Skip to main content

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு....!


ஜோடிப்பொருத்தமும், வார்த்தை விளையாட்டும் சன்டிவி ஆரம்பித்த காலத்தில் வெகு பிரபலமான நிகழ்ச்சிகளாய் இருந்தன. எம்.ஜே. ரெகோ ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சியையும், ஆனந்த கீதன் வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியையும் தொகுத்தளித்துக் கொண்டிருந்தனர். இவர்களோடு சேர்ந்து ஈ. மாலா,  ரமேஷ் பிரபா மற்றும் நேருக்கு நேர் நிகழ்ச்சியை தொகுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த ரபி பெர்னார்ட் எல்லாம் செயற்கைக்கோள் தொலைக்காட்சியின் அந்த நாளைய ஹீரோக்கள். சன் டிவியின் தமிழ் மாலை வீடுகள் தோறும் தோரணங்கள் கட்டிக் கொண்டிருந்த அந்தக் காலங்களில் தூர்தர்சனின் பட்டிமன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போய்க் கிடந்த தமிழகம் உற்சாக போதையில் மெல்ல தள்ளாடிக் கொண்டிருந்தது.

விவாத  நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், பேச்சுப் போட்டிகள்  போன்ற சுவாரஸ்யங்களின் மீது ஏறி நின்று வருடக்கணக்கில் கோலேச்சியது விசுவின் அரட்டை அரங்கம் மட்டுமே.  எட்டு எட்டு பேராய் நான்கு அணிகள், அணிக்கு ஒரு தலைப்பு, அந்த தலைப்பை ஒட்டி  பங்கேற்பாளர்கள் பேச விசு அவர்களை குறுக்கீடு செய்து கேள்விகள் கேட்பார், கோபப்படுவார், வருத்தப்படுவார், திடீரென்று எமோசனலாகி அழக்கூடச் செய்வார், கேமரா விசுவை டைட் க்ளோசப்பில் திரை முழுவதும் காட்டும் அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டம் விண்ணதிர கரகோஷம் செய்யும். இதை தொலைக்காட்சித் திரையில் பார்த்துக் கொண்டிருக்கும்  என்னைப் போன்ற அறுந்த வால்கள் எல்லாம் விசுவைக் கிண்டலடிப்பதைக் கண்டு மனம் கொதித்து சரமாரியாய் திட்டும் தாய்க்குலங்களைப் பார்க்கும் போது விசு ஏன் தேர்தலில் நிற்கக்கூடாது என்று கூட நான் நினைத்திருக்கிறேன்.

1997ல் விசுவின் அரட்டை அரங்கம் பட்டுக்கோட்டைக்கு வந்திருந்த போது போட்டியிட்ட 300 பேரில் நானும் ஒரு குழுவின் சார்பில் பேச எட்டு பேரில் ஒருவனாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன். தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முதல்நாள் இரவு நடந்த கடைசித் தேர்வில் பேசியதை வீடியோவில் பதிவு செய்து விசுவிடம் காட்டி அவர் தேர்ந்தெடுத்த 24 பேருக்கு மட்டும் மறுநாள் காலையில் தொலைபேசியில் அழைத்து நீங்கள் தேர்த்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். மாலை 5 மணிக்கு சூட்டிங் என்றால் காலையிலேயே வரச்சொல்லி இன்ச் பை இன்ச் ஆக விசுவின் அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் எங்களை செதுக்க ஆரம்பித்தார்கள். மேடையில் பேசும் போது அது ஒரு போதும் வழமையான மேடைப்பேச்சாய் இருந்து விடக்கூடாது மேலும் அது  எந்த வகையிலும் ஒரு பட்டிமன்றத்தை நினைவுபடுத்துவதாய் இருந்து விடக்கூடாது என்பதுதான் அவர்கள் உறுதியாக சொல்லிக் கொடுக்கும் ஒரு விசயம். அது போக சில காட்சிகள், சில பாடல்கள், என்று கூட்டத்தை வசீகரிக்கும் சில ஜிகினா வேலைகளையும் அவர்கள் செய்யச் சொல்வார்கள். மொத்தத்தில் அரட்டை அரங்கம் ஒரு சூப்பர் மசாலா பேச்சு மன்றமாக பார்ப்பவர்களை கவரும் வகையில் டைரக்ட் செய்யப்பட்டு மக்களின் முன்னால் காட்சி பதிவாக்கம் செய்யப்படும்.

ஞாயிற்றுக் கிழமை என்றால் அரட்டை அரங்கம் பெரும்பான்மையான வீடுகளில் அதிர்ந்ததற்குக் காரணம் அரட்டை அரங்கத்தை வெறுமனே ஒரு பேச்சு  மேடையாக மட்டும் விசு கொண்டு செல்லாமல் உலகத் தமிழர்கள் வாழும் எல்லா பகுதிகளுக்கும் பயணித்து அந்த அந்தப் பகுதிகளின் பிரச்சினைகள், சிறப்புக்கள் எல்லாவற்றையும் ரசனையாய் வெளியே கொண்டு வந்து காட்டவும் செய்தார். அதுவும் போக அரட்டை அரங்கத்தில் பங்கு பெறும் நலிவடைந்தோருக்கு மேடையிலேயே உதவிகளையும் அவர் பெற்றுத் தருவார். தமிழகத்தில் எந்த எந்தப் பகுதியில் எல்லாம் அரட்டை அரங்கம் குழு செல்கிறதோ அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் பிரச்சினையையும் அரட்டை அரங்கம் பேசியது.

விசு கூடவே ஒட்டிக் கொண்டிருந்த அவரின் உதவி இயக்குனர் வி.எல். பாஸ்கர் ராஜ்க்கு அரட்டை அரங்கம் அத்துப்படியாகிப் போக அவர் விசுவை விட்டு கழன்று கொண்டு ராஜ்டிவியில் அதே அரட்டை அரங்கம் இட்லியை பிச்சுப் போட்டு அகடவிகடம் உப்புமாவாக்கினார். அரட்டை அரங்கம் அளவுக்கு இல்லாவிட்டாலும் அரட்டை அரங்கத்தின் சாயல் இருந்ததால் அந்த நிகழ்ச்சிக்கும் ஓரளவிற்கு வரவேற்பு இருக்கத்தான் செய்தது. பக்தி இலக்கியங்கள், புராணங்களில் இருந்து மேற்கோள்கள் என்று திருமுருக கிருபானந்த வாரியார்,  புலவர் கீரன் போன்றவர்களின் மேடைப்பேச்சுக்களை கோயில் திருவிழாக்களிலும்,  இன்ன பிற விழா மேடைகளிலும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த தமிழ் சமூகத்தை பட்டிமன்ற பேச்சு வசீகரித்து இழுத்துப் பிடித்து எதுகை மோனையோடு அவர்கள் பேசி மேற்கோள் காட்டும் விசயத்தை நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டு ரசிக்க வைத்தது. பட்டிமன்றங்கள் இலக்கிய வாசனையோடு தூள் கிளப்பிக் கொண்டிருந்த அந்தக் களம் ரசிக்கத் தகுந்ததாய் இருந்தாலும் கொஞ்சம் இறுக்கமானதாய் இருந்தது. அந்த இறுக்கத்தை உடைத்தெறிந்தவர்கள் தமிழகத்தைப் பொருத்தவரை இரண்டு பேர்கள். ஒன்று ஐயா சாலமன் பாப்பையா இன்னொருவர் திண்டுக்கல் ஐ. லியோனி.

சாலமன் பாப்பையாவை விட இன்னும் ரகளையாய் பாட்டுப்பாடி ஆட்டம் ஆடி கேட்பவர்களை சிரிக்க வைத்து முழு நீள காமெடி ஷோவாய் பட்டிமன்றங்கள் இருக்கும்படி பார்த்துக் கொண்டார் திண்டுக்கல் ஐ. லியோனி. சாலமன் பாப்பையாவும் சரி, திண்டுக்கல் ஐ. லியோனியும் சரி இவர்கள் இருவருக்குமே ஒரு குழு இருக்கும்.. அந்த குழுதான் எந்த ஒரு பொது நிகழ்ச்சியாய் இருந்தாலும் மேடை ஏறி கொடுக்கப்பட்ட தலைப்பில் பேசி, சிரித்து நையாண்டி செய்து விவாதம் செய்து கொள்ளும். இதை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு அவர்களின் செட்அப்பில் ஒரு நாடகத்தன்மை இருப்பது பிடிபடத் தொடங்கியது. அந்த பிடிபடல் மெல்ல மெல்ல சலிப்பாய் மாறவும் தொடங்கியது. அந்த சலிப்புதான் விசு போன்றவர்களுக்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸாக அமைந்து அரட்டை அரங்கம் பாணி பேச்சு நிகழ்ச்சிகள் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கியது.


மேடைப்பேச்சு என்பது அத்தனை வசீகரம் கொண்டது. மேடைப்பேச்சுக்களால் உலகத்தில் மாற்றி எழுதப்பட்ட வரலாறுகள் ஓராயிரம். யாராவது பேசுவதில் உணர்ச்சியும், உண்மையும் இருந்து விட்டால் கேட்பவர்களுக்குள் பிரளயமே ஏற்பட்டு மனதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு விடுமாம். தமிழக அரசியல் வரலாற்றை தீர்மானித்தது எல்லாம் பேச்சுக்கள்தான். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்றவர்கள் எல்லாம் வசீகரிக்கும் பேச்சுத் திறமை கொண்டவர்கள். தங்கள் தொண்டர்களைப் பார்த்து ”தம்பி “ என்று அண்ணா அழைத்ததும், ”உடன்பிறப்பே” என்று கலைஞர் அழைத்ததும், ”இரத்தத்தின் இரத்தமே” என்று எம்.ஜி.ஆர் அழைத்ததும் சாதாரண விளித்தலுக்கான வெற்று வார்த்தைகள் கிடையாது. அந்த வார்த்தைகள் இன்று வரை தமிழனின் நாடி நரம்பெல்லாம் ஊறிப் போய்க் கிடக்கிறது என்றால் மேடைப்பேச்சின் வல்லமை அழுத்தம் என்ன என்பதை நாம் உணர முடியும்.

கேட்பவரை கேட்ட மாத்திரத்தில் சொடுக்குப் போட்டு தான் கூற வரும் கருத்தை நடு மண்டையில் உரைப்பது போல பேசுவது ஒரு கலை. எல்லா விசயமும் அறிந்து கொண்டவர்கள் கூட அதை எப்படி எடுத்துச் சொல்வது என்பதில் பலவீனர்களாக இருப்பார்கள். நாடகத்தன்மை கொண்ட நடிப்பாய் மேடைப்பேச்சு மாறிய போதெல்லாம் நம் சமூகம் அதை நிராகரித்து நகர்ந்து வேறு பக்கம் தன் தலையை திருப்பிக் கொண்டது. ’அரட்டை அரங்கம்’ போன்ற நிகழ்ச்சிகள் இன்று தொய்வுற்றுப் போய் ’நீயா நானா’க்கள் மேலேறி வந்து நின்று பிரபலமானதற்குக் காரணம் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் கருத்துச் செறிவுகள் மட்டும் கிடையாது. கருத்துக்களுக்கு மேலாக அந்த நிகழ்ச்சியில் ஒரு சத்தியம் நமக்குப் பிடிபட்டிருப்பதும், அந்த விவாதத்தில் இருக்குமொரு தார்மீக நியாயம் சாதரணனின் குரலை மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்துவதும் நமக்குப் பிடித்திருக்கிறது என்பதே அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாயும் இருக்கிறது.

பழங்காலத்தில் போருக்குச் செல்வதற்கு முன்பு அந்த நாட்டின் மன்னனோ அல்லது தளபதியோ தங்களின் போர்ப்படை வீரர்களிடம் உரையாற்றுவார்களாம். அவர்களின் உணர்ச்சி மிகு பேச்சில், உரம் ஏறிப்போய் மதம் கொண்ட யானையாய் கூட்டம் வெறிகொண்டு தாக்கி எதிரிகளை துவம்சம் செய்யுமாம். இராஜராஜனை விட இராஜேந்திரன் மிகப்பெரிய மேடைப்பேச்சுக்காரனாய் இருந்தானாம். அந்த வெறியேற்றும் பேச்சுதான் சோழ சாம்ராஜ்யத்தை கடல் கடந்தும் விரிந்து பரவச் செய்ததாம். இப்போதெல்லாம் எல்லோரும் பேசுகிறார்கள். மொழியை அறிந்ததாலேயே, உரக்கப் பேசுவதாலேயே அவர்கள் சிறப்பாக பேசுவதாய் எண்ணியும் கொள்கிறார்கள். நிஜத்தில் சத்தியத்தை வெளிப்படுத்தும் பேச்சும் எழுத்துமே காலங்கள் கடந்து மேலெழும்பி நின்றிருக்கிறது. 


ஜோடனையானவர்களின் பேச்சுக்களும், எழுத்துக்களும் அவ்வப்போது வசீகரமாய் தெரிந்தாலும் அப்படி பேசவும் எழுதவும் செய்கிறவர்களை மனிதர்கள் வெகு சீக்கிரத்தில் மறந்தே போய்விடுவார்கள் என்பதே நிதர்சனம்.




தேவா சுப்பையா...







Comments

பேச்சு...
பேச்சு...
பேச்சு... பற்றிய உங்கள் எழுத்து - சுவைமிகு தொகுப்பு.
அருமையான அலசல்! நன்றி!
நல்ல அலசல்...பாராட்டுக்கள்

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த