். ப்ரியங்களை சுமந்த விழிகளோடு பெண்டிர் எம்மை ஆளவும் செய்வர் எம்மோடு இணக்கமாய் வாழவும் செய்வர். விருப்பங்களின் பெயரில் நகரும் எமது வாழ்க்கையில் சக மானுடரை காயப்படுத்தும் வகையில் செயலொன்றுமே இருக்காது. எங்களுக்கு மொழி என்பது அவசரத்தேவைக்காக பயன்படும் ஊர்தியைப் போலத்தான். மெளனங்கள் சுமந்த அந்த உலகில் உணர்தலால்தான் நாங்கள் எங்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்வோம்.

ஆயுதங்கள் என்றால் என்னவென்று யாரும் அங்கே அறிந்திலர். புத்தி பிறழ்ந்து போனவர்களை உற்று நோக்கி நாம் அவர்களைச் சரிசெய்வோம். இலக்கணங்களும் தத்துவங்களும் என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியவே தெரியாது. மழை பெய்யும் நாளெல்லாம் எமக்கு பண்டிகைகள், எமது ஓய்வுகளில் எல்லாம் ஒன்று கூடிச் சென்று இயற்கையின் அழகினைக் கண்டுகளிப்போம். எங்களின் வேலை என்பது எமக்காய் உணவு தேடுதலும், உணவு உற்பத்தி செய்தலுமே! விருப்பங்களில் சுதந்திரம் இருப்பதால் எமக்கு இயல்பாய் போன நேர்மையில் எமது இருப்புகளை நேசித்து, நேசித்து இன்பம் துய்ப்போம்.

அது வேறு மாதிரியான வாழ்க்கை. அது பற்றி உங்களுக்குப் புரியாது. சப்தங்கள் இல்லாத எமது ராஜ்யத்தில் எமக்கு கண்ணீரும், மகிழ்ச்சியும் ஒன்றுதான். இருப்பதை விளங்கி இல்லாமைக்குள் நகர்ந்து செல்வது எப்படி என்றுதான் வாழ்நாள் முழுதும் பயின்று கொண்டிருப்போம். எமது உணர்வுகள் எம்மை ஆளுகையில் எமக்கு எந்த ஒரு கட்டுப்பாடுகளும், நெறிமுறைகளும் தலைவர்களும் அங்கே இலர். எம்மில் சிறந்தது எப்போதும் எம்மை வழிநடத்தும். இங்கே தலையாய உணர்வுகொண்டோர் தலைவர்கள். தங்களின் இருப்பினை உணர்ந்து இல்லாமல் வாழ்வோர் சக்கரவர்த்திகள். இது வாசனையான உலகம்...வசந்தத்தை மகிழ்ச்சியோடு மட்டும் தொடர்புபடுத்திக் கொள்ளாமல் துக்கத்தோடும் தொடர்புபடுத்தி வாழும் ஒரு துயரற்ற வாழ்வு.

மீண்டுமொரு முறை காற்றுக்காய் தலையசைத்து என் மீது நீர் தெளித்த மரத்தினை வாஞ்சையோடு மனதால் வாங்கிக் கொண்டேன். மனதை முதலில் அவிழ்த்துப் போட்டு புத்தியால் நிர்வாணமானேன். அந்த நிர்வாணத்தில் உடலும் ஓடிப் போய் ஒளிந்து கொள்ள உணர்வொன்று பிரம்மாண்டமாய் சிலிர்ப்பென்னும் உணர்வோடு புணரத்தொடங்கி  இருந்தது. இங்கே சுகம் என்பது மட்டுப்பட்டதாய் இருக்கவில்லை. இது முன்பொரு காலத்தில் பெண்ணோடு சல்லாபித்த சுகத்தை நினைவுபடுத்தியதே அன்றி இது அதுவல்ல. அங்கே இயக்கம் இருக்கும். ஆண் பெண் அசைவுகள் இருக்கும். இங்கே நான் என்னும் என்னுணர்வு மனம் கழிந்து ஓரு ஆணைப் போல நின்றது....உள்ளுக்குள் பரவசத்தைக் கிளறிய ஒர் பெரும் உணர்வு பெண்ணைப் போல நின்றது. இங்கே இரண்டும் சேர, சேர அசைவு அடங்கிக் கொண்டிருந்தது. 

சிலிர்ப்பாய் உள்ளுக்குள் அடங்கிக் கொண்டிருந்த நான் என்னும் உணர்வை, அந்தச் சூழல் என்னும் குளுமை நிறைந்த பெண் அடக்கி கொண்டிருந்தாள். பிரக்ஞையற்று மரத்தின் வேர்களில் நான் நழுவிக் கிடக்கையில் நான் இருக்கிறேன் என்ற உணர்வை வேகமாய் என்னை ஆக்கிரமித்த பெண்ணுணர்வு அழித்துக் கொண்டிருந்தது. வேகமான இயக்கம் அது......ஆனாலும் இயக்கமில்லாதது போலத்தான் தோன்றியது. இங்கே எது உச்சமாயிருக்கும் என்ற கேள்வி ஒன்று மனதிலிருந்து மெல்ல எட்டிப்பார்க்க....பார்த்த கணத்திலேயே உணர்வின் ஆளுமையால் அது அழிந்தும் போனது. 

உடலின் உச்ச இன்பம்தான் இங்கே ஆரம்பமாயிருந்தது....

ஏதேதோ கதவுகள் திறந்து கொள்ள விழிகள் திறந்தபடியே அங்கே அனுபவித்தல் என்ற ஒன்றை மட்டுமே உணர முடிந்தது. இருக்கிறேன் என்ற உணர்வைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. இடுப்பின் கீழ் தண்டுவடத்தின் அடிப்பகுதியில் ஏதோ ஒரு சக்தி அசைந்து கொண்டிருந்தது. மெல்ல மேலெழுவதும்.. பின் கீழ் செல்வதுமாயிருந்த அந்த ஒன்று...ஒரு கணத்தில் சீறிப்பாய்ந்து அடிவயிற்றில் மோதியது.  அப்போது ஆழமாய் சுவாசித்துக் கொண்டிருந்தேன். கண்கள் மேல் நோக்கிச் சென்று புருவமத்தியில் சென்று தஞ்சமடைந்த அந்த நொடியில் மீண்டும் மேலேறிய அந்த சக்தி அடுத்து வயிறு, நெஞ்சு, என்று சென்று உள்ளுக்குள் இருந்த அடைப்புக்களை கிழித்தபடியே நகர்ந்து கொண்டிருந்தது. இது எல்லாவற்றையும் ஒரு சாட்சியாய் நின்று வேடிக்கைப் பார்த்த மனம் ஒடுங்கிப் போய்க்கிடந்தது. நடுநெஞ்சிலிருந்து புருவமத்திக்கு நகர்ந்த அந்த சக்தி....

புணர்ச்சி என்றால் என்னவென்று ஆழமாய் பாடமெடுக்க....கோடிமுறைகள் உச்சத்தை தொடும் நிகழ்வொன்றை நெருங்கிக் கொண்டிருக்கும் கணத்தை எனக்கு கொடுக்கப்போகிறது என்று மெல்ல விளங்கியது. சராசரி வாழ்க்கையில் பெரும்பாலும் ஆண் இயங்க, பெண் வாங்கிக்கொள்ளுமிடத்தில் இருப்பாள். இங்கே நான் பெண்ணாயிருக்க பெண்ணை ஒத்த பிரபஞ்ச சக்தி என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. புருவமத்தியில் நிலைகொண்டிருந்த சக்தி...என்னை உள்ளுக்குள் கதறவைத்தது. போலியாய் உடலுக்குள் நின்று கொண்டு பெண் சுகத்துக்காய இயங்கும் ஒட்டு மொத்த உலகத்தையும் என் முன் தோலுரித்துக்காட்டி அதை மட்டுப்பட்டது என்று சொல்லிக்காட்டி....பிரபஞ்ச விருத்தி என்னும் மையம்தான் வாழ்க்கையின் ஆதாரம் என்றுணர்த்தியது.

காமத்தில் ஜனித்து...காமத்தில் வளர்ந்து....காமத்தில் மரிக்கும் வாழ்க்கைக்கு எத்தனை வர்ணமடித்து வைத்திருக்கின்றனர் இம்மானிடர் பார் என்றொரு உணர்வு உள்ளுக்குள் தோன்ற...கதறியழுது கொண்டிருந்த என் உணர்வுக்குக் காரணமாய் பழைய பொய்க்கற்பிதங்கள் இருந்து போயின. புருவமத்தியில் படுத்துக் கொண்டிருந்த அந்த சக்தியின் ஆளுமைதான் அங்கிங்கெனாதபடி பரவிக்கிடப்பதாய் எனக்குப் பட்டது. நான் என் அகத்தொடர்புகளையும் அறுத்துக் கொண்டிருந்தேன். ஒப்புக்கொடுத்தல் என்னும் சரணாகதி என்றால் என்னவென்று தெளிவாய் விளங்கியது.

இதற்குமேல் ஒன்றுமில்லை இனி எல்லாம் ஈசன் செயல் என்ற ஒரு வாக்கியம் உள்ளுக்குள் ஓடி மறைந்தது. நான் கால்கள் நீட்டி கைகள் விரித்து சரிந்து கிடந்தேன்...முழுமையான பிரவாகத்தோடு ஒற்றை வீச்சில் புருவமத்தியிலிருந்து சீறிப்பாய்ந்த அந்த சக்தி...மூளைக்குள் இறங்கிக் கூடி அந்த கலப்பில் ஏதேதோ திரவங்கள் சுரந்து மூளையை மூழ்கடிக்க...மொத்த உணர்வும் அடங்கி என்னை ஆட்கொண்ட சக்தி எது...? நானெது..? என்றறிய முடியாத உணர்வுக்குள் அமிழ்ந்தே போனேன்...!

கட்டுக்குள் நிற்காத இவ்வாழ்க்கை அழகு.....
புலன்களுக்குள் பூட்டிக்கொள்ளாத பாவம் அழகு....
தேவைகளற்ற விருப்பங்கள் அழகு.....
ப்ரியங்கள் கொண்ட பார்வைகள் அழகு.....
திணிக்கப்படாத அறிவுகள் அழகு....
வர்ணங்கள் நிறை கனவுகள் அழகு...
கற்பனைகள் நிறைந்த கவிதைகள் அழகு
பொருள் கொண்டு கணிக்காத உறவுகள் அழகு
காமம் கடந்த பாலினங்கள் அழகு..
அறிவு நிறை பெண்கள் அழகு...
பெருமைகள் பேசா ஆண்கள் அழகு
காலங்கள் மறக்கும் மனங்கள் அழகு...
கர்வம் கொள்ளாமல் படைப்பவன் அழகு...
சுற்றும் பூமி அழகு....
சுடும் சூரியன் அழகு
தேய்ந்து வளரும் நிலவும் அழகு...
ஆழக்கடல் அழகு...
தேங்கி நிற்கும் நீரும் அழகு...
சுத்தங்கள் அழகு....
அசுத்தங்கள் அழகு...
கண்டவை அழகு.....
காணாதவை எல்லாம் இன்னும் அழகு....

எங்கும் முடிச்சிட்டுக் கொள்ளமல்....காற்றில் தவழும் ஓசையைப் போல, நாசி தொடும் நறுமணம் போல..., உடலைத் தழுவும் மென்குளிர் போல, விரவிப் பரவும் பளீர் ஒளி போல....இருந்தேன்....

மணல் புரளும் அழகிய கடற்கரைகளில் அவன் மீட்டிக் கொண்டிருக்கும் அற்புத இசையொன்றை வாசித்துக் கொண்டிருக்கும் அலைகளையும், நீல வானத்தில் அவன் தீட்டி வைத்திருக்கும் பஞ்சுப்பொதி ஓவியங்களையும்.....உணர்வுகளுக்குள் இருந்து மெல்ல தடவிப்பார்த்தேன். அது அவனா? இல்லை...அவளா...? முன் நெற்றியில் விழுந்த மழைத்துளி ஒன்று என்னை உடலென்னும் பிரக்ஞைக்குள் கொண்டு வர வெகுநேரம் முயன்று கொண்டிருந்தது. பகுதி விழிப்பு நிலையில் மெல்ல கண்கள் திறந்து கொள்ள...

மரம் என்னைப் பார்த்து சிரித்தபடியே மீண்டும் நீர்த்துளிகளை  தெளித்து.... எம்மையும் போதியென்று அறிவிப்பாயோ என்று நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்க்க....

வானத்தைப் பார்த்தேன்...மறுபடி மழை வரும்போலத் தோன்றியது.....மேகங்கள் அவசர அவசரமாய் நகர்ந்து ஏதேதோ செய்திகளைப் பரிமாறிக் கொண்டிருந்த போதே....


அங்கே அடித்துப் பெய்தது மழை.....! 



தேவா சுப்பையா...



Comments

சொல்ல வார்த்தைகள் இல்லை....!!!
தல.... உன்னியும் உன்ற எழுத்துக்களையும் அடிச்சுக்க ஆளில்ல!
அண்ணா... உங்கள் எழுத்துக்கள் சாரல் மழையாய்... கலக்கிட்டீங்க போங்க...
Unknown said…
அங்கே அடித்துப் பெய்தது மழை.....!//

இங்கே உங்கள் எழுத்துக்களை படித்து மழையில் நனைகின்றோம்....

ம் வேற என்ன அண்ணா சொல்ல...:)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த