Skip to main content

யுகங்களின் நாயகன்...கிருஷ்ணா...!


















இந்துக்களுக்கு எப்போதுமே கிருஷ்ணா ஒரு வசீகரமான கடவுள்தான். சராசரி மனிதனின் எல்லா குணங்களையும் உள்ளடக்கிய ஒரு தெய்வாம்சம் பொருந்திய கேரக்டரை வேறு மதங்கள் இதுவரையிலும் படைத்திருக்கவில்லைதான். எல்லா மதத்திலும் கடவுள் கற்பிதங்களும், இறைத் தூதர்களும் சராசரி மனித வாழ்க்கையிலிருந்து விலகி நின்று கொண்டு நான் இப்போது என்ன சொல்ல வருகிறேன் என்றால் என்று கட்டளைகளைத்தான் பிறப்பித்து இருக்கிறார்கள்.

கிருஷ்ணரை இறைத்தூதர் என்றும் கூட சிலர் சொல்வதுண்டு. அவர் இறைத்தன்மையை பிரதிபலித்த ஒரு ஆன்மா என்று வேறு சில கருத்தியல் கோட்பாடுகள் வரையறுப்பதும் உண்டு. இந்து மதம் தனது சமூகத்திற்கு கிருஷ்ணரை இறைவனின் அவதாரம் என்றுதான் கூறுகிறது. சிதறிக்கிடந்த சிந்து சமவெளி நாகரீகத்தின் தொகுப்பாகத்தான் இந்து மதம் என்னும் ஒரு மாய பிம்பம் எழுந்து நிற்கிறது என்றாலும் இன்றைக்கு இந்தியா முழுதும் இருக்கும் இந்துக்களுக்கு கிருஷ்ணா ஒரு மிகப்பெரிய வசீகரம்தான். ஒரு பிரம்மாண்ட ஹீரோவுக்குரிய எல்லா வித குணாதிசயங்களோடுதான் கிருஷ்ணாவின் காதாபாத்திரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

பிறந்த உடனேயே அவரைக் கொல்ல நினைக்கும் ஒரு பேராபத்துக்கு நடுவே அவதரிக்கும் கிருஷ்ணரின் பிறப்பே மிகப்பெரிய த்ரில்லோடு நமக்கு அறிமுகமாகிறது. தெய்வாம்சம் பொருந்திய ஒரு கேரக்டர் என்று அறிமுகம் ஆகும் கிருஷ்ணரின் பால்யப் பிராயத்தைப் பற்றி வாசிக்கும் போது நமக்குள் தொற்றிக் கொள்ளும் அந்த குறு குறுப்பும், கிருஷ்ணா பற்றிய கற்பனைகளும், அவரின் குறும்புகளும் அவர் வளர்ந்து ஒரு  பெரிய மனிதாராக ஆன பிறகும் பிராயத்தை அனுசரித்து அவர் உடன் வளர்ந்து கொண்டே இருப்பதை உணர முடியும். கிருஷ்ணர் எல்லா உணர்வுகளுக்கும்  சொந்தமான லெளகீகத்தின் வசீகர குழந்தை. அவர் வெண்ணை திருடுவார், திட்டு வாங்குவார், தண்டனை அனுபவிப்பார், பதின்மப் பருவத்தில் பெண்களை எல்லாம் வசீகரிக்கும் மாயக்கண்ணனாக உருவெடுப்பார்.

மொத்தத்தில் கிருஷ்ணாவின் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாகத்தான் நமக்கு அடையாளம் காட்டப்படுகிறது. பதின்மத்தில் இயல்பாகவே தோன்றும் அவரின் பல உணர்வுகளையும் மறைத்து அவரைப் புனிதராக காட்ட இந்து மதம் முனையவில்லை. இன்னும் சொல்லப் போனால் வாழ்வின் போக்கில் நடக்கும் எல்லா செயல்களுக்குமே ஒரு இயல்பான சாட்சியாய் கிருஷ்ணரை நம் முன் அது நிறுத்துகிறது. ஒழுக்க நெறிகளையும் கோட்பாடுகளையும் மனசாட்சியோடு போட்டுப் பின்னி அந்த நியாய தர்மங்களின் படிதான் கிருஷ்ணா தன் வாழ்நாள் முழுதும் வாழ்க்கையை வாழ்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவன் புல்லாங்குழல் ஒரு போதும் சோகத்தை இசைத்திருக்கவில்லை. துன்பங்களை எல்லாம் வாழ்கையின் ஓட்டத்தில் நிகழும் நிகழ்வுகளாய் கருதி நகரும் கிருஷ்ணா.....அதையும் கூட சந்தோசத்தோடு எதிர் கொண்டு வாழ்ந்துதானிருக்கிறார்.

உலக சினிமாவின் கதாநாயக மனோபாவத்தின் எல்லா சாயல்களும் கிருஷ்ணாவிடம் இருந்து உருவப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் கூட எனக்கு எழுகிறது. இன்னும் சொல்லப் போனால் இது போன்ற எல்லாம் வல்ல சூப்பர் பவரை மனிதர்களால் செய்ய முடியாத செயல்களைச் செய்யக்கூடிய ஒரு கதாபாத்திரத்தை இந்த பூமியின் பல்வேறு பிரதேசங்களும் படைத்திருக்கத்தான் செய்கிறன. என்ன ஒன்று அந்த பாத்திரங்கள் அத்தனையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் வேற்றுக்கிரகவாசிகளாகவே நமக்கு அறிமுகம் செய்யப்படுகிறன. ஒரு போதும் எந்த இறைத்தூதரும் பொய் சொன்னார் என்றோ...தங்களது கடவுள் பெண்களின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தார் என்றோ, பொய் சொல்லிவிட்டு தண்டனையை அனுபவித்தார் என்றோ அவர்கள் சொல்ல முடியாது அல்லது அப்படி சொல்ல பயந்தார்கள்.

அந்தத் துணிச்சல் சனாதான தருமம் எனப்படும், சிந்துசமவெளி நாகரீகத்தின் தத்துவங்களின் கூட்டு மனோபாவத்தில் உருவான இந்துமதத்திற்கு  கொஞ்சம் அல்ல நிறையவே உண்டு என்றுதான் நான் சொல்வேன். கிருஷ்ணரின் தர்மங்களும், அதர்மங்களும், மனித சமூகத்தை முன்னிலைப்படுத்தி  கட்டமைக்கப்பட்டது அல்ல அது பிரபஞ்ச நியதியையும், ஒட்டு மொத்த மானுடசமூகத்தின் சுமூக இயங்கு தன்மையையும், மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட சூட்சும பெரும் இயக்கத்தையும் மையப்படுத்தி நிறுவப்பட்டது. எந்த சூழலிலும் பொய் சொல்லக்கூடாது என்று அகில உலக தர்ம சிந்தனை கொண்ட மதங்களும் சொல்லிக் கொண்டிருக்கையில்...

சர்வ சாதரணமாய் கிருஷ்ணர் பொய் சொல்லி பாரதப் போரையே தவறான நாளில் கெளரவர்கள் தொடங்க ஏது செய்வார். புண்ணியங்களால் நிறைந்து கிடக்கும் ஒரு மனிதனின் உயிர் அவன் செய்திருக்கும் நன்மைகள் தானதருமங்கள்  மூலம் காக்கப்படும் என்று நம்பிக்கொண்டிருக்கையில் அவனிடம் மாறுவேடமிட்டுச் சென்று...." செய் தருமம்" அனைத்தும் எனக்குத் தா என்று   யாசகம் கேட்டு அவனை கொல்வார். என் எதிரிலிருப்பவர்கள் அத்தனை பேரும் என் உறவினர்கள் என்னால் சண்டையிட முடியாது என்று வன்முறையிலிருந்து ஒதுங்க நினைக்கும் ஒரு மனிதனை உபதேசங்கள் செய்து " எடு.... வில்லை!!!! தொடு.... அம்பை!!!! ' என்று வன்முறை கொள்ளச் செய்வார்.

ஆமாம்..கிருஷ்ணா ஒரு போதும் மனித மனங்களின் நியாய தர்மங்கள் என்னும் சுயநல சிறைக்குள் அடைபட்டுக் கொண்டிருக்க விரும்பவில்லை. இந்த உலகில் அவரைப் பற்றிய கருத்துக்களையும், புறங்கூறுதல்களையு ஒரு போதும் அவர் சட்டை செய்திருக்கவுமில்லை. கிருஷ்ணாவின் இயக்கம் பிரபஞ்சத்தின் தேவையாய் மட்டுமே இருந்தது. அதில் எந்தவித லெளகீக நடிப்புகளும் இருந்திருக்கவில்லை. காதல் என்னும் பெரும் உணர்வில் கபடநாடகம் ஆடும் இந்த உலகத்தீருக்கு எல்லாம் கிருஷ்ணர் மிகப்பெரிய சவாலாய்தான் இருந்தார்.

தன்னை நேசித்தவர்களை நேசிக்க அவர் தயங்கி இருக்கவில்லை.  கிருஷ்ணரின் காதல் பற்றிய பார்வை சரியா...? தவறா...? என்று ராதாவிடம் கேட்டுப்பார்த்தால் புரியும். அவன் ஒரு போதும் தன்னை காதலித்தவர்களை கவனிக்காமல் இருந்திருக்கவில்லை. எத்தனையோ பெண்களோடு அவன் பேசிச்சிரித்து விளையாடி இருந்தாலும் அவன் இரு மனைவியரோடு மட்டுமே இருந்தான் என்றுதான் அழுத்தம் திருத்தமாக புராணங்கள் கூறுகின்றன. அவனுடைய போர்களில் இறந்து போன போர் வீரர்களின் விதவை மனைவிகள் அத்தனை பேருக்கும் தேவையில்லாத பாலியல் தொந்தரவுகள் வந்துவிடக்கூடாது என்று...

இனி அத்தனை  விதவைப் பெண்களும் யாரேனும் துன்புறுத்தினால் நீங்கள் கிருஷ்ணாவின் மனைவி என்று தைரியமாய்ச் சொல்லுங்கள் என்று அவன் கூறியதாய் நான் படித்திருக்கிறேன். இதையே உதாரணம் காட்டி கிருஷ்ணாவுக்கு எதிர் சார்பு நிலை எடுத்து பேசுபவர்கள் அவன் பல்லாயிரக்கணக்கான மனைவிகளைக் கொண்டிருந்தான்,  அவன் எப்படி ஒழுக்க சீலனாய் இருந்திருக்க முடியும் என்ற கேள்வியை முன் வைப்பதுமுண்டு....

என் கேள்வி எல்லாம் ஒரு மனைவியக் கட்டிக் கொண்டு வாழும் அத்தனை பேரும் ஒழுக்க சீலர்கள்தானா...? என்பதுதான்.  ஒழுக்கம் என்பது இந்த சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் மாயக் கண்ணாடி அல்ல. ஒழுக்கம் என்பது மனசாட்சி என்று நிறுவி அதன்படி வாழ்ந்து காட்டியிருக்கும் ஒரு அற்புதக் கேரக்டர்தான் கிருஷ்ணா!!!!! அவன் ஏதோ ஒரு மதத்தை ஸ்தாபிக்க பாரதப் போரை நிகழ்த்தவில்லை, இங்கே இருக்கும் மனிதர்களைப் பயமுறுத்தி என்னைப் பின்பற்றுங்கள் என்று சொல்ல பாரதப் போரில் சாரதியாயிருந்திருக்கவில்லை..., அவன் கெளரவர்களைக் கொன்று தன்னை மிகப்பெரிய கதாநாயகனாகக் காட்டிக் கொள்ள அந்தப் போரை நடத்தவில்லை...

அவன் ஒரு சுத்த புருஷன், சுயநலமற்ற மாவீரன்....அவன் போர் நடத்தியது எல்லாம்.. தர்மத்தையும் நீதியையும் காக்க....என்று பகிங்கரமாய் நமது செவிப்பறைகள் கிழிய கூறுகிறான். அதோடு மட்டுமல்ல...எப்போது எல்லாம் தர்மமும் நீதியும் அழிகிறதோ அப்போது எல்லாம் நான் மீண்டும் வருவேன் என்று கொடியவர்களை மிரட்டவும் செய்கிறான்.....

பாரதப் போர் நடக்கும் அந்தக் காலம் என்று மட்டும் இல்லை....யுகங்கள் தோறும் நான் அவதரிப்பேன் என்றும் சவால் விடுகிறான்....! இந்த திமிர், இந்த தைரியம், இந்த ஞானம், இந்த விவேகம், இந்த வீரம் மட்டும் அல்ல.. கிருஷ்ணா, அவன் காதலும், காமமும், இன்ன பிற லெளகீக இயல்புகளும் பிசைந்து உருவாக்கப்பட்ட யுகங்களின் நாயகன்...!!!!!

அவன்.....

காதலுணர்வால் அனைவரையும் கட்டிப்போட்டு, மயக்கும் ரசனைகளோடு கூடிய இன்னிசையை இந்த பிரபஞ்சம் எங்கும் பரப்பிப் போட தன் புல்லாங்குழலையும் ஊதுவான்.....

மிரட்டும் கொடிய சக்திகளை, மனித வாழ்வின் சுமூக நகர்வுகளுக்கு சவால் விடும் மிருகங்களை, அட்டூழியம் செய்யும் பேய்களை, நரகத்திற்கு தள்ள போர்ச் சங்கும் ஊதுவான்....

ஆமாம்...அவன் யுகங்களின் நாயகன்தான்....!!!!!! அவன் ஒரு போதும் மரிப்பதே இல்லை...!!!!!!!

தர்மத்தை தனிமனிதரோடு தொடர்புபடுத்திப் பார்க்காது ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் ஒவ்வொரு நியாயவான்களாகவும்....

அவன் யுகங்கள் தோறும் அவதரித்துக் கொண்டுதானிருக்கிறான்....!

" பரித்ராநாய சாதுனாம்  வினாசாய சதுஶ்க்ருதாம்
தர்மஸம்ஸ்த்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே....!



தேவா சுப்பையா...






Comments

யுகங்களின் நாயகன்...கிருஷ்ணா...!

திரு தேவா சுப்பையா அவர்களின் அற்புதமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள் திரு Dheva Subbaiah.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த