Skip to main content

ஆஸ்கார் இசையும்.... தமிழ்நாட்டுப் பாமர ரசிகனும்..!


ரோஜா படம் வந்தப்பவேன்னு நான் எழுத ஆரம்பிக்கும் போதே 'ஜா'வுக்கு பதிலா 'சா' போட்டு ரோசான்னு எழுதலையே இது தப்பு இல்லையான்னு எனக்குள்ள ஒரு கவுலி கத்துது பாருங்க அந்த கவுலிக்குப் பேருதான் தமிழ்ப்பற்று. தூய தமிழ்ல தூபம் போடுறேன்னு சொல்லிக்கிட்டு வீட்ல பிள்ளைங்க கிட்ட அமெரிக்கன் ஸ்டைல்ல பேசி ட்ரெயினிங்க் கொடுக்குற அப்பாடக்கர் எல்லாம் இல்லைங்க... நான். அதுக்காக கொஞ்சம் கூட அப்டி இப்டி பாக்காம ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசரா (அச்சச்சோ... மறுபடி ஆங்கிலம்) இருக்கறதுலயும் எனக்கு உடன்பாடு இல்லை.

இந்த ரெண்டாவது பாரா ஆரம்பிக்கும் போதே என் பிரச்சினை என்னன்னு கேட்டீங்கன்னான்னு சிம்பு மாதிரி ஒரு சொம்பு டைப்ல ஆரம்பிக்கலாம்னு நினைச்சு அப்புறம் அதை கைவிட்டத உங்ககிட்ட எல்லாம் நான் சொல்லியே ஆகணும். சொல்லியே ஆகணும்னு சொல்லும் போது சொல்லுக்கு 'சொ' போடாம ஜொ போட்டா எப்டி இருக்கும்? ரொம்ப கேவலமா இருக்கும்ல...? இப்போ என் பிரச்சினை என்னன்னானு சரியா ஆரம்பிச்சு நான் ஸொல்ல வந்ததை ஸொல்லிடுறேன். ரகுமான் சார பத்திப் பேச வந்துட்டு நீ ஏண்டா தமிழ்ல எழுதறதப் பத்தி பேசிட்டு இருக்கேன்னு கேக்குறீங்களே... ? நீங்க மட்டும் ஏன் எழுத வந்தவன பாத்து பேச வந்தேன்னு கேள்வி கேக்குறீங்க...?  

ரோஜா படம் வந்தப்பவேன்னு மறுபடியும் இந்தக் கட்டுரையோட முதல் பாராவுக்கு உங்களை எல்லாம் ஈவு இரக்கம் இல்லாம கூட்டிட்டு போற என்னை கொஞ்சம் சகிச்சுக்கோங்க... மக்கள்ஸ்! ரோஜா படம் வந்தப்பவே எனக்கு... அடுத்தடுத்து ரகுமான் சார் எப்போ மியூசிக் போடுவார், அவர் மியூசிக் போட்ட படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு ஒரே ஒரே ட்ரீம்ஸா இருக்கும். காதல் ரோஜாவே பாட்டை பார்ட் பார்ட்டா கேட்டு ஹம்மிங்கோட காலர தூக்கி விட்டுக்கிட்டு உள்ளுக்குள்ள இருந்த காதலுக்கு உரம் போட்டு வளர்த்த கதைய இன்னிக்கு ஏதாச்சும் ஒரு நெடுந்தொடர் எடுக்குற டீம் கிட்ட கொடுத்தோம்னா சன் டிவில அட்டகாசமா 1200 நாள் ஓடுற ஒரு நாடகம் ரெடி. ரகுமானோட சவுண்ட் எஃபகட்ஸ்யும், மிக்ஸிங்கும் மேஜிக் பண்ணி நம்மள எல்லாம் தூக்கிக்கிட்டு ஏதோ ஒரு மாயஜால உலகத்துக்குள்ள கொண்டு போய் விட்டுடும். அதுக்கப்புறம் அது சிக்குபுக்கு ரயிலே ஆக இருக்கட்டும் இல்ல உசிலம்பட்டிப் பெண் குட்டியாகட்டும் மனசு ச்ச்சும்மா தில்லானா ஆடும். 

புதுப் புது பாடகர்கள அவர் அறிமுகப்படுத்தி புதிய குரல்களை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு கொண்டு வந்தது எல்லாம் சரிதான்னாலும் ரகுமானோட காலத்துலதான் தமிழ இங்கிலீஸ்லயோ இல்லை வேற மொழியிலயோ எழுதி வச்சுக்கிட்டு பாடகர்கள் பாடுற ஒரு ட்ரெண்ட்... செம்மையா டெவலப்பானுச்சு. பாடகன்னா உச்சரிப்பு தெளிவா இருக்கணும் அதுவும் தமிழ் மாதிரி செம்மையான ஒரு மொழியை தாய்மொழியா கொண்ட மக்களுக்கு ரகுமான் உதித் நாரயணன் மாதிரி ஆளுக வச்சு செஞ்சுப் போட்ட உப்புமா என்னவோ ருசியாத்தான் இருந்துச்சு ஆனால்.... அவர் ' கொன்டு மல்லி ரெண்டு ரூபாய் உன் கொந்தால் ஏறி உதிரம் பூ கோடி ரூப்பாய்னு' பாடினத கேட்டுட்டு அப்டியே அதை உல்டா அடிச்சு பேச ஆரம்பிச்சுது பாத்தீங்களா ஒரு தலைமுறை அங்கதான் கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி மெல்ல நம்ம வழமைக்குள்ள ஊடுருவி பேச்சுத் தமிழுக்கு கொஞ்சம் பெண்ட் எடுக்க ஆரம்பிச்சுது...

ரகுமான் மட்டுமே இதைச் செஞ்சார்னு சொல்ல வரலை ஆனா அவர் நிறைய செஞ்சார்.  போறாளே பொன்னுத்தாயின்னு கணீர் குரல்களை பாடவச்சு தேசியவிருதுகள எல்லாம் வாங்க வச்ச அதே ரகுமான் புதுப் புதுக் குரல்களை கொண்டு வர்றேன் பேர்வழின்னு மொழியை சரியா உச்சரிக்காத பாடகர்களை தன் இசைக்கு ஏத்த மாதிரி வளைச்சுக்கவும் செய்தார்ன்றதுதான் வருத்தமான உண்மை. தமிழ் மொழியை சரியா உச்சரிக்காத வசனங்கள் நிரம்பிய தமிழ்ப்படத்தை  தமிழ்நாட்ல ஓட்ட முடியுமா? ஆங்கில கலப்புங்கறது ஒரு மாதிரியான வலின்னு சொன்னா தமிழை வேறு ஒரு பாவத்தில் பேசுவது இன்னொரு மாதிரியான கொடுமை. 


ஆரம்ப கால ரகுமான் தமிழ்நாட்டிற்குள் இசையமைத்துக் கொண்டிருந்தார், இப்போது உலக இசையமைப்பாளர் என்பதெல்லாம் சரிதான். அப்டி உலக மக்களுக்காக உலகத்தரத்தோட அவர் ஆல்பங்கள வெளியிட்டு அதை வியாபாரமாக்கிக் கொள்ளட்டும் ஆனா தமிழ் நாட்ல தமிழர் மண்ணுல தமிழர்களுக்காக வெளியிடப்படுற திரைப்படங்கள்ள உலகத் தரம்ன்ற பேர்ல அன்னியமான இசையை  அறிமுகம் செய்றது என்னைய மாதிரி பாமரத் தமிழர்களுக்கு செய்ற துரோகம் இல்லையா ரகுமான் சார்...? மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்தமயிலேன்னு நீங்க போட்ட ட்யூன கேட்டுக்கிட்டும், பாடிக்கிட்டும் இங்க சைக்கிள்லயும், மாட்டு வண்டியிலயும் பஸ்லயும் போன பயலுக எத்தனையோ பேரு...! எங்க ஊர்ல நாங்க பாக்கற படத்துக்கு கொஞ்சமாச்சும் தமிழப்பயலுவ மனசுல நிக்கிற மாதிரி இசைமைச்சா கொறஞ்சா போய்டுவீங்க...? 

ஆஸ்கார் பரிசு வாங்கிக்கிட்டு சென்னை வானூர்தி நிலையத்துல இறங்கி இந்த ஊரு சாலையிலதான சார் நீங்க உங்க வெளிநாட்டு கார ஓட்டிக்கிட்டுப் போனீங்க...? கோடம்பாக்கத்துல இருக்க சுப்பாராய நகர்லதான சார் அந்த ஆஸ்கார் அவார்ட வச்சி இருக்கீங்க..? ஆரம்ப காலத்துல வந்த அத்தனை ரகுமான் பாட்டுலயும் புதுமையும் தெளிவும் இருந்துச்சு. இப்போ சமீபமா எந்திரனுக்கு கொஞ்சம் முன்னாடி, ஆரம்பிச்ச அவரோட உலகத்தரம் 'கடல்' வழியா பயணிச்சு இப்போ.....ஐ படத்துல விஸ்வரூபம் எடுத்து தாண்டவம் ஆடிட்டு இருக்கு.

எங்கூருக்கு போகணும்னா சிவகங்கையில இருந்து காளையார்கோயில் போற பஸ்ல ஏறி கொல்லங்குடின்னு சொல்லிட்டு ஒரு சின்ன டவுன்ல இறங்கணும் அதத் தாண்டி அந்த கருவ முள்ளுக்காட்டுக்குள்ள ஒரு நாலஞ்சு மைலு கம்மாக்கரை ஓரமாவே நடந்து போனம்னா இன்னமும் பேருந்து வசதி இல்லாத கடை கண்ணி இல்லாத அந்த கிராமத்தைப் பாக்க முடியும். காலையில இருந்து அந்த வானம் பாத்த பூமியில வேல செஞ்சுட்டு, வத்திப் போயி கிடக்குற கம்மாய ஏக்கமா வேடிக்கை பாத்துக்கிட்டே.. ரெண்டு தூத்த எப்பப் போடும்னு வேடிக்கைப் பாத்துக்கிட்டே நான் சொன்னேனே அந்த கொல்லங்குடிக்கு சாய்ங்காலமா டீ காப்பி குடிச்சுப்புட்டு பிஞ்சு நொஞ்சு கிடக்குற தினத்தந்தி பேப்பர வாசிக்க வர்ற எங்கூரு ஆளுக....

ஏப்பு சாயக்கடக்காரரே ஏதாச்சும் நல்ல பாட்டா சவுண்டு வச்சுப் போடுங்கன்னு சொன்னா....

அதுக்கு அந்த சாயக்கடைக்காரரு ....கசடதபற... ஞமண நமனன்னு ஆரம்பிக்கிற 'ஐ' படத்துப் பாட்டப் போட்டு அதுக்கப்புறம் வலிப்பு வந்த மாதிரி கத்துற இடத்துல சவுண்ட்ட கூட வச்சா...என்ன ஆகும்னு யோசிச்சுப் பாருங்க....! யெப்பே ரேடியாப் பொட்டியா  அமத்துறியா இல்லை தூக்கிப் பொட்டு உடைக்கவான்னு தானா கேப்பாங்க..? அப்டி பாட்டும் புரியாம இசையும் புடிக்காம சாந்தமான புரியற மாதிரி பாடல்கள கேக்கணும்னு ஆசைப்படுறது எப்டி தப்பாகும்? இந்த மண்ணுல பொறந்த மனுசன் இந்த மண்ணுக்குரிய பாட்ட இந்த மண்ணுலதானே கேக்க ஆசைப்படுவான்...? உங்க கார்ப்பரேட் இசையப்பத்தி அவனுக்கு என்ன கவலை இருக்கு...?

தமிழ் பாரம்பரியத்தை எல்லாம் பின்பற்றி இசை அமைக்கக் கூட தேவையில்லை..., எஸ்பிபி, ஜேசுதாஸ் போன்ற ஜாம்பவான்களை ஓரம் கட்டிட்டுக் கூட போங்க, லபோதிபோன்னு என்ன ப்யூசனா வேணும்னாலும் அது இருந்துட்டுப் போகுது ஆனா....

குறைஞ்ச பட்சம் பாடலோட மொழி புரியற அளவுலயாவது இசை இருந்தா பாமர ரசிகர்களாலயும் அது ரசிக்கப்படும் அவ்வளவுதான். இப்டி எல்லாம் எழுதினதால ரகுமான் சாரோட இசைக்கு நான் எதிரின்னு எனக்கு முத்திரைக் குத்திடாதீங்க ஏன்னா...

ரோஜா படம் வந்தப்பவேன்னு நான் எழுத ஆரம்பிக்கும் போதே 'ஜா'வுக்கு பதிலா 'சா' போட்டு ரோசான்னு எழுதலையே இது தப்பு இல்லையான்னு எனக்குள்ள.....


.....மறுபடியும் முதல்ல இருந்தான்னு தானே யோசிக்கிறீங்க...இதோட டீல் முடிஞ்சுடுச்சு நீங்க உங்க பயணத்தை தொடருங்க மக்கள்ஸ்ஸ்ஸ்!!!!




தேவா சுப்பையா...








Comments

Anonymous said…
boss I used to read all you writing why you always write "Rahman Sir Raja Sir" like all the name suffixed with Sir. Avoid this apart from this, the truth everybody want to ask Rahman
dheva said…
சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்....

இந்தக் கட்டுரையை எழுதும் போதே சார் என்று எழுதிய போது ஏற்கெனவே நீங்கள் கூறியிருந்த கருத்து ஞாபகம் வந்தது. நியாயமான விசம்தான் இனி மாற்றிக் கொள்கிறேன். உங்கள் ஆலோசனைக்கு நன்றிகள்...!

அனானிமஸ் கருத்தாக யாரென்று தெரியவில்லை இருந்தாலும் மீண்டும் எனது நன்றிகள்...!
உண்மையை அருமையாக நகைச்சுவையாகச் சொல்லியுள்ளீர்கள்.
இசையமைப்பாளர்கள் புதுப்பாடகரை அறிமுகப்படுத்துவது, அவர்களுக்கு மிகக் குறைந்த
கூலி கொடுக்கலாமென்பதால் எனக் கூறினார்கள்.
பெருந்தலைகளால் அறிமுகமாவதை அவர்களும் பேறாகக் கருதுவது, இவர்களுக்கு அனுசரணையாக உள்ளது. சில குரல்கள் உண்மையில் வதையே - இந்த உதித் நாராயணனை எந்தவகையில் சேர்ப்பதெனவே தெரியவில்லை. சமீபகாலமாக அவரைக் காணவில்லை.நல்ல விடயம்.
//எங்கூருக்கு போகணும்னா சிவகங்கையில இருந்து காளையார்கோயில் போற பஸ்ல ஏறி கொல்லங்குடின்னு சொல்லிட்டு ஒரு சின்ன டவுன்ல இறங்கணும் அதத் தாண்டி அந்த கருவ முள்ளுக்காட்டுக்குள்ள ஒரு நாலஞ்சு மைலு கம்மாக்கரை ஓரமாவே நடந்து போனம்னா இன்னமும் பேருந்து வசதி இல்லாத கடை கண்ணி இல்லாத அந்த கிராமத்தைப் பாக்க முடியும்//

இப்படி ஒரு கிராமத்தைப் பார்க்க ஆசையாக உள்ளது.
Anonymous said…
oru theevula matikitta 3 perla oruthan kadavulta nan en oorla periya veetla sandhosama vazhanumnu varam ketu ponan. Innoruthan en loveroda sandosama vazhanumnu ketu ponan. 3vadhu aal "bore adikudhu avanga rendu perum thirumba venum" apdinan.
A.R.R. mela mela ponandhala dhan oscar thadi ponar. namma isaya kodukka niraya per irukkanga. namakku perumaya kodukka ivar mattumdhan irukkar. avara mela mela poga vidunga.
'siragugal irukkumodhu edharkaga thavazha asaipada vendum?'
Anonymous said…
A R rahman annaivarukumaana isai yai tan amaikiraar avaravargalukku tevaiyanathai avargaley yedutu kolvargal..inru tamil isai aascar varai senrathu yenral atharku kaaranam AR than..ilayaraja pola kundusattikkul kutirai ootikondiruntaal pakathu state kaaran koodu mathikka maatan..ungalai mathri aatkalukku ilayaraja than correct avarudun sernthu avarathu oppariyai rasiungal..maravargal AR udan sernthu ullaga isaiyai rasikirom

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த