Skip to main content

விநாயகனே...வினை தீர்ப்பவனே...!



காவிரி ஆறுன்னு சொன்னா எங்களுக்கு கல்யாணை ஓடை கால்வாய் தான். ஆத்துல தண்ணி வந்துருச்சுடோய்ய்ய்ய்ய்ய்னு..... கத்திக்கிட்டு துண்ட எடுத்து வீட்டுக்குத் தெரியாம இடுப்புல சுத்திக்கிட்டு மேல சட்டையப் போட்டு மறைச்சுக்கிட்டு பயலுகளோட ஓடிப்போயி எல்லோரும் தாவுற சந்தோத்தை இன்னொரு தடவ தாவித்தான் காட்ட முடியுமே தவிர எழுத்துல கொண்டு வர்றது கஷ்டம்...

பழைய மதுக்கூர்ல இருந்து மதுக்கூர்க்குள்ள தண்ணி உள்ள வந்துச்சுன்னா சுப்பையன் ஓட்டல்ல கொல்லப்புறமா ஆத்துக்குள்ள வீசி எறிஞ்ச எச்சி எலைய எல்லாம் துடைச்சு அள்ளிக்கிட்டு செத்த, குப்பை எல்லாம்  வாரி அடிச்சுக்கிட்டு போகும். தண்ணி வந்த ரெண்டு  நாளைக்கு குளிக்கப்புடாதுடா... ஆத்துலதான் தண்ணி இல்லையேன்னு சொல்லிட்டு உள்ளயே அசிங்கம் பண்ணி வச்சு இருப்பாய்ங்கன்னு பசங்க குசு குசுன்னு ஒருத்தன் காதுல மாத்தி ஒருத்தன் சொல்லி பள்ளிக் கூடத்துக்குள்ளயே ஆத்துல தண்ணி வந்த விசயத்தை ஒரு திருவிழா மாதிரி கொண்டாடிகிட்டு இருப்போம்.

ஆறுன்னு சொன்னா எங்க ஊருக்குள்ள வர்றது ஒரு சின்ன கால்வாய்தான்னு வச்சுக்கோங்களேன். ஊரச்சுத்தி அம்புட்டு குளம் இருக்கு, பெரிய ஏரி ஒண்ணு இருக்கு. தஞ்சாவூர் ஜில்லான்னா சொல்லவா வேணும்....மோட்டர் போட்டு இறைச்சாக் கூட அப்போ எல்லாம் கிட்டன்ஸ்ல தண்ணி இருக்கும்....அதனால தோப்புக்கு தோப்பு மோட்டர் பம்ப் வேற இருக்கும். இப்டி எவ்ளோதான் இருந்தாலும் ஓடுற ஆத்த பாக்கும் போதே அந்த தண்ணிக்கு உசுரு இருக்குன்ற மாதிரி தோணும்....

கால மட்டும் சரியா வச்சி நிக்கலேன்னா தண்ணி இழுத்துக் கொண்டு போயி கடல்ல விட்றும்டான்னு நல்லா நீச்ச தெரிஞ்ச பசங்க எல்லாம் பயமுறுத்த வேற செய்வாங்க. எங்க வீட்டப் பொறுத்த வரைக்கும் ஆத்துக்கு குளிக்க போகக்கூடாதுன்னு கண்டிசன் போட ரெண்டு காரணம்  இருக்கு. ஒண்ணு எனக்கு நீச்சல் தெரியாது, இரண்டாவது ஆத்துல பொணத்த வெட்டி மெதக்க விடுவாங்கன்னு ஒரு பயம் வேற.....

அடிதடி வெட்டுக் குத்துக்கு எல்லாம் சளைச்ச  மாவட்டம் இல்ல தஞ்சாவூர் மாவட்டம். ஆனாலும் எதைச் செஞ்சாலும் கமுக்கமா கருவம் வச்சு செஞ்சுப்புடுவாங்க.  அப்போ எல்லாம் ஆத்துல அடிக்கடி பொணம் வரும்னு சொல்லி நான் கேள்விப்  பட்டு இருக்கேன். அதாவது ஆளக் காலி பண்ணிட்டு தலைய மடக்கி வச்சு தலைவாணிய கட்டி ஆத்துல விட்டுருவாங்கன்னு சொல்வாங்க. தாவித்தாவி இழுத்துக்கிட்டு போற தண்ணியில குளிக்கிற சுகத்துல லேசா இந்த பயம் வேற உள்ளுக்குள்ள இருக்கத்தான் செய்யும்.

ஒரு கரையில ஆம்பளைங்களும் எதித்த கரையில பொம்பளைங்களும் சங்கோஜம் இல்லாம குளிக்கிறது எல்லாம் நம்மூர்ல சாதரணம்னு வச்சுக்கோங்களேன்...! அப்டியே தண்ணில பாஞ்சு விழும் போதே முதுக திருப்பி எதித்த கரையில துவட்டிக்கிட்டு இருக்க கூட்டாளி மேல தண்ணி அடிக்கிறது, அப்புறம் காலை சம்மணம் போட்டுக்கிட்டு மூக்கை பிடிச்சுக்கிட்டு தண்ணில முங்குறது, அப்டி நாம முங்குனதுக்கு அப்புறம் தண்ணி மேல ஜும்னு எந்திரிச்சு வரும்ன்றதுனால அதுக்குப் பேரு புள்ளையார் முக்குளின்னு சொல்லுவாங்க...

புள்ளையார்னு சொல்லும் போதே மனசு ச்ச்ச்ச்சும்மா ஜிவ்வுனு எங்கயோ பறக்குது. ஆமாங்க புள்ளையார் சதுத்தி வந்துருச்சுன்னா...புள்ளையார் சதுத்தி அன்னிக்கு மத்தியானம் பக்கத்து வீட்டு பாலு அண்ணா கூட சைக்கிள்ல பின்னாடி ஏறிகிட்டு ஒரு இரும்பு வாளியோட ஆத்துக்கு போவோம். அந்தண்ணாவோட வாளி  சைக்கில் ஹேண்டில் பார்ல இருக்கும். ஆத்துக் கரையோரமா இருக்குர களிமண்ண களைக்கோட்டுன்னு சொல்லுவாங்களே.. சின்ன மம்பட்டி மாதிரி இருக்குமே அதுல அள்ளி வாளில எடுத்துக்கிட்டு... அப்டியே ஆத்துல குளிச்சுட்டு....ஆத்துல இருந்து திரும்பி வர்ற வழியில நிறைய அருகம்புல் எல்லாம் பறிச்சுக்கிட்டு ஒரு மூணு மூணரைக்கு வீட்டுக்கு வந்துடுவோம்....

எங்க சைட்ல எல்லாம் புள்ளையார கடையில வாங்குறத ஒரு மாதிரி அவமானமா நினைப்போம். ஏன்னா எங்க வீட்ல எப்பவுமே எங்க அம்மாதான் புள்ளையார் செய்வாங்க....களிமண்ண குழைச்சு கும்பம் மாதிரி வச்சு தட்டி தட்டி அழகா ஒரு பிரமாண்டப் புள்ளையார அவுங்க செய்றத எங்க தெருவுல இருக்க எல்லோருமே ஆச்சரியமா ஒரு மேஜிக் ஷோவ வேடிக்கை பாக்குற மாதிரி பார்ப்பாங்க....! புள்ளையார் செஞ்சு அதுக்கு பூண்டு பல்லுல தந்தம் வச்சு.... குண்டு மணி தெரியுங்களா உங்களுக்கு....? அந்த குண்டு மணிய எடுத்து கண்ணு வச்சு... தலையில வெளக்குமாத்து குச்சிய வைச்சு அழகா பெரிய கிரீடம் பண்ணி, நாலு கை, பெரிய தொப்பை வச்சு அழகா காலை மடக்கி உட்கார்ந்து இருக்கமாதிரி செஞ்சுடுவாங்க...., துணைக்கு ஒரு குட்டி மூஞ்சுறு வேற.. அதுக்கும் குண்டு மணிதான்.. கண்ணு.... அதோட முன் நெற்றியில மூணு கோடு போட்டு பட்டை எல்லாம் போட்டு விடுவோம்...

செமையா காஞ்சு பிள்ளையாரும், மூஞ்சுறும் ரெடி ஆனவுடனே. புள்ளையார் வயித்துல ஒரு எட்டணா காயின வச்சு....சாமிப்படத்துக்கிட்ட கொண்டு போய் வச்சுட்டு...சாயங்காலமா, சக்கரைக் கொழுக்கட்டை, பூரணக் கொழுக்கட்டை, லட்டு, சர்க்கரைப் பொங்கல், வடை, பாயசம், சுண்டல், ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம், வெத்திலைப் பாக்கு...ஊதுபத்தி எல்லாம் வச்சுப் படைச்சு...

' பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.....'

அப்டீன்னு கணீர் குரல்ல அப்பா பாட....கூடவே முடிக்கும் போது சங்கத் தமிழ் மூன்றும் தான்னு நாமளும் புள்ளையார கெஞ்சிக் கேட்டுக்கிட்டு இருக்கையிலயெ... மனசுக்குள்ள அந்தப் பூரணக் கொழுக்கட்டை இனிச்சுக்கிட்டு இருக்கும். பூரண கொழுக்கட்டையில இருக்குற வெள்ளையான மாவை ஓப்பன் பண்ணிட்டு பூரணத்தை மட்டும் சாப்பிடுற சுகமே தனிதான்....

புள்ளையார் சத்தி அன்னிக்கு நைட் எந்திருச்சு நான் புள்ளையாரப் பார்ப்பேன்.. ஜீவனோட உக்காந்துட்டு இருப்பார். ஆமாம்.... ஆத்து மண்ணா இருந்து ஒரு உருவமா மாறி ஜீவனோட எங்க வீட்டுக்கு வந்த ஒரு புது ஆள்தானே.... புள்ளையார நெனச்சுக்கிட்டே தூங்கிடுவேன். புள்ளையார் எப்பவுமே ஒரு சமரசமான சாமானியனின் கடவுளாத்தான் நான் எப்பவுமே நினைச்சு இருக்கேன் அதாவது வீட்ல அம்மோவாட கடைசி தம்பி.. வயசுல கொஞ்சம் எல்லா மாமாவை விடவும் கம்மியா இருந்துட்டு நமக்கு எல்லாம் சப்போர்ட் பண்ணுவாரே.... எங்க வேணும்னாலும் கூட்டிட்டுப் போய் எது கேட்டாலும் வாங்கித் தருவாரே... அது மாதிரி ஒரு உறவாத்தான் புள்ளையார நான் பாத்து இருக்கேன்...

மூணு நாள் வீட்டுக்குள்ள இருந்த ஆள மறுபடி கொண்டு போயி தண்ணியில போடணும்னு அம்மா சொல்லும் போது ரொம்ப கஷ்டமா இருக்கும். மறுபடி வாளிக்குள்ள புள்ளையார வச்சு ஆத்துக்கு சைக்கிள் கேரியர்ல வச்சு தூக்கிட்டு போகும் போது மனசு ரொம்ப வலிக்கும்....ஏம்மா..ஏம்மா. வச்சுக்கலாமேம்மானு அம்மாகிட்ட கேட்டா.. .அட..அப்டி எல்லாம் செய்யக்கூடாது அப்டி வச்சுகிட்டா அது தப்புன்னு அம்மா சொல்லும் போது கண்ல இருந்து கண்ணீரே வந்துடும்....

மறுபடி எங்க இருந்து புள்ளையாருக்கு மண்ண எடுத்தேனோ அங்கேயே .....போய் புள்ளையாரப்பா எங்கள காப்பாத்துன்னு தண்ணியில புள்ளையாரப்பாவ கரைக்கும் போது  ச்ச்சே.... எவ்ளோ கம்பீரமா இருந்தப்பா நீன்னு தேம்பித் தேம்பி அழத்தோணும்....

அப்போ எல்லாம் தெரியாது. ஏதோ ஒரு நிலையாமையக் கத்துக் கொடுக்கத்தான் இப்டி மண்ல எடுத்து செஞ்சு வச்சு பூஜை பண்ணிட்டு மறுபடி மண்ணுலயே கரைக்கிறதுனு எனக்குத் தெரியாது. மனுச வாழ்க்கையும் அப்டிதானுங்களே.. ஆரவாரமா வந்து ஆரவாரமா அடங்கிப் போயிடுறோம்.  இடையிலதான் அலங்காரம், அது இதுன்னு எல்லாம்....!

புள்ளையார் சத்தின்னா அதுல கத்துக்குற பாடம் இதுதான்னு புரியாம ஏதேதோ செய்றவங்கள பாத்தா சிரிப்புதான் வருது.. இப்போ எல்லாம்...! நாளைக்கு புள்ளையார் சத்தி....எங்கூரு ஆத்துல தண்ணி இல்ல இப்போ.... அதோட மட்டும் இல்லை.. இப்போ எல்லாம் யாரும் புள்ளையாரு மண் எடுத்து செய்றதும் இல்ல... எல்லாரும் கடையில வாங்கிட்டு...பக்கத்துல கிணத்துல தூக்கிப் போட்றாங்க...! நிறைய பேர் புள்ளையாரை தூக்கிப் போடாம எடுத்து வச்சுட்டு... வருசா வருசம் அதையே எடுத்துக் கும்பிடவும் செய்றாங்க..


நான் இப்போ சிலை செய்றதும் இல்லை,  வாங்குறதும் இல்லை ஆனா மனசுக்குள்ள

' பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.....'

எனக்குள்ள நானே சொல்லிக்கிறது....! சங்கத் தமிழ தந்தாலும் சரி தரலேன்னாலும் சரி....நான் நிலையாமைய உணர்ந்துட்டேன் அம்புட்டுதான்...!

அப்போ வர்ர்ர்ர்ர்ர்ட்ட்டா.....!


தேவா. S



Comments

tamil said…
அருமை தேவா.
மிக அருமை..

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
Shankar M said…
பிள்ளையார் சதுர்த்தியின் நோக்கத்தை, பிள்ளையார் செய்து (மண் எடுத்து), பின் எடுத்த இடத்திலேயே கொண்டுபோய் கரைப்பதின் தார்ப்பீரியத்தை கருவாய் கொண்டு, குண்டுமணி, தந்தம், அருகம்புல், அலங்காரம் என்ற செயல்கள் பல செய்தாலும், கரைக்கப்படும் / கரைந்து விடும் என்றும் சொன்னது நன்றாக இருந்தது.
Unknown said…


// எனக்குள்ள நானே சொல்லிக்கிறது....! சங்கத் தமிழ தந்தாலும் சரி தரலேன்னாலும் சரி....நான் நிலையாமைய உணர்ந்துட்டேன் அம்புட்டுதான்...!//

வாழவின் நிலையாமைத் தத்துவத்தை விளக்கியுள்ள விதம்
மிகவும் அருமை!
நம்ம சின்ன வயசு மதுக்கூர் வாழ்க்கைய கண்ணுகுள்ள கொண்டு வந்துட்டீங்க தேவா...!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த