Skip to main content

Posts

Showing posts from 2011

பாலகுமாரன் என்னுடைய குரு...!

பாலகுமாரன் தாக்கம் நிறைய இருக்கு நீங்க எழுதுற எழுத்துலன்னு நிறைய பேர் என்கிட்ட சொல்லவும் செய்றாங்க, மின்னஞ்சலும் செய்றாங்க. சில பேர் அதை மாத்திக்கச் சொல்லியும் ஆலோசனை சொல்றாங்க...! என்கிட்ட கண்டிப்பா பாலகுமாரனோட தாக்கம் இருக்கத்தாங்க செய்யும். என்னைப் பொறுத்தவரைக்கும் எழுத்து அப்டீன்றதோட ஆழத்தை நான் ருசிச்சு அனுபவிச்சது பாலகுமாரன்கிட்டதான். இன்னிக்கு வரைக்கும் அந்த ருசி மாறாம இருக்கு. ஆனா தயவு செஞ்சு பாலா சார் மாதிரி எழுதுறேன்னு மட்டும் சொல்லிடாதீங்க... நிறைய பேர் அப்டி தான் எழுதுறதா நம்புறாங்க, வெளிலயும் சொல்லிக்கிறாங்க. ஆனா பாலா சார் மாதிரி ஒருத்தர்தாங்க இருக்க முடியும். அவருடைய தாக்கத்தை நாம நம்ம வழியில நின்னு சொல்லும் போது சில வார்த்தையாடல்களில் நமக்குள் நம்முடைய ஆஸ்தான குரு வந்து உக்காந்துடுவார். குரு அப்டீன்ற வார்த்தை ரொம்ப பெரிய வார்த்தை மட்டும் இல்லை இருக்குற அத்தனை வார்த்தைகளிலும் ரொம்ப புனிதமானதும் வலிமையானதும் கூட. ஒரு குரு எப்போதும் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னை நேசிக்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை. அவர் ஒரு தன்னிச்சையான நிகழ்வாத்தான் இருக்கிறார். வெளில இருந்து பேசுறவ

இதுக்குப் போயி அலட்டிக்கலாமா...!

ஒரு வித தாள கதியில் இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது வாழ்க்கை. எப்போதும் சுற்றியிருக்கும் காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. வந்தவர்கள் எல்லாம் சென்று விட்டார்கள். இருப்பவர்களும் சென்று விடுவார்கள். நாளை நானும் இருக்க மாட்டேன். என்னைச் சுற்றியிருக்கும் எல்லாம் மாறும். காலங்கள் கடந்தும் ஏதேதோ ரகசியங்களை தன்னுள் அடக்கிக்கொண்டு எப்போதும் மெளனமாய் பார்த்துச் சிரிக்கிறது அந்த பிரமாண்ட வானம். மெளனமாய் சூரியனைச் சுற்றி வரும் இந்தப் பூமிக்குத் தெரியும் அதன் மூலமும் மூலத்தின் ஆழமும். வெற்றுப் பிண்டமாய் ஜனித்து விழுந்து யாரோ இட்டப் பெயரை நானென்று கொண்டு, ஐம்புலன்களும் சுவீகரித்த அனுபவத் தொகுப்புகளை நான், நான் என்று கூவிக் கூவி நான் கோபம் கொள்கிறேன்,காதல் கொள்கிறேன்,காமம் கொள்கிறேன், சிரிக்கிறேன்? ரசிக்கிறேன், நடிக்கிறேன், உரக்க, உரக்க சப்தமாய் பேசுகிறேன், உறக்கமும் விழிப்புமாய் மாறி, மாறி உணர்வுகளுக்குள்ளேயே வேடங்களிட்டுக் கொள்கிறேன். விடாமல் துரத்தும் இரவும் பகலும் கூடி மாற்றங்களை வயதென்று எனக்குப் போதிக்கின்றன. நான் விரும்பி நகரும் பாதையென்று நினைத்துக் கொண்டிருப்பது எல்லாம் திணிக்கப்பட்டது

எழுத்துக்களால் ஒரு போர்....!

ஆழமான எண்ணங்களும், தீராத வேட்கைகளும் கருத்து வடிவத்தில் இருந்து வெளிப்பட்டு எழுத்தாகிறது, வாய்ப்புக்களின் அடிப்படையில் பேச்சாகவும் அது உருக்கொள்கிறது. சக்தி வடிவமான எழுத்துக்களால் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தை வரலாறு எப்போதும் தகர்த்தெறிந்து கொண்டே தனது நகர்வினை ஆக்கப்பூர்வமான விளைவுகளாய் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. சமூகம் என்ற கட்டமைப்பில் சேவைகள் அல்லது வழிகாட்டுதல்கள் காலம், காலமாக பல்வேறு தரப்பட்ட சமூகச் சூழல்களில், பல பரிமாணங்களில் மனிதர்களால் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. சமூக இயங்கு நிலையில் அறிவூட்டும் மனிதர்கள் எல்லோருமே ஒரு மேல் தளத்தில் நின்று கொண்டு தனக்கு கீழிருக்கும் மனிதர்களுக்கு ஏதோ ஒரு போதனையைச் செய்வதையும், சமூக விழிப்புணர்வு மற்றும் சேவை என்ற பெயரில் புறத்தில் செயல்கள் செய்து, மனிதர்களே...! பின்பற்றுங்கள் என்று அறைகூவல் விடுப்பதையும் தனது வழமையாக கொண்டிருக்கிறார்கள். இந்த வழிமுறைகளை எல்லாம் பின்பற்றி காலம் கடந்து நாம் இன்று நின்று கொண்டிருக்கிறோம். அவலங்கள் தீர்ந்து விட்டதா? நாம் பேசிய வார்த்தைகள் எல்லாம் மனிதர்களுக்குப் புரிந்து விட்டதா? அன்பையு

உன்னால் முடியும் தம்பி....!

ஒரு கட்டுரை எழுதி அதன் தாக்கம் மனசு முழுக்க இருக்கும் போது டக்குன்னு இன்னொரு டாப்பிக்குள்ள தாவிப் போறது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. கொஞ்சமா பொட்டுக் கடலை வாங்கி வீட்டு வாசல்ல உட்கார்ந்து சாப்டாலும் அனுபவிச்சு சாப்பிடணும்.... பரக்கா வெட்டி மாதிரி லபக் லபக்க்னு அள்ளி வாய்ல போட்டுட்டும் போகலாம்... ஆனா அனுபவித்தல் அப்டீன்றதுலதான் வாழ்க்கையோட சுவாரஸ்யமே இருக்கு... சந்தோசத்தை மட்டும் அனுபவிக்கணும் அப்டீன்னு ஒரு வரைமுறை எல்லாம் கிடையாதுங்க. கஷ்டத்தைக் கூட அணு அணுவா அனுபவிச்சுக்கிட்டே ஒரு சிங்கம் மாதிரி வரப்போற பிரச்சினைகளை எதிர் நோக்கி நேருக்கு நேரா.......அதை நாம சந்திக்கிற இடமே ரொம்ப தில்லான இடம்தான். வலிக்கும்தான்.... ஆனாலும்....பரவாயில்லைன்னு சொல்லிட்டு வா....பிரச்சினையே வா....நான் ரெடின்னு பிடறி மயிர் சிலிர்க்க நிக்கணும்.... கல்லூரி முடிச்சு அடுத்த கட்டம் அதாவது ஒரு வேலைக்கு போறதுக்கு முன் இருக்கும் காலங்கள் எவ்வளவு வலியானதுன்னு அதை அனுபவிச்சவங்களுக்குத் தான் தெரியும். நூறு பேருல இருபது பேர் நல்லா படிச்சு மெரிட்ல மார்க் வாங்கி சப்ஜக்ட் நாலேஜோட வேலைக்கு சேர்ந்துடுறாங்கன்றத ஒரு உதாரணமா வச்ச

வானம் பார்த்த பூமி....!

காலத்தின் ஓட்டத்தில் எல்லாமே நிகழ்ந்தேறி விடுகிறது. ஆமாம் எந்த வித கலை, இலக்கிய பாரம்பரியமும் இல்லாத நான் இப்போது எழுதிக் கொண்டிருப்பதைப் போல. புத்தங்கள் வாசித்ததை விட வேறு பெரிய இலக்கிய ஞானம் எனக்குக் கிடையாது. ஒரு கதை, மற்றும் கவிதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற எந்த வித இலக்கிய மரபுகளும் தெரியாமல்.... தமிழில் தட்டச்சு செய்யலாம் என்பதை அறிந்து ஆங்கில விசைப்பலகையை தட்டிய போது தவழ்ந்து வந்த என் தாய்த்தமிழைக் கண்டு, அந்த வியப்பிலேயே என் எண்ணங்களை எழுத்தாக்கிக் கொண்டிருக்கும் ஒரு பாமரன் நான். அதுவும் பதிவுலகம் என்றால் என்ன என்று தெரியாமலேயே கூகிளுக்குள் நுழைந்து பார்க்கையில் ஏதோ பிளாக் ஸ்பாட் என்று ஒன்று உள்ளது இதில் நாம் ஒரு வலைத்தளம் தொடங்கலாம் என்று அறிந்து 2006லேயே வலைப்பூவைத் தொடங்கி விட்டு அதில் எப்படி எழுதுவது என்று தெரியாமலேயே 4 வருடங்களை ஓட்டியும் விட்டேன். எழுதவேண்டும் என்ற எண்ணம் வந்ததற்கு காரணமாய் என் குருக்கத்தி கிராமம் இருந்தது. அது என்ன உங்கள் ஊர் உங்களை எழுதச் சொன்னதா என்று புருவம் உயர்த்துகிறீர்களா? ஆமாம்... 21 ஆம் நூற்றாண்டின் இந்த நவீன நகர்தலுக்கு நடுவேயும் இன்னம

தேடல்.....22.12.2011!

என் நெஞ்சமெல்லாம் நிறைந்து கிடக்கும் ஒற்றை வார்த்தையும் உணர்வாயிருக்கையில் ஓராயிரம் தரம் மூளை உச்சரிக்கும் அந்த மந்திரமும் ஆதியில் சப்தமான உச்சரிப்புகளாய் எம்மிடம் இருந்து, இருந்து உச்சரிப்புக்களை கடந்து மெளனமான மனதின் உச்சரிப்புக்களாக சப்தங்களை உடலுக்குள் இறைத்துக் கொண்டேதான் இருந்தது....ஒரு கட்டத்தில் அதுவும் நின்று போய் சுவாத்தினூடே பரவி மூளைகளுக்குள் எண்ணங்களைப் பரப்பும் பிராணனே அதுவாகிப் போனது..... பிராணனே அதுவாகிப் போனதால் உடலின் தாது உப்புக்களும் அதுவாகிப் போய் உடலின் வேண்டிய, வேண்டாத எல்லாமாய் நிறைந்து போனபோது தனித்தே ஒரு மந்திரமும் இல்லை தனித்த ஒரு இறையும் இல்லை என்று எனக்கு விளங்க வைத்தது அது....வார்த்தைகளைக் கடந்து இப்பிரபஞ்சம் எங்கும் நிறைந்து கிடக்கிறது என்பதையும் உணர வைத்து, அதுவே அன்பாயும், இன்பமாயும், துன்பமாயும், பார்க்கத் தகுந்ததாயும், பார்க்க விரும்பாததாயும், வெற்றியாயும், தோல்வியாயும், நண்பனாகவும், எதிரியாகவும், சொல்லில் கொண்டு வரக்கூடிய அத்தனையாயும், சொல்லவொண்ணா பொருட்களாயும், பொருண்மை நிறைந்ததாகவும், சூட்சும அதிர்வுகளாகவும் விரவிப் பரவி கிடக்கிறது....என்று உணர்ந்த

காட்டுப் பூக்கள்...!

சுத்த சரீரங்களை சுரமாகக் கொண்ட வாசகன் விரும்பும் மெல்லிசையல்ல எமது எழுத்துக்கள்...! அவை கர்ண கொடூரமான கரடு முரடுகளைச் சுமந்த கேட்கவொண்ணா சப்தங்களால் ஆனா முரட்டு ராட்சசனின் கர்ஜனைகள்! நளினங்களை கூட்டிக் கழித்து விழிகளுக்கு விருந்து கொடுக்கும் ஓவியங்களை எப்போதும் நாம் சமைப்பதில்லை...., மாறாக... புலன்களைக் கடந்த புத்திகளுக்குள் ஜனிக்கும் கோணல் மாணல் கோடுகளை கோரமாய் வெகுண்டெழச் செய்து விரும்பத்தகா பிரமாண்டங்களாக்கவே முயன்று கொண்டிருக்கிறோம்..! அழகியலைப் பட்டியலிடும் கூட்டத்தில் யாம் எப்போதும் வரிசையில் நிற்பதும் கிடையாது உயரங்களில் இருப்பதாலேயே எல்லோரையும் அண்ணாந்து பார்ப்பதும் கிடையாது...! வாழ்க்கையை எழுத்தாக்கையில் வசீகரம் எதற்கு... வசீகரமாகவே எல்லாம் இருந்து விட்டால் வாழ்க்கைதான் எதற்கு...? ஆமாம்... இது கரடு முரடான பாதைதான் காட்டருவி கொட்டும் கடக்க முடியா வழிமுறைதான் ஆனால் மறுத்து நகர்ந்தாலும் இயற்கை என்பது இயல்புதானே? இல்லை என்றாலும் இருப்பு என்பது நிஜம்தானே...? அதனால்.... அக்னியில் கோடுகள் கிழித்து முற்கள் தைத்த வார்த்தைகளால் எமது முதுகெலும்பின் நீட்சிகளை உடைத்து எப்போதும் இராட்சச வடி

கடவுளின் காதல்...!

என்னை யாரென்று... அவளுக்குத் தெரியாது! அவளிடம் நான் பேசியது கூட இல்லை; புகைப்படத்தில்தான் என்னை அவளும் அவளை நானும் பார்த்திருக்கிறோம்.... என் இயல்புகளை அவள் அறிந்ததில்லை அவளின் இயல்புகளை நானறிந்ததுமில்லை எங்களிடம் தினசரி பகிர்தல்கள் இல்லை; பொய்யான புரிதல்கள் இல்லை; எப்போதும் புகைப்படங்களில் மட்டுமே புன்னகைகளை பரிமாறிக் கொள்வோம்... அவள் வாழ்க்கையை அவள் வாழ்கிறாள் என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன்... அவளை காதலிப்பதாக நானும் என்னை காதலிப்பதாக அவளும் எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை என் கவிதை வரிகளில் பல நேரம் அவள்தான் பவனி வருவாள் என்பது கூட அவளுக்குத் தெரியாது; பரிட்சையம் இல்லாத இந்த உறவினை... மனம் காதலென்கிறது; புத்தி கடவுள் என்கிறது; அவ்வளவுதான்...! தேவா. S

விலக்கப்பட்ட கனி...!

விலக்கப்பட்ட கனியை புசித்து முடித்திருக்கையில் வக்கிர புன்னகையை மெலிதாய் துடைத்துக் கொண்டான் சாத்தானுக்குள் இருந்த கடவுள்..! மறுக்கப்பட்டதின் விதிகளை படைப்புகள் எப்போதும் அத்துமீறும் என்பதாலேயே மீறலுக்காய் மறுத்து வைத்த பாவ பரிமாற்றமாய் மாறிப் போனது பிரபஞ்சத்தின் மைய முடிச்சு...! எட்டாவது படிக்கையில் எதிர் வீட்டு ஜெயஷ்ஸ்ரீ அக்காவுக்கு முத்தம் கொடுத்த பக்கத்து வீட்டு அண்ணனுக்குள் ஒளிந்திருந்து... அது எட்டிப் பார்த்தது; கீதா டீச்சரிடம் சேட்டைகள் செய்த முருகேசன் வாத்தியாரின் மூளைக்குள் பிடிவாதமாய் சம்மணக் காலிட்டு.. அமர்ந்திருந்தது; நெரிசலான பேருந்தில் ஒரு பெரியம்மாவை இடித்துப் பார்த்த தடியனுக்குள் கம்பீரமாய் நின்று கொண்டும்; நாடார் கடையில் சாமான் வாங்கையில் செல்வி அத்தையின் இடுப்பை முறைத்துப் பார்த்த பொட்டணம் போடும் கணேசனின் விழிகளில் கள்ளத்தனமாய்... எட்டிப் பார்த்தும்... ஆதியில் விலக்கப்பட்டதாய் கற்பிதம் கொண்ட ஒன்று எப்போதும் பல் இளித்து இருப்பினைக்காட்டி விட்டு .... இல்லை....இல்லை...இல்லை என்று பொய்யாய் கை விரித்து கட்டுப்பாட்டு விதிகளுக்குள் கபடமாய் ஒளிந்தே கொள்கிறது! திருமண பந்தமென்ற

மேகமாய் வந்து போனவள்....!

இப்போது எல்லாம் உன் நினைவுகளோடு வாழப் பழகி விட்டது எனக்கு. குறைவில்லாத அந்த நாளின் இன்ப உணர்வுகள் நித்தம் என்னை தொட்டிலில் ஒரு குழந்தையைப் போல போட்டு எப்போதும் சீராட்டுகிறது. முதன் முதலாய் உன்னை பார்த்த அந்த காலை ஏழு மணியில் மெலிதான ஒரு ரெடிமேட் சிரிப்போடு உன்னை உமா என்று என்னிடம் அறிமுகம் செய்து கொண்டாய். ஒரு வாரம் விடுமுறையிலிருந்து திரும்பி வந்த நான் என் முதல் ஷிப்டுக்காக உள்ளே நுழைகையில் சற்றும் உன்னை நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.. வரவேற்பாளன் உத்தியோகத்தில் ஒரு வருடமாய் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்த அன்றைய தினம் உன் அறிமுகத்தோடு அட்டகாசமாய் வரவேற்றது அந்த நான்கு நட்சத்திர ஹோட்டலின் வரவேற்பரை. புன்னகையோடு நகர்ந்து விட்ட உன்னிடம் பேச வேண்டும் என்ற ஆசையில் நான் பேசாமலேயே இருந்தேன். பெண்களைக் காணாதவனாய் நான் இருக்க சென்னை என்னை மட்டும் இல்லை வேறு யாரையுமே அவ்வளவு சீக்கிரத்தில் விட்டு விடாது. ரங்கநாதன் தெருவின் பரபரப்புக்கு நடுவே நான் தங்கி இருந்தது எனக்கு வரமா அல்லது சாபமா என்று கூட நான் பலமுறை நினைத்திருக்கிறேன். கல்லூரி முடித்து ஒருவன் அடுத்த கட்ட வேலைக்காக நகரும் பருவம் என்பது

ரஜினி என்னும் வசீகரம்...!

என் அன்புள்ள ரஜினி, காலங்கள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. எந்த கணத்தில் என் வாழ்க்கையினுள் நீ நுழைந்தாய் என்று இது வரை என்னால் கணக்குகள் கூட்டி அறிய முடியவில்லை. சுவாசத்தைப் போல என்னுள் நீ நுழைந்தாய் என்பது மட்டும் உண்மை. ஏதோ ஒரு உன் சினிமாவை பால்யத்தில் நான் கண்டிருக்கலாம், அப்போது உன் வசீகரத்தின் வல்லமை என்னுள் நுழைந்திருக்கலாம். எதைச் சொல்ல ரஜினி ? உன்னிடம் எனக்கு என்ன பிடிக்குமென்று.... மிகச் சிறிய கண்கள்தான் அதில் இவ்வளவு வசீகரம் இருக்கமுடியுமா என்ன? அன்பையும், கோபத்தையும், ஆக்ரோஷத்தையும், காதலையும், அந்த இருவிழிகளுக்குள் கணத்துக்கு கணம் நீ கொண்டு வருவாயே...? எல்லோருக்கும் கண்களையும்... உனக்கு மட்டும் நெருப்பையும் வைத்து படைத்து விட்டானா இறைவன் என்று பல முறை நான் ஆச்சர்யப்பட்டதும் உண்டு. எப்படித்தான் வார்த்தைகளுக்குள் கொண்டு வருவது நீ நடித்த நடிப்பையும்.....நடந்த நடையையும்....! ரஜினி.....உனது மறுபெயர் அட்டிட்யூட் எனப்படும் மனப்பாங்கு. உன்னை வெறுமனே ஒரு நடிகனாய் உன் ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்று இந்த உலகம் நினைத்துக் கொண்டிருக்கிறது......அல்ல...ரஜினி அல்ல... உன் வாழ்க்கையும், நீ சென

போதி தர்மன் பேசுகிறேன்...!

நான் போதி தர்மன்....! உங்களோடு எதுவும் நான் பேசவில்லை...! என் உணர்வுகளுக்குள் நானே நானாய் ஸ்பூரித்துக் கொள்கிறேன்.... கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், பல்லவச் சக்கரவர்த்தியின் மகனாய் நான் பிறந்திருந்தேன். என்னை ஜனிப்பித்து வெளிக் கொணர்ந்த பூமியில் படர்ந்து கிடந்த போதி மரத்தின் நிழலிலும், பரவிக் கிடந்த காற்றிலுமிருந்து என்னுள் புகுந்து கொண்ட வழிமுறைதான் பெளத்தம். பெரும்பாலும் நான் பேசுவது இல்லை. இப்போது கூட என்னுள்ளேயே நான் ஸ்பூரித்துக் கிடக்கும் என் அந்திமத்தில் நானே நானாய் என் எண்ணங்களூடேதான் நகர்கிறேன். இல்லாமல் சுழலும், எல்லாமாயிருக்கும் இந்த பிரபஞ்சத்திலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட பூமிப் பந்தின் மூலமும் சரி, அதைச் சுற்றி விரிந்து பரந்து கிடக்கும் பேரண்டமும் சரி கருத்துக்கள் அற்றது. விளக்க வேண்டிய அவசியங்களுமற்றது. எல்லாம் இயல்பாயிருக்க மனிதன் மனத்தோடு பிறந்தான். மனம் மதத்தைப் படைத்தது. மதம் கடவுள்களைப் படைத்தது. கடவுளர் இல்லை என்று சொன்ன இடத்தில் புத்தன் பிறந்தான். புத்தனால் இயல்பு பிறந்தது. வாழ்க்கையின் இயங்கு தன்மை விளங்கியது. இயல்பில் இரு. தேவையானதை அறி. அறிந்ததை தெளி. தெளிந்ததைப்

டிசம்பர் 6....!

மதமேறிப் போன மிருகங்கள் வடித்து வைத்த இரணத்தைக் வருடந்தோறும் கிளறிச் செல்கிறது இந்த டிசம்பர் 6...! நம்பிக்கை என்ற பெயரில் மிருகங்களின் வெறியாட்டத்தை பொறுத்துக் கொண்ட தியாக நாளாய் எப்போதும் இரணங்களை மறைத்துக் கொண்ட புனிதனாய் புன்னகை செய்கிறது இந்த டிசம்பர் 6! கடவுளைத் தேடி பயணிக்கையில் இடையில் மனிதன் மிருகமாய் மாறி சீரழிந்த ஒரு கறுப்பு தினத்தின் கறையை அழிக்கவே முடியாமல் இன்னமும் இடிந்தே கிடக்கிறது என் சகோதரர்களின் நம்பிக்கை! கடவுளை மனதுக்குள் வைக்கத் தெரியாதவர்கள் அரசியலுக்குள் அழைத்தின் கோரமா? இல்லை... கடவுளென்றால் யாரென்று அறியாத விலங்கு மனத்தின் அகோரமா? விடை தெரியா கேள்வியோடு விடியலைத் தேடும் மனிதனாய் மனதுக்குள்ளேயே பிரார்த்திக்கிறேன்... இறைவா...என்றாவது ஒரு நாள் மனிதர்களின் மனதில் பூ பூக்கச் செய்து... அன்பால் உயிர்த்தெழச் செய் மனித நேயத்தையும்... இடிந்து போன நம்பிக்கையையும்....! தேவா. S

தனுஷின் கொலை வெறி...!

பாட்டன் முப்பாட்டன்னு எத்தனையோ காலத்துக்கு முன்னாடி எல்லாம் எப்டி, எப்டியோ எழுதி வச்சுட்டுப் போன இலக்கியங்களும், செய்யுளும் குவிஞ்சு கிடக்குற ஒரு இனம். 54,000 வருசத்துக்கு முன்னாடி இருந்தே முத்தமிழ வச்சுகிட்டு கோலேச்சிக்கிட்டு இருக்குற ஒரு தேசிய இனம், சுத்தி சுத்தி போர் தொடுத்து எல்லா நாட்டையும் வென்று நாங்க தமிழங்கடான்னு சொல்லிட்டு வந்த ஒரு வீர மரபு... கம்பனையும், இளங்கோவடிகளையும், வள்ளுவனையும், வச்சுகிட்டு நெஞ்சு நிமித்திகிட்டு திரிஞ்ச மக்க இப்ப என்ன பண்ணிகிட்டு இருக்காங்கன்னு கேக்குறீங்களா...? வொய் திஸ் கொல வெறி..... கொல வெறிடின்னு பாட்டு பாடிகிட்டு சந்தோசமா தன் தாய்மொழிய கொன்னுகிட்டு இருக்காங்க. நவீனம், மாற்றம், மண்ணாங்கட்டி எல்லாம் எங்க வந்து விடியும் தெரியுங்களா தமிழனுக்கு அது அவன் பேசுற மொழியிலதான் வந்து விடியும். ஒரு பாட்டுன்ற விதத்துல இசையும் ராகமும் சரிதான்னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்கலாம், அதுவும் அந்த இசை கூட தமிழகத்து டப்பாங்குத்து இசைய ஒட்டியே வர்றதால, ஆனா வரிகள்....? இது ஒரு உதாரணம் மட்டும்தான் இது மாதிரி ஓராயிரம் பாட்டு இருக்குது தமிழனோட தலைவிதிய நிர்ணயிச்சுக்கிட...

வெளிச்சம்...!

தெரியாது... என்ற வார்த்தையோடு ஒரு உரையாடலை நான் முடித்துக் கொள்ள நினைக்கையில் ஏன் தெரியாது என்று கேட்டு எப்போதும் யாராவது தொடங்கி விடுகிறார்கள் அர்த்தமற்ற வார்த்தைகளின் அணி வகுப்புக்களை! அறிந்திராத பக்கங்களை எல்லாம் நுனி மடக்கி யாராவது வாசிக்கச் சொல்கையில் வேண்டாம் என்று... உதடு பிரிக்கும் முன்பு மனம் அவற்றை... எட்டி உதைத்து நிராகரித்து தூர தள்ளிதான் விடுகிறது..! முக ஸ்துதிகளின்... நச்சு முனைகளை ஒடித்து குப்பையில் எறிந்து மெல்ல சுருண்டு ஒதுங்கி ஒடுங்கிக் கொண்டு ஜன்னலரோப் பேருந்தில் வேடிக்கைப் பார்க்கும் முகமற்ற பயணியாய் எப்போதும் பயணிக்கிறது மனது! அறிவின் கனத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு ஆணவ இரைச்சலோடு வருபவர்களை எல்லாம் தூர நிறுத்தி திருப்பி அனுப்பி புன்னைகையோடு வரும் மனிதர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு வார்த்தைகள் இல்லாமல் என்னோடு வாசம் செய்யுங்கள் என்ற கட்டளையை கண்களால் இட்டு பகிர்தலாய் நகர்கிறது என் இருட்டு பொழுதுகள்! தேவா. S