ஷோபாவின் பெயர்தான் டைட்டிலில் முதலில் காட்டப்படுகிறது. பிறகு அறிமுகம் பிரதாப் போத்தன், அதன் பிறகு மீதி எல்லோரும். இசை இளையராஜா என்று நினைத்தேன் ஆனால் அவர் இல்லை சலீல் செளத்ரியாம். மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். படம் பார்க்க ஆரம்பித்த போதே ஏன் டைட்டில் போடும் போதே ஒரு பாடல் வரவேண்டும் அதுவும் ஒரு ஆழமான வலியை கிளறும் நினைவுகள் கொண்ட பாடல் எதற்காக என்று யோசித்தபடியே தான் படம் பார்க்க ஆரம்பித்திருந்தேன். படம் முடியும் போதும் அதே பாடல் மீண்டும் ஒலிக்க படம் நிறைவடைந்து கதை திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் என்று பாலுமகேந்திரா சாரின் பெயர் வழக்கம் போல.... பின் படம் முடிந்து விட்ட போதுதான் ஆரம்பத்திலும் முடிவிலும் ஒலித்த அந்தப் பாடலின் அர்த்தம் விளங்கியது.
அழியாத கோலங்கள் என்றில்லை பாலு சாரின் எல்லா படமுமே பார்த்து முடித்த பின்பு ஒரு கதையோ அல்லது கவிதையோ, திரைப்படமோ இப்படித்தான் இருக்கவேண்டும் என்று அழுத்தமாய் எனக்குத் தோன்றும். ஒரு படைப்பு பற்றி பார்த்து முடித்த பின்போ அல்லது வாசித்து முடித்த பின்போ ஒன்றுமே நமக்குத் தோன்றக் கூடாது. ஒரு மெல்லிய வலியோடு எங்கோ நாம் சிறகடித்துப் பறக்க வேண்டும். சந்தோசமோ, துக்கமோ, கண்ணீரோ, சிரிப்போ ஒரு படைப்பின் மூலம் நமக்குள் எட்டிப் பார்த்து விடவே கூடாது. ஏதோ ஒரு புது திசைக்கு நம்மை அது கூட்டிச் சென்று விடவேண்டும். நமக்குள் இருக்கும் எல்லா எண்ணங்களையும் அந்த படைப்பு சுத்தமாய் துடைத்து அழித்து விட்டு நமக்குள் பேரமைதியை ஊற்ற வேண்டும். பாலு சார் ஒரு ஆழமான மனிதர். மனித அன்புகளுக்குள் கட்டுண்டு கிடந்த ஜீவன் அது. இழந்து இழந்து அந்த இழப்பு கொடுத்த வெறுமைக்குள் லயித்துப் புரண்டு, புரண்டு படைத்த ஒரு மகா கலைஞன் அவர்.
ஷோபாவை அவர் காதலித்ததும் ஷோபா பாலுசாரின் அன்பிற்கு பாத்திரமானதும் தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி ஒரு பெண்ணை பாலு சார் பார்த்துக் கிறங்கித்தான் போயிருப்பார். அவருக்கு ஷோபா ஒரு பெண்ணே அல்ல. அதுதான் அவரே கூறுவாரே ஷோபா இந்த பூமிப்பந்திற்கு வந்து சென்ற தேவதை என்று. தன்னை வெளிப்படுத்தி தான் இருப்பதை அழுத்தமாய் தெரிவித்து விட்டு தன் இல்லாமையையும் ஆழமாய் பதிவு செய்து சென்ற ஒரு எரிநட்சத்திரம் என்றுதான் அவர் ஷோபாவை சொல்கிறார். ஷோபா அவருக்கு அவர் நித்தம் காணும் வானத்தின் வித்தியாச கோணத்தைப் போன்றவள், மரங்கள் அடர்ந்த பகுதியில் படிந்து கிடக்கும் பெரு நிழலைப் போன்றவள், ஓடும் ஆற்றில் ததும்பி நகரும் அலை அவள், பட்டாம்பூச்சியின் படபடப்பும், புற்களின் மீது படிந்திருக்கும் பனித்திவலைகளும் எப்படியோ அப்படித்தான் ஷோபா பாலு சார்க்கு. ஷோபா ஒரு அதிசயம். அத்தனை ஒரு இயல்பான பெண்ணை அதுவரையில் அவர் பார்த்திருக்கவே இல்லை. ஏன் அவர் மட்டுமா மொத்த தமிழ் ரசிகர்களும்தான்.
முள்ளும் மலரும் படத்தில் ஷோபாவை வைத்து பாலுமகேந்திரா சார் சூட் பண்ண வேண்டும். அந்த மகாகலைஞன் அவளை எப்படி எல்லாம் ரசித்தான் என்பதை ஸ்தூல உணர்வுகள் கடந்து அறிந்து கொள்ள நீங்கள் “அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை” பாடலை இன்னுமொரு தடவை பார்த்து விடுங்களேன். அப்படி பார்க்கும் போது உங்களின் புறத்தொடர்புகளையும் முள்ளும் மலரும் படத்தின் கதையையும் தூக்கி தூர வைத்துவிடுங்கள். அங்கே நீங்கள், இசை, பாடல் வரிகள், ஷோபா, மற்றும் காட்சிகள் அதை தவிர வேறு ஒன்றையுமே அந்த சூழலுக்குள் கொண்டு வராதீர்கள். இப்போது புரிந்து கொள்வீர்கள் பாலுமகேந்திரா ஷோபா மீது கொண்டிருந்தது என்ன என்று....
வாழ்க்கையில் ஏற்படும் முரண்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் யாரும் விதி விலக்கல்ல. பாலுசாரும் கூட. அதனால் அவர் வாழ்க்கையின் ரகசிய பக்கங்களுக்குள் சென்று ஆராய்ச்சி செய்து என்ன நிகழ்ந்தது என்றறியும் பொது ஜனத்தின் புரையோடிப்போன புத்தி என்னிடமில்லாததால் பாலுசாரின் காதல் எவ்விதமானது என்பதை என்னால் தெளிவாய் உணர முடிகிறது. ஷோபாவை பொறுத்தவரைக்கும் அவர் மீது படிந்து கிடந்த வசீகரத்துக்கு காரணம் அவருக்கு நடிக்கவே வராது என்பதுதான். நடிக்கத் தெரியாமல் அந்த சூழலுக்குள் விழுந்து தன்னை முழுதுமாய் அந்த கதைக்குள் நுழைத்துக் கொண்டு அவர் வாழ்ந்து விடுகிறார். அது இயல்பான வெளிப்பாடு. ஒப்பனைகள் இல்லாத உண்மை. அழியாத கோலங்களில் அவர் இந்து டீச்சராய் வருகிறார்.
கெளரி சங்கர் என்னும் விடலைப் பையன் அவர் மீது தன் பருவ மாற்றத்தால் ஆசை வைக்க அதை பற்றிய எந்த பிரஞ்ஞையுமின்றி அவனை ஒரு சிறுவனாகவே பாவித்து இந்து டீச்சரான ஷோபா நடித்திருப்பது சத்தியமாய் நடிப்பு கிடையாது. அது ஒரு விதமான வாழ்க்கை. வாஞ்சையாய் இப்படி தன்னை விட ஆறேழு வயது குறைந்த பையனிடம் ” என்னம்மா கெளரி என்னாச்சு மழையில நனைஞ்சுட்டு நிக்குற வா வா... வா குடைக்குள்ள வா..” என்று ஷோபா அழைப்பது அன்பின் உச்சத்தில். அவளுக்கு அவன் மீது எந்த ஒரு உறுத்தலும் ஏற்படவில்லை. ஏற்படவும் படாது. அவளுக்கென்று காதலன் பிரதாப் போத்தன் இருக்கிறார். தனக்கென தன் காதலுக்கென ஒருவன் இருக்கும் போது இன்னொருவரிடம் ஒடித்து நடித்து ஓடி ஒளிய என்ன இருக்கிறது....?
அன்பு மட்டுமே அங்கே சீறிப்பாயும். ஷோபா இந்து டீச்சராய் சீறிப் பாய்ந்திருக்கிறார். படம் பார்த்துக் கொண்டே இருந்த எனக்கு சட்டென ஆனந்தவள்ளி டீச்சரின் நியாபகம் வந்தது. அது காதலும் கிடையாது. காமமும் கிடையாது. ஏனென்றால் காமம் என்றால் என்னவென்று 13 வயதில் இருக்கும் கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்குள் இருக்கும் ஒருவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சரியாய் ஹார்மோன்களின் மாற்றங்கள் தொடங்கி இருந்த அந்த வயதில் எனக்கு எட்டாம் வகுப்பில் பாடமெடுக்க வந்த ஆனந்தவள்ளி டீச்சரை நிறையவே பிடிக்கும். ஏதாவது உதவி என்றால் ஓடிப்போய் நான் செய்திருக்கிறேன். அதிகபட்சம் டீச்சருக்கும் நம்மை பிடிக்கும் என்று நினைக்கும் போதே ஒரு சந்தோசம் கிடைக்கும். அவ்வளவுதான் அதற்கு மேல் கூட்டியோ குறைத்தோ அந்த உணர்வைச் சொல்ல முடியாது. டீச்சர் ட்ரெயினிங் முடித்து விட்டு அப்போதுதான் சேர்ந்த ஆனந்தவள்ளி டீச்சரிடம் ஏற்பட்ட ஈர்ப்பு என்ன விதமானது என்று இன்று வரை என்னால் கணிக்க முடியவில்லை. டீச்சரைப் பொறுத்தவரை நான் ஒரு டவுசர் போட்ட சின்னப்பையன் அவ்வளவுதான்.
அப்படி சின்ன பையனாய் இருந்ததாலேயே வாஞ்சையோடு காது திருகி என்ன மிஸ்டேக் பண்ணி இருக்க பார் என்று உரிமையோடு சொல்லிக் கொடுக்கவும் செய்வார். ஒரு நாள் கையில் பிரம்பு வைத்து அடித்து விட்டார் என்று ஒருவாரம் அவரை நான் திரும்பிப் பார்க்கவே இல்லை. பிறகு கூப்பிட்டு என்னை சமாதானம் செய்த பின்பு சாரி டீச்சர் என்று நான் சொன்னதைப் போல இந்தப் படத்திலும் கெளரி சங்கர் டீச்சரிடம் சாரி கேட்கிறான். தமிழ் டீச்சர் அவர். புராணக்கதைகளோடு சேர்ந்து நிறைய வரலாற்றுக் கதைகளையும் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த ஆனந்தவள்ளி டீச்சர் இப்போது எங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது ஆனால் அன்றைக்கு அவர் மீதிருந்த ப்ரியம் நிஜம். பதின்மத்தின் தடுமாற்றம். கட்டுப்பாடுகள் கொண்ட சமூக வாழ்க்கையினூடே கட்டுப்பாடுகளின்றி சுரக்கும் இரசாயனத்தினுள் சூட்சுமமாய் ஒளிந்திருந்த ஆதியின் குணம் அது.
பதின்மத்தின் குறுகுறுப்பில் ஆற்றில் குளிக்கும் பெண்களை யார் பார்க்காமல் இருந்திருப்பார்கள்? ஏடா கூடமான புத்தகங்களையும் படங்களையும் வகுப்பறைக்கு கொண்டு வரும் ஒரு முத்திப் போன நண்பன் இல்லாத பதின்மம் யாருக்கேனும் இங்கு உண்டா? மீசை அரும்புகையில் ஒரு தலையாய் காதலிக்காத பாவாடை தாவணிகள் இல்லாமல் போயிருந்தால் அது எப்படி பதின்மமாகும்? கனவில் தேவதைகள் வரிசையாய் நின்று கோரசாய் பாடல் பாடாத வாலிபம் எப்படி வீரியமானதாய் இருக்க முடியும்? யாரோ ஒரு கோகிலாவோ, ராஜியோ, உமாவோ, சித்ராவோ இல்லாமல் பதின்மத்தைக் கடந்தேன் என்று யாரேனும் ஒரு ஆண் சொன்னால் அது ஹார்மோன்களின் குறைபாடு என்றுதான் நான் சொல்வேன். பெண்களின் பதின்மத்தை பற்றி நான் எழுத விரும்பவில்லை. யாரேனும் ஒரு பெண் அதை எழுதினால் தான் சரியாய் இருக்கும்.
ஒரு டீச்சருக்கும், சாருக்கும் (இரண்டு பேருமே டீச்சர்தான் என்றாலும் எங்களுக்கு டீச்சர் என்பது பெரும்பாலும் பெண்பால்தான். ஆண்களை சார் என்றோ வாத்தியார் என்றோ சொல்லும் வழக்கம் இன்றும் நம்மிடம் உண்டுதானே...?!!!!) இருந்த வரைமுறையற்ற உறவினை பள்ளியிலேயே நேராய்க் கண்ட பின்பு உடம்பு சூட்டோடு தினமும் அதுபற்றி நண்பர்களிடையே பேசிப் பேசி மேலதிக விபரம் சொல்ல ஆளில்லாமல் திணறி நின்ற பதின்மம் எவ்வளவு வசீகரமானது. அழிக்க முடியாத அழியாத கோலங்களில் ரசனையாய் அதை சொல்லியிருக்கும் பாலு மகேந்திரா சாரை ஏன் நான் தீரத் தீரக் காதலிக்கிறேன் என்று உங்களுக்கு இப்போதாவது புரிகிறதா? அழியாத கோலங்களில் வெண்ணிற ஆடை ராமமூர்த்தி திருமணம் ஆகாத ஒரு முதிர்கண்ணன். வரும், செல்லும் பெண்களிடமெல்லாம் அதனாலேயே ஜொள்ளு விடும் ஒரு சபலக் கேஸ். படத்தில் அவர் ஒரு போஸ்ட் மாஸ்டர். அந்த ஊரிலேயே கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும் ஒரு பெண் மணியார்டர் அனுப்ப வருவார். அப்போது வெண்ணிற ஆடை மூர்த்தி சில்மிஷமாய் பேசிக் கொண்டிருப்பார்.
அந்தக் காட்சியில் பின்னணியில் ஏதோ ஒரே ரிதமில்... கொண்டீரே..... கொள்ளை கொண்டீரே....என்று ஒரு பாடல் ரேடியோவில் போய்க் கொண்டிருக்கும். நானும் படம் பார்த்த போதே மீண்டும் மீண்டும் ரீவைண்ட் செய்து அது என்ன பாடல் என்று முயன்று...தோற்று.....முயன்று...மறுபடியும் தோற்று...கடைசியில் பாடல் வரிகளை குத்து மதிப்பாய் எடுத்து கூகிளில் தேடிப் பார்த்தால் எம்.கே.டி. தியாகராஜ பாகவதரின் ஒரு பழைய பாடல். அட்டகாசமான அந்த பாடல் வெண்ணிற ஆடை மூர்த்தி அந்தப் பெண்ணிடம் சில்மிஷம் செய்து கொண்டிருக்கும் சூழலுக்கு ரம்யமாய் பொருந்திப் போகும். ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு சூழலுக்கும் எது வேண்டும் என்று பாலுசார் எவ்வளவு ரசனையாய் முடிவெடுக்கிறார் என்று எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.
நிறைய பணம் போட்டு எது எதையோ காட்டினால்தான் படம் ஓடும் என்ற ஒரு சூழலை உருவாக்கியிருக்கும் இந்தத் தலைமுறை இயக்குனர்கள் எல்லாம் ரசிகர்களை சுத்தமாக கெடுத்து வைத்திருக்கிறார்கள் என்றுதான் நான் சொல்வேன். சர்க்கஸ் காட்டுவது போலத்தான் இப்போது வரும் படங்கள் எல்லாம் பெரும்பாலும் இருக்கின்றன. விஸ்வரூபம் படம் எல்லாம் வெறும் டெக்னிகல் சர்க்கஸ்தான் என்று எனக்கு விளங்கியது. ஒரு ஆறு, ஒரு ஏரி, மரங்கள் சூழ்ந்த சாலை, வயல்வெளிகள், வாய்க்கால்கள், பூக்கள், வானம், உறுத்தல் இல்லாத வீதிகள், வீடுகள், இயல்பான சினிமாத்தனம் இல்லாத மனிதர்கள் அவ்வளவுதான் அழியாத கோலங்கள் படம் முழுதும்....
கமல் நடித்திருக்கிறார் என்பதை படம் ஆரம்பிக்கும் போதும் முடியும் போதும் மட்டுமே உணர முடிகிறது. கமல் அலுவலகத்திற்கு வருகிறார். அலுவலக வேலைகளுக்கு நடுவே அவருக்கு வந்த கடிதங்களைப் பார்க்கிறார். அதில் ஒன்று அவரது பால்ய சினேகிதன் பட்டாபி எழுதியது. இந்து டீச்சர் இறந்துப் போய்ட்டாங்கடா.... என்று பட்டாபி கடிதத்தில் சொல்கிறார். கடிதத்தை வாசித்து விட்டுபத்து நிமிடம் என்னை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் என்று அலுவலகத்தில் சொல்லி விட்டு தனது நாற்காலியில் கமல் சாய்கிறார்....
மொத்த படமும் ப்ளாஷ் பேக்.....
விடலைப் பருவத்தில் மூன்று நண்பர்கள் வருகிறார்கள் , கெளரிசங்கர், பட்டாபி மற்றும் ரகு கூடவே இந்து டீச்சர். ப்ளாஷ் பேக்கில் ரகு என்னும் நண்பன் இறந்து போகிறார். ப்ளாஷ் பேக் முடிந்து மீண்டும் அமைதியாய் திரைக்குப் பின்னால் பாடல் ஒலிக்கிறது. கமல் சோகமாய் தன் நாற்காலியில் சாய்கிறார். காதலும் காமமும், பாசமுமாய் பார்த்த இந்து மதி டீச்சர் இறந்து விட்டதாய் கடிதம் சொல்கிறது. கடிதத்தை எழுதியது பட்டாபி..... மிச்சமிருக்கும் கெளரிசங்கர் தான் கமல் என்று புரிந்து கொண்டேன்.
அவ்வளவுதான் படம் முடிந்து விட்டது....!
இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
பிறக்கும் ஜென்மங்கள்....
பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ
படம் முடிந்து இதோ இந்த வரிகளை எழுதும் இப்போது வரை உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கும் இந்த வரிகளோடு கடந்து வந்த என் வாழ்க்கையின் அழியாத கோலங்களை அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.....
தேவா சுப்பையா...
Comments
அருமை அண்ணா...