Skip to main content

மெளனத்தின் மெளனம்!



எந்த உந்துதலும் இல்லாத....
ஒரு வெற்று நாளில்....
மனதில் வார்த்தைகளே இல்லாத....
ஒரு இரவு நேரத்தில்...
மெல்லிய மெளனம் ...
என்னைத்தாலாட்டிய தருணத்தில்
இறைவனை நான் கண்டேன்!

மெளனத்தில் வலிமையினை...
நிசப்தத்தில் என்னுள் அவர்
ஊற்ற ஊற்ற.... நிரம்பாமல்...
வெறுமையானேன்!

கனமான வார்தைகளும்..
கவர்ச்சியான பேச்சுக்களும்....
வண்ணமிகு வாழ்க்கைகளும்...
போலியாய் எனைப்பார்த்து
சிரித்தபோது...

சப்தமில்லா அந்த அனுபவம்
என்னுள் என்னை மீண்டும் அமிழ்த்தியது...
மீண்டும் திரும்ப விரும்பாமல்...
அப்படியே நானிருக்க...எண்ணுகையில்..
மெலிதாய் எனை புறம் தள்ளி....
சராசரி வாழ்க்கையில்....
சற்று காலம் இருக்கச்சொன்னார்!

பொய்யான வாழ்க்கைதான்...
பொறுமையாய் வாழ்ந்து பார் என்றார்...
மன அழுக்கான மனிதர்கள்தான்.
நீ மனமின்றி வாழ்ந்து பார் என்றார்...
பணத்தைதான் போற்றுவார்...
நீ பிணம் போல கிடந்து வா என்றார்...!

இரைச்சலுக்கு மத்தியில்
இரைச்சலில்லாமல் வாழ்ந்து என்னை....
கற்பூரம் கரைவது போல
மெல்லவே கரையச்சொன்னார்....!

தாகத்தில் நீராயும்...
மோகத்தில் உச்சமாயும்..
வெயிலில் நிழலாயும்....
இரக்கத்தில் கனிவாயும்..
என்னுடனே இருப்பேன் என்றார்..!

இறைவனின் விருப்பமுடன் தான்...
என் இந்த நிமிடமும் கழிகிறது!
ஊமைகண்ட கனவு போல....
உள்ளுக்குள் விழித்து வெளியே நான் உறங்குகிறேன்!


எல்லோரும் எப்போதும் பேசிப் பேசி... எதையோ எண்ணி எண்ணி மனதில் இடைவிடாமல் வார்த்தைகளை இறைத்து இறைத்து ஒரு வாகன நெரிசலை உண்டு பண்ணிவிட்டு...கடவுளை வெளியில் தேடித் தேடி... கடவுள் இல்லை என்றும் மேலும் சில பொருட்களை சில மனிதர்களை கடவுள் என்று தவறாக எண்ணி... அந்த நபரிடமும் அந்த பொருளிடமும் ஏமாந்து விரக்தியின் உச்சத்தில் நடை பிணமாய் வாழ்ந்து இறை என்றாலே என்ன. .. என்று உணரமுடியாத ஒரு அவல நிலையில் இருக்கிறோம்....!



உங்களின் செயல்களை வெளியே நிகழ்த்துங்கள்.... உங்களின் உள்ளே எல்லாவற்றையும் சாந்தப்படுத்துங்கள்...வார்த்தைகளையும் எண்ணங்களையும்... உற்று நோக்கி நோக்கி... மெல்ல அவற்றை கரையுங்கள்.... நிசப்தம்..... மெளனம்..... மீதமிருப்பது உங்கள் உடல் கூட இல்லை....எதுவுமே இல்லை... ஆழ்ந்த மெளனம்.....

இன்னும் என்ன வார்த்தைகளில் சொல்ல.... உணர்ந்து பாருங்கள்.. குளிரை, வெயிலை... காற்றை..கூடல் சுகத்தை வார்த்தைகளால் வர்ணித்தால் அது பொய்... விளக்கத்தை...வார்த்தைகளில் தேடாமல்.....உங்களுக்குள் தேடுங்கள்...கடவுள் யாரென்று தெரியும்....!


-Dev Subbiah

Comments

வெகு நேர்த்தி.... இதுபோல் காலத்தால் அழிக்க இயலாத (உனது இந்த ஜென்மாந்திரப்பயணம்) காவியங்கள் பலநீபடைக்க எனது வாழ்த்துக்கள் நண்பா....
இந்தப்படம் இந்தப்பக்கத்திற்கு ஏக பொருத்தம்...

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...