Skip to main content

மறதி...!

















என் மரித்தலுக்குப் பின்னான
உங்களின் வருகையில்
என்னிடமிருந்து உதிரப் போகும்
ஆழ்ந்த மெளனத்தில்...
இதுவரை நான்...
சொன்னது எல்லாம்...
பொருளிழந்து போகும்...!

உறவுகளின் ஒப்பாரிகளுக்கு
மத்தியில் கிடத்தப்பட்டிருக்கும்
நானென்று கருதியதின்...
மீதிருந்து வீசும் தாய்ப்பாலின்
வீச்சத்தில் நினைவுக்கு வருகிறது
இப்பிறப்பின் துவக்கம்...!

கனவுகளாய் எழுதி வைத்த...
எழுத்துக்கள் ஊர்வலமாய்
என்னைச் சுற்றி வந்து..
என்னின் உயிருதெழுதலுக்கான
பேச்சுவார்த்தைகளின் தோல்வியில்
வாசிப்பாளனின் மனதிலேயே..
போய் முடங்குகின்றன மீண்டும்...!

மீண்டும் என் தாயின் கருவறை
தேடிய பயணம் கொடுக்கப் போகும்
மண்ணறையில் நானில்லா நான்
தனித்திருந்து மட்கும் நேரத்தில்
நானாகிய நான் பயணிக்கும்
உருவமில்லா பயணித்தில்...
உமது கண்ணீர்கள் குறுக்கிட்டு
வெளிப்படுத்தும் காதலுக்காய்...
அன்புக்காய் மீண்டுமொருமுறை..
பிறப்பெய்ய எத்தனிக்கும் வினாடியில்
வந்து விழும் வெளிச்சம்..
மரித்தலே சிறத்தல் என்று
சொல்லாமல் சொல்லி.......
பால் வீதிகளுக்குள் பறக்கவைத்த
பரவசத்தில்....மறந்துவிட்டது....
எனக்கு எல்லாமே...!


தேவா. S

Comments

Unknown said…
நானில்லா நான் மட்கும் நேரத்தில் நானாகிய நான் பயணிக்கும் உருவமில்லா பயணம்....அருமை. அருமை.
Unknown said…
மரித்தலுக்குப் பின் இருக்கும் ஒரே வசனம் ...

"பாடிய எப்ப எடுப்பீங்க ..."
dheva said…
கலா நேசன்.. @ நன்றி நண்பரே....!
dheva said…
கே.ஆர்.பி. செந்தில்..@ ஹா.. ஹா... ஹா.. வாஸ்தவம்தான் செந்தில்!
//மீண்டும் என் தாயின் கருவறை
தேடிய பயணம் கொடுக்கப் போகும்//

பிறப்பு இறப்பு சக்கரத்தை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். கவிதை நல்லா இருக்கு!

அப்புறம் என் ஆன்மீக பதிவை படிச்சீங்களா? இல்லையா? சொல்லவே இல்லையே! தேவா! ஏதும் கோபம் இல்லையே என் மேல?
பிறப்பு... இருப்பு... இறப்பு... மிக அழகாக வந்துள்ளது கவிதை
ஏன் திடீர் என்று இப்படி நல்லா தானே இருந்தீங்க நேத்து ஒரு மணி வரை முழித்து இருந்தால் இப்படி தான் கவிதை வரும்
//பிறப்பெய்ய எத்தனிக்கும் வினாடியில்
வந்து விழும் வெளிச்சம்..///

அருமை.. நல்லா இருக்கு தேவா
கணேஷ் said…
எப்படி அண்ணா இப்படி வார்த்தையை உபோயோகிககின்றிர்கள்??....ரெம்ப நல்லா இருக்கு..
//கனவுகளாய் எழுதி வைத்த...
எழுத்துக்கள் ஊர்வலமாய்
என்னைச் சுற்றி வந்து..
என்னின் உயிருதெழுதலுக்கான
பேச்சுவார்த்தைகளின் தோல்வியில்
வாசிப்பாளனின் மனதிலேயே..
போய் முடங்குகின்றன மீண்டும்...!//

மாப்ஸ் இந்த பத்தி புரியல.... விளக்குங்க....
dheva said…
என்னது நானு யாரா @ பங்காளி உங்க மேல கோபமா? என்ன பங்காள் இப்படி கேக்குறீங்கா. நாம கருத்துக்களை தானே விவாதிச்சுகிட்டு இருக்கோம்.. உங்க போஸ்ட் பார்த்தாச்சு பங்ஸ்... கமெண்ட் பண்றேன்...!
dheva said…
தமிழ் உதயம்..@ நன்றி சார்.... ! உணர்வுகளின் வெளிப்பாடவே பெரும்பாலும் கவிதைகல் இருக்கு அதில் ஆன்மீகம் சார் கருத்துக்களை முடிந்த அளவு புகுத்தி பார்த்தேன். பெரும்பாலும் இறப்புனாலே எல்லோருக்கும் பயம்...ஆனா. ஒரு நாள் இல்லை ஒரு நாள் அதுதானே சர்வ நிச்சயம்...!
dheva said…
செளந்தர்...@ திடிர்னு இப்படி இல்லப்பா..ஒரு ஏழெட்டு ஜென்மமா இப்படித்தான்.. ( இன்னும் நல்லா குழம்புனியா.. ஹா...ஹா...ஹாஅ..)
dheva said…
எல். கே....@ மோட்சம் (ஹா..ஹா..ஹா..)
dheva said…
கணேஷ்...@ அறிவியல் இருக்குப்பா கவிதையில... அதுக்கு பயன் படுத்தியிருக்கும் வார்த்தைகள் ..கீழை நாட்டு தத்துவவியலில் பொறுக்கியது... ஆனல் சொல்லியிருப்பது.. மேலை நாட்டு விஞ்ஞானமன்றி வேறு ஒன்றுமில்லை...!
dheva said…
//கனவுகளாய் எழுதி வைத்த...
எழுத்துக்கள் ஊர்வலமாய்
என்னைச் சுற்றி வந்து..
என்னின் உயிருதெழுதலுக்கான
பேச்சுவார்த்தைகளின் தோல்வியில்
வாசிப்பாளனின் மனதிலேயே..
போய் முடங்குகின்றன மீண்டும்...!//

டெரர்..@ மாப்ஸ்..

இப்போ நான் எழுதியிருக்கிற கட்டுரை கவிதை எல்லாம் உன் மனசுல இருக்கும்தானே...? நாளைக்கு நான் செத்துப் போய்ட்டா என்னைப் பார்த்த உடனே.. உனக்கு நான் எழுதி உனக்கு டச் ஆன வார்த்தைகள் உடனே நினைவுக்கு வருமா? அந்த எழுத்துக்களின் மூலமா என்னை நேசித்த நீ.. மீண்டும் நான் உயிரோட வர மாட்டேனா என்று நினைக்கிற... அப்படி நினைக்கிறதுக்கு என்னோட எழுத்துக்கள் உனக்கு உதவுது... சரியா...

ஆனா அது நடக்குமா நடக்காது.. நீ அப்படி ஆசைப்பட்டு ஆசைப்பட்டு கடைசியில் அப்படி நடக்காமல் மீண்டும் வார்த்தைகள் எல்லாம் உனக்குள்ளே போய் உன் நினைவுகளுக்குள்ளேயே தங்கிடுது.... அதுதான் மாப்ஸ்!


ரொம்ப நன்றி மாப்ஸ். .. சும்மா புரியல புரியலன்னு சொல்றத விட இப்படி கேள்வி கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு மாப்ஸ்!
@தேவா
//ரொம்ப நன்றி மாப்ஸ். .. சும்மா புரியல புரியலன்னு சொல்றத விட இப்படி கேள்வி கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு மாப்ஸ்!//

நன்றி நான் சொல்லனூம் மாப்ஸ்.... :)
வினோ said…
அருமையான கவிதை.. நிறைய யோசிக்கவைத்து...
வாழ்வுக்கும் மரணத்திற்குமிடையே தேர்ந்தெடுக்கும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் மனதில் இருந்து வழியும் வார்த்தைகள் போன்றிருக்கிறது இக்கவிதையின் போக்கு. நல்ல படைப்பு தேவா.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
க ரா said…
மரணம் என்ற ஒன்று நிதர்சனம் அதை பற்றி யோசிப்பதே பலருக்கும் பிடிக்காத ஒன்று.. இந்த் கவிதைய படித்து முடிக்கும் போது வார்த்தைகளின்றி ஊமையாகி போனது என் மனசு...
vinthaimanithan said…
ம்ம்ம்... "முன்ன பின்ன செத்தாதான சுடுகாடு தெரியும்?" னு நம்மூருல சொல்லுவாங்க... நீங்க செத்தப்புறம் என்ன நடக்கும்னு எழுதிட்டு இருக்கீங்க... செரி செரி... புத்தர் சொன்னாரே... ஆத்மாவுக்கு அழிவில்லைன்னு! அந்த கான்செப்ட் போல! நல்லாவே இருக்கு!
/எல். கே....@ மோட்சம் (ஹா..ஹா..ஹா..) ///

சரிதான்
///அன்புக்காய் மீண்டுமொருமுறை..
பிறப்பெய்ய எத்தனிக்கும் வினாடியில்
வந்து விழும் வெளிச்சம்..
மரித்தலே சிறத்தல் என்று
சொல்லாமல் சொல்லி.......
பால் வீதிகளுக்குள் பறக்கவைத்த
பரவசத்தில்....மறந்துவிட்டது....
எனக்கு எல்லாமே...!////

ரொம்ப அழகா இருக்கு இந்த வரிகள்..
அன்பிற்காய் மீண்டும் ஒரு முறை பிறக்க நினைக்கும் எண்ணமே.... அருமை....!
Chitra said…
மரணத்தை குறித்து இருக்கும் இந்த கவிதை, பல சிந்தனைகளை கொண்டு வருகிறது. உங்களின் பக்குவ மனதின் முதிர்ச்சியும் தெரிகிறது.
Chitra said…
125th post..... Congrats!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

அவள்....!

அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவன் சுரேஷ். கல்லூரியில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்த கூச்சம் எல்லாம் போய் விட்டது அவனுக்கு. இப்பொதைய நாட்கள் நண்பர்கள், பாடம், கல்லூரி என்று கலை கட்ட ஆரம்பித்து விட்டது. +2 முடித்து கல்லூரியில் சேரும் எல்லா மாணவர்களுக்குமே வாழ்வின் அடுத்த நிலையான கல்லூரி வாழ்க்கை ஒரு சந்தோசமான விசயம்தான். வாழ்வின் அடுத்த கட்டம் ஒரு பள்ளி என்ற கட்டுண்ட நிலையில் இருந்து கொஞ்சம் சுதந்திரமான மரியாதை கிடைக்க கூடிய தான் பட்டம் பயில்கிறோம் என்ற ஒரு மமதையுடன் கூடிய சந்தோசம் என்று களை கட்டும் நாட்கள் அவை. அப்போதுதான் தலை முடியின் அலங்காரம் மாறும். சட்டை பேண்டின் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு சில நோட்டு புத்தகங்கள் கூடியிருக்கும் நண்பர்கள் கூட்டம் என்றும் ஒரு வித மிடுக்கு இருக்கும் அதுவும் இருபாலர் பயிலும் கல்லூரி என்றால் சொல்லவே தேவையில்லை. மேலே சொன்ன எல்லாம் இரு மடங்கு ஆகும். இந்த வாலிப களேபரத்தில் கல்லூரியும் படிக்கும் பாடமும் மைக்ரோ லெவலிலும் இன்ன பிற விசயங்கள் மேக்ரோ லெவலிலும் இருக்கும். இப்படிபட்ட ஒரு நியதிக்கு சுரேஷ் மட்டும் என்ன விதிவிலக்கா? கல்லூரி மாணவன் என...