Skip to main content

வீட்டுப் பூனை

வேகமாய் வந்து எனக்கு முன் இருந்த பார்க்கிங்கில் அந்தக் கார் நின்ற போது மணி இரவு 8 இருக்கும். அப்படியும் இப்படியுமாய் நடை பயிற்சி செய்பவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். கார் நின்று கொஞ்ச நேரம் யாரும் இறங்கவில்லை. பொதுவாய் வாக்கிங் போக வருபவர்கள் காரை நிறுத்திவிட்டு சடாரென்று இறங்கி ஓடவோ நடக்கவோ ஆரம்பித்து விடுவார்கள் அதே வேகத்தில் திரும்ப கிளம்பியும் போய்விடுவார்கள். என்னைப் போன்ற சில அவதாரங்கள்தான் இப்படி வந்து காருக்குள்ளேயே அமர்ந்து பிராக்கு பார்த்து விட்டு, பிறகு போகும் போதும் இப்படி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும்...

யார் அந்த பிராந்தன் அல்லது பிராந்தி என்று நினைத்துக் கொண்டிருந்த போதே கார் கதவை மெதுவாய் திறந்து கொண்டு உயரமான அந்த மனிதர் இறங்கினார். கருப்பு டிசர்ட் போட்டிருந்தவரைப் பார்த்தால் வாக்கிங் போக வந்தவர் போலத் தெரியவில்லை. சார்ஜா யுனிவர்சிட்டி ஏரியா எல்லா நேரத்திலும் அமைதியாகத்தான் இருக்கும். ஒரு சில கார்களும் மனிதர்களையும் தவிர பெரிய நசநசப்பு அங்கு இருக்காது. அப்போதுதான் கவனித்தேன் இறங்கியவர் கையில் ஒரு கருப்பு கலர் பூனைக்குட்டி (பெரிய பூனையைக் கூட பூனைக்குட்டின்னுதானே சொல்லுவோம்). ரொம்ப நேரம் அந்தப் பூனைக்குட்டியைத் தடவிக் கொடுத்தபடியே அவர் அதோடு பேசுவது போலத் தெரியவும் சரிந்து அம்ர்ந்திருந்த நான் நிமிர்ந்து உட்கார்ந்து கவனித்தேன். அந்த ஆளின் முகத்தில் சலனமில்லை, பூனையோடு பேசியபடி வந்த மனிதர் என் கார் பானட்டில் பூனையை வைத்து தடவிக்கொடுத்தார். இருட்டில் காருக்குள் நான் இருந்ததை அவர் கவனிக்கவிலை. பூனை அவரின் கையை நக்கியது, முகத்தை வைத்து தேய்த்தது.

ம்யாவ் .. .ம்யாவ்....ம்யாவ்...

பூனையை தூக்கி முகத்தில் வைத்து முத்தம் கொடுத்தார். பார்கிங்க் சைடிலிருந்து பூனையைத் தூக்கியபடி நடைபாதையில் ஏறி ஈச்சை மரங்கள் அடர்ந்திருந்த மங்கலாய் வெளிச்சமிருந்த பக்கம் போன போது உற்றுக் கவனித்தேன் பூனையின் கழுத்தில் பச்சைகலரில் பாசிமணி போல கட்டியிருந்தார்கள். ஒரு நிமிடத்துக்குள் திரும்பி வந்தவரின் கையில் பூனையில்லை. திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தவர் நடைபாதைக்கு வருவதற்குள்ளாக ம்யாவ்...ம்யாவ்..ம்யாவ்....பூனை அவரிடம் நாலுகால் பாய்ச்சலில் ஓடி வந்து கால்களை நக்கியபடி சுற்றிக் கொண்டது. அவர் முகத்தில் அப்போது ஒரு தர்மசங்கடத்தைப் பார்த்தேன். மறுபடி பூனையிடம் ஏதோ பேசியபடி அதே இடத்திற்கு சென்று திரும்ப வருவதற்குள்....

ம்யாவ்...ம்யாவ்..ம்யாவ்.....

இம்முறை பூனையை தூக்கி முகத்தோடு கொஞ்ச நேரம் வைத்திருந்தவர் விடுவிடுவென்று போய் அதே இருளில் பூனையை விட்டு விட்டு வேகமாய் வந்து காருக்குள் அதே வேகத்தில் ஏறியவர் உள்ளே காருக்குள் செல்வதற்கு முன்பு மீண்டுமொரு பார்வை பூனையிருந்த திசையில் பார்த்தார் பின்....சர்ர்ர்ர்ர்ரென்று வண்டியைக் கிளப்பி போய்விட்டார்.

ம்யாவ்...ம்யாவ்...ம்யாவ்...

அந்தப்பூனை ஓடி வந்த வேகத்தில் அங்கே அவர் இல்லாததால் என் காரை ஒட்டி இருந்த நடைபாதையில் அமர்ந்தபடி வலதும் இடமும் பார்த்தபடி கத்திக் கொண்டிருந்தது. எனக்கு பதட்டம் அதிகமானது. ஒரு பிலிப்பினோ ஜோடி வேகமாய் நடந்து கொண்டிருக்க அவர்களின் பின்னால் மேற்கு நோக்கி ஓடியது பூனை, அவர்கள் சிரித்துக் கொண்டே பூனையைப் பற்றி ஏதோ பேசியபடி சென்றார்கள். அவர்கள் போய்விட்டார்கள் மறுபடி பூனை அந்த மனிதர் கார் நிறுத்திய இடத்திற்கே ஓடிவந்து கத்தியபடி அமர்ந்திருந்தது. இந்த முறை ஒரு மலையாளி கிழக்குப்பக்கம் போனான்...அவன் கால்களைச் சுற்றிக் கொண்டு அதுவும் ஓடியது, மறுபடி ஒரு அரபியின் கால்கள் பின்னால், பாகிஸ்தானியின் பின்னால்....ஓடி ஓடி பார்த்து விட்டு களைத்துப் போய் மீண்டும் என் கார் அருகே வந்து கொஞ்சம் நேரம் கத்திக் கொண்டிருந்தது.

பிறகு சப்தம் ஏதுமில்லை. மெளனமாய் அமர்ந்திருந்தது. அது வந்திறங்கிய கார் நின்ற இடத்தையே சுற்றிச் சுற்றி வந்தது.

என்ன செய்யும் அது இனி என்று எனக்குப் புரியவே இல்லை.

கழுத்திலிருந்த மணியை அவிழ்த்து விட்டு வெறும் பூனையாக அதை விட்டுச் சென்றிருக்கலாமோ அவன். வீட்டுப்பூனையாய் இருந்து விட்டு அது எப்படி சடாரென்று தெரு பூனையாய் மாறும் ஒரே நாளில் ?

பூனையை தூக்கி வீட்டுக்குக் கொண்டு வந்துவிடலாமா என்று யோசித்தேன் ஆனாலும் வேண்டாம் என்று நினைத்து உடனே வண்டியைக் கிளப்பி அந்த இடத்தை விட்டு வந்துவிட்டேன்....

ஆமாம்...

என்னால் இன்னொரு நாள் அந்தப் பூனையை வேறு எங்காவது கொண்டு போய் இப்படி விடமுடியவே முடியாது.




-தேவா சுப்பையா...

Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...