Skip to main content

பனை மரக் காடே.... பறவைகள் கூடே..!


ஊருக்கு நடுவேயிருந்த  பெருந்திண்ணைகளை காட்டி கேட்டான் பேரன் இது என்னப்பத்தா..? இதான் மொளக்கூட்டுத் திண்ணைப்பே...மாரியாத்தாளுக்கு பொங்க வச்சு இங்கனதேன் மொளப்பாரி எடுப்போம் என்றாள் அவள்... யாருமற்ற திண்ணையை வெறித்தபடி கடந்தான் சிறுவன். ஒரு  வீட்டுத் திண்ணையில் சுருங்கிப் படுத்திருந்த  மீசைக்கார தாத்தாவைக் காட்டி இது யாருப்பத்தா இம்புட்டு பெரிய மீசை...? அவருதேன் நம்மூரு நாட்டமைப்பே...நாட்டாமைன்னா  என்னப்பத்தா...?

நம்மூருல எதுவும் பெரச்சினையின்னா முன்னாடி எல்லாம் அவருகிட்டதேன் போய்ச்சொல்லுவோம், நீ பாத்தியே மொளக்கூட்டுத் திண்ணை அங்கதேன் வச்சு நாயம் சொல்லுவாக...?

முன்னால் நடந்து கொண்டிருந்தாள் கிழவி...

உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. வெறிச்சோடிக் கிடந்தது தெரு. தெரு முழுதும் செம்மண் புழுதி. செருப்புல்லாம நடக்கிறியே அப்பத்தா கால் சுடலையா உனக்கு....? பழகிப்போச்சப்பே...வெரசா வா என்று கையைப் பிடித்து அழைத்து நடந்தாள் அப்பத்தா.

ஏம்பத்தா இதென்னப்பத்தா இம்புட்டு மேடா இருந்துச்சு இது மேல ஏத்திக் கொண்டு வந்து  என்ன நிப்பாடி வச்சிருக்க ஒரே குப்பையா முள்ளுச் செடியா மண்டிக்கிடக்கு உள்ள இது என்னப்பத்தா...?

கண்டாங்கி சீலைக்குள்ளிருந்து அதிரசத்தைக் எடுத்து கொடுத்தபடியே அப்பத்தா சொன்னாள்...

இதாப்பு நம்மூரு கம்மா...மல பேஞ்சு முன்னாடி தண்ணி நிறைஞ்சு தெப்பமா கிடக்கும் இதுலதேன் எல்லா பொழப்பு தலைப்பும் நமக்கு...

மருதையில் ஆப்பரசேன் பண்னி போட்ட தடித்த கண்ணாடியை கழட்டி துடைத்து விட்டு மறுபடி போட்டுக் கொண்டாள் அப்பத்தா, கண்ணாடியை கழட்டிய போது வேறு யாரோ மாதிரி இருந்தாள், கண்கள் சுருங்கி மூக்கின் மேல் அழுத்தமாய் கண்ணாடியின் தடத்தோடு...

கம்மாக் கரையிலிருந்து இறங்கி நடந்தார்கள் அவர்கள்...

என்னப்பத்தா கருப்பு கருப்பா குட்டி குட்டி மரமா இருக்கே என்னப்பத்தா இதெல்லாம்..?

அங்க எல்லாம் பனைமரங்க இருந்துச்சப்பு முன்னாடி .... இந்தா நீ பாக்குறாயில்ல இந்த இடம் பூர பனை மரந்தேன்...இருந்துச்சு முன்னாடி. இப்ப.... வீடு கட்றதுக்கு பனங்கை வேணும்னு ஆளாளுகுக் வெட்டி வித்துப்புட்டாய்ங்கப்பா...

ஒரே கல்லா நட்டு வச்சி இருக்காங்க...இதென்னப்பத்தா..? தரிசு காட்டை காட்டி  அடுத்த கேள்வியைக் கேட்டான் பேரன்...

இதான்ப்பு வயலு, அந்த கம்மாத் தண்ணிய பாச்சி இதுலதேன் விவசாயம் செய்வாக மொதவெல்லாம்..? அதுல ப்ளாட்டுக் கல்லு நட்டு வச்சிருக்ககப்பே..

ஓ.. ப்ளாட் கல்லா....சரிப்பத்தா என்றபடி மெளனமாய் கொஞ்ச நேரம் நடந்த பேரன் சடாரென்று கேட்டான் ....வெவசாயம்னா என்னப்பத்தா? 

சோறு சாப்டுறீல்ல.. நீய்யி...?

இல்லப்பத்தா நான் பிட்சா, பர்கர், நூடுல்ஸ், கேஎஃப்சி,  கெலாக்ஸ், ஓட்ஸ், பாஸ்தா தான் எப்பவும் சாப்டுவேன்.. எப்பவாச்சும் அம்மா சோறு செய்வா....?

ஏப்பு நீ சொன்னதெல்லாம் திங்கிற சாமங்களா? அப்பத்தா  ஆச்சர்யமாய் கேட்டாள்?

ஆமாம்ப்த்தா...

அந்த கட்டக் கடைசியா சோறுன்னு சொன்னீல்ல அதை இங்கதேன் வெளைய வைப்போம்...அப்பத்தா சொன்னாள்...

ஏம்பத்தா அப்போ பர்கர், பிட்சா எல்லாம் எங்கப்பத்தா வெளைய வைப்பாங்க..? 

ஒங்கூர்லயா இருக்கும்....வரண்ட தொண்டையில் சொல்லி விட்டு வெளுத்த வானத்தைப் பார்த்தாள் அப்பத்தா...

அப்பத்தா முன்னால் நடந்து கொண்டிருந்தாள்..

பின்னால் செருப்புச் சத்தத்தோடு பேரன் நடந்து கொண்டிருந்தான். 

ஊரைச் சுத்தி பாத்தியாப்பே...? அப்பத்தா கேட்டாள்.

பாத்த்தேன்னப்பத்தா... ஆனா....ஏம்பத்தா ஊர்ல யாரையும் வெளியிலயே காணாம்...வீடுக மட்டுந்தான் இருக்கு.. ஆளுகளயே காணோம்..? 

எல்லாரும் பொழப்பு தலைப்புக்காக வெளியூரு போய்ட்டாகப்பே...என்ன மாதிரி கிழம் கட்டைக வீட்டுக்கு ஒண்ணு இரண்டு இங்கன இருக்குக...?

ஏன் அப்பத்தா நீங்க எல்லாம் மட்டும் இங்க இருக்கீங்க....?

வீட்டு வாசற்படியில் ஏறிக் கொண்டே ...ஒங்கப்பன் வேலை தேடி மெட்டரசுக்கு போயிட்டு காசு சம்பாரிச்சுட்டு திரும்பி வந்துருவமத்தான்னு...சொல்லிட்டுப் போனானப்பு...

அதேன்...

வீட்டையும் காட்டையும் காப்பத்தி வச்சிருக்க இங்கனதான கிடக்குறமப்பே....


தொண்டை அடைத்து வந்த கண்ணீரை முந்தானையில் துடைத்து விட்டு, மூக்கைச் சிந்திப் போட்டு விட்டு லீவுக்கு வந்த பேரனோடு வீட்டிற்குள் சென்றாள் கிழவி...!




தேவா சுப்பையா...









Comments

இப்ப நம்ம கிராமங்களின் வாழ்க்கையை படம் பிடிக்கும் எழுத்து அண்ணா...

கடைசியில ஒங்கப்பன் காசு சம்பாரிச்சுக்கிட்டு வாறேன்னுட்டு போனப்பே... படிச்சப்போ ஒரு கிராமத்தானா கண்ணு கலங்கிருச்சு...

எங்க ஊரில் கூட வீட்டு ரெண்டு பெரியவங்க மட்டுமே இருக்காங்க... நகர வாழ்க்கை நம்மை இழுத்துருச்சு... கிராமத்தை நசிச்சிருச்சு...

அருமை அண்ணா...

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...