Skip to main content

ப்ரியமுள்ள பாலுமகேந்திரா....!



ப்ரியமுள்ள பாலுமகேந்திரா......

ஒருமையில் நான் உன்னை எழுதினாலும் ஒருமைக்குள் உன்னை அடைத்துவிடவோ அல்லது அழைத்து விடவோ முடியாதென்பதை நீ அறிவாய். வாழ்க்கை ஒருமையிலிருந்து வெடித்து சிதறிய வேடிக்கைகளின் நிகழ்வுதான் ஆனாலும் அது ஒருமை என்று அறியப்படுவதில்லை. அது எல்லாமே ஆனால் ஒன்று. நீயும் அப்படித்தான் என் ஆசானே....!!!!!!! நீ எல்லாமே ஆனாலும் ஒன்று.  நீ எந்தப் புள்ளியைத் தீட்டினாலும் அது ஓவியமாகிப் போன அதிசயம் நிகழ்ந்தேறியது. நீ செதுக்கிய செல்லுலாய்டு சித்திரங்களில் மழை பெய்தால் அதை திரையில் பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு குளிரெடுக்கும். பூக்களை நீ காட்சியாக்கினால் வண்ணத்துப் பூச்சிகள் தேனெடுக்க திரையை மொய்க்கும்....

நீ எழுதிய கவிதைகளைத்தான் நாங்கள் திரைப்படம் என்று கொண்டோம். உன் காட்சி அமைப்பும், பாத்திரப்படைப்புகளும் கதைக் களங்களும் ஏகாந்தத்தை அனுபவிக்க ஆவல் கொண்ட மனிதர்களுக்கு சிறகுகள் கொடுத்தன. கோணங்கள் நிறைந்த இவ்வாழ்க்கையின் எல்லா கோணங்களின் கோணல்களையும் அளவெடுத்தன உனது விழிகள். நீ பார்த்தாய். உன் விழிகளால் நாங்களும் பார்த்தோம். சிக்கெடுக்க முடியாத சிக்கல்களுக்குள் நுழைந்து அங்கே இருக்கும் எதார்த்தத்தை நீ எழுதிப்பார்த்த போதெல்லாம் அது உனக்குக் திரைக்கதையாகிப் போனது.  

உன்னை சந்திக்க விரும்பினேன் பாலுமகேந்திரா. வாழ்வில் நீ போட்டு வைத்திருக்கும் அத்தனை முடிச்சுக்களுக்குப் பின்னாலும் இருக்கும் ரகசியம் யாதென்று கேட்க விரும்பினேன் பாலுமகேந்திரா. உன் காதலுக்கும் காமத்துக்கும் இடையில் இருக்கும் சூட்சும முடிச்சின் வேர் என்னவென்று அறிய விரும்பினேன் பாலுமகேந்திரா. பதின்மத்தின் ஆசைகளை திரையில் இறக்கி வைத்து நீ சொன்னது கதையல்ல இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை மனிதர்களும் பதின்மத்தை தொட்ட போது செய்ததுதான் என்று பகிர நினைத்திருந்தேன். இதோ  உன் மரணச்செய்தி என்னை சம்மட்டியால் தாக்கி இருக்கிறது.  வீடு திரைப்படம் பார்த்து விட்டு ஒரு பகல் முழுதும் அழுது கொண்டிருந்தேன். சந்தியா ராகம் பார்த்து விட்டு மூன்றுநாள் தூங்கவில்லை நான். மூன்றாம் பிறை பார்த்து விட்டு பித்துப் பிடித்துப் போய் உட்கார்ந்திருந்தேன். இப்போது உன் மரணத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் இதோ இந்தக் காகிதத்தில் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்.

வலைப்பக்கங்களில் நீ எழுத வந்த போது உற்சாகமாய் உன்னை பின் தொடர்ந்தேன். உன் எழுத்தில், உன் படைப்பில் உன் படங்களில் நீ எதைப் பகிர முயன்றது எல்லாமே மெளனம்தானே பாலுமகேந்திரா? உன் மரணத்தின் மூலமும் இப்போது நீ அதைத்தானே நீ பகிர்ந்து சென்றிருக்கிறாய்? எத்தனை சிற்பிகளை உருவாக்கிய பட்டறை உன்னுடையது? எத்தனை படைப்பாளிகள் உன் கை பிடித்து அச்சரம் எழுதிப் பழகி இருக்கிறார்கள்? உன்னைப் போல வரவேண்டுமென்ற கனவில் உன்னின் சிறுபகுதியைக் கூட எட்டிப்பிடிக்க முடியாமல் மீண்டும் மீண்டும் உன் படங்களை பைத்தியக்காரர்களாய் பார்க்கும் படைப்பாளிகள் எத்தனை பேர்? ஆமாம்....பாலுமகேந்திரா நீ தமிழ் சினிமாவின் ஆலமரம். உன்னை புத்தி செதுக்கிய யுத்திகளை பயன்படுத்தாத, உத்வேகம் கொள்ளாத கலைஞன் யாரும் கிடையாது இங்கே. நீ படமெடுக்க ஆரம்பித்த பின்புதான் இங்கே பலபேர் கேமராவை எப்படி பயன்படுத்துவது என்றே அறிந்து கொண்டனர்.

செயற்கை கோள் தொலைக்காட்சியில் நீ இயக்கிய கதை நேரம் பார்த்து அதில் தொலைந்து போனவர்கள் கோடி பேர்கள். உனது பலம் கதை அல்ல. சூழல்!!!!!!! கதை சொல்கிறேன் பேர்வழி என்று கரடி விடுபவர்களுக்கு மத்தியில் சூழல்களை உணர்வு ரீதியாய் திரையில் பதிவு செய்தவன் நீ. ஒரு காட்சி, ஒரு களம், கதை மாந்தர் எல்லாம் கடந்து அந்த சூழல்தான் உனக்கு முக்கியம். மனிதர்களின் சந்தோசத்தை, துக்கத்தை, இழப்பை, தேடலை, காதலை, கோபத்தை, விரக்தியை, காமத்தை உன்னைத் தவிர வேறு யாரால் அச்சர சுத்தமாக மொழி பெயர்க்க முடியும்?

இந்த அத்தியாயம் இன்றோடு முடிந்தது. இது போல ஒன்றை யாராலும் இனி எழுத முடியாது. இது இதுவாய் எப்போதும் இருக்கும். இது போல வேறு ஒன்றும் இங்கே இனி இருக்கவே இருக்காது. தலைமுறைகள் படம் எடுக்கும் போதே நீ தடுமாறி போயிருந்ததை கவனித்தேன் பாலுமகேந்திரா. இது உன் கடைசிப் படமாயிருந்து விடக்கூடாது என்றும் கொஞ்சம் கவலை கொண்டேன். உணர்வு ரீதியான உன் படத்தை தமிழகம் கடந்து வியாபாரம் செய்ய யாரும் முன்வராததால் இதுவரையில் உன் கடைசி படத்தை பார்க்கமுடியவே இல்லை எனக்கு. ட்ரைலர் பார்த்து விட்டு படத்தை எனக்குள் நான் ஓட்டிப்பார்க்க முயன்று முயன்று ஒரு குருடன் புறாக்காட்சி ஒன்றை தனக்குள் உருவாக்க முயலும் ஒரு இயலாமையோடு இன்று நின்று கொண்டிருக்கிறேன்.

உன்னைப் பற்றிய விமர்சனங்கள் எல்லாமே....மனிதர்களின் அனுமானங்கள். ஷோபாவோடு நீ கொண்டிருந்த காதலை நான் உன் திரைப்படங்களிலிருந்து புரிந்து கொண்டேன். உன் காட்சியாக்கங்களில் இருந்து அது எவ்வளவு கவித்துவமானது என்று புரிந்து கொண்டேன். வாழ்க்கையின் பக்கங்கள் செழிப்பாய் இருக்கும் போது அதை பாராட்டிப் பேச பெரும்பாலும் யாரும் வருவதில்லை. ஏதேனும் ஒரு சரிதலில் வாழ்கை சற்றே தடுமாறுகையில் அங்கே குற்றம் சொல்ல கோடி பேர்கள் வருவதுண்டு. உன்னைச் சுற்றியும் கோடி விரல்கள் குற்றம் சொல்ல நீண்டன. கலாச்சாரத்தை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் உன் காதலுக்குள்ளும் களங்கம் சுமத்த எழும்பிய நாவுகள் இங்கே ஏராளம். அதெற்கெல்லாம் நீ மறுப்பு கூட தெரிவித்தது கிடையாது. உனக்கு தெரியும் உன் காதல் ஆழமானது. உன் காதலி உனக்கு கவிதையானவள் என்று.....

நீ ஒரு அழகிய காதலன். நீ காதலித்தவைதான் உன் திரைப்படங்களில் காட்சிகளாய் வெளிப்பட்டிருந்தன. உன் காதல்தான் ஷோபாவை உன்னோடு சேர்த்துக் கொண்டது. உன் காதலே ஷோபாவிற்குப் பிறகும் உன்னை மெளனமாய் அவளைப் பற்றிய நினைவுகளோடு வாழ வைத்தது. படைப்பாளிகளை எந்த சம்பிரதாயமும் ஒன்றும் செய்ய முடியாது. எந்த சாங்கியமும் அவர்களை ஒன்றும் செய்வதுமில்லை. ஒழுக்க நெறிகளை வைத்துக் கொண்டு உன்னை வரையறை செய்ய முடியாது. வரையறுக்க நினைப்பவர்களின் புத்திகளின் வரையறைதான் அறுந்து போகும். நீ நூலில்லாமல் பட்டம் விட்டவன். காட்சிகளை விழிகளால் மனிதர்கள் கண்டு, கண்டு கடந்து செல்லும் போது நீ அவற்றை கவிதைகளாய் பார்த்து, பார்த்து லயித்துக் கிடந்தவன்.

காலம் உனக்கு எறிந்த கடைசிப் பந்தில் நீ தலைமுறைகளை செதுக்கி வைத்து விட்டு ஓய்வெடுத்துக் கொண்டாயா பாலுமகேந்திரா...?! கனவுகளையும் கற்பனைகளையும் காட்சிகளாக்கிய கேமராக் கவிஞனே சென்று வா...! உன் ஆழ்ந்த நித்திரையில் உனக்குள்  கோடி கனவுகள் தோன்றும். உனக்குள் நீயே சாட்சியாய் நின்று பெரு நித்திரையினூடே நீ இடைவிடாது படைத்துக் கொண்டே இரு....

அது தாகம் நிறைந்த இளம் படைப்பாளிகளுக்குள் விதையாய் இறங்கும். விருட்சமாய் விரியும். விழுதாய் நிலம் தொடும். தலைமுறைகள் கடந்தும் அதனால் மானுடர் பயனடைவர்.

 நீ மரணிக்கவில்லை... உன் வாழ்க்கைப் பயணித்தின் திசை மாற்றிக் கொண்டாய் அவ்வளவே......!  ஆழ்ந்த அஞ்சலிகள் பாலுமகேந்திரா சார்...!

நதியெங்கு செல்லும் கடல்தனைத் தேடி 
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
நீ எந்தன் உயிரன்றோ..!



தேவா சுப்பையா...






Comments

அவரது ஆதமா சாந்தியடைய வேண்டுகிறேன்...
ஆழ்ந்த அஞ்சலிகள் பாலுமகேந்திரா சார்...!
அருமையான இயக்குனர், ஒளிப்பதிவாளர்! ஆழ்ந்த இரங்கல்கள்!
பாலுமஹேந்திரா ஒரு சகாப்தம் ஆலமரம் சாய்ந்தாலும் அதன் விழுதுகள் மண்ணில் விதைக்கப்பட்டுள்ளது. விதைக்கப்பட்ட விழுதுகள் அது வீறு கொண்டு எழுந்தாலும் அது அந்த வீரனின் ஆளுமையையே பறைசாற்றும் .....

எமது ஆழ்ந்த இரங்கல் என் மானசீக குருநாதனுக்கு...

எத்துனை இரங்கல்கள் என் வாய் மொழிந்தாலும் என் தீபத்தின் அந்த ஆளுமைத்திருவுருவம் என் மரணம் வரை நிலலாடும்... வலிகளுடன் வேங்கையின் மைந்தன்...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த