Skip to main content

ஹாய்....10.01.2012!



















அயற்சி வருவதற்கு காரணம் தொடர் வேலைகள் மற்றும் திரும்ப திரும்ப செய்யும் ஒரே மாதிரியான வேலைகள். எழுதுவதற்கு காரணமாய் புறத்தாக்கமோ அல்லது அகத்தாக்கமோ இல்லாமல் போய் விட்டால் எழுத்து நீர்த்துதான் போய் விடுகிறது. அனுபவத்தை, லயிப்பின் சுகத்தை அல்லது வலியை எழுதும் போது அதன் சுவாரஸ்யம் எப்போதுமே அலாதியானதுதான்...

ஆனால், பதிவுகள், அல்லது பதிவுலகம் என்ற ஒரு வட்டத்திற்குள் வந்து ஒரு வாரம் அல்லது மாததிற்கு இத்தனை பதிவுகள் இடவேண்டும் என்ற ஒரு மாயா இலக்குக்குள் சிக்கி அதை நோக்கி ஓடும் போது ஒரு படைப்பாளி மரித்துதான் போய் விடுகிறான். இதற்கு மாறாக இன்னொரு விசயம் ஒன்றும் இருக்கிறது, எழுதுவது தனது ஆத்ம திருப்திக்காக என்ற ஒரு வரையறை தாண்டி வாசகர்கள் பொழுது போக்கும் விதமாக எழுதுவதுதான் அது....

கமர்சியல் ரைட்டிங் எனப்படும் வெகுஜன ரசனையை மையப்படுத்தி வார்த்தைகளை நகர்த்துவது ஒரு தனித்திறமை. எனக்குத் தெரிந்து இந்த பதிவுலகில் மிகச்சிலரே அதைச் செய்து வருகின்றனர். இன்றைய தேதிக்கு வாசகனின் தேவை என்ன என்று யோசித்து தனது படைப்பாற்றலை கொண்டு பளீச் என்று சொல்வதும் ஒரு திறமை. இலக்கியவாதிகள் என்ற வட்டம் தாண்டிய பாமரனை ஒரு எழுத்து சென்று சேரும் போது அங்கே படைப்பாளி கண்டிப்பாய் வெற்றி பெறத்தான் செய்கிறான்.

ஆத்ம திருப்திக்காக எழுதும் போது எழுத்து குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருண்டு கொள்கிறது. பயன்பாடுகளின் விகிதமும் குறிப்பிட்ட எல்லையில் நின்றும் விடுகிறது. மிகச் சிறந்த கருத்துக்களை போகிற போக்கில் விதைத்து பொழுதுபோக்காய் மனிதர்களிடம் கொண்டு சேர்க்க நான் இதுவரையில் நினைத்தது கிடையாது. இதற்கு தனிப்பட்ட காரணம் என்று எதுவும் இல்லை என்றாலும் சூழலும், அனுபவமுமே மனிதனின் முதிர்ச்சியை நிர்ணயிக்கின்றன.

ஆன்மீகம் பற்றி நிறைய பேசி இருக்கிறேன் என்றாலும் ஆன்மீகத்தையும் அதன் புரிதலையும் பொட்டலம் போட்டு வியாபாரம் செய்ய முடியாது. அது வாங்கும் தன்மையோடு தொடர்புடையது. சூட்சுமத்தை பேசும் போது உருவத்தை காட்ட முடியாது. உருவத்தை காட்டினால் அது பொய் அல்லது போலி. ஆன்மீகத்தின் சாரங்களும் நுட்பங்களும் விளங்க முடியாதவை அவற்ற உணரத்தான் முடியும்.

நிறைய கட்டுரைகளை ஆன்மீகத்தின் மையம் தொட்டு எழுதியிருப்பதால் வெகுஜன தொடர்பற்றுப் போய் தேடுபவனின் பார்வைகளுக்கு மட்டும் பொருளை தெரிவித்து விட்டு ஓரமாய் ஒதுங்கிக் கொண்டன எனது மிகைப்பட்ட கட்டுரைகள். இது இப்படித்தான்....இதை மாற்றி கூற முடியாது. இதற்கு படம் வரைதல் கடினம், இடம் சுட்டிப் பொருள் விளக்குதல் கடினம்.

எழுதி நிறைய பேரிடம் கொண்டு சேர்ப்பதை விட எழுதி, எழுதி பார்ப்பதில் ஒரு விதமான சுகம் எனக்கு கிடைத்து விட்டது. எழுதும் போது வந்து விழும் வார்த்தைகளை மீண்டும் வாசித்து வாசித்து ஒரு வாசகனாய் என்னை நெறிப்படுத்திக் கொள்ள முடிந்தது. வாசிக்கையில் எழுத்தினை விட்டு நான் வெகு தூரம் இருப்பதும் எனக்கு புலப்பட்டது. கற்றுக் கொடுக்க என்னிடம் எதுவில்லாமல் கற்றுக் கொள்ள எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்த ஆசையிலேயே நிறைய எழுதவேண்டும் என்று ஸ்பூரித்து, எழுதி எழுதி படித்துக் கொண்டிருக்கிறேன். கட்டுரையின் நீளம் கூடுதல் என்றோ அல்லது புரியவில்லை என்று சிலர் என்னிடம் கூறும் போது எனக்கு என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது நிறைய பேர்கள் விரும்பும் வகையில் கரம், மசாலா பொடி தூவி வாசனையாய் எழுத எனக்கு தோன்றவில்லை.

காரணம்...,எழுதி எழுதி நான் திருப்தி கொண்டேன் என்பதுதான் உண்மை. இது ஒரு மாதிரியான சுகம். இது அடுத்தவர் சாரா திருப்தி. விளக்க முடியாத ஒரு அற்புதம்.

ஆன்மீக அடிப்படையிலான கதை, கட்டுரை மற்றும் கவிதைகள் செய்து கொண்டிருக்கையில் காமமும் ஆன்மீகத்தின் மறுக்க முடியாத பாகம்தானே என்ற எண்ணம் தோன்றியது. காமம் பற்றி மருத்துவ ரீதியாக, விஞ்ஞான ரீதியாகத்தான் நிறைய பேர் எழுதுகிறார்கள். சிலர் வக்கிரத்தை தூண்டும் படி படம் போட்டு எழுதி விட்டு காமம் என்றும் கூறுகிறார்கள்.

காமத்தின் சரியான பார்வைகளை ஆன்ம ரீதியில் எழுதினால் என்ன? என்று ஒரு கேள்வி எழுந்தது. விளைவு காமத்தை சரியான விகிதத்தில் ஆன்மப்புரிதலாய் உடல்கடந்த ஒரு உணர்வாய் எழுதலாம் என்று தீர்மானிக்கவும் செய்தேன். காமத்தை விரசமில்லாமல் வாசிப்பாளன் முகம் சுழிக்காமல் எழுதி அது உள்நோக்கிய பார்வையை கூர்மையாக்கி தெளிவுகளை கொடுக்கும் வகையில் எழுதவேண்டும் என்பது கயிற்றில் நடப்பது.... போல...

நடந்து பார்க்கலாம்..!

இவையெல்லாம் கடந்து...., மேலே நான் சொன்னது போல பொழுது போக்காய் வாசிப்பாளனின் நாடி பிடித்துப் பார்த்து...என்ன செளக்கியமா? என்று கேட்கும் கமர்சியல் கட்டுரைகளையும் எழுதினால்தான் ஏதோ ஒரு வட்டம் எனக்குள் பூர்த்தியாகும் போல தோன்றுகிறது.

பார்க்கலாம்...காலமும், சூழலும் எப்படி நம்மை வழி நடத்துகின்றன என்று.....!

வேற என்னங்க.... இப்டி.. அப்டி ட்ராக் மாறி மாறி நிறைய பேசிட்டேன்...! உங்களுக்கும், வீட்டிலுள்ள அத்தனை உறவுகளுக்கும் எனது அன்பான நன்றிகள் + வாழ்த்துக்கள்...!


அப்போ........வர்ர்ர்ர்ட்ட்டா...!!!!!


தேவா. S


Comments

வேற என்னங்க.... இப்டி.. அப்டி ட்ராக் மாறி மாறி நிறைய பேசிட்டேன்...! உங்களுக்கும், வீட்டிலுள்ள அத்தனை உறவுகளுக்கும் எனது அன்பான நன்றிகள் + வாழ்த்துக்கள்...!///

யாருக்கு வாழ்த்து...???
Admin said…
உங்கள் எழுத்துகளின் நேர்த்தி என்னைக் கவர்ந்தது.சொல்ல வருவதை அழகாக ரசிக்கும்படி சொல்கிறீர்கள்.. வார்த்தைகளை வரிகளாக வார்க்கும் விதம் அருமை..
ஆமாம்..எழுதியதை எழுதியவன் முதலில் நான்கைந்து முறை வாசித்தாலே அடுத்து எழுதுவது இன்னும் சிறப்பாக இருக்கும்..அதுபோல உங்களுக்கு நீங்களே முதல் வாசகனாக இருந்ததால்தான் உங்களின் படைப்பாற்றல் மேம்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்..

பார்க்கலாம்...காலமும், சூழலும் எப்படி நம்மை வழி நடத்துகின்றன என்று.....!பார்க்கலாம்..

வந்தேன்..வாசித்தேன்..வாக்களித்தேன்..
ஓய்வாயிருந்தால் சில நிமிடங்கள் எனக்காய் செலவளியுங்கள்..

சந்தேகம்
பார்க்கலாம்...காலமும், சூழலும் எப்படி நம்மை வழி நடத்துகின்றன என்று
யதார்த்தமான வார்த்தைகளை கொண்டும் கவர முடியும் என்பதை உங்கள் பதிவு விளக்குகிறது வார்த்தை ஜாலம் அருமை

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த