இலக்குகள் கொண்டு நகரவேண்டும் என்று லெளகீகம் போதிக்கிறது ஆனால் இலக்குகள் அற்று நகர் என்று ஆன்மீகம் போதிக்கிறது. ....எதுதான் தம்பி சரி? கேள்வியை தூக்கி வீசி விட்டு.... நண்பர் பார்த்த பார்வையில் நல்லா மாட்டினியா என்ற ஒரு தொனி இருந்தது.
சரி லெளகீகம்னா என்ன? அதைச் சொல்லுங்க முதல்ல அப்டீன்னு யாரோ தலையில தட்றாங்க.. அவுங்களுக்கு பதில சொல்லிட்டு...மேலே நகர்வோம்.
இந்த உலக வாழ்க்கை நிஜம், இங்கே நான் கோடாணு கோடி ஆண்டுகள் வாழப்போகிறேன். நான் தான் உலகத்தின் மையம், மரணம் என்பது எப்போதோ நிகழப்போகிற ஒன்று என்றும் தனக்கும் தன்னுடைய உடலுக்கும் தன்னின் கர்வத்துக்கும் நித்தம் உணவுகள் பரிமாறி விருந்து வைத்துக் கொண்டிருப்பவன் லெளகீகவாதி.
இவர்களுக்கு எல்லாம் கண்முன் தெரிவதும், காதால் கேட்பதும் உலகம். ஆமாம் எதை நம்ப வேண்டுமானால் அவர்கள் கண்களால் காணவேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால் இந்த பூலோக வாழ்க்கையும் பந்தங்களுமே பிரதானம் (பிராதனம்னா என்ன? அப்டீன்னு சிலருக்கு கேள்வி வருதா...சரி..சரி.. கோச்சுக்காதீங்க முக்கியம்னு அர்த்தம்.)
சரி யார் ஆன்மீகவாதி? டக்குனு எல்லோருக்கும் வர்ற பதில் அல்லது நினைவுக்காட்சி என்னன்னு எனக்கும் தெரியும் பாஸ்? காவிச்சட்டை, காவி வேஷ்டி, நெற்றி நிறைய விபூதி, கழுத்தில் ருத்ராட்சம் இல்லை எனில் வேறு ஏதாவது மாலைகள் என்று எப்போதும் எதிலும் எனக்கு பற்று இல்லை என்று கூறிக் கொண்டு சராசரி ஜனங்களிடம் எல்லாம் மாயை...ஏன் அதை நோக்கி ஓடுகிறீர்கள் அற்ப பதர்களா? என்று கேள்வி கேட்டு தன்னை உயரிய இடத்தில் வைத்து கடவுளாகவே காட்டிக் கொள்ளும் ஒரு உருவம் வந்திருக்கும், இல்லையேல் சாதராண உடையில் கிளீன் ஷேவ் செய்து கொண்டு ஆனால் மேலே சொன்ன செயல்களையெல்லாம் செய்யும் ஒருவர் உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்குமே....
மொத்தத்தில் ஆன்மீகவாதி என்றால் மேலே சொன்ன லெளகீகவாதிக்கு எதிரானவன், சந்தோசங்களுக்கு எதிரானவன், சும்ம தத்து பித்து என்று தத்துவ மழைகள் பொழிபவன் என்று நினைச்சுட்டீங்க சரியா?
உங்க மேலயும் தப்பு இல்லை... பாஸ்! சமுதாயம் கொடுத்திருக்கும் கற்பிதம் (ஏய்...யாருப்பா அது கூட்டத்துல எழுந்து கற்பிதம்ன என்னனு கேக்குறது...? அட.. கற்பிதம்ன பில்டப் தம்பி... )
ஆன்மீகவாதி மேலே சொன்ன மாதிரியெல்லாம் இருக்கலாம்.. ஆனால் அப்படி இருக்கவேன்டுமென்பது என்று அவர்களே தீர்மானித்துக் கொள்வதுதான். இலக்குகள் அற்று வாழவேண்டிய ஆன்மீகவாதிகள்.. தங்களுக்கென்று ஒரு அடையாளம் வைத்துக் கொண்டு வாழும் போதே தங்கள் கொள்கையில் முரண்பட்டுப் போய்விடுவதால் அவர்களை ஆன்மீகவாதிகள் என்று எப்படி ஏற்றுக் கொள்வது?
இறைவனை பிரார்த்திப்பதற்கும், இன்ன பிற விசயங்களுக்கு கட்டுப்பாடுகளும், நியதிகளும் வைத்துக் கொன்டு நித்தம் தன்னை ஒரு பிரமாண்ட புருசனாக காட்டிக் கொண்டு மனிதர்களை விட்டு விலக்கி தம்மை வைத்துக் கொண்டு..இருப்பவர்கள் இயல்பாக இருக்கிறார்களா? டக்குனு மனசாட்சி படி பதில் சொல்லுங்க பார்போம்...
ஆன்மாவை உணரும் ஒரு மனிதன் தனது லெளகீக வாழ்க்கையையும் சிறப்பாக உள்ளடக்கி அனுபவித்து வாழ்ந்து, அழவேண்டிய நேரத்தில் அழுது, சிரிக்க வேண்டிய நேரத்தில் சிரித்து, ஓட வேண்டிய நேரத்தில் ஓடி....நிற்க வேண்டிய நேரத்தில் நின்று.. வாழ்வோடு பொருந்தி வாழ்கிறான். எங்கேயும் முரண்படுவதில்லை ஆனால் முரண்படவேண்டும் என்ற நியதி வரும் போது துல்லியமாய் முரண்படுகிறான். குடும்ப வாழ்கை இவர்களுக்கு முரணானது அல்ல...மொத்தத்தில் தன்னுள் இருக்கும் சத்தியத்தினை ஒத்து வாழ்பவன் தான் ஆன்மீகவாதி.
சுருக்கமாகச் சொன்னால் லெளகீகம் ஆன்மீகவாதியின் ஒரு பகுதிதானே அன்றி அது தனித்தது இல்லை. ஒரு சிறந்த ஆன்மீகவாதிதான் தலை சிறந்த லெளகீகவாதியாக இருக்கமுடியும். வாழக் கொடுத்த வாழ்க்கையை மறுக்கும் அல்லது நிராகரித்து வாழ்க்கையில் வேசங்கள் போடுவது எப்படி இயற்கையோடு இயைந்த வாழ்க்கையாகும்? நீங்களே சொல்லுங்க?
சரி... அப்டீன்னா.. விவேகானந்தர், ரமண மகரிஷி (உதாரணம்தான் இன்னும் நிறைய பேரு இருப்பாங்க...) இவுங்க எல்லாம் பிரம்மசாரியாவே இருந்து வாழ்வின் சராசரி நிகழ்வுகளை விட்டுத் தள்ளி இருந்தாங்களே அது தப்புன்னு சொல்ற அளவுக்கு நீ பெரிய ஆளான்னு ஒரு கேள்வி வருதா? வரணும் கேள்வி வரணும்.....அதுதான் சரி....
விவேகானந்தருக்கும், ரமண மகரிஷிக்கும் அப்படி அவர்கள் இருப்பதுதான் இயற்கையான ஒரு நிகழ்வாக அதுவாகவே அமைந்திருந்தது. அதை அவர்கள் மறுக்காமல் ஏற்றுக் கொண்டனர். தங்களுக்கு வாழ்வில் ஏற்பட்ட இயல்பான நிகழ்வுகளை அப்படியே ஏற்றுக் கொண்டனர் அதற்கு ஏதுவாகவே அவர்களின் பிறப்பும் அமைந்து போய்விட்டனர். (இருவரின் வாழ்க்கை வரலாறும் படித்தால் புரியும்.. அப்படியே.. தமக்கு ஏற்பட்டவைகளோடு ஒத்து வாழ்ந்திருப்பதும் தெரியும்)
துறவறம் ஒரு வழி.... அது துறவறம் செல்ல ஏதுவான சூழலோடு பிறக்கும் குழந்தகளுக்கு..... ! இல்லறம் ஒரு வழி... அது அதற்கேற்ற பக்குவத்தோடு பிறக்கும் குழந்தைகளுக்கு...! எப்போது முரண் வருகிறது என்றால் தன்னின் உள்ளே இருக்கும் உள் முனைப்பின் படி நடந்து செயலாற்றாமல் மனதை கேட்டு செயலாற்றும் போது....இல்லறம் விதிக்கப்பட்ட மனிதன் துறவி ஆக ஆசைப்படுகிறான்.. அங்கே செருப்படி கிடைக்கிறது....
அதே போலத்தான் இல்லறம் என்ற ஒன்றின் உதவி தேவையில்லை நீங்கள் தனியாகவே போகலாம் என்று விதிக்கப்பட்ட மனிதர்கள் இல்லறத்துக்குள் வந்தாலும் மேலே சொன்னதுதான் நடக்கும்....
தஞ்சாவூரிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியே சென்னை சென்றாலும், கும்பகோணம் வழியே சென்றாலும்...அல்லது ஹெலிகாப்டரில் மூலம் சென்றாலும் இலக்கு என்னவோ.. சென்னைதான்...ஆனால் வழிமுறைகளும் அனுபவமும் வேறு...அது பயணிப்பவரின் தன்மைக்கு ஏற்றபடி தீர்மானிக்கப்படுகிறது....!
சரி யார் தீர்மானிப்பது.. நமது பயணம் எதை நோக்கி?
இந்த இரண்டு கேள்விகளும் உங்களுக்குள் எழாவிட்டாலும் பரவாயில்லை கேளுங்கள் ஆனால் எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் வெளியே கிடைப்பதில்ல என்பதையும் மனிதில் கொள்ளுங்கள். இவை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளக் கூடிய கேள்விகள். கேள்வியை சும்மா உங்களிடமே கேட்டு வையுங்கள் ஒரு நாள் இல்லை ஒரு நால் பதில் தெரியவரும். அப்படி தெரிய வரும் அன்று நாம் யாரிடமும் அந்த பதில் பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்ள மாட்டோம்....
இலக்கே இல்லாமல் கட்டுரை போகுதுங்களா.. சரி..! மீண்டும் விசயத்துக்கு வருவோம்...
ஆன்மீகம் ஏன் இலக்குகள் இல்லாமல் போங்கனு சொல்லுதுன்னா.
ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் பகுதிதானே நீங்களும் நானும், மொத்த பிரபஞ்சமே இலக்குகள் அற்றுதான் அதன் போக்கில் நகர்ந்துகிட்டு இருக்கு. நீங்க அறிவியல் விஞ்ஞானிகிட்ட கேளுங்க இல்லை ஆன்மீகவாதிகிட்ட கேளுங்க.. பிரபஞ்சத்தின் தோற்றமும் முடிவும் இன்ஃபினிட்டி என்று சொல்லக்கூடிய முடிவுகளற்றது இதில் நாம வச்சுக்கிற இலக்குகள் எல்லாம் நோக்கங்கள் எல்லாமே... பிரபஞ்சத்தின் கண்ணோட்டத்தில் ச்சும்மா.. ச்சும்ம்மா ஒரு டீலு ஒரு மாயை...
சரி வாழணும்னு உடம்புக்குள்ள வந்துட்டோம் இப்போ என்னதான்யா பண்ணனும்..? உருவமா இருக்கோமே.. புள்ளை குட்டீக வாழ்க்கைனு இருக்கேன்னு கேக்குறீங்களா?
சரி ஒண்ணு வேணா பண்ணலாம் இலக்குனு ஒண்ணு ஃபிக்ஸ் பண்ணிட்டு அது பத்தி
கனவு கண்டுகிட்டே இருக்காம அதுக்கான செயல்களை நிகழ்காலத்தோடு தொடர்பு படுத்தி அந்த செயல்களில் லயிச்சு.... நிகழ்காலத்துலயே நிக்கலாம்....ஒண்ணு ஓண்ணா நாம செஞ்சு நம்ம இலக்குன்ற மாயையை ஒரு கட்டத்துல அடைஞ்சாலும்.. அதையும் கடந்து போய்கிட்டுதான் இருப்போம்.....
இலக்குகளை நிகழ்காலத்தோடு தொடர்பு கொடுத்திக் கொண்டு... நகர்தல்தானே நிஜமான ஒரு அறிவார்ந்த பயணமாயிருக்கும்....! இப்ப நாம இருக்குற நிலைமைக்கு நேற்றைய செயல்கள்தான் காரணம்னு சொன்னா? இன்னிக்கு செய்றதுதானே நாளைய ஃபிக்ஸ் பண்ண போகுது? ச்சும்மா ஒரு லாஜிக் வச்சு பாருங்க......
இலக்குகளும் பயணங்களும் மாறும், மாறித்தான் ஆகவேண்டும்...ஆனால் அதை எண்ணியே கற்பனையில் நிகழ்காலத்தி கோட்டை விடாம இருந்தா சரிதான்.
ரொம்ப நேரம் பேசிட்டேன்....... என்ன பண்ண சொல்றீங்க உங்க கிட்ட சொல்ற மாதிரி ஒரு வேசம் போட்டு என் மனசுக்கு நானே சொல்லறதுக்கு இப்படி ஒரு யுத்திங்க....!
பிடிச்சுருந்தா மனசுல நீங்களும் வைங்க.. இல்லேன்னா தூக்கி கடாசிட்டு போய்டுங்க....
இப்போதைக்கு கிளம்புறேங்க...
தேவா. S
Comments
சரியே.. எல்லா கேள்விக்கான பதிலும் நமக்குள்ளே இருக்கிறது, அதைக்கண்டுகொள்ளாதவரை அதை நாம் வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்
வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்
*****
இன்றைய தேதிக்கு ஆன்மிகம் என்றால் மதம்னு ஆகிப்போய்விட்டது. பகுத்தறிவு வாதமும் அப்படியே
:)
ம்ம் ....இந்த வரிகள் அருமை அண்ணா.....
இலக்குகளை நிகழ்காலத்தோடு தொடர்பு கொடுத்திக் கொண்டு... நகர்தல்தானே நிஜமான ஒரு அறிவார்ந்த பயணமாயிருக்கும்....! இப்ப நாம இருக்குற நிலைமைக்கு நேற்றைய செயல்கள்தான் காரணம்னு சொன்னா? இன்னிக்கு செய்றதுதானே நாளைய ஃபிக்ஸ் பண்ண போகுது? ச்சும்மா ஒரு லாஜிக் வச்சு பாருங்க......
இலக்குகளும் பயணங்களும் மாறும், மாறித்தான் ஆகவேண்டும்...ஆனால் அதை எண்ணியே கற்பனையில் நிகழ்காலத்தி கோட்டை விடாம இருந்தா சரிதான்.//
இவை ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல, பொதுவான வாழ்க்கைக்கும் பொருந்தும்!
கற்பிதம் அப்படிங்கிறது பில்ட் அப்பா ? நீங்கள் எனது அறிவுக்கண்ணை திறந்து விட்டீர்கள் அண்ணா .. ஹி ஹி ..
கூட ஒன்றை விட்டு விட்டீர்கள் அண்ணா ....எபோளுதுமே தன்னை சுற்றி நான்கு ஐந்து பெண்கள் இருப்பார்களே ......
It's True
//என்ன பண்ண சொல்றீங்க உங்க கிட்ட சொல்ற மாதிரி ஒரு வேசம் போட்டு என் மனசுக்கு நானே சொல்லறதுக்கு இப்படி ஒரு யுத்திங்க....!//
Yes, it is the right way to develope ourselves
ஒரு ஆன்மீகப் பயணியை இன்னொரு ஆன்மீகப் பயணியால்தான் அறிய முடியும். :)
கரிக்கிட்டு..
///இப்ப நாம இருக்குற நிலைமைக்கு நேற்றைய செயல்கள்தான் காரணம்னு சொன்னா? இன்னிக்கு செய்றதுதானே நாளைய ஃபிக்ஸ் பண்ண போகுது? //
ரொம்ப உள்ள போய்ட்டிங்க,
கல்யாணம் ஆகிடுச்சா?
நன்றி & வாழ்த்துகள் தேவா சார்.
கல்யாணம் ஆறதுக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?
•••••
இங்கே எனக்கு ஒரு சந்தேகம்.
தன்னை உணர்ந்த ஞானிகள் என்று சொல்பவர்கள் அதாவது ஞானமடைந்தவர்கள் (கௌதம புத்தர் முதல் கொண்டு இன்று இருக்கும் ஜக்கி வாசுதேவ் வரைக்கும்) மக்களை நல்வழிபடுத்த வேண்டும் என்று கிளம்பிவிடுகிறார்களே?. தன்னை உணர்ந்தவனுக்கு இங்கே என்ன வேலை. எதற்காக மக்களை திருத்துகிறேன் என்று கிளம்புகிறார்கள். புத்தரிடம் இருந்து கிளம்பிய யாரும் ஒரு ராமசாமியாகவோ, குப்புசாமியாக(அவர்கள் அவர்களாக) ஞானமடைவதில்லை. எல்லோரும் புத்தராக வேண்டும். எல்லோருக்கும் யார் குருவோ அவர்கள் மாதிரியே ஆகவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். நான் அவர்களின் சீடன் என்று சொல்லி பெருமைப்படுகிறார்கள், அவர்கள் சொல்வதை கிரகித்து அதை தத்துவமாக வைத்து அதையே வாழ்க்கையாகவும் கொள்கிறார்கள். இதுதான் தன்னை உணர்தலா?. இப்படி ஒரு கூட்டத்தை வைத்திருக்கத்தான் இவர்கள் தன்னை உணர்ந்தார்களா?.
தன்னை உணர்ந்த ஞானிகள் மக்களை விட்டு விலகி செல்லமாட்டார்களா?
புரியவில்லையே தேவா?
இலக்குகளும் பயணங்களும் மாறும், மாறித்தான் ஆகவேண்டும்...ஆனால் அதை எண்ணியே கற்பனையில் நிகழ்காலத்தி கோட்டை விடாம இருந்தா சரிதான்.\\
தேவா, தங்களின் கட்டுரைகள் பலவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொன்னால் இந்தக்கட்டுரையைத்தான் தேர்ந்தெடுப்பேன்.
நிறைவாக இருக்கிறது...
ரொம்ப ஈசியா 'இது தாங்க ஆன்மிகம் பற்றிய எனது தேடல்' அப்படின்னு போகிற போக்கில் சொல்லிட்டு போற மாதிரியான ஒரு எழுத்து நடை. மிக கச்சிதமாக மனதில் வந்து உட்கார்ந்து விட்டது...
யாருக்கு எது தேவையோ அதை எடுத்து கொள்ளலாம்...அது நம் விருப்பம்.
வழக்கம் போல் நானும் பாடம் பயின்று கொண்டிருக்கிறேன்...
நன்றி.
(படிக்காம கமெண்ட் போடறது ரொம்ப ஈஸியா இருக்கே.. :). கட்டுரை ரொம்ப பெருசு. அப்புறம படிச்சி கமெண்ட் போடறேன்.)
உண்மைதான் கண்ணன்.. ஆன்மீகம் என்பது மதத்தோடு சேர்த்துதான் பார்க்கப்படுகிறது.