Skip to main content

காலமென்னும் நதியினிலே...!


எழுதும் போது பாலகுமாரன் சார் எவ்வளவு  கஷ்டப்பட்டு இருப்பாரோ தெரியவில்லை.....ஆனால் அதைப் படித்து முடிக்க நான் கிட்ட தட்ட 2 வருசம் ஆகிவிட்டது. உடையார் ஆறாவது பாகத்தைப் முடித்து விட்டு அதை விட்டு விலகி வர முடியவில்லை. விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து பின் மறுபடி கல்லூரிக்கோ இல்லை வேலைக்கோ வேறு ஊருக்கு கிளம்பும் போது ஒரு மாதிரி ஏக்கமாக இருக்குமே அது மாதிரி இருந்தது. புத்தகத்தை எடுத்து மடக்கி வைக்க மனதே வரவில்லை.அது கதையல்ல ஒரு வாழ்க்கை. அழகிய ஒரு கலாச்சாரம். ராஜராஜசோழன், பஞ்சவன் மாதேவி, இரேஜேந்திரச் சோழர், பிரம்மராயர் கிருஷ்ணர் ராமன் அவருடைய மகன் அருண்மொழிப் பட்டன், வல்லவராயர் வந்தியத் தேவர், பெருந்தச்சர் குஞ்சரமல்லன், வினோதகப் பெருந்தச்சன்...., 

எல்லாவற்றுக்கும் மேலாக கருவூர்த் தேவர்... கதையின் ஆதர சக்தியாய் இருக்கும் நிசும்ப சூதனி....இப்படியாய் விரிவடைந்து கொண்டே செல்லும் ஆதிக்கம் நிறைந்த பாத்திரப்படைப்புகள் முதல் தெருவில் சாதாரணமாய் வணிகம் செய்யும் மனிதர்கள், அவ்வப்போது சண்டையிடும் மறவர்கள் என்று மனம் முழுதும் மனிதர்கள் வியாபித்து நின்று கொண்டிருக்கிறார்கள்.

முழுதாய் இந்த நாவலை வாசித்து முடித்த பின்பு ஒரு நாவல் எப்படி எழுதப்படுகிறது? அதன் நகர்வுகள் என்ன மாதிரியாக இருக்கிறது? எப்படி ஒரு கதையை நெய்து கொண்டு செல்வது, பாத்திரப்படைப்புகளின் கூர்மை எப்படி இருக்கவேண்டும்..? எடுத்துக் கொள்ளும் களமும் சூழலும், செய்தியும் என்ன மாதிரியான தாக்கத்தை வாசகனுக்குக் கொடுக்க வேண்டும்? ஒரே நேர்கோட்டில் இல்லாத பல்வேறு தளங்களில் கதை பயணிக்கும் போது எப்படி அதை முடிச்சுட்டு கோர்வையாக சொல்ல வேண்டும்..? எதைப் பேச வேண்டும்...? எதை விட வேண்டும்...? எந்த இடத்தில் ஆதரக் கருத்துகளை தரவுகளின் அடிப்படையில் பேச வேண்டும்......? எந்த இடத்தில் கற்பனையைச் சேர்க்க வேண்டும்..? பல்வேறு பட்ட பாத்திரப்படைப்புகளின் அடிப்படையில் பார்வைகளைப் பதியும் போது அந்தப் பாத்திரப்படைப்போட தனித்தன்மையை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது.....என்பதை எல்லாம் கற்றுக் கொள்ள முடிந்தது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக சிறுகதை, அனுபவக் கட்டுரைகள், சமூகம் சார்ந்த சிந்தனைகள் என்பதை சாதரணமாக உள்ளுக்குள் தோன்றும் தாக்கங்களின் அடிப்படையில் படைத்து விட முடியும். இதற்கு ஓரளவிற்கு அனுபவமும் அந்த அனுபவம் கொடுத்த புரிதலும், தெளிவும் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நிகழும் விசயங்களை உற்று நோக்கும் கூர்மையும் மட்டும் இருந்தால் போதும். கூடவே நிறைய புத்தகங்களை வாசிக்கும் போதும், நல்ல திரைப்படங்களை பார்க்கும் போதும் நமக்கு நிறைய செய்திகள் உள்ளுக்குள் தோன்றும் அதன் அடிப்படையிலும் நாம் ஏதோ ஒன்றை எழுதி விட முடியும்.

இப்படித்தான் இவ்வளவு நாள் நான் என்னுடைய வலைத்தளத்தில் எழுதி வந்திருக்கிறேன்....ஆனால் இவற்றை எல்லாம் கடந்த ஒரு அர்ப்பணிப்பும், உழைப்பும், படைக்க வேண்டியதின் பொருட்டு ஒரு தேடலும் வேட்கையும் வேண்டும் என்பதை நிறைய மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளின் மூலம் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். உடையார் ஒரு வரலாற்று புதினம் மட்டுமல்ல.....பாலகுமாரன் என்ற மனிதரின் கடும் உழைப்பு என்பதை உணர முடிந்தது. ஒரு எழுத்தாளன் வியாபாரியாகவும் தன்னை வரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படியான வியாபரத்தில் தன் சுயத்தை இழந்து விடாத ஒரு தெளிவும் மிக மிக அவசியமாயிருக்கிறது. 

சமகாலத்தில் நிறைய பேர்களுக்கு எழுதும் ஆசை வந்திருக்கிறது. தற்போது சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சியில் நிறைய இளம் எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. எழுத்தாளனுக்கு என்று கட்டியமைக்கப்பட்டிருந்த தொன் மரபுகளை எல்லாம் இளையர்கள் இன்று சர்வ சாதரணமாய் உடைத்துப் போட்டிருக்கிறார்கள். இலக்கியம் என்பது பாமரனுக்கு வெகு தூரமானது என்பது போன்ற மாயப் பிம்பங்கள் வரும் காலங்களில் இந்த எழுச்சியினால் வெகு நிச்சயமாய் கலைந்து போய்விடும். பிளாக் என்னும் வலைத்தளத்தில் நமக்குப் பிடித்தது பிடிக்காதது  என்று எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டிருந்த எனக்கு....

என் எழுத்து ஒற்றை பரிமாணத்தில் ஒரே ஒருவனின் பார்வையாய் மட்டும் இது இருக்க கூடாது என்று தோன்றிய இடம்தான் எனது பரிணாம வளர்ச்சி என்று நினைக்கிறேன். நிறைய புத்தகங்கள் வாசிக்கப்படாமல் என்னிடம் இருக்கின்றன. நிறைய மனிதர்களைப் பற்றியும் படிக்க வேண்டி இருக்கிறது. பொருள் ஈட்ட வேண்டி ஓடும் ஓட்டம் ஒரு நாளின் மிகுதியை விழுங்கி விடுகிறது. நம்மைச் சார்ந்திருக்கும் குடும்ப உறவுகளோடு செலவிடும் நேரம் மீதியை விழுங்கி விடுகிறது இதற்கு அப்புறமாய் இந்தப் பரந்து விரிந்து கிடக்கும் வாழ்க்கை சமுத்திரத்திற்குள் நான் மூழ்கித் திளைக்க வேண்டும். யாரோ ஒருவன் தெரியாமல் ஒன்றும் சொல்லவில்லை...கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று.....இங்கே நான்(ம்) கற்றது கையளவு கூட கிடையாது...என்பதுதான் உண்மை.

தானியம் பொறுக்கும் குருவியின் கூர்மையோடு, தேர்ந்த சிற்பி ஒரு கல்லை உயிராக்கும் சிரத்தையோடு செதுக்கும் சிற்பத்தைப் போன்று இனி எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனோ தானோ என்று எழுதிச் செல்வதிலும் பொருள் ஈட்டுவதற்காய் நிறைய பேரை ஈர்க்கும் வகையில் வசீகரச் சித்து விளையாட்டுக்கள் விளையாடவும் எனக்கு விருப்பமில்லை. பெண்ணின் அவயங்களைப் பற்றி வக்ரமாய் எழுதுவதோடு இல்லாமல், தொடர்ச்சியாய் இயல்பாய் பேசுகிறேன் பேர்வழி என்று அபத்தங்களை தனது பேஸ்புக் சுவற்றில் கிறுக்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு ஏராளமான ரசிகர்கள். 

அவரது புத்தகத்தை ஒரு முன்னணி பதிப்பகமும் வெளியிட்டு விட்டது. அதற்கு விளம்பரம், விழா என்று பணம் புகுந்து விளையாடியது அங்கே...!ஈக்கள் இனிப்பை மட்டும் தேடிச் செல்வதில்லை என்பதையே இந்த நிகழ்வு எனக்கு உணர்த்தியது. ஒரு எழுத்தாளன் தரமான படைப்புகளைக் கொடுக்க வேண்டும். என் புத்தகம் மட்டும் விற்க வேண்டும் என்பதைக் கடந்து எதை நான் இங்கே பதிவு செய்கிறேன் என்பதும் மிக முக்கியமாகிறது. எனது எழுத்து நான் வாழ்ந்த கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. எத்தகைய ரசனை கொண்ட மக்கள் வாழ்ந்தார்கள் எதை ரசித்தார்கள் என்பதற்கான சான்று. அடுத்த தலைமுறையினர் சிலாகித்துப் பேச இங்கே அற்புதமான உணர்வுகளை நாம் விட்டுச் செல்லவேண்டும். ஒவ்வொரு படைப்பாளிக்கும் இந்த தார்மீக கடமை இருக்கிறது. நல்ல படைப்புகளே தனது சந்ததிகளை வழிநடத்திச் செல்கிறது.

என்னுடைய வலைத்தளத்தை வாசிக்கும் நண்பர்கள் உங்களின் அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளத் தயங்காதீர்கள். தாக்கம் கொடுத்த நிகழ்வுகளையும் பகிரலாம் என்று நீங்கள் நினைக்கும் அனைத்துச் சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்....ஏன் தெரியுமா?

எழுதுவது என்பது தனக்குத் தெரிந்ததை ஊருக்குச் சொல்லிச் செல்வது மட்டும் கிடையாது. அகண்டு பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தில் அமைதியாய் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த பூமியில் எல்லா உயிராகவும் இருந்த பார்க்க வேண்டிய ஒரு பெருவேட்கை எழுத்தாளனுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நான் பல நாட்கள் ஒரு பசுவாய் மாட்டுக் கொட்டகையில் நின்றிருக்கிறேன். இரவுகளில் உறங்கக் கண் மூடும் பொழுதில் ஈக்கள் உடலின் மீது ஏறி விளையாட, வாலால் அவற்றை விரட்டிக் கொண்டு, தோலை உலுக்கி அவற்றை உடல் விட்டு உதிர்த்துக் கொண்டும்.....ஈரமண்னில் கால் மடக்கி அமர்ந்து கொண்டு எண்ணங்கள் ஏதுமில்லாமல் இரைப்பையிலிருக்கும் உணவை மீண்டும் வாயில் எடுத்து அரைத்துக் கொண்டே.....

கண் மூடி லயித்திருந்திருக்கிறேன்.

ஒரு தெரு நாயாய் பலர் கல் எறிய ஓடி இருக்கிறேன்.  மனிதர் உணவு கொடுத்து தலை தடவும் போது தோன்றும் இனம் புரியாத பரவசத்துக்காய் வால் குலைத்து என் உணர்வினை வெளிப்படுத்தியுமிருக்கிறேன். சாலையோர கடையில் விற்பனை செய்பவனாக, ஒரு விலை மாதுவாக, மது அருந்தி விட்டு கொடுமை செய்யும் ஒரு குடும்பத் தலைவனாக, வியாபாரியாக, அரசியல்வாதியாக, கொலைகாரனாக, நடிகனாக, பைத்தியக்காரனாக, ஒரு ஆத்திகனாக, நாத்திகனாக தீவிரவாதியாக........

மெளனமய் படுத்துக் கிடக்கும் மலையாக, ஆர்ப்பரிக்கும் கடலாக,  ஒரு பெண்ணாக, கடவுளாக, மிருகமாக.....

இருந்து பார்க்க ஏற்படும் ஆசையே எழுத்து. இங்கே சுயத்தை மையமாய் வைத்துக் கொண்டு உடல் தாண்டி வெவ்வேறு இடங்களுக்குப் பயணித்து, அனுபவித்து அதை மீண்டும் ஒரு முறை மாடு அசை போடுவது போல அசை போட்டுப் எழுதிப் பார்ப்பதில் ஒரு சுகமிருக்கிறது. ஒரு மனிதன் அவனது உடல் சார்ந்த அனுபவங்கள் என்று குறுக்கிக் கொள்ளாமல்.....

எல்லாமாய் இருந்து பார்க்க விரும்பும் ஒரு தேடலின் விளைவே இங்கே நான் தட்டச்சு செய்து கொண்டிருப்பது. எந்த அவசரமும் இல்லை. யாருடனும் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தமும் இல்லை....தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் இந்த கால நதியில் புதிது புதிதாய் ஏதோ ஒன்றை படைத்தளிக்கும் பெரு விருப்பம் மட்டுமே என்னிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. 

சமகாலச் சங்கடங்களை எல்லாம் சமாளித்து....நிறைய வாசிக்க நிறைய எழுத, நிறைய பயணிக்க , நிறைய மனிதர்களைச் சந்திக்க காலம் எனக்கு வரம் அருளட்டும்...!



தேவா சுப்பையா...




Comments

பயணம் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_6058.html) சென்று பார்க்கவும்... நன்றி...
அருமையாக சொல்லிச் சென்றவிதம் சிறப்பு! உண்மையில் நிறைய படிக்க படிக்க எழுத்து இன்னும் சிறப்பாக கை கூடுகிறது! நல்ல பதிவு! நன்றி!
இங்கே சுயத்தை மையமாய் வைத்துக் கொண்டு உடல் தாண்டி வெவ்வேறு இடங்களுக்குப் பயணித்து, அனுபவித்து அதை மீண்டும் ஒரு முறை மாடு அசை போடுவது போல அசை போட்டுப் எழுதிப் பார்ப்பதில் ஒரு சுகமிருக்கிறது.

உண்மையை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா...

எனக்கெல்லாம் வாசிக்கும் வாய்ப்பு இங்கு கிடைக்கவில்லை என்பது மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது. எல்லாமே கணிப்பொறியில்தான்...

வாழ்க்கைத் தேடலில் இழப்புக்களே அதிகமாக இருக்கிறது...

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்...

Shankar M said…
வேட்கை... தேடல்... தேடியதை பகிர்தல்... அனைவருக்கும் தெரிந்ததே ஆனாலும் சொல்லும் விதத்தில் ஒரு தனித்தன்மை... சொற்களை கையாளும் விதத்தில் ஒரு ஆளுமை.. அனைத்திற்கும் மேலாய் பதிவுகளில் ஒரு மனிதம். நிறைய படி! நிறைய பதிவு செய்! எங்களால் முடிந்த அளவு எங்கள் அனுபவங்கள் உன் படைப்பை மெருகேற்ற உதவுமானால்... ஏன் கூடாது ? உன் பயணம் சாதாரணமானது இல்லை. தொடரட்டும்... காலம் வரம் அருள வாழ்த்துக்கள்!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த