Skip to main content

தேடல் - 1


காரணமின்றி காரியமில்லை

எத்தனை எழுத்தாளர்களை கடந்து வந்த போதும் பாலகுமாரனை விட்டு நகர மறுக்கிறது மனசு. காரணம் ஆன்மீகம். இலக்கியம் என்பது மானுடவியல் சார்ந்தது. ஆன்மிகத் தேடல் இந்த வாழ்வோடு மட்டுமா தொடர்புடையது?

சென்னைக்கு வேலைதேடி பெட்டியோடு பேருந்து ஏறிய போது பெட்டிக்குள் துணிமணியோடு பாலகுமாரனின் நாவல்களும் என்னோடு வந்தன. நிறைய பெட்டிகள் இப்படித்தான் பயணித்தன என்பதை பின்னர்தான் தெரிந்து கொண்டேன். கடவுள் கடவுள் என்று பேய்ப்பிடித்து அலைந்த பொழுது பாலகுமாரனின் நாவல்கள்தான் பொறுமையாய் பாடமெடுத்தன.

பாலகுமாரனை பார்க்க வேண்டுமென்றல்லாம் எனக்கு ஆசை கிடையாது. அடுத்தடுத்து வெளிவரும் அவரது பல்சுவை நாவல்களை வாங்கிப் படித்து விடவேண்டும் அவ்வளவுதான். ஒரு பிரதோஷ மாலையில் மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயிலின் வெளி மண்டபத்தில் தேமேவென்று உட்கார்ந்த்திருத பொழுது பாலகுமாரன் யாரோ இருவருக்கு பூம்பாவை கதை சொல்லிக் கொண்டிருப்பதை பார்த்தேன். ஓடிப்போய் உங்கள் வாசகன் சார் நான் என்றெல்லாம் சொல்லத் தோன்றவில்லை.

வெள்ளை வேட்டி சட்டை தாடி குடுமி சகிதமாய் அவர் உள்ளும் புறமும் உருமாறிக் கொண்டிருந்த நேரம். பிரதோஷ தரிசனம் முடித்து அவர் ஸ்கூட்டியில் போய்விட்டார். அவ்வளவுதான் பாலகுமாரனுக்கும் எனக்குமான ஸ்தூல தொடர்பு. பட்டினத்தார் கோயில், வாலிஸ்வரர் கோயில், முண்டக்கன்னி அம்மன் கோயில், காரைக்கால் அம்மையாரை  பார்க்க திருவாலங்காடு, ஒற்றீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை, கும்பகோணம் பக்கத்தில் பாடகச்சேரி, பார்த்தசாரதி கோயில், சுசீந்தரம் தாணுமலயன் கோயில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர், நெரூர் சதாசிவ பிரம்மந்திரர் என்று சுற்றி விட்டு கோடி முறை போன தஞ்சை பெரியகோயிலுக்குள் உடையார் படித்து விட்டு நுழைந்த போது சோழப் பேரரசு……..சோழம்…சோழம்…சோழம்….என்று யாரோ காதுக்குள் கத்த வாளால் கேடயத்தை அடித்து சப்தமெழுப்புவாக எல்லாம் தோன்றியது.

உடையார் அவ்வளவு ஆழம். எனக்கு இலக்கியமெல்லாம் தெரியாது. வாழ்க்கை தெரியும். வாழ்க்கையின் முன்னும் பின்னும் என்னவாயிருக்கும் என்று தேடத் தெரியும். பாலகுமாரனின் எழுத்து ஆன்மீகத்தை எழுதத் தொடங்கிய போது அவரைக் காதலிக்கத் தொடங்கியவன் நான். இங்கே அனேகருக்கு வேறுவிதம். இருந்து விட்டுப் போகட்டும். எனக்கு இப்படி.

கோயிலின் நடை சாத்திவிட கோயில் முழுதும் சுற்றி வந்தேன். நாங்கொடுத்தனவும், அக்கன் கொடுத்தனவும் பெண்டு பிள்ளைகள் கொடுத்தனவும், உடையார் ராஜராஜத் தேவர் என்ற எழுத்துக்களை எல்லாம் படிக்க முடிந்தது. கல்வெட்டு வாசிப்பில் பாண்டித்திய இல்லை, பாமரத்தனம்தான்.

தஞ்சை மாறிவிட்டது. கோயில் மட்டும் பத்தாம் நூற்றாண்டின் பழமையோடு ஊருக்கு நடுவே, மனிதர் வந்தனர், வணங்கினர், சுற்றினர் சென்றனர் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது. இது ஒன்று போததா வாழ்க்கையை சொல்ல. யாரோ கட்ட எவர் எவரோ வந்து செல்ல, ஏதேதோ பேச, வாழ்க்கை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒரே மாதிரியாய் அல்ல, வெவ்வேறாய்.

கோயிலுக்கு பின் மண்டபத்தில் தலைக்கு பையை வைத்து கோபுரத்தை பார்த்தபடி தூங்கி விட்டேன். தோளைத் தொட்டு ஒருவர் எழுப்ப திடுக்கிட்டு விழித்தேன்…தாடியும் மீசையுமாய் ஒரு பெரியவர், அழுக்கு சட்டையோடு நின்று கொண்டிருந்தார்.
கோயில்ல தூங்கலாமா? என்று அதட்டல் வேறு...

எழுந்து அமர்ந்தேன்.
பக்கத்தில் அமர்ந்தார்.
சொன்னேன்.
சிவன பிடிக்குமா?
ஆமாம்.
அப்போ எல்லாம் முடிஞ்சுது, நீ கெளம்பு.
என்ன சொல்வதென்று தெரியாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 
பேசத் தொடங்கினார்...



-எழுதுவேன்...



தேவா சுப்பையா
15.06.2018



x

Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...