Skip to main content

கோச்சடையான் – இது பொம்மை படம் இல்லை.. .செம்ம படம்!


திருடனுக்கு தேள் கொட்டியது போல முழித்துக் கொண்டிருக்கிறார்கள் கோச்சடையானைப் பற்றி விமர்சனம் செய்த கொக்குகள். இந்திய சினிமா வரலாற்றில்… ஏன் உலக சினிமா வரலாற்றில் சலனப் பதிவாக்கத்தில் உருவாக்கம் செய்யப்பட்ட அனிமேஷன் காட்சி வடிவாக தனது ஆதர்ச நாயகனைப் பார்த்த மாத்திரத்தில் திரையரங்கம் அதிர்ந்து நொறுங்கி இருக்குமா என்பது சந்தேகமே….!!!!!!! செளந்தர்யா அஸ்வின் ரஜினி மகளென்றுதான் இதுநாள் வரையில் நான் நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் கோச்சடையான் பார்த்த பின்புதான் தெரிந்தது செளந்தர்யாவும் எங்களைப் போன்ற ஒரு ரஜினி பைத்தியம் என்று!

திரையில் மனிதப் பிம்பங்களை நேரடியாக பார்த்துப் பழகிப் போயிருந்த  கண்களுக்கு படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களுக்கு புதிய திரைவடிவம் கொஞ்சம் பயிற்சி கொடுப்பது என்னவோ உண்மைதான் என்றாலும்… சூப்பர்ஸ்டார் குதிரையிலிருந்து குதித்து நடந்து வரும் காட்சியில் மெல்ல மெல்ல திரைக்குள் குவியத் தொடங்கும் நமது மனது ரஜினியின் காந்தக் குரலைக் கேட்கத் தொடங்கும் அந்தக் கணத்திலிருந்து கதைக்குள் தொபுக்கடீர் என்று விழுந்து மொத்தமாய் கரைந்து போயே விடுகிறது!

அதன் பிறகு கோச்சடையானின் பிரம்மாண்டத்தில் வாய்பிளந்து திரையில் நடக்கும் மாயாஜாலத்தை பார்த்து படத்தை விமர்சித்து, படம் தோற்க வேண்டும் என்றெண்ணிய பக்கிகள் கூட கை தட்டி விசிலடிக்கும் ஆச்சர்யக் கூடமாக மாறிப்போய்விடுகிறது மொத்த திரையரங்கமும்….

எப்படி ஜெயிப்பது என்பதை ஜெயித்து பிரம்மாண்டமாய் நிற்கும் ஒருவருக்குத் தெரியாதா என்ன? ரஜினியின் ஜிம்மிக்ஸ் வேலைகளுக்கும் வசீகர ஸ்டைல்களுக்கும், ரசிகனின் நாடித் துடிப்பு எப்படிப்பட்டது என்றறிந்து விருந்தளிக்கும் திறமைக்கும் கண்ணை மூடிக்கொண்டு நாம் சல்ட்யூட் அடித்துதான் ஆகவேண்டும். இதுவரைக்கும் எத்தனையோ புராண, இதிகாச வரலாற்று டொட்டடாயிங் படங்கள் உலகெங்கும் வந்திருந்தாலும் கூட இடுப்பிலிருக்கும் வாளை இப்படியும் கூட எடுக்கலாம் என்று பாடம் சொல்லிக் கொடுக்கும் படம்தான் கோச்சடையான்.

ரணதீரன் என்னும் மாவீரன் ஏன் கலிங்கபுரிக்குள் சிறுவயதிலேயே வருகிறான், எப்படி சாதுர்யமாய் அங்கே அடைபட்டுக் கிடக்கும் கோட்டைப்பட்டினத்து அடிமைகளை மீட்கிறான்…? கோட்டைப்பட்டினத்துக்கும் ரணதீரனுக்கும் என்ன தொடர்பு, கோட்டைப்பட்டினத்தின் மன்னனை ஏன் ராணா கொல்ல நினைக்கிறான்…? யார் இந்த கோச்சடையான்…? இதை எல்லாம் திரையில் பார்க்கும் போதுதான் அதன் முழுப் பரவசத்தையும் உணர முடியும் என்பதால் கதைக்குள் முழுதாய் நான் போக விரும்பவில்லை.


ராணா ரஜினியை திரையில் கொண்டு வர செளந்தர்யா & டீம் பட்டிருக்கும் கஷ்டம் வீண் போகாமல் வெகு ஜோராய் ரஜினி ரசிகர்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுமளவிற்கு இருக்கிறது. இளமைத் துள்ளலோடு தலைவரை திரையில் பார்த்து விட்டு அந்த போதையில் ரஜினி ரசிகர்கள் கிறங்கிக் கிடக்க….இது என்னடா இது… இந்த ரஜினியை ஒண்ணுமே செய்ய முடியாதா இனிமேல், அடுத்தடுத்த தலைமுறைகளின் இதயங்களையும் கொள்ளை கொண்டு போக இது போன்ற சலனப் பதிவாக்கத்தில் வந்து அட்டகாசம் செய்கிறாரே….? நாங்கள் எல்லாம் பிழைக்க வேண்டாமா? எங்கள் பிழைப்பில் மண் அள்ளிப் போடுகிறார்களே இப்படி என்று தமிழ் சினிமா உலகின் நாயகர்கள் எல்லாம் வயிறெரிந்து கொண்டிருப்பதுதான் இப்போதைய உச்ச பட்சக் காமெடி. ஆமாம் ரஜினியின் அட்ராசிட்டியால் திக்பிரமை பிடித்துப் போய் கிடக்கும் கூட்டம் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் திணறிப் போயிருக்கும் இந்நேரம்.

நான் ஏற்கெனவே கூறியது போல கோச்சடையான் ஒன்றும் பத்தோடு ஒன்று பதினோராவது படம் அல்ல. அது காலங்கள் கடந்தும் வெள்ளித் திரையில் ரஜினி என்னும் லெஜண்ட்டை நிலை நிறுத்த எடுத்து வைக்கப்பட்ட முதல் அடி. இந்த முதல் அடியே மரண அடியாய் விழும் என்பது ரஜினி ரசிகர்களே எதிர்ப்பார்த்திராத ஒரு இனிய ஆச்சர்யம். ரஜினியிடம் எப்போதும் ஒரு பிரச்சினை இருக்கிறது.. அதாவது சாதாரணமாய் ஒரு சூப்பர் படத்தைக் கொடுத்து ரசிகர்களை அவர் சந்தோசப்படுத்தாமல் அட்டகாசமான அதிரடியை கொடுத்து தன் ரசிகர்களை சந்தோஷக் கடலில் தூக்கிப் போட்டு மூழ்க அடித்து விடுவதுதான் அவருக்கு வாடிக்கை. கோச்சடையானும் ஒரு அட்டகாசமான மாஸ் என்டெர்டெயினர் என்பதோடு மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபீசை அடித்து நொறுக்கி எவனும் எட்டாத அளவில் ஒரு சாதனையை நிகழ்த்தி வைக்கவும் போகிறது என்பதுதான் உண்மை.

ஏ.ஆர் ரஹ்மானின் மிரட்டும் பின்னணி இசையும் அட்டகாசமான பாடல்களோடு அதிவேக ரயிலின் வேகத்தில் பயணிக்கும் கே.எஸ். ரவிக்குமாரின் திரைக்கதையும் படத்திற்கு மிகப்பெரிய ப்ள்ஸ் பாயிண்ட்ஸ். கோட்டைப்பட்டினம் மன்னரான நாசரைக் கொல்ல மாறுவேடத்தில் வரும் ராணா ரஜினிக்கும் தீபிகாபடுகோனுக்கும் இடையே நடக்கும் அந்த மாஸ் ஃபைட்டைப் பார்த்தாவது இனிமேல் சண்டைக் காட்சிகள் எப்படி இருக்கவேண்டும் என்று சினிமாக்காரர்கள் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதிரடியான அந்த சண்டைக்காட்சியில் தீபிகா படுகோனை ஈடுபடுத்தி இருப்பதும் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்…..!!!!!!

ரஜினி படம் என்றால் வசனம் ச்ச்சும்மாவே தூள் பறக்கும். அதுவும் இது அரசியல் சதிகள் நிறைந்த படம். ஒவ்வொரு வசனத்திலும் அனல் பறக்கிறது, தியேட்டர் கைதட்டலில் குலுங்குகிறது. கோச்சடையான் ரஜினியைக் கொல்ல கூட்டிச் செல்லும் போது சிறுவயதிலிருக்கும் ராணா, ‘அப்பா எங்கப்பா போறீங்க?’ என்று கேட்பார். ‘நான் ஆண்டவன் கிட்ட போறேன்ப்பா’ என்று கோச்சடையான் ரஜினி கூற….

‘ஏன்ப்பா என்னை ஆண்டவன் கூப்டல….’ என்று சிறுவன் கேட்க, அதற்கு ரஜினி…. ‘எல்லோரையும் ஒரு நாள் அவர் கண்டிப்பாய் கூப்பிடுவார்ப்பா’ என்று கூறிக்கொண்டே மரண மேடையை நோக்கி நடக்கும் காட்சியிலும் சரி, கோச்சடையான் ரஜினியின் தலையை கொய்வதற்கு முன்பு ராணா சிறுவனாய் ஓடிப்போய் தன் தகப்பனின் முன் நெற்றியில் முத்தமிடும் காட்சியிலும் சரி…. நெஞ்சம் நமக்குப் பதறிப்போகத்தான் செய்கிறது. சலனப் பதிவாக்கம் செய்யப்பட்ட படத்தில் நம்மை மீறி உணர்வுகள் பீறிட்டு, கண்ணீர் தளும்புகிறது எழுகிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் தலைவர் அன்றி வேறு யாராக இருக்க முடியும்?

இரண்டு மணி நேரத்தில் படம் முடிந்து விடுகிறது. படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ‘என்வழி வினோ’ அண்ணனுக்கு அந்த நள்ளிரவில் செய்தி அனுப்பினேன், ‘..அண்ணா கோச்சடையான் தமிழ் சினிமாவின் மைல்கல் அண்ணா! இந்திய சினிமாவின் அத்தனை கதாநாயகர்களுக்கும் இந்தப்படத்தின் மூலம் தலைவர் செக் வைத்திருக்கிறார்’ என்று. அந்த நள்ளிரவில் அவர் ஏன் விழித்துக் கொண்டிருந்தார், நான் ஏன் அவருக்குச் செய்தி அனுப்பினேன் என்பதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது.

அந்தக் காரணம், ரஜினி என்னும் மிக அற்புதமான மனிதர்!!!!!! 

ரஜினி வெறுமனே படத்தில் நடித்துச் செல்கிறேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டாலும் எங்களைப் போன்ற கோடாணு கோடி ரசிகர்களை தனது அன்பால் இணைத்து வைத்திருக்கும் மாயாஜாலத்தையும் செய்திருக்கிறார். எங்களுக்கெல்லாம் ரஜினி எதுவும் செய்வார் என்று நினைக்கவில்லை, செய்ய வேண்டிய அவசியமும் இல்லை… ஆனால் எங்களுக்குள் ஒரு பாஸிட்டிவ் அலை உருவாவதற்கும், ஆன்மீகம் பற்றிய புரிதல் உண்டாவதற்கும், எங்கள் குடும்பத்தின் மீது ஒரு பிடிப்பு உண்டாவதற்கும், தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழும் போதே சமூகத்தில் ஏற்படும் பிறழ்ச்சிகளைக் கண்டு வெகுண்டெழவும் அவர்தான் எங்களுக்கு ரோல் மாடலாய் இருந்திருக்கிறார், இருக்கிறார், இருப்பார்.

கோச்சடையான் ஒரு மாஸ் சூப்பர் ப்ளாஸ்டர் வெற்றிப்படமாய் அமைந்திருக்கிறது. இங்கும் அங்கும் குறைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நண்பர்கள் குறைகளைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை யாரும் தடுக்கவே முடியாது, தளபதி வந்தபோது பேசினார்கள், அண்ணாமலையில் ஒன்றுமே இல்லை என்றார்கள், பாட்ஷா எல்லாம் ஒரு படமா என்றார்கள்…., எந்திரன் ஒரு டுபாக்கூர் படம் என்றார்கள். அவர்கள் பேசட்டும், பேசிக் கொண்டே இருக்கட்டும். பேசுவது அவர்களின் இயல்பு!

ஓடிக் கொண்டே இருப்பது நமது இயல்பு. இதைத்தான் தலைவரின் வாழ்க்கை நமக்கு எடுத்தும் சொல்கிறது. கோச்சடையானின் ஏதோ ஒரு குறியீட்டை உணர்த்தும், பேரிலக்கியவாதிகளுக்கான படம் அல்ல அது. உலகப் படங்களைப் பார்த்து அது பற்றி பேசிப் பேசி நம் சொந்த மண்ணில் நிகழும் சாதனையை கிண்டலடிக்கும் மேதாவிகளுக்கான படமும் அல்ல. ரஜினியின் எல்லாப் படங்களையும் போல படம் ஆரம்பித்ததிலிருத்து இறுதி வரை…. உற்சாக அலைகளால் கவலைகளை மறந்து லயித்து ரசிக்கும் ரசனை உள்ளவர்களுக்கான படம் இது.

மொத்தத்தில்…. சிலர் சொல்லிக்  கிண்டலடித்தது போல,



இது ஒன்றும் பொம்மைப் படம் இல்ல…….செம்மப் படம் என்பதுதான் உண்மை!



தேவா சுப்பையா...






Comments

Anonymous said…
MIND BLOWING REVIEW. ONE OF THE BEST REVIEW I HAVE READ

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த