Skip to main content

நானும் ஓர் கனவோ....?!
















பேனாவைத் திறந்து காகிதத்தை நெருங்கும் வரையில் எந்த தளத்திற்குள் எண்ணங்கள் சீறிப்பாயும் என்ற ஒரு  உறுதியில்லை. எப்படிப் பார்த்தாலும் எழுத்துக்கள் எல்லாம் ஏதோ ஒரு அவஸ்தையின் வெளிப்பாடுகள்தான். அவஸ்தைகளை வலிகளுக்கும், சோகத்துக்கும் கொடுத்துப்பார்க்கும் பொது புத்திகள் சந்தோசமும் ஒரு அவஸ்தைதான் என்பதை நம்ப மறுக்கும். எழுதுவதற்கு எப்போதும் கட்டுப்பாடுகளை நான் வைத்துக் கொள்வது இல்லை.

வெறுமையான வானத்தின் கட்டற்ற சுதந்திரத்தை திட உடம்பிற்குள் நின்று பொறாமையாய் எதிர்கொள்கையில் புத்திக்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஓராயிரம் இனிய பொன் நிலாக்கள் உதயமாகவும் செய்யும். ஒரு கடற்கரை ஓரத்து மாலை வேளையை உடை கலைத்து, உடல் தழுவி, உள்ளம் நிறைத்துவிளையாடும் காற்றாகவும், கால்கள் பதிய நடந்து பார்க்கும் விரிந்து பரந்த மணலாயும், கடலென்னும் கவிதை மேலெழும்பி பின் கீழ் சென்று கரை மோதி மோதி விளையாடும் காம விளையாட்டை கண்களால் பருகியும்தான் அனுபவிக்க வேண்டும்.

கட்டுப்பாடுகள் கவலையுற்ற புத்திகள் செரித்துப் போட்ட அபத்த அனர்த்தங்கள். ர்த்தங்களே அபத்தமானதுதானே...?!!!! சீறிப்பாயும் உணர்வுகளை இப்படியாய் நீங்கள் நின்று இதற்குள்ளே பேசுங்கள், இதை மட்டும் ரசியுங்கள் இங்கேயே ஒரு சொறி நாயாய் படுத்துக் கிடந்து எதிர்ப்படும்  எல்லா விசயங்களிலும் உங்களின் எரிச்சல்களை குரைத்தல்களாய்  வெளிப்படுத்துங்கள் என்பதில் என்ன சுதந்திரம் இருந்து விடப்போகிறது. சுதந்திரம் என்ற  வார்த்தையை ஏந்திக் கொண்டு அடிமைகளாய் வாழும் மனோபாவத்தை நான் அறுத்தெரிந்த நிமிடம் எதுவென்று எனக்கு சரியாய்த் தெரியாது. ஒரு ஸென் ஹைகூ கூறுவதைப் போல

' நேற்றிரவும் அல்ல,
இன்று காலையும் அல்ல -
பூசணிப் பூக்கள் மலர்ந்தது...' 

மலர்ந்து விட்ட பூசணிப்பூக்களை வாசித்துப் பார்க்க மனமில்லாத சிக்கலானவர்களின் புத்தி  அடுத்தவன் வீட்டு படுக்கையறையை  எட்டிப் பார்ப்பது போல , யார் பூசணிப்பூவைப் பூக்க வைத்தது? எப்போது பூத்தது என்ற கேள்விகளை எழுப்பி விட்டு பூசணிப்பூவை பார்க்காமல் சென்று விடுகிறது.  இதுதான் அவர்கள் சுதந்திரத்தின் உச்சம்....

விமர்சனங்களைக் கடந்து வாழ்க்கை நெடுகிலும் பூக்களாய் சொரிந்து கிடக்கின்றன. பூக்களை தரிசிக்க செல்கையில்  கால்களில் தைத்து விடும் கூரான முட்கள் கொடுக்கும் வலிகளையும் ஏந்திச் சென்று வாழ்க்கையை நுகர வேண்டியிருக்கிறது. மறுக்க மறுக்க மறுத்தல் விசுவரூபமெடுக்கிறது. இழுத்துச் செல்லும் நதியாய் நகர்ந்து செல்லும்  ஒரு ஓட்டத்தில் நதி நீரில்  மிதந்து செல்லும் பூச்சியாய் மெளனமாய் காத்திருக்க வேண்டியதுதான். பொருளோடு தொடர்பு படுத்தி தங்களின் மிகைப்பட்ட பொருள் சேர்க்கை சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்து விட்டது என்றெண்ணி தலையை மண்ணுக்குள் கவிழ்த்துக் கொள்ளும் மமதை வாழ்க்கை இல்லை என்ற குறைந்த பட்ச என் சந்தோசம்தான் அவ்வப்போது கவிதைகள் என்ற பெயரில் வாழ்க்கையை சுவாசிக்கச் செய்கிறது.

' எனக்கு வீடென்ற ஒன்று இல்லை...
அதனால் தனியே சாளரங்களென்று
நானொன்றும்  அமைக்க வேண்டியதில்லை....
வெளிச்சத்திற்காய் திறந்து வைத்து விட்டு
பெருமிதம் கொள்ள என்னிடம் கதவுகளில்லை
அடைத்து எழுப்பிக் கொண்டு வர்ணமடித்துக் கொண்டு
சுவர்களுக்குள் வாழும் சுதந்திரம் 
என்னிடம் இல்லவே இல்லை...'

மழைக்கு ஓடிப்போய் ஒடுங்கிக் கொள்ளவும், வெயிலைக் கண்டு எரிச்சலுறவும், குளிருக்காய் இறுக்கமான உடைகள் அணியவும் எண்ணுவதற்கு என்ன இருக்கிறது? மாறும் கால நிலைகளில் இருக்கும் நிதர்சனமான பொய்களின் பல்  இளித்தல்களுக்கு எல்லாம் உடலுக்குள் ஒடுங்கிக் கிடக்கும் ஒரு இயலாமை காரணமாய்ப் போய் விடுகிறது. செயற்கையையும் இயற்கையாய்ப்  பார்க்கும் இரண்டு கொம்புகள் எப்போதும் எல்லோர் தலையிலும் இருக்கத்தான் செய்கிறது.

இசை கூட ஒரு காலத்தில் காட்டாறாய் தன் இயல்பில் இருந்த போது அது சாதாரணர்களிடமிருந்துதான் பிறந்திருந்தது. வாழ்வின் போக்கில் மன உணர்வுகளைப் பிழிந்து கசடுகளை நீக்கும் ஒரு முறையற்ற இசைதான் வாழ்வியலின் தேவை. அதை  முறைப்படுத்தி, முறைப்படுத்தி புத்திசாலிகளின் கைகள் அவற்றை வளைக்கத் தொடங்கிய போது மீசை முளைத்த ஆறு மாதக் குழந்தையாய் அது விகாரமாகிப் போனது . தட்டித் தட்டி இங்கும் அங்கும் அலைந்து ஏதேதோ மனதின் வக்கிரங்களை வெளியேற்ற முடியாமல் எப்போதும் நளினங்களையே இசை பேசிய போது இசையின் சுதந்திரம் உடைந்து நொறுங்கிப் போனது.

காலப்போக்கில் அதுவே காசென்ற மகுடிக்கு மயங்கும் பாம்பாய் போனதுதான் இயற்கையின் பெரும் சோகம். இயல்பிலேயே சுதந்திரமானதும் கட்டுப்பாடுகளற்றதுமாய் இருக்கும் பிரபஞ்ச நகர்வில் கட்டுப்பாடுகள்தான் சரி என்று மனிதன் ஒருவன் நினைத்து விதிமுறைகளை ஏற்படுத்திய இடத்தில் ஆரம்பித்துப் போனது முரண்பாடு. முரண்பாடுகளே இன்று இந்த உலகை ஆண்டு கொண்டிருப்பதால்தான் சூரியன் தானே தன்னிலிருந்து பிய்த்தெறிந்த பூமிக்கு கோடுகள் போட்டு மனிதன் விளையாடிக் கொண்டிருக்கிறான். சூழல் ஏற்படுத்திக் கொடுத்த உடலின் வர்ணத்தை வைத்து பெருமைகள் பேசிக் கொள்கிறான், எண்ணங்களை வெளிப்படுத்த உருவாக்கிக் கொண்ட சப்தங்களை எல்லாம் மொழியென்று கூறி அதன் பெயரில் தன்னை வகைப்படுத்திக் கொள்கிறான்...

நீர்நிலைகள் நிறைந்த பிரதேசத்தில் வாழ்ந்த மனிதர்கள் மூன்று வேளை உணவிற்கு பெரிய பெரிய போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியமற்று இருந்ததால் ஓய்வு நிறைய கிடைக்க ஏதேதோ யோசித்து பண்பட்டுப் போகிறேன் பேர்வழி என்று வாழ்வியல் நெறிகளை வகுத்து விட்டார்கள். மனமென்னும் கட்டுக்குள் சிக்கிக் கொண்டு அபத்தங்களின் பிள்ளையாய்ப் போயிருக்கும் மனிதர்கள் தானே மனிதர்களின் வாழ்க்கைக்கு சவாலாய் இருக்கிறார்கள்...?

இயற்கைச் சீற்றங்களை விட, மிருகங்களை விட, எதிர்பாராத  எல்லா ஆபத்துக்களையும் விட மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தாக இருப்பது சக மனிதனேயன்றி வேறு யாரும் இல்லை...!

புலனறிவுகளுக்குள் சிக்கிக் கொண்ட புரையோடிப் போன மனிதர்களே சக மானுடர் வாழ்க்கைக்கு சோதனையாய் இருக்கிறார்கள். ஆமாம்.....இங்கே மனிதர்களை அழிக்க தனித்தொரு சக்தி தேவையில்லை. மனிதனே மனிதனை அழித்துக் கொள்வான். அவனின் கட்டுப்பாடுகளும், தான் மட்டும் வாழவேண்டும் என்ற எண்ணமுமே போதும்....

விரும்பியதை வேண்டியபடி செய்ய ஏதோ ஒரு ஒழுங்கு நம்மை கட்டில்லாத சுதந்திர நகர்வுக்குக் இழுத்துச் செல்லும்..ரியோக்கனின் இந்த ஹைகூவைப்போல.. இயற்கையின் பாதையைத் தொடர்வோம் நான் யாரென்றும் நீங்கள் யாரென்றும் என்ற எந்த அடையாளமுமின்றி....

' மனம் அற,
வண்ணத்துப் பூச்சியை
அழைக்கிறது மலர்
வண்ணத்து பூச்சியும் 
வருகை தருகிறது மலருக்கு,
மனம் அற, 
மலர் திறக்கும் போது 
வண்ணத்து பூச்சி வருகிறது,
வண்ணத்து பூச்சி வரும் போது
மலர் திறக்கிறது,
எனக்கு மற்றவர்களைத் தெரியாது, 
மற்றவர்களுக்கு என்னைத் தெரியாது, 
தெரியாமையின் அடிப்படையில்
நாங்கள் தொடர்கிறோம் 
இயற்கையின் பாதையை.... '


தேவா. S

Comments

Unknown said…
மனிதனுக்கு மனிதனே எதிரி, அவனின் மனமே எண்ணமே அனைத்திற்கும் காரணம்...

நல்ல வாழ்வியல் உணர்வு...
சந்தோசமும் ஒரு அவஸ்தைதான்..

புத்திசாலிகளின் கைகள் அவற்றை வளைக்கத் தொடங்கிய போது மீசை முளைத்த ஆறு மாதக் குழந்தையாய் அது விகாரமாகிப் போனது..

சூரியன் தானே தன்னிலிருந்து பிய்த்தெறிந்த பூமிக்கு கோடுகள் போட்டு மனிதன் விளையாடிக் கொண்டிருக்கிறான்..

Extraordinary write-up Dheva. Ryokan's poem is great.

இயல்பாய் இருப்பது எல்லாமே அழகாக இருக்கிறது...like told by John Keats as "beauty is truth, truth beauty"
////இயற்கைச் சீற்றங்களை விட, மிருகங்களை விட, எதிர்பாராத எல்லா ஆபத்துக்களையும் விட மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தாக இருப்பது சக மனிதனேயன்றி வேறு யாரும் இல்லை...!/////

உண்மை :))


///நானும் ஓர் கனவோ....?! /////

நானும் ஓர் கனவுதான்

அனால் கனவு நிஜம்தான் !

நிஜமும் ஒரு கனவுதான் !!

நித்தம் பல கனவு தான் !!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல