ஒரு ஆக்ரோஷ அரக்கனாய்
கரையைச் சுவைக்க
கால் பதித்தாயா கடலே?
ஆடும் மனிதர்களுக்குப்...
பாடம் புகட்ட ஆடிக்...
களித்தாயா நிலமே...?
என்ன செய்தோம் என்றுணரும்
தருணம் முன்பே...
நிலத்தை அள்ளிக் குடித்துவிட்டு
உயிர்களை பெயர்த்தெடுக்கும்
உன் அவசரத்தின் மீதான
என் கோபத்தை எங்கே அடுக்குவேன்?
எத்தனை உயிர்கள் போனது...?
கணக்கு வழக்காய் கழித்து
அந்த நினைவுகளை மழித்துக் கொள்ளும்
காலத்திற்கு தெரியுமா
எத்தனை கனவுகளை அழித்தோமென்று?
தனிமையில் துளிர்க்கும்...
என் கண்ணீர்த் துளிகளின் வேர்களின்
மூலம் அறிந்த அண்டமே....
மூலமில்லா பிண்டம் தாங்கிய ஆதியே
எல்லாம் எடுத்துக் கொண்டு
எம் பூமியில் உயிர்களுக்கான
சந்தோசத்தையும் சாந்தியையும்
இறைத்துப் போடு; இல்லையேல்
மொத்தமாய் பூமிப் பந்தை
அகண்டவெளியில் இருந்து..
அறுத்துப் போடு....!
இன்னுமொரு முறை
கொந்தளிக்காதே கடலே...
ஆட எத்தனிக்காதே நிலமே...
உன்னை கட்டுக்குள் கொண்டு
வர யுத்திகள் அற்றுப் போயிருக்கிறோம்...
கால்கள் இருந்தால் கொடு
பிடித்து கண்ணீரால் கழுவுகிறோம்......!
ஜப்பானிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்த அத்துனை ஆத்மாக்களும் சாந்தியடைய எல்லாம் வல்ல ஏக இறையிடம் எனது ஆழ்ந்த தியானத்தையும், வேண்டுதலையும் சமர்ப்பிக்கிறேன்.
தேவா. S
Comments
எனது வலைபூவில் இன்று:ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ
இயற்கையின் முன் நாம் எல்லாம் ஒன்றும் இல்லை என்ற எண்ணமே மேலோங்குகிறது.
பாதிப்பின் முழு விவரம் இன்னும் சரியாக தெரியவில்லை. எத்தனை உயிர்களோ...?
இறைவனிடம் வேண்டுவதை தவிர வேறு ஒன்றும் இப்போது தோன்றவில்லை.
எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.
கொந்தளிக்காதே கடலே...
ஆட எத்தனிக்காதே நிலமே...
உன்னை கட்டுக்குள் கொண்டு
வர யுத்திகள் அற்றுப் போயிருக்கிறோம்...
கால்கள் இருந்தால் கொடு
பிடித்து கண்ணீரால் கழுவுகிறோம்......!
....இந்த இயற்கை நிகழ்வுகள், மனிதனின் கட்டுக்குள் உலகம் இல்லை என்பதை நினைவு படுத்துகிறது.
இந்த தாக்கத்தில் இருந்து விடுபட நாளாகும்.
உயிரழந்த - பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பராத்தித்துக் கொள்வோம்.
உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய அஞ்சலிகளும்!