Skip to main content

லிங்கா.....ஒரு பார்வை...!


சாதாரணமாய் தமிழ்த் திரைப்படங்கள் வெறும் திரைப்படங்களாய் வெளியான காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது. தமிழ் நாட்டு அரசியலில் பெருந்தாக்கத்தைக் கொடுத்ததாலேயே இன்றைக்கு திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களின் திரைப்படங்களின் வெளியீடும் அது குறித்த பார்வைகளும்  தற்போதெல்லாம் பெரும் அரசியலாக்கப்படுகின்றன. இந்த அரசியலின் உச்சம் சமீபத்தில் ரஜினி நடித்து வெளியான லிங்காவிற்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முதலில் லிங்கா வழக்கமான ஒரு ரஜினி படம் கிடையாது என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இத்தனை சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த ரஜினி நான்காண்டுகள் இடைவெளிக்குப் பிறகு லிங்காவில் தனது சூப்பர் மாஸுக்கு ஈடு கொடுக்கக் கூடிய காட்சிகள் ஏதும் இல்லாத கதைக்குள் தன்னைப் பொறுத்திக் கொண்டு நடித்திருப்பதன் மூலம் ரஜினி ரசிகர்கள்தான் உண்மையில் ஏமாந்து போய்... காரசாரமான பாட்சா போன்ற, படையப்பா போன்ற அதிரடியான சூப்பர் பழிவாங்கும் கதை இது இல்லையே என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும் ஆனால் இங்கே லிங்காவில் நடந்து கொண்டிருப்பதோ வேறு....

பட்டி தொட்டியெல்லாம் ரஜினி ரசிகர்களாலும், வழக்கமான அவரது பெண் ரசிகைகள், குழந்தைகள், குடும்பங்கள்பெரியவர்கள் என்று எல்லோரும் கைதட்டி ரசித்து படமும் வெற்றிகரமாய் ஓடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் லிங்காவுக்கு எதிரான ஒரு எதிர்ப்பு அரசியலும் ஆங்காங்கே ஊடகங்களிலும், பெரும்பாலும் இணையத்திலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. லிங்கா வழக்கமான ரஜினிப் படங்களைப் போல அதிரடி ஆக்சன் மூவியாய் இல்லை ப்ளாஷ் பேக் ரொம்பவே போரடிக்கிறது என்று எப்போதும் ரஜினி படங்களை பார்த்து விட்டு அவை எல்லாம் வெற்று மசாலாப் படங்கள் என்று விமர்சித்துக் கொண்டிருந்த நல்லவர்கள் எல்லாம் இன்று திடீரென லிங்கா  ரஜினி படம் போன்று இல்லவே இல்லை என்று தங்களின் விமர்சனங்களை ரஜினிக்கு எதிரான ஒரு அரசியல் அஸ்திரமாகவே பயன்படுத்த தொடங்கியிருக்கின்றனர்.

அப்படி என்னதான் இருக்கிறது லிங்காவில்....என்றுதானே கேட்கிறீர்கள்...

சுதந்திரத்துக்கு முந்திய இந்தியாவில் கோடையில் வறட்சியால் வாடிப் போய் குடிக்கவும், விவசாயம் செய்யவும் கூட தண்னீர் கிடைக்காமல் கிடக்கும் சோலையூர் கிராமம் மழைக்காலத்தில் வெள்ளக்காடாய் மாறி மூழ்கிப் போய் பெரும் அவலத்தை சந்திக்கிறது. அந்த ஊருக்கு வெள்ளைக்காரர்களால் நியமிக்கப்பட்ட இந்திய கலெக்டராய் லிங்கேஸ்வரனாகிய ரஜினி வருகிறார். ராஜா லிங்கேஸ்வரன் எனப்படும் அரச பரம்பரையான அவர் சோலையூரில் ஒரு அணை கட்டினால் மழைக்காலத்தில் வரும் வெள்ளத்தை தேக்கி வைத்து அந்த வறண்ட பூமியை விவசாய நிலமாய் ஆக்கலாமே என்று ஆசைப்பட்டு அதை வெள்ளைக்காரர்களிடம் முன் வைக்க அந்த கோரிக்கை ஏளனப்படுத்தப்பட்டு நிராகரிக்கப் படுகிறது.

அடிப்படையில் ஒரு பொறியாளரான லிங்கேஸ்வரன் தன் தந்தையின் கோரிக்கையை ஏற்று ஐசிஎஸ்ஸும் படித்து கலெக்டராகிறார். மக்களுக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று கலெக்டர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ராஜா லிங்கேஸ்வரனாய் நின்று தனது சொத்துக்களை எல்லாம் வைத்து அந்த ஊருக்கு அணை கட்டி வைக்கிறார்.  வெள்ளைக்காரர்களின் சூழ்ச்சியால் அந்த அணையை வெள்ளைக்காரர்கள்தான் கட்டியதாய் ஊரார் முன்பு ரஜினி பொய்யாய் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஊரார்கள் ரஜினியை ஏமாற்றுக்கார் என்று சொல்லி அவர் கட்டிய கோயிலையும் பூட்டி விட்டு ராஜா லிங்கேஸ்வரனாகிய ரஜினியை ஊரை விட்டே துரத்துகின்றனர்.


பிறகு அந்த அணையை ராஜா லிங்கேஸ்வரன்தான் கட்டினார் என்ற உண்மை தெரிந்த பின்பு மீண்டும் ராஜா லிங்கேஸ்வரனைத் தேடிப் போய் ஊரார் கூப்பிட ராஜா லிங்கேஸ்வரனாகிய ரஜினி ஊருக்குள் வர மறுக்கிறார். அந்தக் கோயிலும் பூட்டப்பட்டே கிடக்கிறது. பின்னாளில் இரண்டு தலைமுறைகள் கடந்து ராஜா லிங்கேஸ்வரன் கட்டிய அந்த அணையை வலுவில்லாதது என்று கூறி அரசியல் செய்ய முற்படும் சோலையூரைச் சேர்ந்த எம்.பியை அணையைப் பரிசோதனை செய்ய வந்த ஒரு பொறியாளர் எதிர்க்க அவர் கொல்லப்படுகிறார். அணை உறுதியாய் இருக்கிறது என்று அவர் எழுதி ஒப்பிட்ட டாக்குமெண்ட் ஒரு பென் டிரைவில் அவர் கழுத்தில் தொங்குகிறது அதை அவர் சோலையூர் அணைக்கோயிலுக்குள் விட்டெறிந்து விட்டு, மரணிக்கும் முன்பு அந்த ஊர்ப் பெரியவரிடம் கோயிலைத் திறந்து பாருங்கள் என்று சொல்லி விட்டு மரணமடைந்து விடுகிறார்.

கோயிலைத் திறக்க ராஜாவின் வாரிசுதான் வரவேண்டும் என்பதால் ராஜாவின் ஒரே வாரிசாய் வாழ்ந்து வரும் அவரது பேரன் லிங்கேஸ்வரன் என்னும் லிங்காவை சோலையூருக்குள் கூட்டி வந்து கோயிலைத் திறந்து அதன் மூலம் ராஜா லிங்கேஸ்வரன் கட்டிய அந்த அணை உடைக்காமல் காப்பாற்றப்பட்டதா? எப்படி காப்பாற்றப்பட்டது? என்பதைச் சொல்லும் படம் தான் லிங்கா….!!!!!

எல்லோரும் இந்நேரம் படம் பார்த்திருப்பீர்கள் என்றாலும் மீண்டுமொரு முறை கட்டுரைக்காக கதையை ரீகேப் செய்ய வேண்டியதாயிற்று. 64 வயது ரஜினி, அதுவும் தனது உடல் நலன் சரியில்லாமல் போய் உயிருக்காக போராடி, மீண்டும் ரஜினி நடிக்க வருவாரா? அவரால் நடக்கவாவது முடியுமா? என்றெல்லாம் ஊடகங்கள் எழுதின. அதுவும் ரஜினிக்கு உடல் நலன் சரியில்லாமல் இருந்த போது அவர் இறந்து போய்விட்டதாய் கூட போலிப் பரப்புரைகள் அப்போது நடந்ததால்தான் ரஜினி தன் ரசிகர்களுக்காய் ஒரு ஆடியோ டேப் பேசி வெளியிட வேண்டியதாயிருந்தது. ரஜினியின் நடுங்கும் குரலை ஆடியோ டேப்பில் கேட்ட அவருடைய ஒவ்வொரு ரசிகனும் அப்போது ஆடித்தான் போய்விட்டான். கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் எல்லாவற்றிலும் பிரார்த்தனைகள் என்று அவர் உடல் நலன் இல்லாத போது எல்லோரின் மனதிலும் ரஜினி மீண்டு வருவாரா? அப்படி மீண்டு வந்தால் பழையபடி அதே வேகத்தோடு நடிக்க முடியுமா என்ற ஒரே ஒரு கேள்விதான் மிகுந்திருந்தது. 

அந்த கேள்விக்கான பளீச் பதில்தான் இந்த லிங்கா…..

படம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் ரஜினியைத் திரையில் அவ்வளவு வேகமாக இளமையாக யாருமே எதிர்பார்த்திருக்கவில்லைதான். 64 வயதில் இவ்வளவு உயிர்ப்போடு, 25 வயது இளைஞனாய் தன்னை திரையில் காட்டிக் கொள்ள ரஜினி எடுத்த பிரயத்தனம் கொஞ்சமும் சோடை போயிருக்கவில்லை. அறிமுகப் பாடலில் வழக்கம் போல ரஜினி அட்டகாசம் செய்து கொண்டிருந்த போது நிறைய பேருக்கு அவர் உடல் நலன் இல்லாமல் சிங்கப்பூர் போன போது பதிவு செய்து வெளியிட்ட ஆடியோ டேப்தான் நினைவுக்கு வந்திருக்கும். பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் ரஜினி தனது வழக்கமான வேகத்தோடு திரையில் பொருத்திக் கொண்டு மின்னல் வேகத்தில் பறப்பார் என்று யாரும் யோசித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். லிங்கா படத்தில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சினையாக நான் பார்ப்பது ரஜினி என்னும் இமேஜின் ஹெவி வெயிட் தான். ரஜினி என்னும் வலுவான பிம்பத்தையும் அதன் ஆளுமையையும் தாங்கிக் கொள்ள முடியாமல் ஒவ்வொரு பிரேமும் திணறிக் கொண்டிருப்பதாகத்தான் நான் உணர்ந்தேன்.

லிங்கா ரஜினி சந்தானம் அண்ட் கோவோடு சேர்ந்து சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபடுவதும் பின் பெரிதாக ஒரு நெக்லசை அடிக்க திட்டம் போட்டு அதை செயற்படுத்துவதும் என்று திரைப்படத்தின் முதல் ஒரு மணி நேரம் கலகலப்பாய் நகர…..

லிங்கா ரஜினியை திட்டம் போட்டு தனது சொந்த ஊரான சோலையூருக்கு கூட்டிச் செல்கிறாரர் அந்த ஊரைச் சேர்ந்த அனுஷ்கா. அதன் பிறகுதான் மேலே சொன்ன அத்தனை நிகழ்வுகளும் ப்ளாஷ் பேக்காய் விரிகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவை காட்டும் சூப்பர் பீரியட் படமான லிங்காவை இவ்வளவு குறுகிய காலத்தில் எப்படி கே.எஸ். ரவிகுமார் எடுத்து முடித்தார் என்பது ஆச்சர்யமான விசயம். அதுவும் மிகப் பிரம்மாண்டமான வெள்ளைக்காரர்கள் காலத்து விருந்து, அரண்மணை பிரம்மாண்ட அணை கட்டுவது போன்ற செட்டுக்கள் என்று ஒவ்வொரு காட்சியிலும் குறைந்தது சில நூறு பேர்களையாவது கட்டி மேய்க்க வேண்டிய சவால்களை எல்லாம் அனாயாசமாக சமாளித்திருக்கிறார் இயக்குனர்.

லிங்காவைப் பொறுத்த வரை இன்னொரு மிக முக்கியமான விசயம் என்னவென்றால் அது ஒரு வழக்கமான ரஜினி படம் கிடையாது என்பதுதான். வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு கிராமத்து மக்களுக்காக ஒரு இந்திய மகாராஜா தனது சொத்துக்களை எல்லாம் விற்று அணை கட்டிக் கொடுத்தார் என்ற கதையின் ஓட்டத்திற்குள் ஒரு ரஜினி தன்மையையும் கொண்டு வந்துவிட முடியாது என்பதை உணர்ந்து இந்தப்படத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட சூப்பர் ஸ்டாரைப் பாராட்டியே ஆகவேண்டும். படத்தின் மையக்கரு பேசும் ஒரு அரசியல் நம்மை பின்னோக்கி இழுத்துச் சென்று தன் சொந்த செலவில் முல்லைபெரியாறு அணையைக் கட்டிய திருவாளர் பென்னி குயிக் அவர்களை பற்றி கொஞ்சம் யோசிக்கவும் சொல்கிறது. முழுக்க முழுக்க பென்னி குயிக்கின் செலவோடு மட்டும்தான் எழுந்து நிற்கிறதா இந்த முல்லைப் பெரியாறு அணை அல்லது அதில் வேறு சில முகம் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கும் இந்திய ராஜாக்களும், ஜமீன்ந்தார்களும் இருப்பார்களோ என்ற ஒரு பதட்டத்தையும் லிங்கா நம்மிடம் விட்டுச் செல்கிறது.

ராஜா லிங்கேஸ்வரனாய் ரஜினியின் பட்டையைக் கிளப்பும் கம்பீரமான நடிப்பைப் பார்க்கும் போது மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன் மெலிதாய் நமது நினைவுகளுக்குள் எட்டிப்பார்க்கிறார். சற்றேறக்குறைய 32 வருடங்களுக்குப் பிறகு 64 வயதிலும் ரஜினியின் கம்பீரமும், வசன உச்சரிப்பில் இருக்கும் அழுத்தமும் கொஞ்சம் கூட குறையாமல் ப்ரஷாக எகிறிப்பாய்ந்து அடிக்கிறது. ப்ளாஷ் பேக்கின் தொடக்கத்தில் இடம் பெற்றிருக்கும் ரயில் சண்டைக்காட்சியில் கிராபிக்ஸ் நிறையவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும் சண்டையில் சூடு அதிகம். லிங்கேஸ்வரனாக ரஜினி அடித்து தூள் கிளப்பும் அதே நேரத்தில் ரஜினிக்கு ஈடு கொடுக்கக் கூடிய சரியான வில்லன் இல்லாமல் போனது படத்தின் மிகப் பெரிய மைனஸ். மிகச் சாதாரண பார்வையாளர்களுக்கும் கூட நெருடலாய் இருக்கும் இந்த விசயம் எப்படி ரஜினி என்ற சிங்கத்தை வைத்து இயக்கிய இயக்குனருக்குத் தெரியாமல் போனது என்பது மில்லியன் டாலர் கேள்வி.

என்னதான் இளமையான கதாநாயகிகளை திரைப்படத்திற்காக தேர்ந்தெடுத்திருந்தாலும் ரஜினி கதாநாயகிகளை விட்டு சற்று விலகி நின்றுதான் நடித்திருக்கிறார். அதற்குக் காரணம் ரஜினியின் மெச்சூரிட்டி மற்றும் தற்போதைய வயது என்றாலும் திரையில் கதாநாயகிகளோடு நெருக்கமில்லாமல் இருப்பது படத்தின் ஓட்டத்தை கொஞ்சம் மந்தப்படுத்தவே செய்கிறது. சொத்துக்களை எல்லாம் கொடுத்து ஒரு அணையைக் கட்டி விட்டு அந்த அணையையும் தான் கட்டியது இல்லை என்று அறிவித்து விட்டு ஊராரால் விரட்டப்பட்டு ரஜினி சோலையூரை விட்டு வெளியேறும் காட்சியிலும், ராஜா லிங்கேஸ்வரன் சாதாரண மனிதனாய் வந்த விருந்தினர்களுக்கு உணவளிக்க அடுப்பூதிக் கொண்டிருக்கும் காட்சியிலும் நம்மை மீறி நமக்குள் ஒரு சோகம் பரவுகிறது. 

ரஜினியைக் கடந்து படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் படத்தின் வசனம். அதுவும் ரஜினிக்காய் வசனகர்த்தா மிகவும் மெனக்கெட்டு எழுதியிருப்பார் போல.. ரஜினி வாயைத் திறந்தாலே பட் பட்டென்று பட்டாசாய் வசனம் வெடிக்கிறது. சந்தானத்தின் வழக்கமான காமெடி ரஜினி என்னும் பிரம்மாண்டத்திற்கு முன்பு எடுபடவில்லை என்றாலும் அவ்வப்போது கை தட்டி ரசிக்கும் அளவில் இருக்கிறது. ஏ.ஆர். ரகுமான் உலகத்துக்காக எப்படி எப்படியெல்லாமோ இசையமைத்தாலும் ரஜினி என்று வந்து விட்டால் ரஜினி ப்ராண்ட்டுக்கு மாறி ஆக வேண்டிய கட்டாயம் பாடல்களில் தெரிகிறது. ஒரு மெலோடி, ஒரு அதிரடி டூயட், ஒரு தீம் சாங், ஒரு ரஜினி ஸ்டைல் பாஸ்ட் சாங், ஒரு சோகப்பாடல் என்று வித்தியாசம் காட்டியிருக்கிறார் இசைப்புயல்.

படத்தின் ஆரம்பக் காட்சிகளாகட்டும், ப்ளாஷ் பேக் காட்சிகளாகட்டும் எல்லாவற்றையும் ரஜினி என்னும் ஆளுமையோடு சேர்ந்து அட்டகாசமாய் நகர்த்தி அசத்திய கே.எஸ். ரவிகுமார் எப்படியாவது படத்தை முடித்து விட வேண்டுமென்ற எண்ணத்தில் சொதப்பலான ஒரு க்ளைமாக்ஸ் காட்சியினை வைத்திருப்பது என்னைப் போன்ற ரஜினி ரசிகர்களுக்கே கூட கொஞ்சமும் பிடிக்கவில்லை என்பது உண்மைதான். வேறு மாதிரியாய் க்ளைமாக்ஸ் இருந்திருந்தால் இன்னும் அழுத்தமாய் ராஜா லிங்கேஸ்வரன் எல்லோர் மனதிலும் இருந்திருக்கக் கூடும்.

எப்படி பார்த்தாலும் லிங்கா ரஜினியின் ரஜினித்தனம் அதிகமில்லாத இன்னொரு மாஸ்டர் பீஸ் என்பதில் எள்ளளவு கூட சந்தேகம் இல்லை
என்றாலும் என்னைப் போன்ற ரஜினி ரசிகர்கள் ரஜினியை இன்னும் அதிரடியாய் பார்க்கும் ஒரு ஆசையுடன் தலைவரின் அடுத்த படத்திற்காக வழக்கம் போல காத்து கொண்டுதானிருக்கிறோம்.



தேவா சுப்பையா…









Comments

--படத்தின் மையக்கரு பேசும் ஒரு அரசியல் நம்மை பின்னோக்கி இழுத்துச் சென்று தன் சொந்த செலவில் முல்லைபெரியாறு அணையைக் கட்டிய திருவாளர் பென்னி குயிக் அவர்களை பற்றி கொஞ்சம் யோசிக்கவும் சொல்கிறது. முழுக்க முழுக்க பென்னி குயிக்கின் செலவோடு மட்டும்தான் எழுந்து நிற்கிறதா இந்த முல்லைப் பெரியாறு அணை அல்லது அதில் வேறு சில முகம் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கும் இந்திய ராஜாக்களும், ஜமீன்ந்தார்களும் இருப்பார்களோ என்ற ஒரு பதட்டத்தையும் லிங்கா நம்மிடம் விட்டுச் செல்கிறது.----

ரஜினி ரசிகர் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதற்காக நடந்த வரலாற்று நிகழ்வை இப்படிக் கொச்சைபடுத்துவது சரியா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். ஆங்கிலேயன் நமக்கு கெடுதல்கள் மட்டுமே செய்தான் என்பது ஒரு புனைவு. தேனிப் பக்கம் சென்று பாருங்கள். உங்களுக்கு பென்னிகுயிக்கின் தியாகம் ஒருவேளை புரியலாம்.
arul said…
Nanbareey Lingaa rajini sir naditha familyudan paarkka koodiya padam..padaththai pattriyaa aarokkiyamana paaravai athai vimarchippavarkalukku illai..
Anonymous said…
Good review.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல