விடியக்காலை ரேடியோ நியூஸ் கேட்டுட்டு அப்பா குலுங்கிக் குலுங்கி அழுதுட்டு இருந்தத பாத்த நான் திகைச்சுப் போய் படுக்கையில இருந்து எந்திரிச்சேன். எனக்கு அப்போ 10 வயசு.... அப்பா கிட்ட போய் என்னாச்சுப்பான்னு நானும் அழுதுகிட்டே கேட்டேன்....சகாப்தன் செத்துப் போய்ட்டாருடா.....சாகாப்தன் செத்துப் போயிட்டாருடான்னு கலங்கிக்கிட்டே சொன்னாரு..... அடுப்படியில இருந்த அம்மாவும் ஓடியாந்து விசயத்தைக் கேள்வி பட்டு நெஞ்சுல அடிச்சுக்கிட்டு அழுதது இன்னமும் என் மனசுல பசுமையா இருக்கு....
பக்கத்து வீட்டு பாபு அப்பா, பாபு அம்மா, எதிர்வீட்டு ஜோயல் அப்பா, ஜோயல் அம்மா, டைப்பிஸ்ட் சார் அவுங்க வொய்ஃப், சண்முகம் சார்ன்னு எல்லோரும் தேம்பித் தேம்பி அழுத அந்த டிசம்பர் 24தான்
எம்.ஜி.ஆர் என்னும் தங்கத்தலைவன் அதிகாலை 3 மணி அளவில் மாரடைப்பால் உறக்கத்திலேயே தன் உடலை விட்டு நகர்ந்த நாள்.
அது ஒரு மிகப்பெரிய துக்க தினம். அப்படி ஒரு தலைவனை பிரிய தமிழகத்தின் எந்த ஒரு மனிதரும் விரும்பி இருக்கவில்லை. அவருடைய கட்சி என்று இல்லை மாற்றுக் கட்சித் தொண்டர்களையும் வசீகரித்து வைத்திருந்த பிரம்மாண்ட பிம்பம்தான் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிளிலும் திமுக கொள்கை பிடிப்பு கொண்ட, கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று கொஞ்சம் ஸ்ட்ரீக்ட் ஆபிசர் போலத்தான் எம்.ஜி.ஆர் இருந்தவரைக்கும் அடிமட்டத்து மக்களின் மனதில் புரியப்பட்டிருந்தது. காரணம் எம்.ஜி.ஆர் மக்களோடு மக்களாக தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து போகா வண்ணம் ஒரு இளகு தன்மையோடு தன்னுடைய கட்சியை அடையாளப்படுத்திக் கொண்டார்.
குடிசைகளுக்குள் அவர் நுழைவது எல்லாம் ஏதோ ட்ரெண்ட் செட் செய்து தன்னை மக்களின் பிரதிநிதியாக காட்டிக் கொள்வதற்கான அரசியலுக்காய் அல்ல...அவர் நிஜமாகவே ஏழைகளை, உழைப்பாளிகளை, விவசாயிகளை, கூலி வேலை செய்பவர்களை, வயதான தாய்மார்களை நேசித்திருந்தார். அந்த அன்பின் மிகுதியில்தான் அவர் ஓடி ஓடிப் போய் வயதான தாய்மார்களை கட்டியணைத்தார். அவரை ஏதோ ஒரு வசீகர அரசியல் நடத்திச் சென்ற சினிமா நடிகர் என்ற அளவில் நாம் கடந்து சென்று விட முடியாது. எம்.ஜி.ஆரின் ஆளுமை என்ன என்று இன்றைக்கு அவர் மறைந்து 27 ஆண்டுகள் ஆன பின்னரும் குக்கிராமங்களுக்குள் சென்று மக்களிடம் நாம் பேசிப் பார்த்தால் தெரியும்....
அவர் சினிமாவில் நடித்தது அரசியலில் மேலேறி வர உதவியதே அன்றி அவர் அரசியலில் ஸ்திரத்தன்மையோடு நின்று தொடர்ச்சியாய் வெற்றி பெற அவரின் ஆழமான அன்பும், ஏழைகளை குறிவைத்து செயற்படுத்திய இலவச நலத்திட்டங்களுமே காரணம். எங்கள் பகுதியான பட்டுக்கோட்டையில் எனக்கு விபரம் தெரிந்த போது சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.என் ராமச்சத்திரன், அதே போல புதுக்கோட்டை நாடளுமன்ற உறுப்பினர் திரு. என். சுந்தர்ராஜன். இரட்டை இலைச்சின்னத்திலும், கைச்சின்னத்திலும் தேர்தலில் ஓட்டுப் போடுவது அந்த தொகுதி மக்களின் அனிச்சை செயலாகவே ஆகிப்போயிருந்தது போலவே எம்.ஜி.ஆர் இருந்த வரை பெரும்பாலும் தமிழகம் இருந்தது.
இரட்டை இலை என்னும் பசுமையான வசீகரத்தை தனது சின்னமாகக் கொண்டு எம்..ஜி.ஆர் கடைசிவரை வெற்றியின் நாயகனாக இருந்து தனது ஆளுமை என்னவென்று நிரூபித்துச் சென்றார். எம்.ஜி. ஆர் யார்..? அவரது வல்லமை என்னவென்று அதிமுகவினருக்கும் ஏன் தமிழக மக்களுக்குமே கூட அவ்வளவாகத் தெரியாது ஆனால் ஐயா கலைஞருக்குத் தெரியும்...
எம்.ஜி.ஆர் யார் என்று...?
ஒரு நடிகர் என்ன செய்து கிழித்துவிட முடியும் என்று யோசித்த கலைஞரின் அலட்சியமே அவரை 13 ஆண்டுகள் எம்.ஜி.ஆர் என்னும் தலைவன் உயிரோடு இருக்கும் அவரை முதலமைச்சர் பதவியை விட்டு தூர விலக்கி வைத்திருந்தது. தனியாக எம்.ஜி.ஆர் திமுகவை விட்டு வெளியேறி வந்து கட்சி ஆரம்பித்த போது அவரின் ஆக்ரோஷமான அரசியலை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது திமுக என்னும் பெருங்கப்பல். எம்.ஜி.ஆர் மிகச்சாதுர்யமாய் காங்கிரஸின் ஓட்டு வங்கியையும் தனது ஓட்டுக்களாக மாற்றி மாறாத வெற்றிக் கூட்டணியாக தொடர்ச்சியாக காங்கிரசுடன் இணைந்து வெற்றிக் கனியை சுவைத்துக் கொண்டிருந்த போது அரசியல் சாணக்கியரான கலைஞரால் அந்த கூட்டணியை உடைத்து மாற்று அரசியல் செய்ய முடியவே இல்லை.
இலங்கையில் தமிழர்களை சிங்கள இராணுவம் கொன்றழித்த போது எம்.ஜி.ஆர் பெரும் தூணாய் நின்று விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு உதவிகள் செய்தார். எம்.ஜி.ஆர் திராவிடன் என்ற உணர்வு கொண்டவர் மட்டுமில்லாத தமிழகத்தின் மீது தமிழ் மக்களின் மீது ஆழமான அன்பு கொண்டவர். நீ சண்டை பிடி தம்பி நான் அண்ணன் இருக்கிறேன் என்று பிரபாகரனிடம் எம்.ஜி.ஆர் சொல்லி பணத்தையும் கொடுத்ததாகச் சொல்வார்கள். ஈழப்பிரச்சினையில் தன்னுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரசுக்கும் சூழலை எடுத்துச் சொல்லி எல்.டி.டி.யினருக்கு இந்தியாவிலேயே இந்திய ராணுவம் பயிற்சி கொடுக்கும் ராச தந்திர ஏற்பாடுகள் எல்லாம் புரட்சித் தலைவரின் உதவியின்றி நடந்திருக்க முடியமா...? என்று யோசித்துப் பாருங்கள்.
அரசியலில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆரின் சினிமா வெற்றி என்னவென்று நான் இங்கே எழுதி ஒன்றும் உங்களுக்குத் தெரியவேண்டியது இல்லை. இன்றைக்கு அவரின் சினிமாப் பாடல்களையும், திரையில் அவர் ஏழைப்பாங்களனாக தோன்றி அவர்களின் உரிமைக்குப் போரடுவதையும் பார்க்கும் மக்கள் அவர் திட்டமிட்டு முதல்வர் பதவிக்காக அப்படி நடித்தார் என்று சொல்லலாம்....ஆனால் இப்படியான ஒரு பார்வையைக் கடந்து....
அந்தக் காலத்தில் மக்களை விழிப்புணர்வு செய்ய, திராவிடக் இயக்கக் கொள்கைகளை ஏழை எளியவர்களிடம் பறை சாற்ற, சாதிக் கொடுமையை ஒழிக்க, எம்.ஜி.ஆர் என்னும் மனிதர் திரையில் செய்த புரட்சி என்றுதான் இதைச் சொல்ல முடியும்....! ஊடகங்கள் அதிகமில்லாத அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய தேவையாய்தான் இருந்தது. சினிமாதான் தமிழக மக்களின் ஒரே வலிமையான எளிதாக செய்தி சொல்ல முடிந்த ஊடக்ம்.
” கடவுளென்னும் முதலாளி... கண்டெடுத்த தொழிலாளி” என்ற கவிஞரின் வரிகளைத் திரையில் வந்து எம்.ஜி.ஆர்... விவசாயி.........!!!!!.விவசாயி....! என்று பாடி நடித்த போது திரை அரங்கம் அதிர்ந்தது....! சாமனிய மக்கள் நம்மை போல ஒருவன் வந்து விட்டான் என்று கை தட்டி ஆர்ப்பரித்தனர். காதலோ, வீரமோ, கொள்கையோ எம்.ஜி.ஆரின் பாணி என்பது இலைமறைக் காயாய் பேசுவதோ, நடிப்பதோ, பாடுவதோ அல்ல....
” நான் பார்த்ததிலே..அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்....நல்ல அழகி என்பேன் “ என்று ஆரம்பவரிகளிலேயே பட்டவர்த்தனமாய் காதலைச் சொல்லும் அழுத்தமான வரிகளைத்தான் அவர் கவிஞர்களிடம் எழுதிக் கேட்டிருந்தார். ” நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்....” நான் என்று எந்த நேரத்தில் அந்தக் கவிஞனின் பேனா வார்த்தைகளை எழுதியதோ தெரியவில்லை.....
தன் வாழ்நாள் முழுதும் எம்.ஜி.ஆர் நினைத்ததை முடிப்பவனாய்த்தான் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர் மறைந்த நாள் இன்று........!!!!
இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் தமிழ்நாட்டில் அரசியல் என்ற ஒன்று நடத்த வேண்டுமெனில் அறிஞர் அண்ணாவின் பெயரை புறக்கணித்து விட்டு எப்படி அரசியல் செய்ய முடியாதோ....அதே போல....
எம்.ஜி.ஆர் என்னும் மந்திரச் சொல்லை சொல்லாமல் இங்கே அரசியல் செய்யவும் முடியாது என்பதே உண்மை....!
ஆமாம்.... எம்.ஜி.ஆர். காலத்தை வென்றவர் தான்...!
தேவா சுப்பையா...
Comments
எம்.ஜி.ஆர் யார் என்று...?/// அருமை அப்பு
மிகச் சரியான கருத்து. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு முறை அலுவல் நிமித்தம் நான் சந்தித்த ஒரு நபர் சொன்னது இது; அவர் ஒரு சிறிய கிராமத்திற்கு செல்ல வேண்டியதாக இருந்த போது அவருடைய தந்தை அவரிடம் "இதப் பாரு அங்க போயி எம் ஜி ஆர் செத்துப் போயிட்டாருன்னு சொல்லிராத. தொலைச்சுப் புடுவாணுக" என்று சொல்லியதாக என்னிடம் அந்தத் தகவலை பகிர்ந்துகொண்டார். இப்புடியும் முட்டாப்பயலுக இருக்கானுக என்று நக்கலாக சிரித்தார். ஆனால் அது அப்படியல்ல என்பதே உண்மை.
அட அட அட அட! ரெண்டு வருசம் முன்னாலேயே கிட்னி ஃபெயிலியராகி, டயபட்டிஸ் எல்லாம் வந்து, அமெரிக்கா போயி, தொப்பியில்லாமல் ஃபோட்டோ எல்லாம் வெளிவந்து, அப்புறம் உடல் நலம் குன்றித்தானே இறந்தாரு..
என்ன ஆக்சிடெண்ட்லயா திடீர்னு பூட்டாரு. எதுக்கு இம்பூட்டுப் பெரிய ஒப்பாரி? அதே
ஒருவேளை அவரு சினிமால சாகிறதே இல்லைனு நெஜத்திலேயும் சாகமாட்டார்னு நெனச்சீங்களாக்கும்?
இல்லைனா மாதாமாதம் எதுவும் "காசோலை" ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு அப்பாக்கு அனுப்பினாரா? அது நின்னு போயிடும்னு ஒப்பாரியா??
நினைவு நாளுக்கும் கூடி எல்லாருமா குடும்ப சகிதமா ஒப்பாரி வைங்களேன்! அதைவிட என்ன பண்ணி கிழிக்கப் போறீங்க?
:-)))
இது மாதிரியான கருத்துக்களை எல்லாம் நான் முடக்குவதே இல்லை...ஏன் தெரியுமா? மாற்றுக் கருத்தினை தெரிவிக்கும் போது மனிதர்களின் நாகரீகமும் தன்மையும் சேர்ந்தே அங்கே வெளிப்படுமாதலால்...தான்...!
வாழ்க வளமுடன்...!