Skip to main content

சுடலை...இறுதி பாகம்!





















இதுவரை

இனி...

நல்ல வேல வெரசா வந்த ரெண்டு ஆளுக பிடிச்சு கொண்டு போய்ட்டாக... அந்த ரெண்டு பிசாசுகளையும். வீட்டு திண்ணையிலதேன் நின்னாக சுப்பையாவும் அவுக அப்புவும் ...!

செவ செவன்னு வந்தாருப்பா கருப்பையா பிள்ளை.. ! ஆத்தேய்..........எம்புட்டு உசரம், பவுனு கலரு, கொண்டையா மாறி தோல்ல கிடக்குற முடில இடை இடையே கொஞ்சம் நரை...வெத்தலை பாக்கு போட்டு செவந்து போயிருந்த உதடு.. முரட்டு மீசை, மிரட்ற கண்ணு... வெள்ள வேட்டி.. மேல ஒரு துண்டு...இம்புட்டு பெரிய செயினு எல்லாமா தங்கத்துல போடுவாக....!!!!சுப்பையா இன்னும் ஆச்சர்யத்தில் இருந்து வெளியே வரவில்லை.

"ஏப்பே.. என்ன அங்கனாதான நின்னுகிட்டு...உள்ள வாம்ல...." அவரு கொடுத்த சத்ததுல பேசாம உள்ளே போனாக சுப்பையவும் அவுக அப்புவும்."

வீட்ல வேலைக்கின்னே பத்து ஆளுக, அடி புடி சன்டைக்கின்னே பத்து ஆளுக இருப்பாக தம்பி...! அண்ணனுக்கு கண்டில (இலங்கை) கடை இருக்கு நல்ல யாவாரம். அடிக்கடி மலேசியா போய்ட்டு வருவாக.....! நாம சாப்பிடும் போது சோறு போனிச்சில்ல உன்னைய தண்டி டிப்பன் கேரியர்ல சுப்பையாவின் உயரத்தை காட்டி பேசிக் கொண்டிருந்தார்....அவுக அப்பு...! அந்த டிப்பன் கேரியர் அவுக மயன் சிரமட்டானுக்கு போகுதுப்பே....!


சிரமட்டானுக்கு எதுக்கு வேல வெட்டி....? அவன் நாட்டரசன் கோட்டையில் கிளப்புல சீட்டு விளையாடிகிட்டு இருப்பான்.....! காசும் சோறும் வீட்ல இருந்துதேன் போகுதுன்ன்னு அப்பு சொல்லிக் கொண்டே போனார்....!கொள்ளை காசு இருக்குப்பா..அதேன் அவுக அப்படி இருக்காக....நாம எல்லாம் வயக்காட்டுல இறங்கி வேல செஞ்சாதேன் நமக்கு மூணு வேல கஞ்சியாச்சும் கிடைக்கும்.....பேசிக் கொண்டே இருந்தார் சுப்பையாவின் அப்பு...கேட்டுக் கொண்டே நடந்தான் சுப்பையா.

சுப்பையாவுக்கே நல்லா தெரியும்...கருப்பையா பிள்ளை ஊருக்குள்ள வாராறுன்னா...கிளுவச்சி தாண்டி வண்டி வரும் போதே மாடுக வர சலங்க சத்தம் கேக்க அரம்பிக்கும்! ஊருக்குள்ள இருக்குற மக்கமாருக்கெல்லாம் கிறுக்கு புடிக்க ஆரம்பிக்கும். கூட்டு வண்டி வச்சு இருக்கவக அப்போ எல்லாம் பெரிய ஆளுக...!எல்லாரும் தட்டு வண்டிதான் வச்சு இருப்பாக அதுவும் வெள்ளாம வெளச்சலுக்ககாக... கூட்டு வண்டி வச்சி இருக்கவக பயணப்பட மட்டும்தேன்........

இரட்டை மாட்டு வண்டி பூட்டி, மாட்டுக் கொம்புகளுக்கு பூண் போட்டு கழுத்துல சலங்கை கட்டி வந்திருச்சுயா வண்டி ஜோரா ஊருக்குள்ள! சனமெல்லாம் திரண்டு நிக்கிது ரெண்டு பக்கமும் கருப்பையா பிள்ளைய பாக்க....! அவரு வருவாருன்னே எடுக்காத ரங்கூன் கம்பளத்த எடுத்து விரிச்சு, வீடு முன்னால சாணி தெளிச்சு கோலம் போட்டு....யாரு வந்தாலும் எடுக்கதா பீங்கான் பலிங்கத்த (வெற்றிலை எச்சில் துப்பும் பாத்திரம்) எடுத்து வெச்சு வீடு தொடச்சி....வெத்திலைய பரப்பி வச்சு குடிக்க பானகம் கரைச்சு வச்சு காத்தே கிடக்குது சுப்பையாவோட வீடு…!

கருப்பையா பிள்ளை வந்து வண்டிய விட்டு இறங்குறதும், அவரையும் அவரோட பெண்டையும் ஊருசனம் வாய்பிளந்து வேடிக்கை பார்க்குறதும் அவர் உக்காந்து வெத்திலை போட்டுகிட்டு செவக்க செவக்க அவரோடு கண்டி கடை பத்தியும், மலேசிய பயணத்தையும் பத்தி சொல்றதையும்னு... ஊரு சனமே வாய பொளந்து கிட்டு கேக்குறதை விட அவரு உடுத்தியிருக்கிற பட்டு சட்டையையும் வேட்டியையும் அங்கவஸ்திரத்தையும், கழுத்து செயினையும் பாக்க நிக்குற கூட்டம்தான் அதிகமிருக்கும்....

வந்துட்டு போகும் போது கை நெறய எல்லாருக்கும் காசு கொடுத்துட்டு போவாரு கானா ரூனா..ஆமாம் அப்படித்தேன் ஊரு சனமே கூப்பிடும்....! போய் ரெண்டு நா வரைகும் ஊருக்குள்ள பேச்சு இருக்கும் கானா ரூன வந்தாரப்பே.. நான் பாத்தேனப்பே.. என்ன மனுசன் தெரியுமான்னு முக்குக்கு முக்கு நின்னு பேசிக்கிட்டு இருப்பாக....

இப்படியே போன வாழ்கையில் எவமுட்டு கொள்ளி கண்னு பட்டிச்சோ..தெரியல ..!சுப்பையாவுக்கு அரச புரசலா வீட்டுல பெரியவுக பேசுற பேச்சுல இருந்து ஏதோ புரிஞ்சுச்சு.. கானா ரூனவுக்கு தொழிலு நொடிச்சு போச்சாம், கண்டி கடைய கூட வித்துப்புட்டாறாம்...மலேசியாவுல யாரோ கொடுக்கவேண்டிய காச ஏச்சுபுட்டாகளாம்...இப்படி கேட்டுகிட்டே இருந்த சுப்பையாவுக்கு ஒரு நா கானா ரூனா சம்ஸாரம் தவறிப்போச்சுன்னு அப்பும் ஆத்தாளும் அழுதுகிட்டு பருத்திகம்மாயிக்கு ஓடுனத பாத்து வெலவெலத்து போச்சு.....!

ஆத்தி...ஒரு மனுசன கடவுளு எம்புட்டுதேன் சோதிப்பாரு.....ன்னு பயந்தே போனான் சுப்பையா...

கானா ரூனா சம்ஸாரம் தவறி ஒரு மாசத்துக்குள்ள பருத்திகம்மா வீட்டயும் கடங்காரவுக கிட்ட கொடுத்துபுட்டு...புள்ளையள எல்லாம் கானா ரூனா அக்கா வீட்டுக்கு சீமைக்கு அனுப்பி விட்டதா சொன்னாக....

ஒரு நா சுப்பையா சோட்டு பயலுக கூட வெளையாடிக்கிட்டு இருந்தான் தெருவுல.....! அட..யரோ ஒரு கிறுக்குப்பய கையல் குச்சியோட ஒத்த கோமணத்தோட தாடியும் மீசையுமா வாறனப்பா ஊருக்குள்ள...வெளயாட்ட நிறுத்தி புட்டு புள்ளக்குட்டியெல்லாம் போய் அவன சுத்தி சுத்தி ஏசுதுக...கத்தி கத்தி பரிகாசம் பண்ணி விளையாடுதுக....

"கோவணாண்டி.. கோவணான்டி...கொட்டங்குச்சி கையில வச்சிருக்க கோவணான்டி" ன்னு பக்கிய பாட்ட வேற பாடுதுக......

மெல்ல போயி சுப்பைய குறு குறுன்னு பாத்தான் அந்த பைத்தியத்த......

"யப்பே......கானா ரூனாவுல்லா வந்திருக்காருன்னு......"

கத்திக்கிட்டு வீட்டுப்பக்கம் பரிஞ்சு ஓடியே போனான் சுப்பையா....! கொஞ்ச நாளாவே.. வீட்ட வித்துப்புட்டு சீமை பக்கம் போறேன்னு சொல்லிட்டுப் போன கானா ரூனாவ அதுக்கப்புறம் யாருமே காங்கல...!இப்போதேன் கிராமமே கூடி நின்னு காங்குதுக.....!

சுப்பையாவோட அப்பு எம்புட்டோ மல்லுக்கு நின்னு வீட்ட்டுக்கு வாங்கனேன்னு கெஞ்சி பாத்தாரு..ம் ஹும் ஒண்ணும் கத நடக்கல! கருப்பையா பிள்ளை கலரு மங்கிப் போயி..கண்ணு எல்லாம் குழிஞ்சு போயி, கன்னம் ஒட்டிப்போயி .. கம்பங்கதிரு போல கொளுத்து நின்ன மனுசன்.. கருக்கருவாமாறி கருத்துப் போயி இருக்காரப்பா.....

" ஏப்பே அவரு கிறுக்கோண்டு போயிட்டாருப்பே...." விட்டுத் தள்ளுங்க ...அப்போ அப்போ....காணுற ஆளுக கஞ்சிய தண்ணீய கொடுக்கணும்னு முடிவு பண்ணிப்புட்டு கலைஞ்சே போச்சு....ஊரு சனம்...!

நிதமும் சுப்பையா கானா ரூனாவ தெருவுல காங்குறதும்...வீடு வீடா போயி கான ரூனா சோறு வாங்கி உங்கறதும்னு ஓடிகிட்டே இருந்தச்சு பொழுது. சுப்பையா மட்டும் நினைப்பான் இடைக்கி இடைக்கி....எப்படி இருந்த மனுசன்..ஊரே கூடி வேடிக்கை பாத்த ஆளு....இப்போ சீண்ட கூட நாதி இல்லாமே எல்லாம் தோத்துப்புட்டு இப்படி கிறுக்கோண்டு அலையுதே...தெருவுல....


" ஏ சாமிகளா....எங்களா போனீக....மனுசப் பொறப்ப இப்படி சீரழியற பொறப்பா படச்சிபுட்டு...எங்களா சாலியா இருக்கீக....! வருசமான பொங்க ஆடு கோழின்னு பழிகொடுக்குறம்லா.....! பூசை, மாலைன்னு போங்க............சாமீகளா... நீங்க ஏக்கிறீக.......மனுசப்பய எல்லாம் ஏமாந்து நிக்கிறாய்ங்க.....! நெசமாவே நீங்க இருந்தா இந்த மனுசன இப்படி சீரழிப்பியலா...மூச்சுக்கு முன்னுறு தடவ.........நமச்சிவாயா நமச்சிவாயான்னு சொன்ன மனுசன இப்படி கோவணத்தோட கிறுக்கோண்டு போக வச்சுபுட்டியளே..." சுப்பையாவுக்கு ஆத்திரமும் அழுகையும் வெடித்துக்கொண்டு வந்தது.

காசு இருக்கப்ப பேதில போவாய்ங்க வந்து வேடிக்க பாத்தாய்ங்ஙே...! ஆகா ஓகோன்னு முகத்துக்கு நேர பேசுனாய்ங்க...காசு இல்லேன்னா..மதிக்கமாட்டாய்ங்க... ! எலே மக்கா வாங்க.. இந்தா கானாரூனா வந்து இருக்காரு.. புளிய மரத்தடியில சுருண்டு படுத்து கிடக்காரு....! வர்றவன் போறவனுக்கெல்லாம் அள்ளி கொடுத்த மனுசன்.. இந்தா புழுதில கிடக்காரு....வாங்க மக்கா...! ஒரு நாதியும் வராது...கானாரூனாகிட்டதான் காசு இல்லையே....இப்ப...!

ரெண்டு மூணு நா புளிய மரத்தடில கிடந்த மனுசன் நாலாம் நா படக்குன்னு செத்துப்போனாரு...! என்ன நினைச்சு உசுர விட்டாரோ மகராசன்...

"ஆண்டு அழிஞ்சு போச்சே...
அயிர மீனு காஞ்சு போச்சே....
கொளத்து தண்ணியெல்லாம்...
கோடையில வத்திப் போச்சே....
ஊர ஆண்ட மகராசான்
உடம்ப விட்டு உசுரு போச்சே!

ஆடி ஆத்தி.....ஆத்தி...ஆத்தி..ஆத்தி...ஆத்தி...!"

சுப்பையாவோட அப்பத்தா நெஞ்சுல அடிச்சுகிட்டு அழுதத சுப்பையா இன்னும் மறக்கல......!

" ஏய் தம்பியோவ்.... நான் பொணத்த எரிக்க போறேன் நீ கெளம்பு ராசா" சுப்பையாவோட நினைவை அசைச்சுப் போட்டாரு.......மாசானம்...! அண்ணே செத்தவடம் இருந்து பாத்திட்டு போறேண்ணே....! கெஞ்சலுக்கு வழி விட்டு... மாசானம் பேசாம சோலிய பாக்க போனாரு....

கொளுந்து விட்டு நெருப்பு மனுச உடம்பு மேல பத்துறதா கண்ணு கொட்டம பாத்துகிட்டே இருந்தான் சுப்பையா...! டப் டப்னு சத்தம் வந்துச்சு செத்த வடத்துக்குள்ள..மாசானம் சொன்னாரு.. தம்பி நரம்பு எல்லாம் இறுக்கமாகி அறுகுது பத்தியான்னு சொல்லிப்புட்டு..

கெக்க.. கெக்க கெக்கன்னு வேகமா சிரிச்சாரய்யா மாசானம்... !

அப்பதேன் பொணத்த பாத்து கூட பயப்படாத சுப்பையா கெலுக்குன்னு பயந்தே போனான்....! சுதாரிச்சிகிட்டு மறுக்கா சிரிச்சு வச்சான்…! தம்பி.. இப்ப உடம்பு எந்திரிக்கும் பாருன்னு சொல்லிகிட்டே நரம்பு எல்லாம் இறுக்கமாயி வெறச்சு எழுந்த பொணத்துல.......

" நெஞ்சுல ஒரு அடி......! காலு முட்டிக்கு பக்கத்துல ஒரு அடி......! கம்புல அடிச்ச வேகத்துல சொன்னாருப்பா மாசானம்....அம்புட்டுதேன்..... மனுசப்பய பொறப்புன்னு....." சொல்லிப்புட்டு.... பைக்குள்ல வச்சிருந்த உடுக்கைய எடுத்து....மனுசன் அடிச்சாரு பாருங்க...

" த்துதும்..தும்..தும் தும்..த்த்தும்தும் தும் த்தும் தும்தும்....த்துதும் தும் தும்.. தும்ம் தும்த்துதுதும் "

நாடி நரம்பு எல்லாம் எந்திருச்சு நின்னு ஒரு ஆட்டம் உள்ளுக்குள்ளேயே நடந்துச்சு சுப்பையாவுக்கு...!

உலகமே ஆட்டம்...! உலகமே ஓட்டம்....! எல்லாமே...எல்லாமே கண்ணுக்கு தெரியுற எல்லாமே...ஓண்ணுவிடாம ஒழிஞ்சு போகும்....! இந்த உடுக்கைல வர்ற சப்தம் மாறி... அழுத்தமா அடிச்சு சப்தமா வெளிய வந்து காத்துல கரைஞ்சு மெலிஞ்சு கரைஞ்சு போற மாதிரி....

மனுசப்பய வாழ்க்கையும் ...ஆர்ப்பட்டமா அழுத்தமா ஆரம்பிச்சு....மெலிஞ்சு ஒழிஞ்சு தேஞ்சு போகுகுப்பேய்....!..... சப்தத்துக்கு அர்த்தம் இருக்கா...? இல்லை.. ஆன சப்தம் இருக்கு..! காத்துல கேக்குற வரைக்கும் ஓசை... கரைஞ்சு போனா... ஒண்ணுமில்ல...!

எங்க போச்சு ஏன் மறஞ்சு போச்சுன்னு என்னிக்காச்சும் ஆராஞ்சு இருக்கமா இல்லைல..அது மாதிரிதான்.. மனுச வாழ்க்கையும்...செத்துப் போனா போய்ட்டான்...அம்புட்டுதேன் அவனாச்சு.. அவன் உடம்பாச்சு அவன் உசுராச்சு...! என்னத்துக்கு ஆராய்ச்சி? என்னதுக்கு களவாணித்தனமான கற்பனை....போங்கப்பே...போங்க.... ! சுப்பையாவுக்குள்ள என்ன என்னமோ தோணிச்சு....

" எலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் சுப்பையோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! "

துரத்துல ஆத்தாவோட (அம்மா) குரலு காத்துல சுப்பையாவ தேட ஆரம்பிச்ச நேரம்.....பதில் கொரல் கொடுத்தான் சுப்பையா ....

" இதோ வாரேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ஆத்த்த்தோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!"

சுப்பையாவின் சத்தம் காற்றை கிழித்துக் கொண்டு போனது ஆனால் மாசானம் உடுக்கை அடியை நிறுத்த வில்லை......! கிளம்புறேன் அண்ணே சுப்பையா சொன்னது மாசானம் காதில் ஏறவில்லை....அவர் தன்னிலையில் இல்லை எனபது சுப்பையாவுக்கு புரிந்தது...

வீடு நோக்கி இருட்டில் நடந்து கொண்டிருந்தான் சுப்பையா...........காற்றில் உடுக்கை சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது...........

" த்துதும்..தும்..தும் தும்..த்த்தும்தும் தும் த்தும் தும்தும்....த்துதும் தும் தும்.. தும்ம் தும்த்துதுதும் "



தேவா. S

Comments

உண்மைய சொல்லனும்னா திக்கிப்போயி நிக்கிறேன் என்ன சொல்லுறாதுன்னு தெரியாம.... கதையின், நடையின் வீச்சுல. பெரிய பாரத்த ஏத்தி வைச்ச மாதிரி இருக்கு, மனசுகுள்ள. இப்புடித்தான் முடியப்போகுது மனுச வாழ்க்கைன்னு தெரிஞ்சே, மனுச பயபுள்ள மனசு எப்புடியெல்லாம் ஆடுது குரங்கு மாதிரி.
//எலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் சுப்பையோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! "//

//" இதோ வாரேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ஆத்த்த்தோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!"//

அண்ணே உங்க keyboard-ல எதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். செக் பண்ணுங்க
Ungalranga said…
முடிவு இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் இருந்திருக்கலாம்னு தோணுது பாஸ்!! :))

எ வெரி நைஸ் ஸ்டோரி..!!
thiyaa said…
அருமையான கதை
கதையின் நடை,
நகர்வு எல்லாம் அருமை
உங்கள் ஊரின் பேச்சு வழக்கில் வருவதை அப்படியே எழுதி இருக்கிறது நல்ல இருக்கு அண்ணா
" நெஞ்சுல ஒரு அடி......! காலு முட்டிக்கு பக்கத்துல ஒரு அடி......! கம்புல அடிச்ச வேகத்துல சொன்னாருப்பா மாசானம்....அம்புட்டுதேன்..... மனுசப்பய பொறப்புன்னு.....//////

உண்மையை ரொம்ப சாதரணமா சொல்லிட்டிங்க
//"ஆண்டு அழிஞ்சு போச்சே...
அயிர மீனு காஞ்சு போச்சே....
கொளத்து தண்ணியெல்லாம்...
கோடையில வத்திப் போச்சே....
ஊர ஆண்ட மகராசான்
உடம்ப விட்டு உசுரு போச்சே!//

ஹய்யோ ., இது மாதிரியெல்லாம் எப்படி எழுத முடியுது அண்ணா ., உண்மைலேயே எனக்கு இதுக்கு கமெண்ட் போடா கூட தெரியலை ..!!
//கம்பங்கதிரு போல கொளுத்து நின்ன மனுசன்.. கருக்கருவாமாறி கருத்துப் போயி இருக்காரப்பா.....//

நல்ல உவமை...

///"ஆண்டு அழிஞ்சு போச்சே...
அயிர மீனு காஞ்சு போச்சே....
கொளத்து தண்ணியெல்லாம்...
கோடையில வத்திப் போச்சே....
ஊர ஆண்ட மகராசான்
உடம்ப விட்டு உசுரு போச்சே!

ஆடி ஆத்தி.....ஆத்தி...ஆத்தி..ஆத்தி...ஆத்தி...!"///

ஆத்தி... அப்பத்தா அழுதது எனக்கே மனசு ஆடிப்போச்சு...!
//சப்தத்துக்கு அர்த்தம் இருக்கா...? இல்லை.. ஆன சப்தம் இருக்கு..! காத்துல கேக்குற வரைக்கும் ஓசை... கரைஞ்சு போனா... ஒண்ணுமில்ல...!//

சிந்திக்க வைக்கிறது.................
அருமையான கதை..
அழகான நடை..
சிந்திக்க வைக்கும் வார்த்தைகள்...
Anonymous said…
Dheva

Pls visit this site and give some punches to this
stupid

http://ilavarasanr.blogspot.com/2010/10/blog-post_19.html
ரொம்ப நல்லா இருக்கு.
பின்னூட்டம் போடுறப்ப திடீர்னு நான் கடவுள் பாட்டு வந்துச்சு. கட்டுரை படிக்கறப்ப வரல. இப்போதான் போட்டீங்களா? நல்லாயிருக்கு.
Kousalya Raj said…
//உலகமே ஆட்டம்...! உலகமே ஓட்டம்....! எல்லாமே...எல்லாமே கண்ணுக்கு தெரியுற எல்லாமே...ஓண்ணுவிடாம ஒழிஞ்சு போகும்....!//

'ஆறடி நிலமே சொந்தம்' என்பது கூட இப்போது மாறி மின்சார சுடுகாட்டின் வருகையால் ஒரு கிளாஸ் அளவு சாம்பலாய் முடிந்து போகிறோம் .....!! இந்த யதார்த்தம் உணராமல் என்னவோ மிதப்பில் அலைகிறோம்.....!

நல்ல அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்...வரிகள்......வாசிப்பவர்களை எழுத்துக்குள் இழுத்து கொண்டு வந்து விட்டீர்கள் ....

:)
அருமையான நடை..!
அருமையான கதை..!!
வாசிப்பவர்களை அப்படியே இழுத்துச்செல்லும் நடை.. அருமையா இருக்கு.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த