Skip to main content

என் வானமும் நானும்....!




















வெகுதூரம் வெளியே வந்துவிட்டேன். சப்தங்களில்லா மையத்தில் என் ஏகாந்த கனவுகளோடு நானே என்னில் இருந்த திசைகளும், காலமுமற்ற என் சுயத்தை விட்டு நகர்ந்துதான் வந்துவிட்டேன். தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு முறையும் என்னை ஏமாற்றி கொண்டு இந்த இரைச்சலோடு கூடிய சராசரி வாழ்க்கைக்கு நடுவே விட்டு விட்டு பல்லிளித்து பரிகாசிக்கிறது மனப்பேய்.

வாசிப்பும் வாசிப்புகளின் ஆழமும் சேர்ந்து கருக்கொண்ட்ட எண்னங்களை எல்லாம் மெல்ல துடைத்தழித்துவிட்டு அதன் சாரத்தோடு சாறாக ஊறிக் கிடந்தவனை, புத்தகத்தில் படித்த தத்துவங்களை எல்லாம் வாழ்க்கை வீதிகளில் கொண்டு வந்து வைத்து மனித வாழ்க்கைக்கு தீர்வுகளைச் சொல்லும் மேதாவிகளின் உலகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியே விட்டது காலம்.

இப்போது சுதாரிக்க விடில் நான் எப்போதும் இந்தக்கூட்டத்தில் ஒருவானாய் ஆகிப்போய்விடுவேன். இருட்டில் பொருளை தொலைத்து விட்டு வெளிச்சத்தில் தேடும் மனிதர்களும் அவர்களின் சித்தாந்தகளும், அதை நிறுவ இவர்கள் கொடுக்கும் தேற்றங்களும், மறுதலைகளும் விளக்கங்களும் என்னைச் சூழ்ந்து கொண்டு மரணம் தாண்டியும் என்னை தொடரும் அவலம் எனக்கெதற்கு?

இந்த புத்திமான்களின் கத்தி வீசும் தத்துவ வீதியில் ஒரு நாள் பசிக்கிறது என்றேன்... பசி என்றால் என்ன என்று பல மணிநேரம் பேசினார்கள். பசியின் மூலம் சொன்னார்கள், பசியுள்ள தேசத்தினை எல்லாம் பட்டியலிட்டார்கள், பசிக்கு யார் காரணம் என்றார்கள், இன்னும் சில பேர் படைத்தவனென்று ஒருவனில்லை இருந்தால் யாரையும் பசியோடு விட்டிருக்க மாட்டான் என்றூ பகுத்தறிவு வாதம் செய்தார்கள்.....

' யாருமே ஒரு வாய் உணவையும் கொடுக்கவில்லை, உணவை அடையும் வழியையும் பகிரவில்லை '

என்னை முன்னிலைப்படுத்த என் தன்முனைப்பை கூராக்கி நான் பெரிய மேதை என்று சமுதாயத்திற்கு காட்ட எனக்கெதற்கு ஒரு மூளை. உலகெல்லாம் அலைந்து திரிந்து அறிவை வளர்த்து நான் அறிஞன் என்ற ஏட்டுச் சுரைக்காய் வைத்துக் கொண்டு கறி எப்படி சமைப்பது?

கற்க கசடற என்ற இரு வார்த்தைகளுக்கு பின்னால் இருக்கும் பொருள் புரியாது வள்ளுவனின் வாழ்க்கையை ஆராய்ந்து முப்பாலுக்கும் விளக்கம் கொடுத்து தொடை தட்டி, தட்டிப் பேசி என்ன சாதிக்கப்போகிறேன் நான்? கூட்டம் கைதட்டும், விசிலடிக்கும், ஆனால் என் யோக்கிதை எனக்குத்தானே தெரியும். கற்றவற்றில் எல்லாம் இருந்து சரிகளை விளங்கியவனா நான்? மாசில்லாமல் கற்றவனா நான்? இதை ஆராயவே நேரமில்லாத போது ஊருக்கு கற்றுக் கொடுக்கும் மனோபாவம் எங்கிருந்து துளிர்த்தது எனக்கு?


கற்றபின் நான் அதற்கு தக நடந்தேனா? இதை என்னிடம் கேள்வியாய் கேட்டேனே? வாசித்த வேகத்தில் அதை வெளியே வந்து நான் இதை வாசித்தேன் அதை வாசித்தேன் என்று பேசினேனே நான் அதற்கு தகந்தேனா? இல்லையே? நான் என்னைப் பார்க்கும் கலையை விட்டு விட்டு...என்னை சரி செய்துகொள்ளும் யுத்தியை வெற்று விசய ஞானப்புத்தியிடம் தோற்க விட்டு விட்டு ஊரையல்லவா பார்க்கத் தொடங்கிவிட்டேன்.


சுய ஒழுக்கத்தின் மூலம் என்றால் என்னவென்று கடை வீதிகளிலா கோனார் நோட்ஸ் உரை போட்டு கிடைக்கும் அல்ல.. அல்ல அது என்னுள் ஜனித்து என்னை சாந்தப்படுத்தி என் செயல்களில் வெளிப்படவேண்டியது. கூச்சலான உலகத்தின் கோணல்களை சரி செய்ய முயலும் மனிதர்கள் முதலில் தத்தம் அகத்தினுள் நுழைந்து தம்மை சரி செய்தல் வெண்டும்....நான் என்னை சரி செய்யவேண்டும்....!

எனது வானம மிகப்பரந்தது...அங்கே கோடாணு கோடி நட்சத்திரங்கள் கண் சிமிட்டி ஜீவனோடு சிரித்துக் கொண்டிருக்கின்றன. சப்தமின்றி நான் வான் பார்க்க...பார்க்க பரந்து விரிந்த பிரமாண்டத்தின் முன்னால் மானுட பிண்டமாகிய நான் ஒன்றுமில்லாதவனாகிப் போய்விடுகிறேன். ஒன்றுமில்லாதவனுக்கு ஏன் கோபம்? அகங்காரம், நான் என்ற ஆணவம்? என்ற கேள்விகள் துணைக் கேள்விகளாய் ஜனித்து ஏதொ ஒரு தெளிவினை கொடுக்கின்றன. இப்படிப்பட்ட கேள்விகளும் பதில்களும் ஒவ்வொரு மனிதனும் கேட்டு கேட்டுதானே தெளிவு பெற முடியும்?

மனிதன் தனக்குத் தானே கேள்விகள் கேட்டு சரி செய்து முன்னேற வேண்டும். சூழல்கள் எல்லோருக்கும் வெவ்வேறு விதமான பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றன. மனிதர்களின் பார்வைகள் வீச்சிற்கு ஏற்றவாறு அதை அனுபவமாக்கிக் கொள்வது அவரவரினின் மனோபக்குவத்திற்கு ஏற்றார் போலத்தானே அமைகிறது. யாரும் யாரிடமும் பேசியோ, அல்லது எழுதியோ, அல்லது வேறு ஏதேனும் செய்தோ மாற்றமுடியாது. அவரவரின் பக்குவ நிலைக்கும் தேவைக்கும் ஏற்ப விசயங்களை வாங்கிக் கொள்கிறார்கள்.

ஒரு மனிதனின் பேச்சோ எழுத்தோ அதை வாங்கிக்கொள்ளும் மனிதருக்கு தாக்கத்தை கொடுக்காதவரை மாற்றம் சாத்தியம் இல்லை. ஏற்கனவே மனதினுள் பல்லாயிரம் கற்பிதங்களைக் கொண்டிருப்பவர்களின் பார்வைகள் செம்மைப்பட எல்லா கருத்துக்களையும் விட்டு வெளியே வருவது மட்டுமே அவசியமாகிறது. வெற்று வானத்தையும் வெள்ளை நிலவையும் பார்க்க, ஒடும் நதியில் முங்கிக் குளிக்க, அரச மரத்தின் காற்றை ஆழமா ஊடுருவி வாங்கிக்கொள்ள, ஒரு சந்தைக்கடை இரைச்சலில் மனித இருப்புகளை வாங்கிக் கொள்ள, ஒரு பசுமாட்டின் சாந்தத்தினை உணர, ஒரு ஆட்டின் அழகினை ரசிக்க...............எந்த தத்துவம் தேவை சொல்லுங்கள்...?

நாம் எப்போதும் நாமாய் இருப்பது இல்லை. கற்பனைகளில் எப்போதும் நாம் வேறு ஒருவராய்த்தான் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம். இவர் சொன்னது அவர் சொன்னது என்று நம்முள் ஏற்றி வைத்திருப்பது எல்லாமே கற்றை கற்றையாய் குப்பைகள். எப்போது எது பேசினாலும் எதார்த்தை விட்டு விட்டு புள்ளி விபரங்களை இறைக்கும் ஒரு எந்திர வாழ்க்கையின் உச்சத்தில் எல்லா கருத்துக்களோடுமா என்னை வழியனுப்பி வைக்கும் இந்த உலகம்? அரைஞான் கயிற்றைக் கூட அறுத்தெரிந்து உருத்தெரியாமால் ஆகப்போகும் இந்த மட உலகத்தின் மூளைகளை எல்லாம் கரையான் தானே அரிக்கப்போகிறது....?

கற்பதில் குற்றமற்று கற்கவும் கற்றபின் சுய பார்வை கொள்ளவும் தன்னைத் தானே உற்று நோக்க வேண்டும்...புறம் நோக்கியே பாயும் மனித மனது ஊருக்குக் உபதேசம் செய்யும் முயற்சிகளின் பின்னணியில் தன்னை நல்லவனாக காட்டும் விருப்பங்கள் மிகுந்திருப்பது மிகையாத்தானே இருக்கிறது.

வாள் வீசியே மரித்த
தலைமுறை கடந்த
ஜீன்களின் கூட்டங்கள்
பதித்துப் போட்டிருக்கும்
குணாதிசயங்கள் யார் சொல்லியும்
கேட்காமல் எப்போதும்
வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது
நேர்மறை திமிர்களாய்!

தலைக்கனங்களை உணர்ந்த
மாத்திரத்தில் தலை கொய்து
காலடியில் போட்டு மிதிக்கும்
எண்ணம் எதேச்சையாகவே
தோன்றுவது என் புத்திக் கோளாறா
இல்லை புலன்களின் பாய்ச்சலில்
புகுந்து கொண்ட எதார்த்தமான
உண்மைகளை வெளிப்படுத்தும் யுத்தியா?

கற்றதெல்லாம் இறுமாப்பாய் மாறி
வார்த்தைகளில் கர்வத்தை பரவவிட்டு
அறியா பாமரர்களின் கழுத்தை
நெறிக்கும் வழிமுறைதான் புத்தியெனில்
இப்போதே அதை தீயிடத் துணியும்
முதல் மூடனாக நானிருக்க ஆசையே...!

தத்துவங்களும் புள்ளிவிபரங்களுமே
எப்படி வாழ்க்கையின் தீர்வாகும்?
வயிற்றுப் பசியின் காரணத்தை...
அறிவியல் மூலத்தை விவரிக்கும் பொழுதில்
ஏழைகளின் பசிகள்
தானே தீர்ந்து போகுமா என்ன?

எல்லாம் கடந்து இயல்பாய் செயலுறும் போதும் அதை பகிரவேண்டிய தேவைகளற்று, ஒரு குழந்தையைப் போல சிரித்து, கனமின்றி கவிதயான மனம் கொண்ட பார்வைகள் கொண்டு, தீமையை அழிப்பதில் தீமையைவிட கொடுமையாய் நின்று நானாக நானிருத்தல்தானே விடுதலை....!

இதோ மெல்ல மெல்ல உள் நகர்ந்து, புறக்கூச்சல் ஒழித்து விட்டு நானாயிருக்கும் என் தனித்தலில் கிளைக்கத் தொடங்கிருக்கும் மூலத்தில் ஜனித்தலுக்கும், மரித்தலுக்கும் அப்பாற்பட்டு நான் வெறுமனே கிடக்கிறேன்.


இதோ இக்கணமே நிகழந்துவிட்டது என் ஆனந்த விடுதலை....!


தேவா. S

Comments

நீங்க என்னதான் சொல்ல விரும்புகிறீர்கள் என்று எனக்கு ஒண்ணுமே புரியலை. நீங்க கோணங்கியின் ரசிகரா?
ஒன்று மட்டும் புரியுது. எனக்கு வோட்டு போடு என்று கண்ட கதை பேசாமல் கையில் காசு கொடுத்தால் தான் பசி தீரும் என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
--
JK
dheva said…
JK @ சிரிச்சு மாளல பாஸ்....ஹா ஹா ஹா!

புரிதலுக்கு நன்றிகள்!
Chitra said…
கற்றபின் நான் அதற்கு தக நடந்தேனா? இதை என்னிடம் கேள்வியாய் கேட்டேனே? வாசித்த வேகத்தில் அதை வெளியே வந்து நான் இதை வாசித்தேன் அதை வாசித்தேன் என்று பேசினேனே நான் அதற்கு தகந்தேனா? இல்லையே? நான் என்னைப் பார்க்கும் கலையை விட்டு விட்டு...என்னை சரி செய்துகொள்ளும் யுத்தியை வெற்று விசய ஞானப்புத்தியிடம் தோற்க விட்டு விட்டு ஊரையல்லவா பார்க்கத் தொடங்கிவிட்டேன்.


......ஒவ்வொரு கட்டமாக முன்னேறி வரீங்க, தேவா... சூப்பர்!
//தலைக்கனங்களை உணர்ந்த
மாத்திரத்தில் தலை கொய்து
காலடியில் போட்டு மிதிக்கும்
எண்ணம்//

ஹ ஹ ஹா

நல்ல எண்ணம் :)
என்னவோ சொல்ல வரீங்கன்னு தெரியுது!:-))
வெகுதூரம் வெளியே வந்துவிட்டேன். சப்தங்களில்லா மையத்தில் என் ஏகாந்த கனவுகளோடு நானே என்னில் இருந்த திசைகளும், காலமுமற்ற என் சுயத்தை விட்டு நகர்ந்துதான் வந்துவிட்டேன். தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு முறையும் என்னை ஏமாற்றி கொண்டு இந்த இரைச்சலோடு கூடிய சராசரி வாழ்க்கைக்கு நடுவே விட்டு விட்டு பல்லிளித்து பரிகாசிக்கிறது மனப்பேய்.//

வணக்கம் சகோதரம், இயந்திர வாழ்க்கைக்கு நடுவே, இயந்திரமாய் நகர்ந்து கொண்டிருக்கும் மனத்தினை அழகாகப் படம் பிடித்து, மனப் பேய்க்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளீர்கள். ஆரம்பமே இலக்கிய ரசம் ததும்பி வழியும் வண்ணம் அமைந்துள்ளது.
இப்போது சுதாரிக்க விடில் நான் எப்போதும் இந்தக்கூட்டத்தில் ஒருவானாய் ஆகிப்போய்விடுவேன். இருட்டில் பொருளை தொலைத்து விட்டு வெளிச்சத்தில் தேடும் மனிதர்களும் அவர்களின் சித்தாந்தகளும், அதை நிறுவ இவர்கள் கொடுக்கும் தேற்றங்களும், மறுதலைகளும் விளக்கங்களும் என்னைச் சூழ்ந்து கொண்டு மரணம் தாண்டியும் என்னை தொடரும் அவலம் எனக்கெதற்கு?//

வாழ்வியலை உணர்ந்தவனின் யதார்த்தமான கேள்விகளாக, உள்ளக் கருத்துக்களாக இவ் வரிகள் வந்து விழுகின்றன. மொழி நடை....அழகிய உரை நடையாய் தமிழ் மகளினைப் பதிவில் தவள விட்டது போன்ற உணர்வுடன் வியாபித்துச் செல்கிறது.
இந்த புத்திமான்களின் கத்தி வீசும் தத்துவ வீதியில் ஒரு நாள் பசிக்கிறது என்றேன்... பசி என்றால் என்ன என்று பல மணிநேரம் பேசினார்கள். பசியின் மூலம் சொன்னார்கள், பசியுள்ள தேசத்தினை எல்லாம் பட்டியலிட்டார்கள், பசிக்கு யார் காரணம் என்றார்கள், இன்னும் சில பேர் படைத்தவனென்று ஒருவனில்லை இருந்தால் யாரையும் பசியோடு விட்டிருக்க மாட்டான் என்றூ பகுத்தறிவு வாதம் செய்தார்கள்.....//

பசியினைப் போக்கிட வழியேதும் செய்யாது, விதண்டா வாதம் செய்வோரை, இங்கே அரசியல் வாதிகளுக்கு பூடகமாய் ஒப்பிட்டுக் கூறியுள்ளீர்கள். வாழ்த்துகக்ள்.
என்னை முன்னிலைப்படுத்த என் தன்முனைப்பை கூராக்கி நான் பெரிய மேதை என்று சமுதாயத்திற்கு காட்ட எனக்கெதற்கு ஒரு மூளை. உலகெல்லாம் அலைந்து திரிந்து அறிவை வளர்த்து நான் அறிஞன் என்ற ஏட்டுச் சுரைக்காய் வைத்துக் கொண்டு கறி எப்படி சமைப்பது?//

சபாஷ்..... பயனற்ற மூளையின் பயன்பாடெதற்கு எனும் வகையில் ஒரு சொல்லடியினைத் தருகிறீர்கள்.
வலையெழுத வந்த நான்கு மாதங்களில், இப்படியொரு அருமையான இலக்கிய நயம் சார்ந்த, தனித்துவ உரை நடையில் வரும் பதிவினை மிஸ் பண்ணி விட்டேனே, என்றொரு பீலிங்ஸை வரப் பண்ணி விட்டீங்க சகோ.

இன்று தான் முதல் விஜயம் செய்தேன். பதிவே செம டச்சிங்காக இருக்கிறது.
கற்க கசடற என்ற இரு வார்த்தைகளுக்கு பின்னால் இருக்கும் பொருள் புரியாது வள்ளுவனின் வாழ்க்கையை ஆராய்ந்து முப்பாலுக்கும் விளக்கம் கொடுத்து தொடை தட்டி, தட்டிப் பேசி என்ன சாதிக்கப்போகிறேன் நான்? கூட்டம் கைதட்டும், விசிலடிக்கும், ஆனால் என் யோக்கிதை எனக்குத்தானே தெரியும். கற்றவற்றில் எல்லாம் இருந்து சரிகளை விளங்கியவனா நான்? மாசில்லாமல் கற்றவனா நான்? இதை ஆராயவே நேரமில்லாத போது ஊருக்கு கற்றுக் கொடுக்கும் மனோபாவம் எங்கிருந்து துளிர்த்தது எனக்கு?//

இவ் வரிகளில் உங்களுக்கூடாக வீண் வாதம் பேசும் இலக்கியவாதிகளையும் சாடுகிறீர்கள் சகோ....
வரணனைச் சிறப்பும், குறியீட்டு விளக்கமும் இவ் இடத்தில் உச்சாணியாய் அமைந்து கொள்கின்றது.
ஒட்டு மொத்தப் பதிவினையும் உற்று நோக்கினால், உரை நடையினைக் கவிதை வரிகள் வெற்றி கொள்கின்றன என்று எண்ணவும் தோன்றுகிறது, ஆனாலும் கவிதையும், உரை நடையும் ஒன்றோடு ஒன்று போட்டி போடுகின்றன எனும் உணர்வினையும் தருகின்றது.
வித்தியாசமான ஒரு பதிவினைப் படித்த உணர்வினை உங்கள் எழுத்து நடையும், பதிவும் தந்திருக்கிறது.
dheva said…
நிரூபன் @ உங்களுக்கு ஒன்று தெரியுமா...?

ஒரு படைப்பினை பகிர்ந்தபின் அதை படைத்தவனின் மூல எண்ணத்தில் இருந்து விளங்குவது கடினம்...ஆனால் வரிக்கு வரி...அனுபவித்து மீண்டும் என் உணர்வை பிரதிபலித்தமைக்கு நன்றிகள். படைப்பு முழுமை பெற்றது உங்களால் சகோதரம்!
ஆகா.....!!! படிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உள்ளூணர்வைத் தூண்டி,தாம் யார் என்பதை உணர வைக்கிறது. அருமையான நடை! வாழ்த்துக்கள்.... :)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த