வற்றிப் போன நதியின்
தழும்புகளை கண்களால்
தடவிக் கொண்டிருக்கிறேன்...
ஏதேதோ நினைவுகள்
வேகமாய் உட்புகுந்து
செரித்துப் போடுகிறது
வாழ்வியலின் சுவாரஸ்யங்களை...
அதோ அங்கே.. ஒரு மீன் கூட்டம்
துள்ளிக் குதித்திருக்கலாம்...
இதோ இந்த நடுக்கல்லின் மீது
நாரைகள் அமர்ந்து...
சிறகுலர்த்தியிருக்கலாம்...
கரையோர அந்த மரத்தடியில்
யாரேனும் அமர்ந்து
மீன்களுக்காக தூண்டில்
வீசியிருக்கலாம்..
சுருண்டு கிடக்கும்
இரு கரையோரங்களிலும்
காற்றோடு கூடி
சிறு அலைகளாய் நீர்
சிணுங்கியிருக்கலாம்...
சிறு பூச்சிகள்
ரீங்காரமிட்டுக் கொண்டு
நீரின் மேல் மிதந்து, மிதந்து
ஊர்வலங்கள்...
போயிருக்கலாம்...
பசித்து இவ்வழி கடந்த
ஏதேனும் ஒரு ஜீவராசியின்
இரைப்பைக்கு தன்
கருப்பையிலிருந்து நீர் கொடுத்து
தாகம் தீர்த்திருக்கலாம்..
குருதியைப் போல
தன்னைக் கொடுத்து
வயல் வெளிகளில் விளைச்சலாய்
நிறைந்து மானுடரின்
வாழ்க்கையாய் இருந்திருக்கலாம்
இதோ வறண்டு கிடக்கிறது
இந்த நதி...
பக்கத்திலேயே துணைக்காய்
செத்துக் கிடக்கும்
விவசாய நிலங்களோடு....
கடந்த கால நினைவுகளை
ஏந்திக் கொண்டு காய்ந்து
கிடக்கும் இந்த இடத்தில்
நதியென்று ஒன்றுமே இருந்தத்தில்லை
என்று யாரேனும்...
மறுக்கவும் கூட செய்யலாம்!
முன்பு இங்கு ஒரு
நதி இருந்தது....
அதற்கு சுவாசமாய் ஒரு
அணை இருந்தது!
அதனால் எம்மக்களுக்கு ஒரு
வாழ்க்கை இருந்தது
என்பதை நாமே கூட
மறந்தும் கூட போகலாம்....!
ஆனால்...
சுவடுகளைச் சுமந்து கொண்டு
துருத்திக் கொண்டிருக்கும்
எலும்புகளாய் கிடக்கும்....
அந்த அணையின்
எச்சங்களில் ஒட்டியிருக்கும்
ஒரு துரோக வரலாற்றை
கண்ணீரோடு காற்றும், காலமும் கூட
வாசிக்காமலா போய் விடும்..!
முல்லைப் பெரியாறு அணை உடைபட்டு விடக்கூடாது என்று கடுமையாய் போராடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், இப்போது உள்ள அணையை உடைத்து விட்டு வேறு ஒரு அணையை புதிதாய் கேரள அரசு கட்டினால் என்னவெல்லாம் ஆகும்...? என்ற ஒரு அக்கறை தமிழக மக்களிடம் மிகையாக பரவலாக இல்லை என்னும் உண்மை நெஞ்சை சுடாமல் இல்லை.!
இந்த அணையை உடைத்து விட்டால் என்னவாகும் என்று யோசித்த போது ஏற்பட்ட வலியை வார்த்தைகளாக்கி இருக்கிறேன்....!
எழுதும் போதே கண்ணீரில் நனைந்து வெளியே வந்த வார்த்தைகளில் இருந்த சோகத்தை தாங்கவே முடியவில்லை...நிஜத்தில் நிகழ்ந்தால் அது எவ்வளவு பெரிய கொடுமையாகும் என்று கற்பனை செய்தும் பார்க்க இயலவில்லை.
முல்லைப் பெரியாறு தென் தமிழகத்து வானம் பார்த்த மக்களின் வாழ்வாதாரம். இங்கே அரசியல் சூழ்ச்சிகளால் நிகழ்த்தப் பெறும் யாதொரு கொடுமையையும் அறியாத எம்மக்களை வஞ்சம் தீர்க்க நினைக்கும் மனிதர்கள் சுயநலபோக்குகளை கைவிட்டு எம்மின் வயிற்றுப் பசியினையும் வறுமையின் கோரத்தினையும் உணர வேண்டும்.
பென் குவிக் என்னும் ஒரு வெள்ளைக்காரனுக்கு இருந்த கருணை மனத்தை அன்போட் எமது இரத்த சொந்தங்களான கேரளத்து மக்கள் உணர வேண்டும். அரசியல் நகர்வுகளை விட்டு வெளி வந்து எல்லா வகையிலும் தனக்கு உதவியாய் இருக்கும் தமிழக மக்களின், அதுவும் வானம் பார்த்த பூமியில் முல்லை பெரியாறு நீருக்காக காத்திருக்கும் ஏழை விவாசாயிகளின் இரத்தத்தை எப்படியெல்லாம் புதிய அணை உறிஞ்சிக் கொண்டு எம்மவரை எலும்புக் கூடுகளாக்கும் என்பதை உணரவேன்டும்.
தமிழக அரசும், தமிழக அரசியல்வாதிகளும் நேர்மையாய் இதை எடுத்துக் கூறி பிணக்குகள் இல்லாமல் நமது உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்...!
இந்த பிரச்சினைக்கு பின்னால் இருப்பது வெறும் நதி மட்டுமல்ல....
கோடாணு கோடி மக்களின் ....தலைமுறைகள் கடந்த வாழ்க்கை...!
தேவா. S
Comments
தவிர்க்க முடியாத சிக்கல்களால் நின்று போன முல்லைப்பெரியாரும் துரோக வரலாறும் தொடர் மீண்டும் தொடர்கிறது, உங்களுக்காக தொடர் ஒன்று முதல்...
முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -பாகம் ஒன்று
சிறகுலர்த்தியிருக்கலாம்...//
அடடா !!
சரியாக முடிவு எடுக்கத் தெரியாத தலைமை எல்லா திசையும் பிரச்னைகள் பிறப்பெடுக்க வழி வகுக்கும்