Skip to main content

ஏரிக்கரை பூங்காற்றே....!


வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலும் நிறைந்து கிடக்கும் உணர்வொன்றை மொத்தமாய்  என்னுள் திணித்துப் போட்டிருக்க்கும் உனது பேரன்பினை விவரிக்க இயலாமல் ஒரு குருடனாய் தட்டுத் தடுமாறி உனக்கான வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். எத்தனை முறை இயம்பினாலும் தீராத காதலொன்றை என் வார்த்தைகளுக்குள் கொண்டு வரும் பிராயத்தனத்தை நான் வலி என்பதா சுகம் என்பதா இல்லை இரண்டும்  பிசைந்தெடுத்த கலவை என்பதா?

அடர் இரவொன்றின் நீண்ட பயணத்தில் துணைக்கு வரும் நிலவாய் என்னை துரத்தும் உன் நினைவுகளை மென்று கொண்டே என் ஜன்னலோரப் பேருந்தில் நகர்ந்து கொண்டிருக்கும் சொர்க்க நிமிடங்களின் ஏக்கத்தை காதலென்று அடையாளப்படுத்தியபடியே தூரத்தில் சிறகடிக்கும் ஒற்றை பறவை ஒன்று தன் துணையத் தேடி சென்று கொண்டிருக்கலாம்....ஆழமான பேரமைதியை உள்வாங்கிக் கொண்டு ஏதேனும் ஒரு மரக்கிளையில் அதன் துணை காத்துக் கொண்டுமிருக்கலாம்..

இறக்க முடியாத சிலுவையினை சுமக்கும் தேவனாய் உன்னை மறக்க முடியாமால் நகரும் என் பொழுதுகளை எல்லாம் நீயே விடியவைக்கிறாய்...நீயே அணைத்தும் வைக்கிறாய்.  எடுத்தியம்ப இயலாத உணர்வுகளைத்தான் எப்போதும் போல இப்போதும் எழுதி வைக்கிறேன்....! 

ப்ரியங்கள் எப்போதும் சொல்லிக் கொள்வதில் முடிந்து விடுவதில்லை. நேசங்கள் ஒரு போதும் மேடையேறி தன்னை கோடி பேருக்கு அது அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. எதையும் பகிரவேண்டிய அவசியமற்று மெளனமாய் சுற்றும் இந்த பூமியையும், தூரத்தில் எரிந்து கொண்டிருக்கும் சூரியனையும் இருக்கிற்தென்று சொல்லி நியாயங்கள் பேச வேண்டியதும் இல்லை. 

காதலென்ற ஒற்றை சொல்லுக்குள் 
அடைபட முடியாமல் துடிக்கும்
என் உணர்வுகளை பிரம்மாண்டமாய்
விரித்துப் போட்டிருக்கிறேன்
இந்த பிரபஞ்சப் பெருவெளியெங்கும்
திறந்து கிடக்கும் வானத்தின்
நட்சத்திரங்களாய் கண்சிமிட்டும்
உன் மீதான என் காதலுக்கு
மறுமொழி பகிராவிடினும்
இமைகள் சிமிட்டி விழிகளாலாவது
நீ சிரித்து விட்டுப் போ....!!


இப்படியாய் கிறுக்கிக் கொண்டே பின்னணியில்  இசைத்துக் கொண்டிருக்கும் இளையரஜாவின் இசைக்குள் சிக்கிக் கொண்டு திணறிக் கொண்டிருக்கிறேன். இந்த பாடலுக்காக நான் ஏதோ எழுதினேன் என்று சொல்ல முடியாது ஆனால் பாடல் கொடுத்த உணர்வுகள் எங்கோ இழுத்துச் சென்று என்னை நிறுத்தியதால் எழுதினேன் என்பது உண்மை. அட்டகாசமான ஒரு சூழலை எடுத்துச் சொல்லும் இது போன்ற பாடலின் சூழல்கள் எல்லாம் கவிதைத்தனமானது. தன்னுடைய துணையை நினைத்து படத்தின் ஹீரோ பாக்கியராஜ் சோகமாய் பாடிக் கொண்டிருக்கையில் நம்பியார் அப்படியே ப்ளாஸ் பேக்கில் தன்னுடைய காதலியோடு டூயட்  பாடுவார். ஒரே பாடலை சோகமாகவும் டூயட்டாகவும் உணர வைக்கும் வித்தையை செய்திருப்பார் ராஜா சார்.

முழுக்க முழுக்க ஏக்கத்தையும் காதலையும் பிசைந்து உருவாக்கப்பட்டிருக்கும் பாடலை சிதம்பரநாதன் என்று ஒருவர் எழுதி இருக்கிறார்.

" ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரணும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும்வரை ரோசாவே காத்திரு "

வலியை ஏந்தி வரும் பாடலோடு  கரைந்து போக வாழ்த்துகள்...!





தேவா சுப்பையா...



Photo Courtesy: யோ

Comments

அருமையான பதிவு அண்ணா...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

//அடர் இரவொன்றின் நீண்ட பயணத்தில் துணைக்கு வரும் நிலவாய் என்னை துரத்தும் உன் நினைவுகளை மென்று கொண்டே என் ஜன்னலோரப் பேருந்தில் நகர்ந்து கொண்டிருக்கும் சொர்க்க நிமிடங்களின் ஏக்கத்தை காதலென்று அடையாளப்படுத்தியபடியே தூரத்தில் சிறகடிக்கும் ஒற்றை பறவை ஒன்று தன் துணையத் தேடி சென்று கொண்டிருக்கலாம்....//

யே யப்பா ... முழுசா நிமிஷம் ஆகிடுச்சு ஏக தம்முள புரிஞ்சு படிக்க ...! எவ்ளோ நீளமான வரிகள் ...! சாவடிக்குறீங்கண்ணா ..கிளாசிக் ...!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...