Skip to main content

பேசித் திரியும் மான்கள்...!


அதோ தூரத்தில் தெரியும் அந்த மலைகளுக்கு  அப்பால் மிகப்பெரிய சமவெளியொன்று இருக்கிறதாம். அங்கேதான் மானுட வாழ்வின் பேருண்மைகளைப் பேசித் திரியும் மான்கள் சுற்றித் திரிகின்றனவாம் என்று என் பாட்டி என்னிடம் சொன்ன போது மானுட வாழ்வின் பேருண்மையென்று எதைச் சொல்கிறாய் பாட்டி என்று கேட்ட பொழுது....

குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கியிருந்தாள் அவள்.

இறந்து போன தாத்தா புகைப்படத்திலிருந்து என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். தாத்தாவின் புகைப்படத்தின் கீழே ஏற்றப்பட்டிருந்த தீபம் காற்றிலாடாமல் நின்று நிதானமாய் எரிந்து கொண்டிருந்தது. பாட்டியின் கன்னம் தொட்டுத்தடவி அவளின் தலை நிமிர்த்தினேன்...

கண்ணீரைத் துடைத்தபடி அவள் மெல்ல பேசத் தொடங்கினாள்.... அந்த சமவெளியில் சுற்றித் திரியும் மான்கள் பேசுவது போலவே கற்பனை செய்து கொண்டேன் நான் அல்லது எனக்கு அப்படி தோன்றியது.  மெல்ல மெல்ல அரிக்கேன் விளக்கின் வெளிச்சத்தை தூண்டி விட்டபடி பேசிக் கொண்டிருந்த பாட்டி எனக்கு தேவதையைப் போல தெரிந்தாள். அவள் பிராயத்தில் நிறைய கவிதைகளை எழுதுவாளாம், கனவுகளிலும் கற்பனைகளிலுமே தன்னை விரும்பித் தொலைப்பாளாம். இதுதான் இன்னதுதானென்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத இந்த நிதர்சனமற்ற வாழ்க்கையை சட்டை செய்யாமல் தன் போக்கில் வளர்ந்தவளைத்தான் இந்த கிராமத்தில் மின்மினிப் பூச்சியைப் போல கொண்டு வந்து போட்டிருக்கிறது காலம்.

இதுவரையில் வாழ்க்கையில் நடந்து முடிந்தன யாவும் பொய்களே என்று அவள் கூறிக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியே வீட்டுக்குள் எட்டிப்பார்த்த நிலவினை நான் மெளனமாய் பார்த்துக் கொண்டிருந்தேன்...

சூரியனைப் பார்த்தாயா மாறுவேடமிட்டு இரவிலும் சுற்றித் திரிகிறது என்ற பாட்டியை நான் ஊடுருவிப் பார்த்தேன்....

விளக்கொளியில் பட்டு அவளது மூக்குத்தி ஜொலித்துக் கொண்டிருந்தது....வெளுத்த தலைமுடியும் பளபளக்கும் கண்களையும் கொண்ட அவள் யுகங்களாய் காதலோடு ஜனித்து மரித்து ஜனித்து வந்திருப்பவள் என்று என் மனது சொன்னது....

இதோ ஆயிற்று பத்து வருடங்களுக்கு மேல்....

தாத்தாவுக்கு அருகே பாட்டியும் புகைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள்....ஆடாமல் அசையாமல் எரிந்து கொண்டிருக்கிறது விளக்கு.....

தூரத்தில் தெரியும் அந்த மலைகளுக்குப் பின்னாலிருக்கும் சமவெளியில் பேருண்மையைப் பேசும் மான்கள் இன்னமும் சுற்றிக் கொண்டுதானிருக்க வேண்டும்....




தேவா சுப்பையா...










Comments

kanchana said…
Was waiting for your post Dheva! Nn it is Simply Dhevaish as always! Good!
ஆஹா...
என்ன எழுத்து அண்ணா இது...
வசப்படுத்தி... வசப்படுத்தி... ரசிக்க வைக்கிறது...
அருமை...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த