என் எழுத்துக்களை
அடைத்து வைத்து, அடைத்து வைத்து
எத்தனை நாட்களைத்தான்
நான் நகர்த்த முடியும்..?
தூரத்தில் பறக்கும் பருந்தின்
நிழலைப் போல இப்போதும்
வட்டமிட்டுக் கொண்டிருக்கும்
உன் நினைவுகள் மட்டுமே
எனக்கு சொந்தமாயிருக்கின்றன...
மறந்து போன அழகிய கனவின்
தெளிவில்லாத பிம்பமாய்
ஏதேதோ ஞாபகங்கள்
இன்னதென்று சொல்ல முடியாத உணர்வுகளென்று
மீண்டும் மீண்டும் நினைவுகளில்
உன்னைத் தேடிப் பிடிக்கும் முயற்சிகளில்
சலிப்புற்று சரிகிறேன் நான்...
தூரத்து வானில் சிறகடிக்கும்
பட்டமொன்றின் வர்ணக் கலவையில்
என்னை தொலைத்துக் கொண்டே
உனக்கும் எனக்கும் பிடித்த
பாடலொன்றை நினைவுகளால்
பாடிக் கொண்டிருக்கும் போதே
எல்லாம் நின்று போகிறது...
நூலறந்த பட்டம்
திசையறியாமல் காற்றில்
எங்கோ பறந்து செல்ல...
பகிர செய்திகளின்றி
நீல வானத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன
வெண் மேகங்கள்....
வலிக்கும் சிறகுகளை இழுத்துக் கொண்டு
மெல்ல மெல்லத் தாழிறங்கிக் கொண்டிருக்கிறது
என் நினைவுப் பறவை....
.....
.....
....
நான் உனக்காக
கவிதை ஒன்றை எழுதத் துவங்குகிறேன்...
தேவா சுப்பையா...
Comments
கவிதையின் வரிகள் அசத்தலாக உள்ளது படித்து மகிழ்ந்தேன் த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-