Skip to main content

பந்தயக் குதிரை...!


அது நடந்து கொண்டிருக்கிறது இப்போது. தொகுத்தெழுதிய உணர்வுகளை ஒரு புத்தக வடிவில் காணும் ஒரு பெருங்காதலில் வாரியர் என்னும் வலைப்பூவில் எழுதிய கட்டுரைகளை வகை பிரித்துக் கொண்டிருக்கிறோம். எப்போதுமே தனிமையில் என்னை வாழ்க்கை விட்டதில்லை. இப்போதும் அப்படித்தான் நண்பர்களின் உதவியோடு கட்டுரைகள் தொகுப்பு அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. 2014ஆம் வருடத்தின் மத்தியில் இந்த உழைப்பு புத்தகமாய் மாறலாம்.

வலைப்பூவில் எழுத ஆரம்பித்த 2010 ஆரம்ப நாட்களில் பின்னாளில் புத்தகமெல்லாம் போடுவோம் என்ற எண்ணமோ எதிர்பார்ப்போ எனக்கு இருந்ததில்லை. நகர்தலும் நகர்தலின் பொருட்டு நிகழும் சூழலுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.  தொடர்ச்சியாக என்னை வலைப்பூவிலும், பேஸ்புக்கிலும் வாசித்து வரும் நண்பர்கள் எப்போதும் கொடுக்கும் உத்வேகமும், அன்பும் எதிர்பார்ப்புமே என்னை மீண்டும்மீண்டும் எழுதத் தூண்டுகிறது.

இலக்கிய வட்டத்திலிருக்கும் யாருடனும் எனக்கு அதிக தொடர்புகள் இல்லை. என்னை முன்னிலைப்படுத்தி ஒரு வியாபராப் பொருளாக்கிக் காட்டிக் கொள்ளும் ஒரு வெறித்தனமான மார்க்கெட்டிங் உத்திகள் என்னிடம் அறவே இல்லை. என்னை மேலேற்றிக் கொள்ள பிரபலமான யாரோ ஒருவரின் அடிவருடிக் கொடுத்து புகழ்பாடும் முகஸ்துதி மனிதனும் நான் இல்லை.

எது கிடைக்க வேண்டுமோ அது மட்டுமே எனக்கு சரியாய் கிடைத்திருக்கிறது. நான் பெற்றதிலும் இழந்ததிலும் ஒரு நியாயம் எப்போதுமே இருந்திருக்கிறது. அதிர்ஷ்டம் என்ற வார்த்தை எனக்கு வெகுதூரமானது. சரியாய் எது கிடைக்க வேண்டுமோ அதையன்றி ஒரு குண்டுமணியையும் எனக்கு இலவசமாய் வாழ்க்கை கொடுத்தது இல்லை.  சிறு வெற்றியை ஈட்ட வேண்டுமென்றாலும் கடுமையாய் நான் உழைக்க வேண்டும். எனது சறுக்கல்களும் அதிபாதாளத்தில் விழுந்து வாங்கிய அடிகளும் காயங்களுமே எனக்கு உரம். நிராகரிப்புகளும் அநீதிகளும் என்னை சமநிலையாக்கி இருக்கின்றன. 

10 மணி நேரம் உழைத்தால் 10 மணி நேரத்துக்கான ஊதியமும் 15 மணி நேரத்துக்கான செலவும், 20 மணி நேரத்துக்கான தேவையும் என்னைச் சுற்றி சுற்றி எப்போதும் வந்து கொண்டிருக்கும். நண்பர்கள் எப்போதும் எனக்கு பக்க பலமாய் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்.  சோர்வான நேரத்தில் தோள் சாய்த்துக் கொள்ளும் ஆத்மார்த்த நண்பர்களை எனக்கு இறைவன் கொடுத்திருக்கிறான்.  பொருளாகவும் அருளாகவும் அவர்கள் எனக்கு எப்போதும் இருக்கிறார்கள். எனது வலிகளைப் பார்த்துக் கொண்டு வெகுண்டெழும் நண்பர்களும், எனக்கு அவ்வப்போது நிகழும் சில அநீதிகளைக் கண்டு தனக்கே நிகழ்ந்ததாகக் கருதி சீற்றம் கொள்ளும் அழுத்தமான நண்பர் கூட்டமும் எனக்கு உண்டு.

ஆமாம்...என் வாழ்க்கை நட்பால் விளைந்தது. 

சுயசொறிதலை நிறுத்தி வெகு நாளாகி விட்டது. இப்போது மீண்டும் நான் சுயத்தை கூர்தீட்டிக் கொள்கிறோனோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. இது ஒரு மாதிரியான சுகம். சொறிய சொறிய சுகமாயிருக்கும். தன்னை உயர்த்திக் கொள்ளத்தான் எல்லா ஜீவன்களும் இந்த பூமியில் முனைந்து கொண்டிருக்கின்றன. நான் மேலே உள்ள மாதிரி எல்லாம் சொல்லி என்னை உங்கள் முன் மிகச் சிறந்தவனாக காட்டிக் கொள்ள முனைகிறேன். பொதுவெளி பார்க்க முடிந்த விசயங்களை கொஞ்சம் வசதியாக அலங்கரித்து.... சொல்லும் போது மனம் எப்போதும் சந்தோசப்பட்டுக் கொண்டு குதுகலிக்கிறது. யாரும் செய்யாததை தான் செய்ததைப் போல தனக்குத் தானே சொல்லிக் கொண்டு மார் தட்டிக் கொள்கிறது.

பெறுவது அல்லது இழப்பது இந்த இரண்டுதான் வாழ்க்கை. இந்த இரண்டின் பொருட்டு....சந்தோசமோ துக்கமோ நிகழ்ந்து விடுகிறது. இதற்கு போய் ஏன் அலட்டுவானேன். கோடணு கோடி பேர் வந்தனர். இந்தக் குளத்தில் கல்லெறிந்தனர். நானும் என்னால் முடிந்த சிறு கல்லை எடுத்து எறிந்து விட்டு அடங்கப் போகிறேன். பாலகுமாரன் ஐயா சொல்வது போல வாழ்க்கையில் அடுத்த அடுத்த கட்டத்திற்கு நாம் நகர்ந்து லெளகீக உயரத்தை எட்ட வேண்டுமெனில் நம்மைச் சுற்றி நாம் நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணும் நான்கு பேர் இருந்தால் போதும். என்னைச் சுற்றி நான்கு பேர்கள் இருக்கிறார்கள் என்பது நிறைவு. அந்த நிறைவு ஒரு சுயநலமாய் ஆகிவிடாமல் வேறு யாரோ ஒருவருக்குத் தேவையான நான்கு பேரில் ஒருவனாயும் இருக்கவும் முயல்கிறேன்.

எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லவேண்டும்…எல்லா விசயத்திலும் மூக்கை நுழைத்து என் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ளவும் எனக்கு ஆசைகள் கிடையாது. சிறப்பானவை என்பது இந்த பூமி முழுதும் விரிந்து பரந்து கிடக்கிறது. எனக்குத் தெரிந்ததை உங்களுக்குத் தெரியாதென்று எண்ணி நான் பேசிக் கொண்டிருக்கிறேன் அவ்வளவே…..

வாழ்க்கை சிலமுறை முத்தங்கள் கொடுத்து அன்பைப் பொழிந்து இறுக்கமாய் என்னை அணைத்துக் கொள்கிறது. நான் உணர்ச்சிப் பிராவகமெடுத்து அந்த உணர்வினை எழுத்தாக்குகிறேன்….

பலமுறை அதே வாழ்க்கை முகத்திலறைந்து இரணப்படுத்தி கடுமையான வலியையும் வேதனையையும் கொடுத்திருக்கிறது….அந்த வலியை, வலி கொடுத்த உணர்வினையும் எழுத்தாக்குகிறேன்…
.
ஏதோ ஒன்று நிகழ….நிகழ…சாட்டையடி வாங்கி ஒடும்குதிரையாய்….எழுதிக் கொண்டிருக்கிறேன். 

எதுவுமே நிகழாத போது எழுத என்னிடமும் ஒன்றுமில்லை என்று ஒரமாய் ஒடுங்கி நின்று கொள்கிறேன்.

பல மனிதர்கள், திரைப்படங்கள், புத்தகங்கள், கவிதைகள், பாடல்கள், இடங்கள், என்னுடைய அனுபவங்கள்….இவை யாவும்…சாட்டைகள்….

நான் சாட்டையடி வாங்கும் குதிரை….! 

பந்தயத்தில் வெல்வதைப் பற்றி எல்லாம் எந்த எண்ணமும் இல்லை...ஓடும் வரை வெறி கொண்டு ஓடவேண்டும்...அதற்கு...ஏக இறை என்னை ஆசிர்வதிக்க வேண்டும்.... அவ்வளவுதான்.


....புத்தகம்.....


ஆமாம்…இது பலரால் நிகழப் போகிறது…! 



தேவா சுப்பையா...




Comments

Unknown said…
வாழ்த்துக்கள் தேவா :)
dheva said…
நன்றிகள் செந்தில்...!
Barari said…
புத்தகத்தை கண்டு வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.வாழ்த்துக்கள்.சகோ
வரும் ஆண்டு மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்....
மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் :)
அட்ரா சக்க ... அட்ரா சக்க...
Shankar M said…
எதிர்பார்ப்பின்றி வாழும் வாழ்க்கை... வெற்றியும் மகிழ்ச்சியும் அடுத்தவருக்காக அறவே இல்லை! உணரப்படுவது!! உணர்ந்தும் இருக்கிறாய்... புத்தகம்... காத்திருக்கும் தோழமைகளும் நானும் ஒருவன்... நீ வந்த பாதையை உன்னுடன் சேர்ந்து நாங்கள் பார்க்கவும்!வாழ்த்துக்கள்!! அன்புடன், ஷங்கர்
வாழ்த்துகள் தேவா!
நல்ல பதிவு. எனது அன்பான வாழ்த்துகள்.
dheva said…
நன்றிகள் தனபாலன்...!

நன்றி சங்கர் அண்ணா!


நன்றி தெய்வசுகந்த்தி!

நன்றி வாசுதேவன் அண்ணா!
எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த