Skip to main content

வேங்கைகளின் மண்.....!



வரலாற்றின் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட பக்கங்களாய் வீரம் மிகுந்த சிவகங்கைச் சீமையின் சுதந்திரப்போர் அமைந்து போய்விட்டது. அந்த மண்ணைச் சேர்ந்த மக்கள்  உண்மைகளை சரியாக முன்னெடுத்து பொதுவெளிக்கு கொண்டு வரவில்லையா? இல்லை ஆதிக்க அரசியல் அந்த முயற்சிகளை எல்லாம் சாய்த்துப் போட்டுவிட்டதா என்ற கேள்விகள் எல்லாம் ஏதோ ஒரு சோகத்தை உள்ளுக்குள் பரவவிடுவதை தவிர்க்க முடியவில்லை.

வாழ்க்கையில் வெறுமையை நிறைய அனுபவித்து வாழ்ந்து கொண்டு உப்புக்காற்றையும், உறைக்கும் வெயிலையும் உடலில் வாங்கிக் கொண்டு கரடுமுரடான  செம்மண் பூமிக்குள் எப்போதும் வானம்பார்த்து வாழும் வீர மைந்தர்களை பதிவு செய்து கொள்வதில் வரலாற்றுக்கும் ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மைதான் போலும்....

சுதந்திரப்போராட்ட வரலாற்றை இந்திய தேசம் பக்கம் பக்கமாய் எழுதி நிரப்பிக் கொண்டு போனால் போகிறது என்று மிச்சமிருக்கும் உணவினை பிச்சைக்காரனுக்குப் போடும் எஜமானனாய் சிவகங்கைச்சீமைக்கும் கொஞ்சம் இடம் கொடுத்திருக்கிறது. இந்த மண்ணின் மக்களும், இந்த மண்ணிலிருந்து மேலெழும்பி பிரபலமான மனிதர்களும் சிவகங்கைச் சீமையை எப்போதும் வெளி அரங்கில் பிரதிபலித்ததில்லை. அரசியல் பலம் பெற்றோரும், அதிகார பலம் பெற்றோரும், பண பலம் பெற்றோரும்  வாழ்வின் ஓட்டத்தில் தங்களின் சட்டைப் பைகளிலேயே கவனத்தை பெரும்பாலும் கொண்டிருந்த காரணத்தால் இந்த செம்மண் சீமையில் படிந்து கிடக்கும் இரத்தக்கறைகளை ஏறெடுத்துப் பார்க்க அவர்களுக்கு நேரம் இருந்திருக்கவில்லை.

வெள்ளையர்களை எதிர்த்து போர்முழக்கமிட்ட முதல் குரலுக்கு சொந்தக்காரர்களான இந்த மண்ணின் மைந்தர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. கருவேலங்காட்டுக்குள் அனல் பறக்கும் வெயிலுக்குள் அடர்த்தியான அந்த மண்ணின் காற்றில் பரவிக் கிடக்கும் அதிர்வுகள் ஏதேதோ கதைகளைச் சோகமாய்ச் சொல்லத்தான் செய்கின்றன.

வழக்கம் போல விடுமுறைக்குச் சென்ற என் கையில்  எதிர்பாராமல் கிடைத்த வேலு நாச்சியார் என்னும் புத்தகத்தை வரி விடாமல் இரவு பகலாய் வாசித்ததில் அங்கே சொல்லப்பட்டிருந்த புள்ளி விபரங்கள் எனக்கு வேலு நாச்சியாரைப் பற்றி எழுத உதவப் போகிறது என்பதை வாசிக்க தொடங்கிய மூன்றாவது கணத்தில் புரிந்து கொண்டேன். புத்தகத்தின் ஆசிரியர் சீமையின் எல்லா பகுதிகளுக்குள்ளும் சுற்றித் திரிந்து புதிய புதிய தகவல்களை நுணுக்கமாய் பதிவு செய்திருந்ததை வாசித்து வாசித்து என் கண்கள் பள பளக்கத் தொடங்கியிருந்தன. மனிதர்கள் எவ்வளவு வீரத்தோடும் போர்க்குணத்தோடும் மதிநுட்பத்தோடும் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற பிரமிப்பிலிருந்து வெளியே வரவே முடியவில்லை.

வீரமிகுந்த செம்மண் பூமியின் வரலாறு என்று ஏற்கெனவே காளையார்கோவிலைச் சேர்ந்த திரு. மு. சேகர் எழுதிய புத்தகத்தை நான் வாசித்திருக்கிறேன். அதையும் உள்ளடக்கி திரு. ஜீவபாரதி அவர்கள் எழுதியிருக்கும் இந்த புத்தகம் ஒரு கதை என்ற அளவில் தனது எழுத்து நடைக்குள் முடங்கிப் போய் தாக்கத்தை எதிர்ப்பார்த்த அளவு கொடுக்க முடியாமல் போனது மட்டுமே ஒரு குறையாக நான் பார்க்கிறேன்.

சிறுவயதிலிருந்தே சிவகங்கைச் சீமையின் வீரவரலாறும் எமது வீடுகளில் சோறோடு சேர்த்து எங்களுக்கு ஊட்டப்பட்டிருக்கிறது. வேலு நாச்சியாரின் பிரதான அமைச்சராய் இருந்த முத்து தாண்டவராயன் பிள்ளையை பற்றியும் அவரின் மதி நுட்பம் பற்றியும், வீரம் பற்றியும் அவரது பேத்தி வாயிலாக கேட்டு விட்டு தன் பெரிய அப்பத்தா கிழவி சொன்னதாய் என் அம்மா சொன்னதை எல்லாம் கட்டுரையை வாசிக்கையில் என்னால் நினைவு கூற முடிந்தது.

ஏதோ ஒரு முடிச்சு சிவகங்கைச் சீமைக்கும் என் ஜீவனுக்கும் இருப்பதாய் நான் இந்தக் கணம் வரை நம்புகிறேன். அதனாலேதானோ என்னவோ என்னுடைய வலைப்பூவின் முகவரியும் மருதுபாண்டியானது போல....

இனி... 

நான் அறிந்த வரலாற்றின் மூலம் வேலு நாச்சியார் என்னும் பெண் வேங்கையை உங்கள் கண் முன் கொண்டுவரவேண்டிய பெரும் பொறுப்பு எனக்கு இருப்பதாய் நினைக்கிறேன். இதற்காய்  நான் எப்போது நேசிக்கும்  எல்லாம் வல்ல தென்னாடுடைய சிவனும், சிவகங்கை அரண்மனையில் குடி கொண்டிருக்கும் அம்மா இராஜ இராஜேஸ்வரியும் என் உடன் நின்று...... இந்த சிறுவனுக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்....!

வரப்போகும் நாட்களில்..சீமைக்குள் செல்வோம்....!


தேவா . S



Comments

சிறப்பான பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்
சித்துண்ணி கதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html
தொடரை வாசிக்கக் காத்திருக்கோம்..
Kousalya Raj said…
//வெள்ளையர்களை எதிர்த்து போர்முழக்கமிட்ட முதல் குரலுக்கு சொந்தக்காரர்களான இந்த மண்ணின் மைந்தர்கள்//

இந்த ஒரு வரி செய்தி கூட தெரியாமல் தான் இன்றைய தலைமுறை இருக்கிறது. வீரம் , விவேகம் செறிந்த வேலுநாச்சியார் அவர்களின் வரலாறு படிக்கும் போது நமக்குள் சொல்ல இயலாத உணர்ச்சி மேலோங்குவதை உணரமுடியும்...

அவர்களை பற்றி தொடர்ந்து நீங்கள் எழுத போவதற்கு என் பாராட்டுகள் + வாழ்த்துக்கள் !!

.....

அப்புறம் இந்த உடையார் தொடர் என்ன ஆச்சுன்னு தெரியலையே...!? :)
Anonymous said…
சிறப்பான தொடக்கம்! படிக்கக் காத்திருக்கிறோம்! நன்றி!
தொடருங்கள்.
நம் மண்ணின் வீரப் பெண்மணியின் கதையை எல்லோரும் அறியக் கொடுங்கள்.
அருமை... தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 5)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த